குழந்தையைக் கொன்ற கொடுங்கோலன் வெங்கடாசலபதியிடம் என்ன வேண்டியிருப்பான்?


நாக்கு நீண்ட நரி
பல்லில் விஷம் தடவிய பாம்பு
கண்ணில் கொடுமை காட்டும் கழுகு
உடம்பெல்லாம் கொழுப்பெடுத்து ஆடும் ஓநாய்
சொட்டு ரத்தத்தையும் விடாமல் 
நக்கித் திரியும் சொறிநாய்

 இதெல்லாம் ஒன்று சேர்ந்து வந்ததுதான்
ராஜபக்ஷ எனும் நரமிருகமோ
(சிங்கம் புலி என்று சொல்லி 
அவற்றின் வீரத்தை நான் இழிவு செய்ய விரும்பவில்லை
அதற்கும் இங்கே சிவப்புக் கம்பளம் விரிக்க அலையும்
சில அ-மனிதர்களை என்ன சொ்ல்ல?)

என்ன கொடுமையடா பாவி!
அந்தக் குழந்தையின் முகத்தைப் பார்...
ஏது பற்றியும் அறியாமல்,
பால்வடியும் முகம் கூட மாறாமல்
எதையோ தின்று கொண்டிருக்கும் 
அந்த அப்பாவித்தனத்தைப் பார்
அந்தக் குழந்தை என்ன செய்ததடா பாவீ!

அதைக் கொன்று ரத்தம் குடித்து
நீ எதைச் சாதித்து முடிததாய்?
உன் ரத்தப் பசி 
லட்சக்கணக்கில் எங்கள் மக்களைக்
கொன்று முடித்தும் 
ஆறவில்லையென்று
குழந்தையையும் தின்று முடித்தாயா?

உனக்குக் கோபமென்றால் 
ஒரு குழந்தை கூட உயிருடன் இருக்கலாகாதா?
அது -
ஒருவேளை பிரகலாதனாக வந்திருக்குமோ 
என்று அச்சமா?
அப்படியானால் நீ கொடுமைக்கார அரசன்தான் 
என்றுனக்கு புரிந்து விட்டதோ

பிரபாகரனுடன் 
கருத்து வேறுபாடுள்ளவர்களும்
ஏற்க மறுக்கும் இந்தக் கொடுமையை 
ஏனடா செய்தாய்?

எங்கள் ஊரில் பிரியாணி தின்றால்
சோடா குடிப்பார்கள் பீடா போடுவாரகள்

உங்கள் ஊரில் மட்டும்
குழந்தையைக் தின்றுவிட்டுக்
கோவிலுக்கு வருவீர்களோ?

வெங்கடாசலபதி என்ன
விவரம்கெட்ட சாமியா?-உன்
விருப்பமறிந்து
வேண்டிய வரம் கொடுக்க?

விடுதலை கேட்ட நெல்சன் மண்டேலாவும்
சிறையில் அடைத்த கிளார்க் எனும் அரக்கனும்
ஒரே கர்த்தரைத்தான் கும்பிட்டார்கள்
கர்த்தர் குழம்பிப் போனார்

ஈராக் பாயும் அவரை அழிக்கத் துடித்த
ஈரான் பாயும் ஒரே அல்லாவைத்தான் தொழுதார்கள்
அல்லா குல்லாவை எடுத்துவிட்டு
தலையைச் சொரிந்துகொண்டார்.

வைணவரை அழிக்க சைவரும்
சைவரை அழிக்க வைணவரும்
திட்டமிட்ட போதெல்லாம்
இந்துச் சாமிகள் எல்லாருமே
நொந்துதானே போயிருப்பார்கள்?

எண்ணாயிரம் சமணரைக்
கழுவில் ஏற்றிய காலத்தில்,
கண்ணாயிரம் கொண்ட தாய்
-சம்பந்தருக்குப் பால்நினைந்தூட்டிய பார்வதி-
பார்த்துக்கொண்டுதானே இருந்தாள்?

லட்சம் லட்சமாய்
கொன்று முடித்த கொடுங்கோலன்
பிள்ளை ரத்தத்தையும்
அள்ளிக் குடித்த பெரும்பாவி

இந்தியா வந்து-
வெங்கடாசலபதியிடம்
என்ன வேண்டியிருப்பான்?

அவன் என்ன இழவாவது
வேண்டியிருக்கட்டும்

அதே வேங்கடத்தானை
வேண்டிக் கிடக்கும் எம் மக்கள்
இன்றில்லாவிட்டால் நாளை...
நாளையில்லாவிட்டாலும்
இன்னொருநாள் பொங்கி எழுவார்கள்-

எங்கள் பிள்ளைகளைக் கொன்று தின்ற
வாயை ஒருநாள் கிழித்தெறிவாரகள்
எங்கள் பெண்டுகளின் யோனியைக் குதறிய
குறிகளை ஒருநாள் குலையறுப்பார்கள்
எங்கள் நிலத்தைப் பிடுங்கிய
கைகளையெல்லாம் 
மொத்தமாய் முறித்துப் போடுவார்கள்
உரிமையைப் பறித்த கொடுமைக்கு ஒருநாள்
ஒன்றுக்குப் பத்தாய் பதிலடி கொடுப்பார்கள்

உன் வம்சம் மட்டுமல்ல
உன்னைப் போல எண்ணங்கொண்ட
அத்தனை பேரின் ஆணவத்திற்கும் ஒருநாள்
புத்தரின் பேரிலேயே புதைகுழி தோண்டுவார்கள்!

நீ வேண்டிக்கொண்ட
வெங்கடாசலபதி
அதையும் பார்த்து ரசிப்பார்...
பாரடா பார்!
பாவி கொடுங்கோலா!

சிறுவனைக் கொன்ற
சிறுபொறி ஒருநாள்
பெருநெருப்பாகும்
அதில் நீ
பற்றி எரிவாய்... 
எரிந்தே அலறி அலறி அழிந்து போவாய் 
பார்!
அதில் உனக்கு
இறுதிச் சடங்கு நடத்த
உன் எலும்பும் கூட மிஞ்சாது,
ஒரு பிடிச் சாம்பலும் கூடக் கிடைக்காது! போ! 

‘‘காற்றின் குரல்’’ - இசையுடன் கவிதைகள்


‘‘காற்றின் குரல்’’
இசையோடு இணைந்து சிறப்பு ஒலிகளோடு சேர்ந்து...
------------------------------------------------  
கவிஞர் ஜெயபாஸ்கரன் கவிதைகள்
------------------------------------------------
கவிதைகள்    வழங்கியவர்கள்
1.கடல் -       கவிஞர்இளம்பிறை
2.ஆலமரம் -   கவிஞர் ஜெயபாஸ்கரன்
3.என்னைப் பெறாத அன்னை – வீ.க.த.பாலன்
4.குழந்தைகள் - பேரா. தென்காசி மீனா
5.மருத நிலம் - பேரா. பர்வீன் சுல்தானா
-----------------------------------------
தொகுப்புரை – ஏகா.இராஜசேகர் 
(பண்பலை அறிவிப்பாளர்)
--------------------------------------
இசை – அ.தட்சிணாமூர்த்தி
ஒலிப்பதிவு- வே.தனபதியின் “மேழிஒலிப்பதிவகம்
தயாரிப்பு – ஜெகமதி கலைக்கூடம்
தொடர்புக்கு – 9444956924
மின்னஞ்சல்- kaniyamudhan25@gmail.com 
------------------------------------------------------------ 
இணைப்புக்கு
http://www.kavignarjayabaskaran.com/
கவிஞர் ஜெயபாஸ்கரன் அவர்களைத் தொடர்புகொண்டு கேட்டு இவாங்கிக் கொள்ளக் கேட்டுக்கொள்கிறேன்.
                   --------------------------------------------------

“ஞானாலயா“ புதுக்கோட்டையில் ஒரு புத்தகக் கோட்டை


‘‘ஞானாலயா’’
  
புதுக்கோட்டையில் ஒரு 
புத்தகக் கோட்டை


   புத்தகக் காதலர்      
  மிழ்நாட்டின் மிகப்பெரிய தனியார் நூலகங்களில் இரண்டாவது இடம்பெறும் ஒரு மாபெரும் அறிவுலக அமுதசுரபி எங்கள் ஊரில் இருப்பது எங்கள் ஊரில் பலருக்கும் தெரியாது. ஆனால், உலகம் முழுவதுமிருந்து புதுக்கோட்டையை நாடிவரும் எந்த்த் தமிழரும் அறிந்து வைத்துக்கொண்டு, “ஞானாலயா போக வேண்டும் என்று தமது பயணத்திட்டத்திலேயே குறித்து வைத்திருந்து, போய் வரும் இடமாக இப்போதும் இருப்பது எங்கள் ஊரின்- புதுக்கோட்டையின்- பெருமை.

  தமிழ்நாடு அரசின் கல்வித்துறை கணித ஆசிரியராகத் தொடங்கி, முதுகலைத் தமிழாசிரியராகி, மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியராகி ஓய்வுபெற்ற திரு பா.கிருஷ்ணமூர்த்தி அவர்கள்

  திரு பா.கி.அவர்களுடன் அறிவியல் ஆசிரியராகப் பணியாற்றிய போதே சாதி-மதங்களைக் கடந்து வாழ்க்கையிலும் இணைந்த திருமதி டோரதி அவர்கள் பின்னர் கல்லூரித் தாவரவியல் பேராசிரியராகவும், அரசுக் கல்லூரி முதல்வராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர் 

  1959இல் தொடங்கிய புத்தக சேகரிப்பை ஞானாலயாவாக மிகப்பெரிய ஆய்வுநூலகமாக வளர்த்து, இருவரும் ஓய்வுபெற்றபோது வந்த பணம் ரூ.11லட்சத்தையும் இந்த ஞானாலயா வளர்ச்சிக்கே செலவிட்டு (மிகப்பெரிய தனிவீடு) இன்றும் பயன்அறிந்தோர்க்குப் பழுமரமாக இருக்கும் ஞானாலயா பற்றிய -16நிமிடம் ஓடக்கூடிய- செய்தித் தொகுப்பை நீங்கள் அவசியம் பார்க்க வேண்டும்.

  பாரதியாரின் முதல் கவிதையான தனிமை இரக்கம்வெளிவந்த ஞானபாநு உள்ளிட்ட ஏராளமான -முதல்பதிப்பு- மூலநூல்கள்...  பாரதியார பற்றி மட்டும் சுமார 1500 நூல்கள், திருக்குறள் பற்றி மட்டும் பலமொழிபெயர்ப்பு உள்பட அத்தனை உரைகளுமாய 1500 நூல்கள் என

1,75,000 தமிழ்நூல்கள்...!
மற்றும் பல்லாயிரம் அரிய ஆங்கில நூல்கள்…!

   1920முதல் தமிழில் வந்த சிற்றிதழ்களின் தொகுப்புகள்... என லட்சக் கணக்கான பத்திரிகை நூல் பிரதிகள் அவ்வளவும் வகைப்பட அடுக்கி வைக்கப்பட்டு ஆய்வாளர் கேட்ட உடனே எடுத்துக் கொடுக்க்கூடிய வகையில் தனிவீடு! நகலச்சு வசதியுடன். 

வீடே நூலகம்.... நூலகமே வீடு!
 ஞானாலயா பற்றி இன்னும் பலபத்திரிகைத் தகவல்கள் உள்ளன. 
 அவற்றில் ஒன்று –
  THE HINDU – METRO PLUS – WEEK END  (Dated - October 09,2010) பார்க்கலாம்.
------------------------- 
தொடர்பிற்கு
  “ஞானாலயா“ திரு.பா.கிருஷ்ணமூர்த்தி 
வலைப்பக்கம் -
http://www.gnanalaya-tamil.com/
அலைபேசி – 9965633140  
தொலைபேசி எண் –04322 221059

வேளாண் கல்லூரியில் தமிழ்விழா!

தமிழ்ப் பயிர் வளர்க்கும் அரசு வேளாண் கல்லூரி!

திருநெல்வேலியிலிருந்து 15கி.மீ.
ஆனால் அது
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஊர்.

கிள்ளிகுளம்

அங்கிருக்கும் அரசு வேளாண் கல்லூரி முத்தமிழ் விழா
சிறப்பு விருந்தினராக அழைத்தார்கள்...
அலட்சியத்துடன்தான் போனேன்

கோவை பிஎஸ்ஜி பொறியியல் கல்லூரி
தஞ்சை மருத்துவக் கல்லூரி உட்பட....

எத்தனை நூறு கலைக்கல்லூரிகள் பார்த்தாச்சு...

இவர்கள் என்ன புதிதாகச் செய்துவிடப் போகிறார்கள் என்னும் அலட்சியத்துடன்தான் போய் நெல்லையில் இறங்கினேன்.

இரவு 10மணிக்குமேல்- நான் போய் இறங்கிய சில நிமிடங்களில்
“அய்யா எங்கய்யா இருக்கீங்க?” என்று அழகிய தமிழில் அழைப்பு!
அவர்களை அடையாளம் சொல்லச் சொன்னால்...
“அய்யா நாங்க பாத்துட்டோம்யா... அப்படியே திரும்பிப் பாருங்க... உங்களுக்கு நேர் பின்னால 2பேரு வேட்டிகட்டிக்கிட்டு...”

திரும்பினால் ஆச்சரியமாய்...
தழையத் தழைய பட்டுவேட்டியுடன் இளைஞர் இருவர்.
ஒருவர் என் பெட்டியைப் பிடுங்கப் பார்க்க
என் இயல்பில் மறுத்துவிட்டு “வண்டி எங்க நிக்கிது?“ என்று கேட்க...
பொலிரோ கதவை ஒரு மாணவர் திறக்க,
“அய்யா உட்காருங்களய்யா” இன்னொருவர் சொல்ல...
எனக்கு அப்போது தொடங்கிய வியப்பும் மகிழ்ச்சியும்
அடுத்த நாள் மதியம் விழா முடிந்து என்னைத் திரும்பவும்
நெல்லையில் கொணடுவந்து விட்ட வரை மாறவே இல்லை...

கல்லூரி வாசலில் பெரீய்ய்ய திருவள்ளுவர் பதாகையுடன் விழா அழைப்பு
உள்ளே திரும்பினால் சிலம்புடன் கண்ணகி... அந்தப்பக்கம் பரதப் பதாகை

முத்தமி்ழ் விழாவாம்....  அசத்திவிட்டார்கள் வேளாண்கல்லூரி மாணவர்!

காலையில் கல்லூரி முதல்வர் வந்து கூடஇருந்து காலை உணவு!
சிறப்பு விருந்தினருக்கான கௌரவமாம்!
ஒவ்வொன்றிலும் பார்த்துப் பார்த்துச் செய்து வியப்படைய வைத்தார்கள்!

விழா வாசலில் -
வரவேற்கும் மாணவியர் அழகான புடவைகளில் புன்னகைக்க...
அது இயல்புதானே என்று பார்த்தால் பெரும்பாலான விழாக்குழுப் பெண்கள் புடவையிலேயே இருப்பதைப் பார்த்து வியந்தும் மகிழ்ந்தும் போனேன்...

விழாமேடையில் இருந்த இளைஞர்கள், இளம்பெண்கள் மட்டும் கோட்டும் பேண்ட்டும் போட்டு மிரட்டினார்கள்...

உண்மையிலேயே தமிழ்வழியில் படிக்காத -படிக்க முடியாத- அரசு ஏற்பாடு இல்லாததால்- ஆங்கில வழியிலேயே அவ்வளவு பேரும் தகுதி-மதிப்பெண் அடிப்படையில் தேர்வு பெற்றிருந்ததால் அவ்வளவு ஒழுங்கு நேர்த்தி!

நான் சிட்டுக் குரு்வியே சிறகை விரி! எனும் தலைப்பில் பேசினேன்.

நகைச்சுவைக்குக் கூட அளவாகத்தான் சிரித்தார்கள் என்றால் பாருங்கள்

பிற கல்லூரிகளைப் போல அல்லாமல் பொறுப்பு முதல்வர் அவர்களும், பேராசிரிய நண்பர்களும் இயல்பாகப் பேசினார்கள்...

மொத்தத்தில் -
தமிழ் மணம் கமழ்ந்த தமிழ்விழா!
என் மனம் கவர்ந்த கிள்ளிகுளம் வேளாண்கல்லூரி முத்தமிழ் விழா!

எதிர்கால இந்தியா இவர்கள் கையில் பத்திரமாக முன்னேறும்!
வாழ்க கல்லூரி நிர்வாகம், வளர்க அந்தச் சிட்டுக் குருவிகளின் சிறகுகள்!


---------  நன்றி- 
முகமது இக்ஷான்
நிகழ்ச்சிப் பொறுப்பாளர் -உண்மையிலேயே அழகான
மாணவர் ஒருங்கிணைப்பாளர் ----------


விநோதினி அநியாயச் சாவு – நெஞ்சில் ஒரு முள்!


விநோதினி அநியாயச் சாவு – நெஞ்சில் ஒரு முள்!
தினமும் காலையில் பத்திரிகை படிக்கத்தான் செய்கிறோம்.
13-02-3013 இன்றைய செய்தி ஒன்று ரொம்பவே பாதித்துவிட்டது...

அமிலவீச்சில் காயமடைந்த விநோதினி சாவு – தினமணி 

ஆண் உலகில் பெண் ஒரு “துய்க்கப்படு பொருளாகவே பார்க்கப்படுவதன் விளைவாக எத்தனை எத்தனைப் பெண்கள் யுகம் யுகமாகப் பாதிக்கப் படுகிறார்கள்! அவளுக்கும் உயிர் உண்டு, அவளுக்கும் உணர்வு உண்டு அவளும் நம்மைப்போல் ஒரு மனிதஇனம்தான் என்னும் அடிப்படை அறிவு கூட இல்லாத ஆண்களால் இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் பெண் இனம் இப்படி அமில வீச்சாலும், பாலியல் வன்கொடுமையாலும் அழியப் போகிறதோ தெரியவில்லையே!
காரைக்காலைச் சேர்ந்த அந்தப் பெண் பொறியியல் படித்துவிட்டு, குடும்ப வருமானத்திற்காகவே வேலைக்கும் போய்கொண்டு, காதலை நினைக்காமல் இருந்தபெண்ணை சுரேஷ் என்னும் நாய் தன்னைக் காதலிக்க வற்புறுத்த, அடித்துப் பழுக்க வைக்க அதுவொன்றும் இரும்பல்லடா இதயம் காதல் என்பது தானாகப் புக்கும் காட்டுப் பு என்பதை அந்த நாய்க்கு எப்படி விளக்க முடியும்? நக்குற நாய்க்கு செக்குத் தெரியுமா, சிவலிங்கம் தெரியுமா?
அந்த சுரேஷ் – நம்சமூகத்தால்தானே உருவாக்கப் பட்டிருக்கிறான்!
பெண்ணுரிமையை சொல்லித்தராத கல்வி முறை...
பெண்ணின் உணர்வுகளை மதிக்கக் கற்றுத்தராத குடும்ப அமைப்பு...
பெண்ணை “ஆண் அனுபவிப்பதற்கான ஒரு பண்டம்என்றே சொல்லிச்
சொல்லிப் பாடி ஆடும் நமது திரைப்படங்கள்...
  பெண் என்பவள் ஆணின் கொடுமைகளைச் சகித்துக்கொண்டும், அதோடு  
   அவனுக்காகவே , அழுகொண்டும் வாழவேண்டியவள்    
    என்பதையே மீண்டும் மீண்டும் சொல்லி அழும் தொ.கா.தொடர்கள்... 
  “பானமடி நீ எனக்கு-பாண்டமடி நான்உனக்கு“ எனபபாடிய பாரதி உட்பட  “ஆர்லிக்ஸா மாறிவிட நாரெடி என்ன அப்படியே சாப்பிட நீ ரெடியா?” என்று பெண்ணே கேட்பதாக எழுதும் திரைப்படக் கவிக்கிறுக்கன்கள்
  எல்லாவற்றுக்கும் மேலாக இதையெல்லாம் “அரசியல்ல இதெல்லாம்
சகஜமப்பா“ என்பது போல எடுத்துக்கொள்ளும் ஆணாதிக்க அரசியல்
என எத்தனை எத்தனை புறக்காரணிகள்...
எல்லாம் எழுதி என்ன ...
 என்னென்ன கனவுகளோடு வாழ்க்கைக் கணக்குகளைப் போட்டு வைத்திருந்தாளோ... எல்லாம் ஒரு அமிலவீச்சில் நாசமாகி விட்டதே!

டெல்லிப் பெண் சாவும் கொடுமையானதுதான் ஆனால், அதற்குச் சற்றும் குறையாத கொடுமையை 3 மாதமாக அனுபவித்தும் இறந்து போன விநோதினியின் அநியாய மரணம் தந்த புண் ஆறவே ஆறாது...
அதற்குத்தந்த முக்கியத்துவத்தை நமது ஊடகங்கள் இதற்கும் தந்திருந்தால் ஒரு வேளை நிதி சேர்ந்து விநோதினியைக் காப்பாற்றியிருக்கலாமோ என ஒருபக்கம் பெருமூச்சு வருவதைத் தவிர்க்க முடியவில்லையே!


முவ அவர்கள் எழுதிய ஒரு நாவலின் தலைப்பு “நெஞ்சில் ஒரு முள்”  அந்தத் தலைப்புத்தான் இந்த நேரத்தில் நெஞ்சில் குத்துகிறது...  



விஸ்வரூபம் சூழ்நிலையில் ஒரு காமெடி...


பய புள்ளைக என்னமாத்தேன் கற்பனை பண்றாய்ங்கெ....!


பார்த்துச் சிரிச்சுப்போட்டு, போயிரணும்...
கோர்ட்டு கேசுன்னு கௌம்பினிய... அம்புட்டுத்தேன்
சொல்லிப்புட்டேன்... ஆமா...

யு-ட்யுப் இணைப்பில் காண வாங்கங்கோ...
http://www.youtube.com/watch?v=A8Hmajg0Awg

குறிப்பு -
மன்னிக்க வேண்டும்... இதை யார் தயாரித்ததென்றே தெரியவில்லை நண்பர்கள் வழியாகத் தனக்கு வந்ததை எனக்கு அனுப்பியதாக நண்பர் களப்பிரன் தெரிவிக்கிறார்...
தயாரிப்பு மற்றும் குரல்கள் பற்றித் தெரிந்தவர்கள் சொன்னால் அதை வெளியிடலாம்...

கமலின் விஸ்வரூபம்!


கமலின் விஸ்வரூபம்!
முதல் பார்வை யாருக்கு?
அமெரிக்காவிலும் கேரளாவிலும் அடியெடுத்து வைத்த விஸ்வரூப தரிசனத்திற்கு, தமிழ்நாட்டில் மட்டும் என்ன தடை? மத அரசியலா? பொருளாதார அரசியலா? ஈகோ அரசியலா?
கமல் படங்களின் முதல்காட்சியைக் காண முண்டியடிக்கும் ரசிகர்களை ஏமாற்றிவிட்டு,  தமிழ்நாட்டில் முதல்காட்சியை இப்போது நீதிபதியல்லவா பார்த்தார்!?
திருத்தம் சொல்வதற்கோ
வருத்தம் சொல்வதற்கோ
தலைவர்கள் பார்த்தால் போதுமா?
மக்கள் பார்க்க வேண்டாமா?
முதலில் பார்த்தது இருக்கட்டும்,
முதல் பார்த்தது யார்?
கமல் உறாசனும், சும்மா கில்லி, சுள்ளான், பில்லா மாதிரி பணத்தை அள்ளும் உத்தரவாதத்துடன் சகலகலா வல்லவன் போலும் பல படங்களை எடுத்தவர்தான். ஆனால், சமீப காலமாக “தேவர்மகன்“, “மகாநதி“, “அன்பே சிவம்“, “ஏ ராம்“ - எனத் தனது படங்களைச் சமகால எரியும் பிரச்சினைகளில் முக்கி எடுத்து, சிலவற்றில் கையைச் சுட்டுக் கொண்டாலும் தொடர்ந்து அதில் பின்வாங்காமல் தொடர்பவர் எனும் ஒரு நம்பிக்கைதான் இப்படி என்னை எழுதத் தூண்டுகிறது.
எப்படி இருந்தாலும், நாடகமோ, திரைப்படமோ மக்களிடம் செல்வதற்கு முன் நீதிமன்றமும், காவல் நிலையமும்தான் அதைத் தீர்மானிக்கும் என்பதை என்னால் ஏற்க முடியவில்லை. காசுமட்டுமே பார்த்து சவுரியமாக இருக்கும் பல திரைப்படக் காரர்களின் மத்தியில் கமல்உறாசன் “சீரியஸ்“ விஷயங்களை எடுத்தபோது அதனால் மட்டுமே திருந்திவிடாத  தமிழ்த் திரைஉலகமும் தமிழ்ச் சமூகமும் – தவறாகவே இருந்தாலும்- இந்த ஒருபடத்தால் ஒன்றும் குடிமுழுகி விடாது என்பதே என் கருத்து.
பாகிஸ்தான் வீரர்கள் இந்திய வீர்ர்களின் தலையைத் தனியே வெட்டி எடுத்த போது இந்த இஸ்லாமிய அமைப்புகள் எங்கே போயிருந்தன? அதற்கும் ஓர் ஆர்ப்பாட்டமோ எதிர்ப்போ தெரிவித்திருந்தால், இந்த எதிர்ப்பிற்கு அர்த்தம் இருக்கும்.
பெயர்க் குழப்பத்தால் மட்டுமே அமெரிக்க விமான நிலையத்தில் அவமானப் பட்டவர் கமல்உறாசன் என்பது பலருக்கும் மறந்திருக்கலாம். (உறாசன் என்பது இஸ்லாமியப் பெயர் “உறசன்“ என்பதுபோல இருப்பதாலாம்...! )  அந்தக் கோணத்தில் மட்டுமல்ல வேறு எந்தக் கோணத்தில் பார்த்தாலும், அந்தக் கலைமனசைக் காயப்படுத்துவது எதிர் விளைவுகளைத்தான் தரும். நம்பிக்கை தரும் மாபெரும் கலைஞானி கமலின் நல்ல முயற்சிகள் வெற்றிபெறட்டும்
ஆனால், எதையும் வணிகப் படுத்தத் தயங்காத ரஜினி முதன்முதலாக வாய்திறந்து, “கமல் இஸ்லாமியச் சகோதர்ர்கள் வருத்தப் படும்படியாக எதுவும் செய்யமாட்டார்என்று நற்சான்று தந்திருப்பதும் கொஞ்சம்  சந்தேகத்தைக் கிளப்புகிறது. போதாக் குறைக்கு –இஸ்லாமியர்கள் சிலர் எதிர்க்கிறார்களே என்பதற்காகவோ என்னவோ- படத்தைப்பார்க்காமலே எச்.ராஜா வேறு வரவேற்கிறார்!
வீடு, பேராண்மை, அழகி, வழக்கு எண் முதலான “சிறிய“ படங்கள் கூடப் பெரிய பெயரைப் பெற்ற வரலாறு தமிழ்த்திரை உலகிற்கு உண்டு.
கலைஞனின் கருத்து வெளியீட்டுச் சுதந்திரம் வழக்குமன்றத்திலோ காவல் நிலையத்திலோ தீர்மானிக்கப் படுவதை நான் எதிர்க்கிறேன் என்று கமல் வெளியில் வந்தால் அது சரியான முடிவாக இருக்கும்... அதைவிட்டுவிட்டு... 100 கோடியைப் போட்டுவிட்டேன்... கடன்காரன் விரட்டுகிறான், படம் வெளியாகாமல் போனால் மீடியா நண்பர்களை என்வீட்டில் சந்திப்பது இதுவே கடைசி முறையாகவும் இருக்கலாம் என்றெல்லாம் பேசி தன்மீது இரக்கத்தை எதிர்பார்ப்பதும் கமல் மாதிரியான சுயகௌரவமுள்ள கலைஞனுக்குச் சரியானதல்லவே!
“நல்லவன் வாழ்வான்“ என்றொரு பழைய திரைப்படத்தில் இந்தப் பக்கம் எம்.ஜி.ஆர். ஜெயித்து விட்டதாக அறிவிப்பார்கள், அந்தப்பக்கம் எம்.ஆர்.ராதா ஜெயித்து விட்டதாக அவரது தொண்டர்கள் தோளில் தூக்கி வருவார்கள். அப்போது தனக்கே உரிய கரகரத்த குரலில் ராதா சொல்வார் – “அவனையும் தூக்குறீங்க என்னையும் தூக்குறீங்க யார்ரா ஜெயிச்சது? அதுதான் இப்போது நினைவுக்கு வருகிறது. 

மறைமலை அடிகள் பிள்ளைத்தமிழ் - நா.மு.


மறைமலை அடிகள் பிள்ளைத்தமிழ்
தாலப்பருவம் – பாடல் எண்-1
புலையுடல் தினவே கொலையிடும் உணவே
             பேணாய் வாணாளில்
    புகழ்ஒளி படவே குலவெறி படவே
             போராள் சீராளா!
ஒலியுடை சிறுவாய் வகையொலி யறிவாய்
             ஓதா மூதாய்வால்
    உறுசுவை அமுதாய் ஒலியுடை தமிழாள்
             ஓயா வாயோனே!
முளையிடு மயலார் மொழிகளின் மயலால்
             மூவாத் தாயாம்நம்
    முதன்மொழி உயர்வே துயில்தரும் கனவாய்ப்
             போகா தேகாப்பான்
தலையிடும் விடிவேள், தமிழ்மலை யடிகேள்!
             தாலோ தாலேலோ
    தமிழறி புலவா!   பலகலை வலவா!
             தாலோ தாலேலோ!
-----------------------------------------------  
இப்பாடல் கருத்துகளுக்கு ஆதாரமான அடிகளின் நூல்கள் காண்க-
உரைமணிக்கோவை-பக்-11, தமிழர் மதம்-பக்-31-43, சைவசித்தாந்த ஞானபோதம் –பக்-72-81, தொலைவிலுணர்தல்-பக்19,53, சாகுந்தல நாடக மொழிபெயர்ப்பு-பக்100,127, வேளாளர் நாகரிகம்-பக்-16, அறிவுரைக் கோவை-பக்-46-73,
மற்றும் “தமிழறி புலவா தனிஅயில் வலவா“ எனும் வரிகளை, “திருமலை முருகன் பிள்ளைத் தமிழ்” (அய்யா பண்டாரத்தையா) பாடல் எண்-27இல் இருந்து தழுவி எடுத்தாண்டிருப்பதை நன்றியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்- நா.மு. (1975ஆம் ஆண்டு திருவையாற்று அரசர் தமிழ்க் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்தபோது எழுதியது)
-----------------------------------------------------------

ஆனந்த விகடனின் - என் விகடன் இதழில் நமது வலைப்பக்க அறிமுகம்


என் விகடன் இதழில் நமது வலைப்பக்க அறிமுகம்

கடந்த இரண்டு ஆண்டுகளாக வந்து கொண்டிருக்கும் நமது வலைப்பக்கத்தை  ஆனந்த விகடன் இதழின்இணைப்பாக வரும் “என்விகடன்” இதழின் திருச்சி மண்டல இதழ் எடுத்து அறிமுகம் செய்துள்ளது.

எடுதது வெளியிட்ட என் விகடன் இதழ் ஆசிரியர் குழு நண்பர்களுக்கு நம் நன்றியைத் தெரிவித்து மகிழ்கிறோம். விகடனின் இந்தப் பணி தொடரட்டும்.

நன்றி - இணைப்புக்கு -  http://en.vikatan.com/article.php?aid=26135&sid=766&mid=33
--------------------------------------------------------------------------------------
“என் விகடன்” இதழ் வெளியிட்டிருக்கும் நமது சில படைப்புகள் - இங்கே!
(நம் படைப்புகளின் தலைப்புகள் சில விகடனால் மாற்றப்பட்டுள்ளன இவற்றுக்குரிய படங்கள் விகடன் வெளியிட்டவை) - நன்றியுடன், நா.மு.
--------------------------------------------------------------------------------------
இந்த இணைப்பிதழ் இப்போது -கடந்த டிசம்பருடன்- நின்று விட்டதாமே!
நண்பர்களிடம் தான் கேட்டு அச்சிதழைப் பார்க்க வேண்டும்போல... (நான் அவ்வப்போது வாங்குவேன் அந்த இதழ் பார்த்து வாங்கலயே!
-------------------------------------------------------------------------------------

புதுக்கோட்டையைச் சேர்ந்த கவிஞர் நா.முத்துநிலவன் http://valarumkavithai.blogspot.in என்ற வலைப்பூவில் எழுதிவருகிறார். ஆய்வுக் கட்டுரைகள், மாணவர்கள்,  ஆசிரியர் உறவு முறை தொடர்பான பதிவுகள் அதிக அளவில் இடம் பெற்றுள்ள இவருடைய வலைப்பூவில் இருந்து...


 ஏன் இந்தக் கொலைவெறி?
 ஏனிந்தக் கொலவெறி கொலவெறி கொலவெறிய்யா?  திருக்
குறள்நெறி தமிழில் இருப்பதும் தெரியலயா?
இனிக்கும் தமிழ் வகை மூணு! மூணு!  இப்பக்
கணினி சேர்ந்தா நாலு!
பெருந் தொகைய நீ நெனச்சு, நெனச்சு  சங்கக்
குறுந்தொகைய நீ மறந்தே!
ஏனிந்தக் கொலவெறி கொலவெறி

பத்துப் பாட்டுக் கேட்ட மண்ணெ  நீ
குத்துப் பாட்டுல கொன்னே!
ஆங்கிலத்தை வாந்தியெடுக்க
அன்னைத் தமிழை ஏன் தின்னே?
ஏனிந்தக் கொலவெறி கொலவெறி!

 தலைகீழ் மாற்றங்கள்!
 எதிரிகளை வணங்கி
கிருஷ்ணனைக் குறிபார்க்கும்
அர்ச்சுனர்கள்!

துச்சாதனன் பதற
பாஞ்சாலியை உரிக்கும்
பாண்டவர்கள்!

கோவலனை எதிர்த்து
பாண்டியனிடம் நீதிகேட்கும்
கண்ணகியர்!

விஸ்கி பாட்டிலுக்காய்
தேச ரகசியத்தை விற்கும்
அதிகாரிகள்!
தியாகிகள் பதற
துரோகிகள் செலுத்தும்
அரசியல்!
தந்தைக்கு சாராயம் தந்து
பிள்ளைக்கு சத்துணவு போடும் 
திட்டங்கள்!

'அன்பே தெய்வ’ மென
அடுத்தவனை இடிக்கும்
மதங்கள்!

கம்ப்யூட்டரை ஜெயித்து
ஜோதிடத்திடம் தோற்கும்
வாழ்க்கை!

சலுகைகளில் ஏமாந்து
உரிமைகளை இழக்கும்
ஜனங்கள்!

ஜெயஹே! ஜெயஹே!
ஜெய ஜெய ஜெய ஜெயஹே!

எண்சீர் வருத்தம்!
காபித்தூள் கடைமாற்றி வாங்க, வழியில்
காய்கறிக்காரன் பார்க்க, பல்லைக் காட்ட
''சாப்பாடு இல்லை, 'கேஸ்’ இல்லை மதியம்
சமாளியுங்கள்'' என மனைவி முகத்தைப் பார்க்க,
'மொபெட்டில்’ ரிசர்வு வர, பிள்ளை முணுமுணுக்க,
மூன்றாம் தவணை டீ.வி-க்காரன் திட்ட,
நாய்ப்பாடு பட்டு வரும் நடுத்தர வர்க்கம்
நாளரு பொழுதாகி வரும் நடுத்தெரு வர்க்கம்.

சீருடை!
பட்டன் போடவும்
தெரியாத பருவத்தில்
சீருடையா அவை..?
கட்டம் போடாத
கைதிச் சட்டைகள்!

 தீர்வு!
கடலில் மூழ்கியவன்
தீவு தேடி
திமிங்கலத்தில் விழுந்தான்

கடனில் மூழ்கியவன்
தீர்வு தேடி
'பைனான்ஸில்’ நுழைந்தான்!

நாடு, நல்ல நாடு!
பண்டைப் புகழும் பாரம்பரியப்
பண்புகள் மிக்கதும் இந்நாடே அற்பச்
சண்டையில் எங்கள் அண்டை வீட்டவர்
மண்டை உடைவதும் இந்நாடே!

எல்லா வகையிலும் வல்லோர் எங்களை
ஏளனம் செய்வதும் இந்நாடே! வெறும்
செல்லாக் காசென மனிதப் பண்புகள்
சிரிப்பாய்ச் சிரிப்பதும் இந்நாடே!

வற்றா நதிகளும் வண்டல் பூமியும்
வளம் கொழிப்பதும் இந்நாடே! தினம்
பற்றாக் குறைகளும் பட்டினிச் சாவும்
பரம்பரை யாவதும் இந்நாடே!

வேலைப் பளுவால் மாதச் சம்பளர்
வெந்து கிடப்பதும் இந்நாடே!  சிலர்
வேலை கிடைத்ததும் ஏழை எளியவரை
விரட்டிப் பிடுங்குவதும் இந்நாடே!

அங்கே வெள்ளமும் இங்கே வறட்சியும்
அவதிப் படுவதும் இந்நாடே! தினம்
கங்கா காவிரித் திட்டம் பற்றிய
காலட்சேபமும் இந்நாடே!

விடுதலைப் போரில் வேற்றுமைக் கெதிராய்
வீரம் தெறித்ததும் இந்நாடே! இன்று
அடுதலும் கெடுதலும் 'ஆண்டவ’ராலே
ஆல்போல் தழைப்பதும் இந்நாடே!

புத்தன் ஏசு காந்திய வழியார்
போதனை செய்வதும் இந்நாடே! மத
ரத்தக் களறியும் சாதிக் கொடுமையும்
நித்தம் நடப்பதும் இந்நாடே!

இகம்பர சுகம்பெற எண்ணற்ற முனிவோர்
எழுந்தருள் செய்ததும் இந்நாடே! தினம்
திகம்பர முனிபோல் எங்கள் குழந்தைகள்
தெருவில் அலைவதும் இந்நாடே!

சீற்றம் கொண்டவர் அவசரமாகச்
சிதறிப் போவதும் இந்நாடே! ஒருகை
சோற்றுக் காகவே ஓட்டும் போடுகிற
சுதந்திர நாடும் இந்நாடே!

சுதந்திரம் வந்ததும் சொர்க்கம் வருமென
சொல்லித் திரிந்ததும் இந்நாடே! அட்டத்
தரித்திரம் எங்கள் சரித்திர வாழ்வில்
நரித்தனம் செய்வதும் இந்நாடே!

தலைவர்கள் எளிமையைக் கட்டிக் காக்கவே
செலவுகள் செய்ததும் இந்நாடே இந்த
நிலைமை உணர்ந்தே கூனர் நிமிர்ந்தே
நெருப்பு விழிப்பதும் இந்நாடே!

எந்தையும் தாயும் வறுமையில் வாடி
இறந்து கிடந்ததும் இந்நாடே! அவர்
சந்ததி இன்று சங்கம் அமைத்தொரு
சமர் தொடங்குவதும் இந்நாடே!

குழந்தையின் அரசியல் கேள்வி!
திருச்சியைச் சேர்ந்த என் நண்பரும் பத்திரிகையாளருமான வில்வம் தன்னுடைய ஐந்து வயது மகள் கியூபாவுடன், திருச்சி பகுதியில் இரு சக்கர வாகனத்தில் போய்க் கொண்டிருந்தபோது கியூபா கேட்டாராம். ''ஏம்ப்பா, நிறைய சுவரில் 'அம்மா அம்மா’னு எழுதி இருக்காங்க?''
இதுபோல குழந்தைகள் அப்பா அம்மாவைக் கேட்கும்போது பெரும்பாலான பெற்றோர்கள் அவசரத்துக்குத் தப்பும் தவறுமாகக் குழந்தைதானே என்று எதையாவது சொல்லும் வழக்கத்தை மீறி, இவர் தடுமாறி இருக்கிறார். மீண்டும் கியூபா, ''ஆடு, இலை, ஈ இதெல்லாம் எப்பப்பா எழுதுவாங்க?'' எனக் கேட்டாராம். அப்போதும் பதில் சொல்லவில்லை.
ஐந்து வயது குழந்தையின் அட்டகாச அரசியல் நகைச்சுவையோ?