‘மறைமலையடிகள் பிள்ளைத்தமிழ்’ – காப்புப் பருவம் - பாடல் :1


ஒளிதோன்ற ஒளியிலிருந்து
     யிர்தோன்ற (1) உயிருடம்பில்
             உணர்வும் தோன்ற
உணர்வொன்றி உயர்-இழிவும்
                    ஒன்றின்றி உளம்ஒன்றி
                          உரையா உண்மைக்
களிதோன்ற களிமாறிக்
கவல்தோன்றக் கணக்கின்றிக்
கறங்கி நின்ற
கருத்தில்லா முன்னோரின்
கருத்தறிய முதன்முதலில்
கடுநா நின்றும்
விளிதோன்ற விளியுணர்த்தும்
மொழிதோன்ற தமிழின்வழி (2)
விளக்கம் தோன்ற
விளங்கியபின் மாந்தர்உளம்
விலங்கிலிருந்து உயர்ந்தோங்கி
வேறாய்த் தோன்றும்
அளிதோன்ற அனைத்துயிரின்
அகத்திருளை அகற்றுதமிழ்
அறிவை வேண்டி
அழகுதமிழ்ப் பழகுமறை
                     மலையடிகள் தமைக்காக்க
அழைப்பாம் அன்றே!

------------------------------------------------------------------------
(1)- இக்கருத்து அடிகளின் கருத்தே :
‘ஒளியுருவில் ஒலியுருவுதோற்றுவித்த தொன்னாளில்’:
 ‘அம்பிகாபதி அமராவதி’ நாடகக்கடவுள் வாழ்த்து -வரி:6
(2)- ‘தமிழ் இன்ன காலத்திலேதான் தோன்றியதென்று கட்டுரைத்துச் சொல்ல இயலாது’ என்று அடிகள்தம் ‘உரைமணிக் கோவை’ (பக்கம் 64) கூறியதால்,
தமிழின் தோற்றக் காலத்தைக் குறிப்பிடக் கூடவில்லை
------------------------------------------------------------------------



‘மறைமலையடிகள் பிள்ளைத்தமிழ்’


முன்னுரை : (2)


அரசர்கல் லூரியில்யான் 
     பயின்றக்கால் ‘பிழையில்லா
         அருந்த மிழ்ப்பா  
வரைதற்கே இனியாரும்
     வாராரோ?’ எனயெண்ணி  
         வருந்தி யக்கால் 
முருகமர்ந்த பாநெஞ்சின்
     முதுக்குறைவால் எமைத்தொடர  
         முதலா மாண்டில்
இருவரவண் எழுந்திட்டார்  
     ‘நா.முத்து நிலவன’; ‘துரை’  
          என்போர் அன்னோர்!  
-- புலவர் செந்தலை ந.கவுதமன்



மறைமலையடிகள் பிள்ளைத்தமிழ் - நா.முத்துநிலவன்

‘முத்துநிலவன்’ “பிறந்த” கதையும் 
‘மறைமலையடிகள் பிள்ளைத்தமிழ்’ 
எழுந்த கதையும்...

                   திருவையாறு அரசர் கல்லூரியில் நான் இரண்டாம் ஆண்டு தமிழ் இலக்கியம் படித்தபோது,-(19வயது) ‘தமிழ் இலக்கிய - இலக்கணக் கடல் அய்யா தி.வே.கோபாலர் அவர்கள் முதல்வராக இருந்தார்கள்.
                 அவர் ஏற்றியிருந்த பழந்தமிழ் வெறி வேறொரு முனையில் ‘தமிழியக்கம்’ என்னோடு நெருங்கக் காரணமானது. தற்போது கோவை அருகில் உள்ள சூலூர் பாவேந்தர் பேரவையின் செயலர் புலவர் செந்தலை ந.கவுதமன் அண்ணா அப்போது அதே கல்லூpயில் இறுதியாண்டு படித்துவந்தார் அவர்தான் எனது இயற்பெயரை  மாற்றி ‘முத்து நிலவன்’ எனப் பெயர் சூட்டினார். 
                  அப்போது தமிழியக்கத்தின் மாநிலத் தலைவராக இருந்தவர் பின்னாளில் தமிழகச் சட்டப்பேரவைத் தலைவராக இருந்த பேரா. தமிழ்க்குடிமகன் அவர்கள்.  பொதுச்செயலராகத் தஞ்சைப் பேரா.இரா.இளவரசு அவர்களும், மாநில நிர்வாகக் குழுவில் திருச்சி ஈவெரா கல்லூரிப் பேராசிரியர் கு.திருமாறன் அவர்களும் தற்போது ‘முதன்மொழி’ இதழாசிரியராக இருக்கும் திரு அரணமுறுவல் அவர்களும் இருந்தார்கள்.
                   எனக்கு நெருக்கமான திருக்காட்டுப்பள்ளித் தோழர் ஞானசேகரன் ‘அறிவுறுவோன்’ ஆகவும், தோழர் பெ.மணிராஜ் ‘மணியரசன்’ஆகவும், திருவையாறு நீதிமன்றத்தில் பணியாற்றிய தோழர் நா.விஜயரங்கன் ‘மன்னைமறவன்’ ஆகவும், செந்தலை ந.கவுதமன் அவர்களுடன் அப்போது படித்து -தற்போது கரந்தைக் கல்லூரியில் பணியாற்றும் - பாலசுப்பிரமணியன் ‘இளமுருகன்’ ஆகவும் என் கூடப் படித்த சு.துரை ‘கோவை வாணன்’ ஆகவும், சீ.விஜயகுமார் வெற்றிச்செல்வனாகவும், செந்தலையாருக்கும் முன்னே அதே கல்லூரியல் படித்த ஜெயபால் -தற்போது சென்னையில் ‘பொன்னி பதிப்பகம்’ நடத்திவரும் - ‘வைகறை வாணன்’ ஆகவும்  என, பற்பலரும்; இவ்வாறே பெயர் மாற்றம் பெற்றனர்.
                    சூழலே தனித் தமிழ்மயமாக இருந்த நேரம் அது. ‘தனித்தமிழ், பகுத்தறிவு பொதுவுடமை’ எனும் முப்பெரும் கொள்கை முழக்கோடு தமிழ் மறவர்களாய்த் திரிந்த காலம்!

                  கண்டஇடத்திலும் வெண்பா ஈற்றடி கொடுத்து விரைந்து முடிப்பவர் பாராட்டப்படும் இனிய சூழல் ! (திருவையாறு காவிரியாற்றில் ஆடிப்பெருக்கின் பெருவெள்ளத்தில் நட்டாற்றில் குதித்து -பெண்கள் விடுதிப்பக்கமாக- முழுகி நீந்திக் கொண்டிருக்கும் போது,  வந்த ‘வசமாக மாட்டினேன் வந்து’ எனும் ஈற்றடியை நான். ‘நிசமாகச் சொல்கிறேன், நீச்சலறி யாமல் வசமாக மாட்டினேன் வந்து’ என வெகுவிரைவில் முடித்து காவிரியோடு தமிழில் நீச்சலடித்த பருவம்! 
  அதே ஆண்டில் தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை எனப்படும்  ‘மறைமலையடிகள்’ அவர்களின் நூற்றாண்டு விழாவுக்கான ‘மறைமலையடிகள் பிள்ளைத் தமிழ்ப் போட்டி அறிவிப்பும் வந்தது. 
                  அப்போது– எனது பத்தொன்பதாம் வயதில், இரண்டாமாண்டுக் கல்லூரி விடுமுறையில்- எழுதிய நூல்தான் ‘மறைமலையடிகள் பிள்ளைத் தமிழ்’

இதில், இப்போதைய முத்துநிலவனைத் தேடாதீர்கள்!!!

இது எனது ‘பழைய பனையோலை’!

இனி ஒவ்வொரு பாடலாகப் பார்ப்போம்…

உங்கள் கருத்தை அறிந்து தொடர எண்ணம் …
அன்புடன், 
நா.முத்துநிலவன், 
30-03-2011

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் – 2010ஆம் ஆண்டுக்கான பரிசுப் போட்டிகள் அறிவிப்பு


1. சு.சமுத்திரம் நினைவுப் பரிசு -
    விளிம்பு நிலை மக்களைப் பற்றிய படைப்புக்கு -      
-ரூ.10,000
2. கு.சின்னப்ப பாரதியின் பெற்றோர்கள்
    பெருமாயி-குப்பண்ணன் நினைவுப் பரிசு – நாவலுக்கு
-ரூ5,000
3. எழுத்தாளர் புதுமைப் பித்தன் நினைவுப் பரிசு – சிறுகதை நூலுக்கு -      
           -ரூ.4,000
4. அமரர் சேதுராமன்-அகிலா நினைவுப் பரிசு – குழந்தைகள் நூலுக்கு
            ரூ.2,500
5. குன்றக்குடி அடிகளார் நினைவுப் பரிசு – தமிழ் வளர்ச்சிக்கான நூலுக்கு-
            ரூ.4,000
6. செல்வன் கார்க்கி நினைவுப் பரிசு – கவிதை நூலுக்கு
            ரூ.2,000
7. வ.சுப.மாணிக்கனார் நினைவுப் பரிசு – மொழிபெயர்ப்பு நூலுக்கு-
            ரூ.2,000
8. ப.ராமச்சந்திரன் நினைவு குறும்படம்2- ஆவணப்படம்2க்கான பரிசுகள் -
            ரூ.2,500 வீதம் 4 பரிசுகள்

படைப்புகள் ஒவ்வொன்றிலும் 4 படிகளை  அனுப்ப வேண்டும்


 கடைசி நாள்: 30-04-2011
அனுப்ப வேண்டிய முகவரி:
பொதுச்செயலாளர்-தமுஎகச.,
மாநிலக்குழு அலுவலகம்,
28/21,வரதராஜபுரம் பிரதான சாலை,
தேனாம்பேட்டை,
சென்னை-600 018
----------------------------------------------------------------

நா.முத்து நிலவன் பேச்சு!

இளைஞர்களுக்கு உரிமையும் உண்டு! கடமையும் உண்டு!
கல்லூரி விழாவில் கவிஞர் நா.முத்து நிலவன் பேச்சு!
புதுக்கோட்டை-மார்ச் 17
 இந்தியாவின் எதிர்காலத்தை உருவாக்குவதில் இளைஞர்களுக்கு, உரிமையும் உண்டு கடமையும் உண்டு இந்த இரண்டையும் உணர்ந்து தம்மைத் தயார்ப்படுத்திக் கொள்வோரே தன்முன்னேற்றத்தில் மட்டுமல்ல இந்தியமுன்னேற்றத்திலும் வெற்றிபெறப் போகிறார்கள் என்று கவிஞர் முத்து நிலவன் கூறினார்.
 இங்குள்ள மாமன்னர் கல்லூரியின் ‘குடிமக்கள் நுகர்வோர்மன்ற’ துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள்; சங்கத்தின் மாநில துணைத்தலைவரும் பிரபல பேச்சாளருமான கவிஞர் நா.முத்துநிலவன் மேற்கண்டவாறு பேசினார்.
வுpழாவிற்கு கல்லூரியின் பொறுப்பு முதல்வர் பெ.சேதுராமன் தலைமையேற்றார். மாவட்ட வழங்கல் அலுவலரும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலருமான அ.ராஜசேகரன் ‘குடிமக்கள் நுகர்வோர்மன்ற’ கல்லூரிக் கிளையின் பெயர்ப்பலகையைத் திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினார். கவிதை, கட்டுரை பேச்சு, பாடல் மற்றும் கோலப்போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ-மாணவியர்க்குப் பரிசளித்து ‘நல்லாசிரியர்’ மு.மெய்யர் வாழ்த்துரை யாற்றினார். வழக்குரைஞர் மு.ரெங்கசாமி, பேராசிரியர்கள் சா.விஸ்வநாதன், ச.ரவிச்சந்திரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
இவ்விழாவில் பேசிய கவிஞர் முத்து நிலவன் மேலும் கூறியதாவது:
‘இன்றைய இளைஞர்- மாணவர்களுக்குப் பொறுப்பே கிடையாது’ என்பது போலப் பலரும்; நினைக்கிறார்கள்.. ஒரு சிலர் அப்படி இருந்தாலும் பெரும்பாலான மாணவர் அப்படிஇல்லை என்பதே உண்மை! சமுதாயம் எப்படி இருக்கிறதோ அப்படித்தான் இளைய-மாணவர் சமுதாயமும் இருக்கும்
இந்திய சுதந்திரப் போராட்டத்திலும், உலகில் நடந்த சமுதாய-அரசியல் புரட்சிகளிலும் அந்தந்த நாட்டின் அத்தனை பேரும் பங்கேற்றதில்லை. மூன்று முதல் ஐந்து விழுக்காடு மக்களே அதுபோன்ற போராட்டங்களில் நேரடியாக பங்கேற்றதாகத்தான் வரலாறு சொல்கிறது. மற்றவர்கள் அந்த முன்னணி வீரர்களை நம்பி பின்னால் சென்றார்கள். நீங்கள் அந்த பின்னணி வீரர்களாக இருப்பதும், நேரடிக் களம் காணும் வெற்றி வீரர்களாக இருப்பதும் உங்கள் உரிமைகளையும் கடமைகளையும் எந்த அளவுக்கு உணர்ந்திருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே அமையும்.
நுகர்வோர் உரிமை இரண்டு தன்மைகளைக் கொண்டது. ஒன்று தன்னலம் சார்ந்தது, இரண்டாவது நம் தேசநலம் சார்ந்தது. ஒரு பொருளை வாங்கும்போது நட்;டம் அடைவதும், பொருள் இழப்பு நேர்வதும் தன்னலம் சார்ந்தது என்றாலும் அந்தப் பொருளின் தன்மை சார்ந்து தேச நலமும் அதற்குள் அடங்கியிருக்கும். இந்த இரண்டையும் நுட்பமாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
பெண்களிடம் ‘நாம் கருப்பாக இருக்கிறோம் அதனால் அழகாக இல்லை’ என்னும் தாழ்வு மனப்பான்மையை விளம்பரங்கள் விதைக்கின்றன. அழகுசாதனப் பொருளால் கருப்பான நிறம் சிவப்பாக முடியுமா என்பதை சிந்திப்பதோடு, உழைப்பின் நிறமே கருப்புத்தான் என்பதையும் சேர்த்து சிந்தித்துப் பார்க்கவேண்டும். பன்னாட்டு வியாபாரிகள் நம் மனநிலையை மாற்றுவதற்காகச் செலவழிக்கும் தந்திரமே இதுபோன்ற விளம்பரங்கள். இதுபோலவே ஐம்பது காசு மிட்டாய் விளம்பரம் ஒன்றும், ஒரு பற்பசை விளம்பரமும் பெண்களைக் கேவலப்படுத்துவதை புரிந்துகொண்டு, அதுபோலும் பொருள்களை பயனற்ற பொருள் என்பதால் மட்டுமல்ல மட்டமான விளம்பரத்தின் காரணமாகவும் ஒதுக்கித் தள்ளவேண்டும்.
அதேபோல, இளநீரையும், பதநீரையும், கம்பங்கூழையும், நீராகாரத்தையுமே பருகிப் பல்லாண்டுகள் வாழ்ந்த நம் முன்னோர்களிலிருந்து விலகி, ‘கோலா’ குடிப்பதை ஒரு நாகரிகம் போல மாற்றிய வியாபாரத் தந்திரத்தையும் இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அந்த விளம்பரங்களில் நடிக்கும் ‘பிரபலங்கள்’ பல லட்சம் வாங்கிக் கொண்டு, நம்மைக் குடிக்கச் சொல்லி ஆடிப்பாடிச் சிரிக்கிறார்கள்.
கோலிசோடா, குண்டுசோடாக்களை கிட்டத்தட்ட விழுங்கி ஏப்பமிட்டு விட்;ட ‘கோலா’ பானங்களைக் குடிக்கிறபோது நமது பண்பாடும் கேவலப்படுத்தப் படுகின்றது. புhரம்பரிய உணவுப்பழக்க மாற்றத்தால் நம் உடல் நலக்கேடும் உடன் நிகழ்வாகிறது. இதுபோன்ற பன்னாட்டுக் கொள்ளை வியாபார உத்திக்குள்; நம் நாட்டு சிறுதொழில் நசிவு போன்ற பொருளாதாரச் சிக்கலும் இருக்கிறது.
நாகரிகம் எனும் பெயரில் இந்த வியாபார விளம்பரங்களுக்கு நாம் விலைபோனால், நாளை நம் நாடே பொருளாதார அடிமைத் தனத்தில் வீழ்ந்து விடும் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். நல்ல உணவு, நல்லநீர், நல்ல சுற்றுச்சூழல் போல நல்ல பண்பாடும், நல்ல அரசியலும் கூட நம் ஒவ்வொருவரின் உரிமை. அதற்காகத்தான் நம் தலைவர்கள் பல்வேறு தியாகங்களைச் செய்து சுதந்திரப் போரில் குதித்தார்கள், தம் இன்னுயிர்களைப் பலியிட்டார்கள்.
தியாகிகள் விட்டுச் சென்ற நம் தேசத்தாயைக் காப்பாற்றுவது நம் ஒவ்வொருவரின் -குறிப்பாக இளைஞர்களின்- உரிமை. அதற்கான பணியில் நம்மைத் தயார்ப்படுத்திக் கொள்வதும், மக்களைத் தயார்ப் படுத்துவதும் நம் கடமை. இதுதான் நுகர்வோர் மன்றத்தின் நுட்பமான பணியாக இருக்க வேண்டும்’
இவ்வாறு பேசிய முத்துநிலவன் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களைக் கௌரவித்ததோடு, அனைத்துத் துறை மாணவ உறுப்பினர்களின் ஒத்துழைப்போடு விழா ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந்த மன்ற ஒருங்கிணைப்பாளர் பேரா.சு.மாதவன் செயல்திட்டங்களையும் வெளியிட்டுப் பேசினார்.
சேகர்,மு.பழனியப்பன், கா.காளிதாஸ், லூகாஸ் உள்ளிட்ட பேராசிரியர்களுடன் அனைத்துத் துறைகளையும் சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ-மாணவியரும் விழாவில் கலந்து கொண்டனர்.
முன்னதாக மாணவர்தலைவர் மா.சுந்தரராஜ் வரவேற்க, முனைவர் பட்ட ஆய்வுமாணவரும் மன்றச் செயலாளருமாகிய கி.கோவிந்தன் நன்றி கூற, நாட்டுப் பண்ணுடன் விழா இனிதே நிறைவெய்தியது.
-----------------------------------------------------------------------
நன்றி: ‘தினமணி’ – நாளிதழ் 17-03-2011-வியாழன் (திருச்சி பதிப்பு) பக்கம்-2.

என்னைக் கவர்ந்த வலைப்பூக்கள்:-2

எனது இலக்கிய இயக்க முன்னோடியும்,
‘பூ’ தமிழ்த் திரைப்படத்தின் மூலக்கதையான ‘வெயிலோடு போய்’ உள்ளிட்ட தமிழின் ஆகச்சிறந்த சில சிறுகதைகளின் ஆசிரியரும், சிறந்த படைப்பாளியும், தொடர்ந்த இடையறாத படிப்பாளியும், தமிழ்நாட்டின் தவிர்க்க முடியாத இலக்கிய இயக்கமான ''தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க''த்தின் பொதுச்செயலாளருமான --இனிய, மற்றும் வெகு அரிதான இயல்பான மனிதர்-- தோழர் ச.தமிழ்ச்செல்வன் அவர்களின் வலைப்பூவை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் நான் பெருமைப் படுகிறேன்.. அவசியம் தொடர்ந்து படிக்க வேண்டிய அவரது வலைப்பக்கம்:

அன்புடன்,
நா.முத்து நிலவன்,
12-03-2011
மதியம் 2.00

எனக்குப் பிடித்த வலைப்பூ - படைப்புகள் :-2


எனது வலைப்பூவை உருவாக்கித் தந்த --‘மின்தமிழில்’ எனது முன்னோடியாக விளங்கும்-- புதுக்கோட்டையைச் சேர்ந்த மாமன்னர் கல்லூரித் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் மு.பழனியப்பன் அவர்களின் இந்தக் கட்டுரை இணையத்தில் இணைய விரும்பும், தொடங்கும் தமிழார்வலர் அனைவரும் படிக்கவேண்டிய தகவல்கள் கொண்டதாக உள்ளது. நண்பர்கள் படித்துப் பயன்பெற வேண்டுகிறேன்.

அன்புடன்,
நா.முத்து நிலவன்,
12-03-2011
மதியம் 1.30

என்னைக் கவர்ந்த வலைப்பூக்கள் : 1

முனைவர் மு.இளங்கோவன் அவர்களின் வலைப்பூ உருவ நேர்த்தியிலும். உள்ளடக்க அடர்த்தியிலும் என்னைப் பெரிதும் கவர்ந்து விட்டது.
இணையத் தமிழ்ப் பயிலரங்கை ஊர்ஊராக கல்லூரி-பள்ளிகள் தோறும் முக்கியமாக ஆசிரியப் பயிற்சிக் கல்லூரிகளில் நடத்த வேண்டும்.
நண்பர்கள் அவசியம் பார்க்க அவரது இணையத்தமிழ்ப் பணியில் இணைய வேண்டுகிறேன்
அவரது வலைப்பூவைப் பார்க்க
http://muelangovan.blogspot.com/
- நா.முத்து நிலவன்
 

எனக்குப் பிடித்த வலைப்பூ படைப்புகள் : 1


kfspu; jpdf; ftpij : Nt.kjpkhwd;  

தெய்வக் குத்தம்
கனவில் அவள் வந்தாள்
கனவிலும்
தூங்கிக் கொண்டிருந்த
என்னைத் தட்டியெழுப்பி
எனக்கொரு
பிரச்சினை என்றாள்.
.
நான்கு கைகளோடு நின்ற
அவளைக் கண்டு மிரண்டு,
யார் நீங்கள்? என்றேன்.
என் பெயர் காமாட்சி
ஊர் காஞ்சிபுரம் என்றாள்.
.
அய்யோ கடவுளா!
கடவுளுக்கே பிரச்சினையா?
ஆச்சரியத்தோடு
கணவனாலா என்றேன்.
கணவனால்
பிரச்சினை இல்லை
பிரச்சினைகளைப்
புரிந்து கொள்ளாமல்
கல்போல் நிற்பவன்
கணவனா என்றாள்.
.
புரியவில்லையே என்றேன்.
தினம் தினம்
நான் அவமானத்தால்
செத்துப் பிழைக்கிறேன்
என் பெண்மை
கேவலப்படுத்தப்படுகிறது
என்று உடைந்தாள்.
நான் பதட்டமாகிப் போனேன்
அய்யோ உங்களையா?
யார் அவன்? என்றேன்.
கோயில் குருக்கள் என்றாள்.
குருக்களா!
என்ன செய்தார் அவர்?
அதிர்ச்சியாகக் கேட்டேன்.
.
தினம் தினம்
கருவறையின் கதவுகளை
உட்பக்கமாக சாத்திக்கொண்டு
என்னை நிர்வாணப்படுத்தி அபிஷேகம்…
என்று சொல்லிக்
கொண்டிருக்கும்போதே
அவமானத்தால் கதறி விட்டாள்.
.
பின் நிதானித்து
குருக்கள் வாயில்
மந்திரம் இருக்கலாம்
மரியாதை இருக்கலாம்
ஆனால்
இதை
பெண்ணின் மனநிலையில்
புரிந்து கொள்
அவமானம் புரியும் என்றாள்.
.
சரிதான், ஆனால்
இதற்கு என்ன செய்ய முடியும்
என்றேன்-மிகுந்த வருத்தத்தோடு.
ச்சீ… இப்படிக் கேட்க
உனக்கு வெட்கமாக இல்லை?
உக்கிரமாகிப் போனாள் காமாட்சி
கோபத்தோட தொடர்ந்தாள்
எல்லாத் துறைகளிலும்
பெண்களுக்கு உரிமையும்
ஒதுக்கீடும் வேண்டும் என்று
கேட்கிறீர்களே
கோயில் கருவறைக்குள்
குருக்களாக
அர்ச்சகர்களாக
பெண்களை அனுமதித்தால்
உங்கள் புனிதம் என்ன
நாறி விடுமோ? என்று
காறித் துப்புவது போல் கேட்டு
நிலம் நடுங்க
சலங்கை உடைய
தீயைப் போல் போனாள்
காஞ்சி காமாட்சி
***
-"2002-தலித்முரசு-2002> விழிப்புணர்வு-2006  ஆகிய இதழ்களில் ஏற்கெனவே வெளிவந்த  கவிதை" எனும் குறிப்போடு, தனது வலைப்பூவில் மார்ச்-8> 2011 அன்று-  மூன்றாவது முறையாக எடுத்து வெளியிட்ட  வே.மதிமாறன் அவர்களுக்கு நன்றி.
கவிதையை வெளியிட்ட வலைப்பூ : http://mathimaran.wordpress.com/

சமச்சீர் கல்வி: அரசும், ஆசிரியர்களும்

 - நா.முத்து நிலவன்
பாரதி பாடிய ‘வாராது போல்வந்த மாமணியைத் தோற்போமோ?’ எனும் வரிகளைத் தமிழர்கள் பலரும் மறந்துவிட்டோம். ஆனால், எப்போது நினைத்தாலும் மனசைப் பிசையும் அந்த ஏக்க வரிகளை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்துவதாகத்தான் இன்றைய தமிழகத்தின் கல்விச் சூழல் இருக்கிறது! பாரம்பரியம் மிகுந்த – பண்பாட்டுக்குப் புகழ்பெற்ற -- நமது தமிழ்ச்சமுதாயத்தில் மிகுந்துவரும் இன்றைய சிக்கல்களை தமிழ் இளைஞர்கள் புரிந்து கொள்ளாமல் இருப்பதற்கு, இவர்கள் கற்ற கல்வியே முதன்மைக்காரணமாக உள்ளது. ‘மெக்காலே’கல்விமுறை இவர்களைச் சமுதாயத்திலிருந்து பிரித்து, ‘தனக்குத்தேவையானதை அறிந்திருப்பதே அறிவு’ என்று நம்பவைத்துவிட்டது.
மனப்பாடக் கல்வி என்பதே,‘தனித்தே மனப்பாடம் பண்ணி, மதிப்பெண்களை அள்ளுவது’தானே? இதை மாற்றுவதுபற்றி, பற்பல ஆண்டுகளாக அறிஞர்கள் பற்பலர் பல்வேறுபட்ட கருத்துகளைச் சொல்லிச் சொல்லி அசந்து போனார்கள். கடைசியாக இன்றைய தலைப்புச் செய்திகளில் இடம்பெற்ற சமச்சீர் கல்வி இதற்கொரு நல்ல தீர்வைத் தரும் என்னும் நம்பிக்கையை எழுப்பிவருகிறது. ஆயினும்கூட முழுமனசாகவோ அரை மனசாகவோ தமிழகஅரசே முன்மொழிந்திருக்கும் இந்த நல்ல திட்டத்தை அரசே ‘கிடப்பில்போட’க்கூடிய அளவிற்குப் பல விஷயங்கள் நடந்து வருகின்றன என்பதுதான் இப்போது மேலோங்கி வரும் நமது கவலை.
சமச்சீர் கல்வியால் பயன்பெறப்போவது எதிர்காலச்சமுதாயம்தான் என்பதால் ‘இன்றைய பலனில்’ மட்டுமே குறியாகஇருக்கும் அரசியல்வாதிகள் இதைக் கண்டுகொள்ளாமல் இருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. பெற்றோர்களுக்கு இதன் பயன் இன்னும் சரியாகப் புரிபடவில்லை. மாணவர்களுக்குப் புரிய இன்னும் சில ஆண்டுகளாகும்.ஆனால் புரிந்துகொள்ள வேண்டிய ஆசிரியர் சமுதாயம் என்னசெய்கிறது?
தனிப்பட்ட காவலர்களைவிடத் திருடர்கள் கூட்டம் எப்போதுமே ‘அட்வான்சாக’ இருக்கும் என்பது உலக உண்மை! அதுதான் சமச்சீர் கல்வி விஷயத்திலும் நடந்து வருகிறது! சமச்சீர் கல்வி தொடர்பாக மக்கள் கருத்தறியும் குழு, தமிழ்நாடு முழுவதும் சுற்றிவந்தபோது, ஆங்காங்கே அவர்களைச் சந்தித்து, கட்டுக்கட்டாக இதன் ‘தீமை’களைப் பற்றி எழுத்துவடிவத்தில் கொடுத்தவர்கள் ‘மெட்ரிக்’ பள்ளிகளின் தாளாளர் பெருமக்களே! சமச்சீர் கல்விக்கான ஆதரவுக் கருத்தைவிடவும் எதிர்ப்புக் கருத்தே அதிகமாக வந்ததைக் கண்டு அவர்களே திகைத்துப் போயினர் எனும் செய்தி சோகமானது என்பதைவிடக் கேவலமானது என்றுதானே சொல்லவேண்டும்?
 சம்பளக்கமிஷன் அறிக்கை குறித்துக் காட்டிய அக்கறையில் நூற்றில் ஒருபங்கைக் கூட சமச்சீர் கல்வி அறிக்கை குறித்து ஆசிரியர் அமைப்புகள் காட்டவில்லையே! ஏன்?!?  சம்பளக் கமிஷன் அறிக்கை குறித்து ஆசிரியர் அமைப்புகள் அக்கறை காட்டுவதை நான் குறை கூறவில்லை. அது ஆசிரியர்களின் உரிமை சார்ந்தது, நியாயமானதும்கூட. 1985-86இல் நடந்த ‘ஜேக்டீ’ போராட்டத்தில், தமிழகத்திலேயே அதிகபட்சமாக 55நாட்கள் சிறையிருந்த ஆசிரியர்களில் நானும் ஒருவன்!
எத்தனையோ போராட்டங்களை இணைந்து நடத்தியிருக்கும் ஆசிரியர் அமைப்புகள், தமது சமுதாயக் கடமையைச் சரியாகச்செய்யக் கிடைத்த நல்ல வாய்ப்பாகக் கருதி, ‘சமச்சீர் கல்வியை உடனே செயல்படுத்துக’ என்று, மாநில அளவில் ஒரேகுரலில் எதையும் செய்யவில்லையே! ஏன்?
அரசை எதிர்த்துக்கிளம்பும் ஆவேசஅமைப்புகள் ‘சமச்சீர்கல்வி எதிர்ப்பாளர்’களை எதிர்த்துச் சிறு சத்தம்கூட எழுப்பவில்லையே, ஏன்? அண்மையில் கடந்த 24-10-2009 சனிக்கிழமை அன்று மாநிலஅளவில் நடந்த ‘பத்துஅம்சக் கோரிக்கை’ பேரணியில்கூட பத்தாவது கோரிக்கையாகவே (‘சப்ஸ்டிட்யூட’ போல) சமச்சீர் கல்வி இடம்பெற்றதே! ஏன்? இது ‘பத்தோடு பதினொன்றுதான்’என்றுசொல்லாமல் சொல்கிறார்களா?   சங்கத்தலைவர்களின் அறிக்கையில்மட்டும் அவ்வப்போது சமச்சீர்கல்விஆதரவு இடம்பெற்றால் போதுமா?  ஆங்காங்கே சில கருத்தரங்கம் நடத்தியது மட்டும் போதுமா?அல்லது பணப்பலனுக்காகவோ ஆசிரியர் சிலரின் உரிமைக்காகவோ நடந்த மாவட்ட ஆர்ப்பாட்டங்களில் தலைவர்கள் சிலர் சிலநிமிடம் சமச்சீர் கல்வி பற்றிப் பேசியது மட்டும் போதுமா? அனைத்து ஆசிரியர் அமைப்புகளும் இணைந்து, மக்களையும் சேர்த்துக்கொண்டு இதற்கென்றே மிகப் பெரிய இயக்கங்களை நடத்த, என்ன தடை?
நல்லாசிரியர் விருதுபெற்ற பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்களும் இந்தத் தமிழ்நாட்டில் தானே இருக்கிறார்கள்? அவர்கள்கூட சமச்சீர் கல்வி குறித்து ‘வாய்மூடி மௌனிகளாக’ இருப்பது ஏன்? ஒருவேளை எப்போதுமே மௌனமாக இருப்பதற்காகத்தான் நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறதா?
கல்விக் கடமையைச் சரியாகச் செய்யும்போதே சமுதாயத் கடமையையும் சேர்த்துச் செய்ததற்காகத்தான் நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்படுவதாக நான் கேள்விப்பட்டிருக்கிறேன். கல்வி சார்ந்த சமுதாயக் கடமை என்றால் ‘சமச்சீர் கல்வி’யை நடைமுறைப் படுத்த உதவுவதைவிட வேறென்ன சமுதாயக் கடமை நல்ல ஆசிரியர்களுக்கு  இருக்கமுடியும்? இப்போது மெட்ரிக் பள்ளிகளில் படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு, தமது பிள்ளைகள் படித்துவரும் ‘தரமான மெட்ரிக்’ கல்விக்கு சமச்சீர் கல்வித் திட்டத்தால் பாதிப்பு வந்துவிடுமோ எனும் சந்தேகம் எழுந்திருக்கிறது. இதேபோல, சமஸ்கிருதம் மற்றும் அரபி மொழிகளை ஓரியண்டல் பள்ளிகளில் படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு, தமது பாரம்பரிய மதவழி மொழிக்கல்வி மதிப்பிழந்துவிடுமோ எனும் அச்சமும் எழுந்திருக்கிறது. இந்தச் சந்தேகத்தையும் அச்சத்தையும் போக்கி, அவர்கள் விரும்பும் மதஉரிமையோடும் மதவழி மொழியோடும் தமிழ்நாட்டில தமிழ்மொழியைப் படித்தாகவேண்டிய அவசியத்தையும், சமச்சீர் கல்வியின் நன்மைகளையும் உணர்த்தவேண்டிய அவசியம்  உள்ளதே. இதை அரசும் ஆசிரியர்களும்தானே செய்யமுடியும்?
பத்தாம்வகுப்பு வரை எந்தவகைப் பள்ளியில் படித்தாலும் 11,12ஆம் வகுப்புகளை தமிழ்நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டத்தில்தான் படித்தாக வேண்டும்.  ஏற்கெனவே ஒன்றாம்வகுப்பு முதல் பத்தாம்வகுப்புவரை தமிழ்ப்புத்தகம் மட்டும் ஒன்றாகத்தான் இருக்கிறது எனவே மற்ற பாடப்புத்தகங்களும் ஒன்றுபோலவே இருப்பது குழந்தைகளுக்கு மட்டுமல்ல நாட்டுக்கும் நல்லது என்று எடுத்துச்சொன்னால் புரிந்துகொள்வார்கள். அதாவது தற்போது தமிழ்நாடு முழுவதும் 11, 12 வகுப்புகளில் இருப்பதுபோல அனைத்து வகுப்புகளுக்கும் ஒரே மாதிரியான தரமான பாடப்புத்தகம் ஆரம்பமுதலே வந்தால் பெற்றோர் வேண்டாமென்றா சொல்வார்கள்? அரசும், ஆசிரியர்களும் எடுத்துச்சொன்னால், நிச்சயம் ஒத்துழைப்பார்கள்.
அரசுப்பள்ளி, மெட்ரிக்பள்ளி, ஆங்கிலோ இந்தியன்பள்ளி, மற்றும் சமஸ்கிருத /அரபி ஓரியண்டல் பள்ளி என நால்வகைப் பள்ளிகளின் பத்தாம்வகுப்பு மாணவர்க்கு நால்வகைப் பாடப்புத்தகங்கள் போலவே தேர்வுகளும் மதிப்பெண் பட்டியல்களும் இதுவரை நான்கு வகையாகத்தான் இருந்துவந்தன. இந்த வழக்கம் கடந்த ஆண்டே முடிவுக்கு வந்துவிட்டது, அதாவது ‘சமச்சீர்கல்வியின் முதல்கட்டமாக, எந்தவகைப் பள்ளியில் எத்தனை மதிப்பெண்ணுக்குத் தேர்வு எழுதினாலும் அரசுப்பள்ளிபோல 500 மதிப்பெண்ணுக்கே மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும் என, சமச்சீர் கல்விக்கு முன்னோட்டமாக ‘சமச்சீர் மதிப்பெண் பட்டியல்’ வந்துவிட்டது! 11ஆம் வகுப்புக்கு வரும்போது நால்வகைக் கல்விமுறையும்தான் ஒன்றாகிவிடுகிறதே! இந்த முதல்கட்டத்தைச் சிறப்பாக நிறைவேற்றிய பள்ளிக்கல்வித்துறையை சமச்சீர் கல்வி ஆதரவாளர்கள் மனதாரப் பாராட்டினார்கள். வழக்கம் போல் எதிர்ப்பாளர்கள் நொந்துபோனார்கள்!
அடுத்த கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பிற்கும் ஆறாம்  வகுப்பிற்கும் சமச்சீர் கல்வித்திட்டத்தின் அடிப்படையில் புதிய பாடத்திட்டம் எழுதுவதற்கான பணியைத் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை தற்போது தொடங்கியிருக்கிறது. இங்குதான் ‘தமிழக அரசின் கல்வித்துறையிலும் ‘சமச்சீர் கல்வி எதிர்ப்பாளர்கள் சிலரின் சமர்த்தான வேலைகள் நடந்துகொண் டிருக்கின்றனவோ எனும் சந்தேகம் எழும்படியாக சிலநிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன.
ஏற்கெனவே தமிழகஅரசு நடத்திவரும் ஆரம்பப் பள்ளிகளில் முதல் நான்கு வகுப்புகளுக்குப் பாடநூல்களுக்குப் பதிலாக விளையாட்டுமுறை அட்டைகள் வழியும்,ஆடல் பாடல் கதைகள் வழியாகவுமே பாடங்கள் கற்பிக்கப் படுகின்றன. பாடநூல் உண்டென்றாலும் முன்புபோல் அவற்றுக்கு முக்கியத்துவம் தரப்படுவதில்லை. பேரா.முத்துக்குமரன் குழுவினர் தந்திருக்கும் சமச்சீர்கல்வி அறிக்கையிலும் ஆரம்ப வகுப்புகளுக்குப் பாடநூல்களை விடவும் செயல்வழிக் கற்றலுக்குத்தான் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. ஆனாலும் கூட, ‘அடுத்த ஆண்டுமுதல் ஒன்றாம் வகுப்பிற்கும் ஆறாம் வகுப்பிற்கும், சமச்சீர்கல்வித் திட்டம் நடைமுறைக்குவரும்’ என்று அறிவித்திருக்கும் தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை, ‘ஒன்றாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரையான பாடநூல் தயாரிக்கும் பணிகளை மட்டும் தொடங்கியது’ எப்படி? சமச்சீர்கல்வி அடிப்படையில் அட்டைகள் தயாரிக்கும் திட்டம் என்றால் சரி. பாடநூலுடன்....என்ற சமச்சீர்கல்வி அடிப்படையில் 'பாடநூல் தயாரிப்புமட்டும்' நுழைந்தது’ எப்படி? இதில் பாடநூல் எழுதுவோர்க்கும் ‘தேர்வு’ நடத்தப்பட்டது பெரிய நகைச்சுவை!
பாடத்திட்ட மாற்றம், பள்ளிச்சூழல் மாற்றம், தேர்வுமுறை மாற்றம், அண்மைப்பள்ளி, தாய்மொழிவழிக் கல்வி ஆகியவற்றோடு வரும் சமச்சீர் கல்வியை நடைமுறைப் படுத்தும்போது, பாடத்திட்ட மாற்றத்திலேயே குழப்பமென்றால் எப்படி?  பள்ளிக்கல்வித்துறை, பாடத்திட்ட மாற்றக் கருத்துருவை இணையதளத்தில் இட்டுவைத்தது பாராட்டுக்குரியது என்றாலும், பாடநூல் மாற்றம் தவிரவும் பார்க்கவேண்டிய சமச்சீர் கல்வித்திட்டப் பணிகள் பலஉள்ளனவே! ‘இது வழக்கமான பாடநூல் மாற்றம்தான், நாம் அஞ்சத்தேவையில்லை’ எனும் எதிர்க்கருத்தை மாற்றிட, சமச்சீர் கல்விக்கு உரிய மற்ற திட்டப்பணிகளையும் உடனே தொடங்கவேண்டும். இது தமிழக அரசின் கையிலேயே உள்ளது.
இதோடு, ‘மெட்ரிக்பள்ளிக் கல்வி முறையும், ஆங்கில வழியும் தொடரும் என்று பள்ளிக் கல்வி அமைச்சரே பேசியிருப்பதான ஒரு குழப்பத்தகவலும் வருகிறது. அரசும்,ஆசிரியர்களும் மௌனம்கலைத்து, கலந்துபேசிச் செயல்படவும் அதில் உறுதிகாட்டவும் வேண்டும். கல்வியாளர்கள் வசந்திதேவி, எஸ்.எஸ். இராஜகோபாலன் என ஒருசிலரே இதுபற்றிப் பேசுகிறார்கள். சமூக அக்கறையுள்ள ஆசிரியர்கள்--சங்கங்கள், பெற்றோர்கள், கல்விஅலுவலர்கள்,  சமூகஆர்வலர்கள் கலை-இலக்கியவாதிகள் எனப் பலரும் பங்களிக்க வேண்டிய நேரமல்லவா இது? இல்லாவிடில் வாராது போல்வந்த மாமணியாம் சமச்சீர்கல்வியைத் தமிழர்கள் தோற்றுவிடுவோமோ?’ என்று நினைக்கவே நெஞ்சம் பதறுகிறது! சமச்சீர் கல்வி என்பது, வெறும் கல்விக்கானதல்ல, சமத்துவ சமூகத்துக்கானது என்பதைப் புரிந்து கொண்டு, அனைவரும் இணைந்து விரைந்து செயல்பட்டால் கல்விமாற்றம் மட்டுமல்ல சமூகமாற்றமும் சாத்தியம் தான்!
 -------------------------------------------------------------------------------------------------------------------- வெளியிட்டமைக்கு நன்றி : ஞாயிறு, 29 நவம்பர் 2009  -- http://www.keetru.com/   
---------------------------------------------------------------------------------------------------------------------