ஆடிகார் ஐஸ்வர்யாவால் அநாதையான குடும்பம்


சென்னையில், கடந்த 2ஆம் தேதி, சனிக்கிழமை அதிகாலையில், குடிபோதையில் காரை ஓட்டித் தொழிலாளியைக் கொலை செய்த ஆடி கார் ஐஸ்வர்யா, தற்போது புழல் சிறையில்.

இரண்டு குழந்தைகளை வைத்துக் கொண்டு சாப்பாட்டுக்கே தவித்து வருகிறது இறந்து போனவரின் குடும்பம்என வேதனைப்படுகின்றனர் திருவான்மியூர் பகுதி மக்கள். 


சென்னை, பழைய மாமல்லபுரம் சாலையில் கடந்த சனிக்கிழமை அதிகாலையில், குடிபோதையில் காரை ஓட்டிக் கொண்டு வந்தார் சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த வர்த்தக ஆலோசர் வில்சனின் மகள் ஐஸ்வர்யா, தனியார் கம்பெனி ஒன்றில் மென்பொறியாளர்.

'வீக் எண்ட் பார்ட்டி' என்ற பெயரில் நண்பர்களோடு குடித்துவிட்டு, அதிகாலையில் தரமணி வழியாக அதிக வேகத்தில் காரை ஓட்டிக் கொண்டு வந்தவர், முனுசாமி மீது காரை மோத, சம்பவ இடத்திலேயே முனுசாமி பலியாகிவிட்டார்.

இதையடுத்து, ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் கைது செய்யப்பட்டார் ஐஸ்வர்யா. முனுசாமியின் மரணத்தால் சோகத்தில் மூழ்கியிருக்கிறது திருவான்மியூர் டி.டி.கே காலனி.

அந்தக் குடும்பமே முனுசாமியின் வருமானத்தில்தான் வாழ்ந்து வருகிறது. அவருடைய மனைவி கோவிந்தம்மாள், வீட்டு வேலை செய்து வருகிறார். முனுசாமியின் மகன் கார்த்திக் 11 ஆம் வகுப்பு, மகள் திவ்யா 6ஆம் வகுப்பு படித்து வருகின்றனர்.

"முனுசாமி மாதிரி ஒருத்தரைப் பார்க்க முடியாது. கொஞ்ச நேரம் கிடைச்சாலும், ஏதாவது ஒரு வேலை செஞ்சுட்டு இருப்பார். கார்பெண்ட்டர் வேலை, லோடு தூக்குவது என தினமும் 500 ரூபாய்க்கு மேல் வருமானத்தைப் பார்த்துடுவார். தெருவுக்குள் அவர் இருக்கும் இடமே தெரியாது. அவர் செத்துப் போனதுக்குப் பிறகுதான், ஊர்ல பல பேருக்கு அவரைத் தெரியுது. இரண்டு குழந்தைகளை வச்சுட்டு முனுசாமி குடும்பமே கஷ்டப்படுது. இதுவரைக்கும் யாரும் வந்து பாக்கலை. குடிச்சுட்டு வண்டி ஓட்டுன பொண்ணு மேல, கேஸ் போட்டு உள்ள தள்ளிட்டாங்க. அது ஒண்ணு மட்டும்தான் ஆறுதலா இருக்கு என்கிறார் முனுசாமியின் நண்பர் நாராயணன்.

“அனுமதிக்கப்பட்ட குறைந்த பட்ச அளவு மதுவையே அருந்தியிருந்தேன், என்னை ஜாமீனில் விடவேண்டும்” என்று ஆடி கார் ஐஸ்வர்யாவின் ஜாமீன் முயற்சி தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அநியாயமாக அடிபட்டுச் செத்துப்போன முனுசாமி குடும்பம், அநாதையாக நிற்கிறது!

திருடர்களைப் பிடிக்கப்போய், கத்திக்குத்துப் பட்டு இறந்த ஏட்டையா குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்த முதல்வர் அம்மா, எந்தத் தவறும் செய்யாமலே அநியாயமாகச் செத்துப்போன தொழிலாளியின் குடும்பத்துக்கு உதவிசெய்தால் அதுதான் மனிதாபிமானத்தின் அடையாளமாகும்!

கோவிந்தம்மாள், கார்த்தி, திவ்யா எனும் 
ஏழைகளின் சொல் அம்பலம் ஏறுமா? பார்க்கலாம்  

படம் செய்திக்கு நன்றி - http://www.vikatan.com/news/ 

11 கருத்துகள்:

  1. பெண்கள் இந்த நிலைக்கு வந்திருப்பது வேதைக்குறியது அய்யா

    பதிலளிநீக்கு
  2. அனுமதிக்கப்பட்ட அளவு மகளிர் குடிக்கலாம் என்ற வரையறை இன்னும் என்னென்ன பண்பாட்டுச் சீரழிவுகளை விளைவிக்கப் போகிறதோ?

    பதிலளிநீக்கு
  3. வேதனை தந்த நிகழ்வு. தில்லியிலும் சென்ற மாதம் ஒரு இளைஞர் குடித்துவிட்டு தனது விலையுயர்ந்த காரை ஓட்டிச் சென்றபோது மூன்று பேர் மேல் இடிக்க, அவர்கள் மூவரும் உயிரிழந்தார்கள். காவல் நிலையத்துக்குச் சென்ற அந்த இளைஞர், காவலர்களிடம் இடித்தது பற்றிய கவலை கொஞ்சம் கூட இல்லாது, சிகரெட் வாங்கி பற்ற வைத்துக் கொண்டு காசு கொடுத்துவிடலாம் என்று கூறியிருக்கிறார்..... எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்.... :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இடித்தது பற்றிய கவலை கொஞ்சம் கூட இல்லாது சிகரெட் வாங்கி பற்ற வைத்துக் கொண்டு காசு கொடுத்துவிடலாம் என்று கூறியிருக்கிறார்..... எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்.... :(//

      தவறுகளுக்கு இப்படியான தவறான சிந்தனை முறைகள் பொதுவாக இந்தியர்களிடம் ஆழமாக வேர் கொண்டுள்ளது. அடுத்தது இருக்கே கடவுளாரிடம் பாவமன்னிப்பு.

      நீக்கு
  4. பெண்கள் எல்லாவற்றிலும் சம உரிமை என குடிக்கு அடிமையாகி இருப்பது வேதனைக்குரிய விஷயம். ஸ்வாதிகளுக்காக போராடும் நாம் வினுப்பிரியாக்களையும், முனுசாமியின் குடும்பத்தையும் கண்டுகொள்வதில்லை என்பதே உண்மை. இங்கே பணம் வெல்லும்...ஏழையின் கண்ணீர் என்றும் தொடரும்.

    பதிலளிநீக்கு
  5. அருமையான கண்ணோட்டம்
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  6. வெட்கப்பட வேண்டிய ஒரு நிகழ்வு நம் சமூகம் கேடுகெட்டதாக மாறி வருவதைப் பார்த்து...

    பதிலளிநீக்கு
  7. குடித்தவிட்டு கார் ஓட்டிய ஜஸ்வர்யாவினால் அநியாயமாக கொலை செய்யபட்ட அப்பாவி முனுசாமி குடும்பத்திற்கு முதல்வர் அவசியம் உதவி செய்ய வேண்டும்,போலீஸுக்கு அள்ளி வழங்கும் முதல்வர்.

    பதிலளிநீக்கு
  8. பெயரில்லாபுதன், ஜூலை 06, 2016

    கோடி கொடுத்த மிக நுட்பமான விசயம்...அதன் காரணம் மகேசனுக்கு தெரியலாம்..

    பதிலளிநீக்கு
  9. 1. Accident happened.
    2. Aiswarya & her family are wealthy enough to provide financial support to the victims family.
    3. Let the court & the humanity of Aiswarya provide support to the victims family.
    4. Let us not kill the humanity of Aiswarya by saying Audi car Aiswarya, kudikaara Aiswarya etc as all these are useless to yield any positive outcome.

    பதிலளிநீக்கு
  10. எல்லாம் தெரிந்த நீங்களுமா இப்படி கேட்ப்பது. இந்த அம்மணி இல்லை என்றால் 100 கோடியில் நடக்கும் மென் பொருள் வேலைகள் நின்று போகும் என்று சொல்வார்கள். இவளது வண்டி இடித்தனால் அவர் இறக்கவில்லை மாறாக சாலை ஓரத்தில் நடந்து வந்து வண்டியின் மேல் வலிய மோதியதால் தான் அவர் இறந்ததும் மேலும் இவளது வண்டி சேதமும் அடைந்தது என்றும் சொல்வார்கள். பணம் இருந்தால் ஒரு வல்லமை பொருந்திய வக்கீல் எல்லாம் சொல்வார் நீதிமன்றத்தில். நீதிமன்றத்தை பொருத்த அளவில் இறந்தவர் சார்பில் சாட்சி சொல்லக்கூட ஆள் இருக்காது. முறையாக நிரூபிக்கவில்லை அதனால் விடுதலை அடைகிறார் என்றும். இது போல் தேவை இல்லாமல் வழக்குள் தொடுக்க வேண்டாம் என்றும் நீதிமன்றம் சொன்னாலும் ஆச்சர்யபடுவதற்கும் இல்லை......

    பதிலளிநீக்கு