உடுமலை கவுசல்யா என்னைக் கேட்ட கேள்வி!

இந்த மாதத்தில், அடுத்தடுத்து சில நல்ல நிகழ்ச்சிகளில் நான் கலந்துகொண்டு வந்தாலும், அண்மையில் கோவை ஆயுள்காப்பீட்டுக் கழகப் பெண்கள் மாநாடு மறக்க முடியாததாக அமைந்துவிட்டது!
கடந்த 09-6-2018 அன்று கோவையில் நடந்த அந்த நிகழ்ச்சி எனக்கு மறக்கமுடியாமல் நினைவில் நின்று போனதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று – கடந்த ஆண்டு, தமிழகத்தையே உலுக்கும்படியாக “ஆணவக் கொலை”க்கு ஆளான உடுமலை சங்கர் எனும் வீரஇளைஞனின் காதல் மனைவி கவுசல்யா இந்த நிகழ்வில் என்னோடு கலந்துகொண்டது.  இரண்டாவது மற்றும் மிக முக்கியமான காரணம், அவர் பேசும்போது கேட்ட ஒரு கேள்வியும் அதற்குக் கிடைத்த பதிலும் பின்னர் அவர் அதற்குச் சொன்ன விளக்கமும் மறக்க முடியாதபடி ஆகிவிட்டது.

 பெண்களால் பெண்களுக்காக நடத்தப்பட்ட மாநாடு” இதில் மேடையில் நான் மட்டுமே ஆண்வர்க்கத்தைச் சேர்ந்தவன்! அங்கு வந்திருந்தவர்கள், ஆயுள்காப்பீட்டுக் கழகத் தோழியர்கள் என்பதால், நன்கு விவரமாகவே அறிக்கை வைத்து, விவாதித்து அசத்தினார்கள் என்றால், நாடகம், பாடல்கள் என்று அவர்களே எழுதி,இயக்கி,நடித்து மிரட்டினார்கள்!

கவுசல்யாவுக்குப் பண உதவியும் செய்தார்கள்! கோவைப் பெண்கள் சேவைப் பெண்கள் என்று சொல்லாமல் செய்தார்கள்!

நான் பேசி முடித்ததும், (எப்போதும்போல) “கலகலப்பாகவும், காரசாரமாகவும்” பேசியதாக, “ஒருமணிநேரம் போனதே தெரியல தோழர்!” என்று கேட்டவர்கள் மகிழ்வோடு சொல்லிச் ன்றனர்!
கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்த தோழியர்கள் –குறிப்பாக, கவிஞரும் பேச்சாளரும், காப்பீட்டுக் கழக உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவருமான உமாமகேஸ்வரியும் – தெரிவித்தார்கள். அருகில் அமர்ந்திருந்த தோழர் கவுசல்யாவும், “என்ன தோழர் இப்புடிப் பேசுறீங்க…! ரொம்ப அருமை தோழர்! நான் நடத்தும் மாணவர் பயிற்சியரங்கிற்கு வந்து ஒருமுறை பேசணும் தோழர்” என்று எனது செல்பேசி எண்ணை உரிமையோடு கேட்டு வாங்கிக்கொண்டார்!
சற்று நேரத்தில் --25, 26 வயதே மதிக்கத்தக்க-- அந்தப் பெண், தனது இளமைக்கே உரிய –பால்மணம் மாறாத- முகத்தோடு, பேசப்போனார்! நானும், கொடுமை கண்டு மூலையில் குந்திக்கொள்ளாமல், ஆணவச் சாதித் திமிரை அது தன்வீட்டிலிருந்தே வந்தபோதும், தன் தாய்தந்தையே தன் காதல் கணவனைக் கொலை செய்த போதும், அஞ்சி ஒடுங்கிவிடாது எதிர்த்து, வழக்குப்போட்டு இப்போதும் மிரட்டலுக்கு உள்ளாகி, அரசுதரும் காவலர் பாதுகாப்புடனே எப்போதும் இருக்கக் கூடிய நிலையிலும், இந்தப் பெண் என்ன பேசும் என்ற எதிர்பார்ப்புடன் பார்த்துக் கொண்டிருந்தேன்.
அண்மையில் நடந்த கச்சனம் நிகழ்வைச் சொல்லி, அந்த இளைஞர் வீடுகளுக்குப் போய், ஆறுதல் சொல்லி வந்ததைச் சொல்லி, அழுத்தம் திருத்தமாக, கம்பீரமாகப் பேசியதைக் கேட்டு உள்ளபடியே மகிழ்ந்தேன்! பேச்சின் இறுதியில் கூட்டத்தினரைப் பார்த்து ஒரு கேள்வி எழுப்பினார்.
”கூட்டத்தில் இரண்டு ஆண்களும், இரண்டு பெண்களும் எழுந்து நில்லுங்களேன். எனது சாதாரண ஒருகேள்விக்குப் பதில் சொல்லணும் அவ்வளவுதான்” என்று கேட்டார். மெதுவாக கூட்டத்திலிருந்து இரண்டு பெண்கள் எழுந்துவிட்டார்கள்! ஆண்கள் யாரும் எழ முன்வரவில்லை! மேடையிலிருந்தே இதை நான் பார்த்தேன். ஆயுள்காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கக் கோவை மண்டல நிர்வாகி தோழர் துளசி உள்ளிட்ட சில தோழர்கள் சாப்பாடு ஏற்பாட்டுக்காக அப்போதுதான் வெளியில் போயிருந்தார்கள்! இருந்த ஆண் தோழர்கள் யாரும் எழ முன்வரவில்லை! பார்த்தேன், “நாமே எழுந்து நின்றால் என்ன?” என்பதுபோல உமாவைப் பார்த்தேன். அவர் சிரித்துக் கொண்டே கவுசல்யாவைப் பார்த்தார். நான் எழுந்து நின்றுவிட்டேன். பிறகு இன்னொரு தோழரும் எழுந்து நின்றார். கூட்டத்தில் சிரிப்பு! கவுசல்யா தொடர்ந்தார் -
“இப்போது ஒரே ஒரு கேள்விதான். பதில் சொன்னால் போதும் என்ற கவுசல்யா, ஒவ்வொருவரும் ஒரு விவசாயியின் பெயரைச் சொல்லுங்கள்” என்றார். ஒருதோழி “ராஜா” என்றார். மற்றொரு தோழி “மாடசாமி” என்றார். தோழர் ஒருவர் “பாவாடை” என்றார். நான் யோசித்தேன். )நாம எழுத்தாளர்ல.. எதார்த்தமாக யோசிப்பம்ல…?)  “முனியன்” என்றேன்.
இப்ப கவுசல்யா கூட்டத்தைப் பார்த்து மிகவும் அமைதியாக, “ராஜா, மாடசாமி, பாவாடை, முனியன்… ஆக உங்களில் ஒருவர் கூட விவசாயி ஒரு பெண்ணாக இருக்கமாட்டான்னு நினைக்கிறீங்க இல்ல?”  என்றார்!
எனக்கு நடு மண்டையில் நச் னு குட்டு வாங்கியது போலானது!
இல்ல இல்ல.. பாரதிராஜாவின், வேதம்புதிது படத்தில்,  பாலுத்தேவராக நடிக்கும் சத்தியராஜிடம் கேள்வி கேட்டுப் பதில் வாங்கி, கடைசியாக அந்த சின்னச்சங்கரன், “பாலு ங்கிறது உங்க பேரு! “தேவர்”ங்கிறது நீங்க படிச்சு வாங்கின பட்டமா?“ ன்னு கேட்டவுடன், பாரதிராஜா இயக்கத்தில் ஒரு முரட்டுக் கை வந்து வந்து சத்தியராஜ் முகத்தில் பளார் பளார்னு மாறிமாறி அறையுமே! அதுமாதிரி நான் அறைவாங்கியதாக உணர்ந்தேன்!
உண்மைதானே? நமது மண்டையில் இன்னமும் விவசாயி என்றால் அது ஆண் என்பதான ஒரு படிமம்தானே படிந்திருக்கிறது! பெரிய பெரிய சிந்தனையாளன், பேச்சாளன், எழுத்தாளன் என்ற பேரோடும் புகழோடும்(? நினைப்பு???) இருக்கும் எனக்கு இது சரியான மாற்றுப் பாடம்தானே?
கவுசல்யா என்ற – என் மகளைவிடவும் - சின்னப்பெண் கேட்ட கேள்வியாக இது எனக்குத் தெரியவில்லை! இந்த நாட்டு விவசாயியை, விவசாயத்தை நம் மக்கள் இன்னும்கூட சரியாக உள்வாங்கிக் கொள்ளாமல் தான் இருக்கிறோம் என்ற பொறியைப் பற்றவைத்தது!
சுட்டபழம், சுடாத பழம் கதையும் நினைவுக்கு வந்தது.
இந்தப் பெண் தமிழ்நாட்டின் ஜான்சி ராணி, 
வாழும் வேலுநாச்சி என்பதன் காரணம் சரியானதுதான்! 
வீரம் என்பது போரில் சாவது மட்டுமல்ல! 
போராடி வாழ்வது அதனினும் சிறந்த வீரமல்லவா? 
நல்ல தோழமையுடன், படித்துக்கொண்டே, சிந்தித்துக்கொண்டே, இன்னும் போராடி வாழ்ந்து கொண்டிருக்கும் கவுசல்யாவைப் பற்றிய மரியாதை என் மனதில் பலமடங்கு உயர்ந்தது! 
“நீ நல்லா இருக்கணும்மா!” என்று மனசார நெஞ்சுக்குள் வாழ்த்தி பிறகு அருகில் உட்கார்ந்தபோதும் சொன்னேன்
உண்மையான வீரமங்கை கவுசல்யா, பெரிதாக சாதிப்பார்!
அவர் இருக்குமிடம் சென்று, அவர் நடத்திவரும் மாணவர் பயிற்சிமுகாமைப் பார்க்க நிச்சயமாக ஒருநாள் போவேன்!
வீர வணக்கமும் நன்றியும், பாராட்டுகளும் தோழர் கவுசல்யா!
------------------------------------------------------------------------------------------ 







    

12 கருத்துகள்:

  1. ஆம் அய்யா. மனச்சோர்வில்லாமல் வாழ்ந்துவரும் இந்தப் பெண் ஏதாவது செய்யும் இம்மண் பெண்களுக்கு. நன்றி.

    பதிலளிநீக்கு
  2. உங்களையும் அதிர வைத்த ஒரு கேள்வி - படிக்கும் அனைவரையும் அதிர வைக்கும்.

    பதிலளிநீக்கு
  3. ஆகா அண்ணா கவுசல்யா வை பார்க்கனுமே.....வேலுநாச்சியை

    பதிலளிநீக்கு
  4. உண்மைதான். வேளாண் தொழிலில் பெரும்பான்மை பெண்களின் ஈடுபாடே இருக்கையில் பெரும்பான்மை நாம் அவர்களை முன்னிலைப் படுத்தத் தவறியுள்ளதை கவுசல்யாவின் கேள்வி கிளரி விட்டுள்ளது என்பதுதானே எதார்த்தம்.

    பதிலளிநீக்கு
  5. செ.ப.மணிகண்டன்சனி, ஜூன் 16, 2018

    பெண்கள் அனைவருமே ஏதோ ஒரு வகையில் நமக்கு உத்வேகம் அளிப்பவர்களே..... அதில் கௌசல்யா ஒரு படி மேலே இருக்கிறார்.... வாழ்த்துக்கள்....

    பதிலளிநீக்கு
  6. இந்தப் பதிவை, கவுசல்யாவுக்கும் அனுப்பியிருந்தேன்.
    “நன்றியும் வணக்கமும் தோழர்” என்று அனுப்பியிருந்தார்.
    அவருக்குத்தான் எனது நன்றியும் வணக்கமும்.

    பதிலளிநீக்கு
  7. கவுசல்யாவுக்கு
    வாழ்த்தும் பாராட்டும் உரித்தாகுக.

    பதிலளிநீக்கு
  8. ஆம் தோழர் உண்மை தான். கோவை கோட்ட மகளிர் மாநாடு குறித்த தங்களின் விரிவான பதிவிற்கு நன்றி

    பதிலளிநீக்கு
  9. வலிகளில் வலிமையுடைய பெரும் சக்தியாய் முன்னுதாரணமாய் இவள்... வாழ்க நூறாண்டு..

    பதிலளிநீக்கு