வற்றிய கண்கள் எமதாக, வற்றாத இதயம் உமதாக!


வைகறை நடத்திய இறுதிக் கூட்டம் – “வீதி-26” (17-4-2016)
இதன் பின்னர் நான்கே நாள் கழித்து (21-07-2016அன்று) அவர் நம்மைப் பிரிந்தார் என்று சொன்னால் நம்பமுடிகிறதா?
அந்த வீதி நிகழ்வு பற்றிய தொகுப்பு இது -

அடுத்த கூட்டம் (04-5-2016) அவனுக்கான அஞ்சலிக் கூட்டமானது!

இந்தக் கூட்டத்தில் முடிவெடுத்தபடி இப்போது
கவிஞர் வைகறை குடும்ப நிதி வழங்கும் விழா (வீதி-29)
இதோ 31-07-2016 நடக்கிறது.

27ஆவது வீதிக் கூட்டத்தில் முடிவெடுத்து
29ஆவது வீதிக் கூட்டத்தில் நிதியளிப்பு…
இதற்கிடையில் ரூ.2,00,000 சேர்ந்துவிட்டது! 
இதை வேறெங்கும் சொன்னால் நம்புவார்களா என்ன?!

இது என்ன மாயம்?
இத்தனைக்கும் “வீதி” ஓர் அமைப்பே கிடையாது!

தலைவர், செயலர், பொருளர் உறுப்பினர் யாருமில்லை!
ஒவ்வொரு மாதமும் யாரேனும் இருவர் தன்னார்வமாக பொறுப்பேற்று, அந்தமாதக் கூட்டத்தலைவரையும், சிறப்பு அழைப்பாளரையும், கவிதை, கதை, கட்டுரை வாசிப்பதாகத் தானாகமுன்வருவோரையும் கலந்து கொள்ள வைப்பார்கள். இப்படித்தான் கடந்த 28மாதமாகத் தொடர்ந்து நடந்து வருகிறது. எங்கள் அய்யா, முனைவர் நா.அருள்முருகன் அவர்கள் எமக்குக் கற்பித்தது இதுவே, இதுவே எமது சனநாயக இயக்கம். எனவே தான் அவர் கையால் நிதி வழங்க அழைத்தோம்!

கணினித் தமிழ்ச்சங்கமும் இப்படித்தான் இயங்கிவருகிறது. பதிவர் விழாவிற்காகவும் பயிற்சி, திட்டப்பணிகளை முன்வைக்கவுமே நான் ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டேன், அவ்வளவுதான்! 

இவை இரண்டிலும் என்னிலும் உழைப்பவர்கள் ஏராளமானோர் அதில் பாதிக்குமேற்பட்டோர் இளைஞர்கள் இருக்கிறார்கள் என்பதும், அந்தந்த மாதக் கூட்ட அமைப்பாளர்கள் என்பதும், இதைத் தூக்கி நிறுத்திய உழைப்பு வைகறையினுடையது என்பதும் இதில் தொடர்ந்து கலந்து கொள்வோர் அறிந்ததே! காண்செவிக்குழுவினர் பலரும் அறியார்!
(இந்த மாதக்கூட்ட அமைப்பாளர் பா.ஸ்ரீமலையப்பன் என்னிடம் தலைமையேற்கச் சொன்னபோது, நான் மறுத்து, தகுதியுள்ள பலரும் இருக்க நான் ஏற்க முடியாதுஎனச் சொல்லியும், மீண்டும் மீண்டும் வற்புறுத்திய பிறகே நான் ஏற்றேன் என்பது ஒரு ரகசியம்)

மற்றபடி பணிகளனைத்தையும் பொன்.கருப்பையா அய்யா எனும் 70வயது மூத்தவரிலிருந்து, 35வயது வைகறை வரை சுமார் 35பேர் இணைந்து செய்ததுதான் பதிவர் விழாவின் வெற்றியின் அடிப்படை!

இதோ நம் நினைவில் நீங்காத பதிவர் திருவிழாவில்... 

வைகறை, ஸ்ரீமலையப்பன், யூகே-இன்ஃபோடெக் இளையபடை பலநாள் இரவு விழித்திருந்து தயாரித்த “உலகத் தமிழ்வலைப்பதிவர் கையேடு” நூல் வெளியீட்டின்போது வைகறையின் தூங்காத கண்கள் (இடப்பக்கம் முதலில் நிற்கிறார்) பாருங்கள் –



அடுத்து, பதிவர் விழாவின் உணர்ச்சிமிகு நிகழ்ச்சியாக, நமது முன்னோடி-மூத்த பதிவர்களுக்கு மரியாதை செய்யும்போது…



விழாவின் ஒரு பகுதியாக, இடைநின்றிருந்த வைகறையின் “நந்தலாலா” இணைய இதழை விக்கிமீடியா இயக்குநர் திருமிகு இரவிசங்கர் அவர்களின் கையால் இயக்கித் தொடங்கியபோது,,,
வைகறையின் கண்களில் விரியும் கனவைப் பாருங்கள் …



அவருக்கு நினைவுப்பரிசளிக்கும் வைகறையின் நன்றிக்கண்கள்-


தனது கவிதைக்கான பரிசுக் கேடயத்தை த.இ.க.உதவி இயக்குநர் மா.தமிழ்ப்பரிதியிடம் பெற்றுக் கொள்ளும் கவிஞர் வைகறை –


அவரது பரிசு பெற்ற கவிதையைப் படிக்கச் சொடுக்குக -
(கவிதைத் தலைப்பு “உதிர்ந்து கிடக்கும் சாம்பல்”)

விழாச் சிறக்கக் காரணமாயிருந்தவர்களின் படையணியில் எஸ்.ரா. பின்னால் முகத்தில் பாதியை மட்டுமே காட்டி நிற்கும் வைகறை –


இந்த ரூ.2,00,000 வெறும் 85 நாளில் சேரக் காரணமென்ன என்று யோசித்தால், அதில் -
வைகறையின் அன்பைப் புரிந்த நம் பதிவர்களின் அன்பு, பதிவுகளில்
முகநூல் பகிர்வில் செய்தியறிந்து கசிந்த இதயங்களின் அன்பு,
புதுகையுடன் கைகோத்த பொள்ளாச்சி இலக்கியவட்ட நண்பர்கள், தஞ்சை, திருச்சி, மதுரை, பாண்டி, மற்றும் சிங்கப்பூர், அபுதாபி, அமீரகம், ஆப்பிரிக்கா, அமெரிக்கா எனக் கடல்தாண்டியும் பரந்து கிடக்கும் பதிவர்களின் வற்றாத இதயம்! அதில் வற்றாத அன்பு!

வேறென்ன சொல்ல?

சங்க இலக்கியத்தில் வரும் ஒரு பாடல்தான் நினைவிலாடுகிறது-
பாண்டிய மன்னன் கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி எழுதி தமிழ்ச்சமூகத்தில் நிலைத்த புகழ்பெற்ற பாடல் இது –

உண்டால் அம்ம இவ் வுலகம்  இந்திரர்
அமிழ்தம் இயைவ தாயினும், இனிதுஎனத்
தமியர் உண்டலும் இலரே; முனிவிலர்;
துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சிப்
புகழ்எனின் உயிருங் கொடுக்குவர்; பழியெனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்விலர்;
அன்ன மாட்சி அனைய ராகித்
தமக்கென முயலா நோன்தாள்
பிறர்க்கென முயலுநர் உண்மை யானே  - புறநானூறு-182

உரை: இந்திரனுக்குரிய அமிழ்தம் கிடைத்தாலும், அது இனிமையானது என்று தனித்து உண்ண மாட்டர்கள்; யாரையும் வெறுக்க மாட்டார்கள்; சோம்பலின்றிச் செயல்படுவார்கள்; பிறர் அஞ்சுவதற்குத் தாமும் அஞ்சுவார்கள்; புகழ்வரும் என்றால் தம் உயிரையே வேண்டுமானாலும் கொடுப்பர்; பழிவரும் என்றால் உலகம் முழுவதும் கிடைப்பதானாலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்; மனம் தளர மாட்டார்கள். இத்தகைய சிறப்புடையவர்களாகித் தமக்காக உழைக்காமல், பிறர்க்காக வலிய முயற்சியுடன் உழைப்பவர்கள் இருப்பதால்தான் இவ்வுலகம் –இன்னும்- இயங்கிக்கொண்டிருக்கிறது.

எனவே - 
வைகறைக்காக அழுது அழுது வற்றிய கண்கள் எமதாக,
அவனது குடும்ப நிதிக்காக –எந்த எதிர்பார்ப்புமின்றி- நிதிவழங்கிய உங்களனைவரின் வற்றாத இதயம் உமதாக, தமிழ்க்கவிஞர்களின், பதிவர்களின் பரந்த அன்பையும், மிகுந்த பொறுப்பையும் காட்டுகிறது.

31-07-2016 அன்று காலை வீதி கூட்டத்தில் சந்திப்போம்.

“காலமோ சிறிது, கடக்க வேண்டிய தூரமோ பெரிது” - 
And miles to go before I sleep
And miles to go before I sleep
(ஜவகர்லால் நேருவுக்குப் பிடித்து அவரது மேசையில் வைத்திருந்த வரிகள்) எழுதியவர் ராபர்ட் ஃப்ராஸ்ட். (பின்னூட்டத்தில் சுட்டிக்காட்டித் திருத்திய பதிவர் திரு கோவிந்தராஜூ அருணாச்சலம் அவர்களுக்கு நன்றியும் வணக்கமும். 

9 கருத்துகள்:

  1. கவிஞர் வைகறையின் நினைவு நாள் விழா வெற்றியுடனும் நீங்காத நினைவுடனும் நிறைவுற வாழ்த்துக்கள்.அயராத உங்கள் மற்றும் உங்களது நட்புக்கூட்டத்திற்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. நட்பு, அன்பு, பணிவு, ஈடுபாடு என்ற நிலைகளில் மனதில் நிற்கும் வைகறையைப் பற்றிய தங்களின் பதிவில் தாங்கள் கூறிய பல கருத்துக்களை அவருடைய நண்பர்களாகிய நாங்களும் ஒத்துக்கொள்கிறோம், ஏற்கிறோம். தங்கள் குழுவினரின் முயற்சியை பாராட்டு என்ற ஒரே சொல்லில் கொணரமுடியாது. தங்கள் குழுவினரின் அயராப்பணியில் அனைவருடைய அன்பும் தெரிகின்றது. சேவை தொடரட்டும், நாங்கள் உடன் இருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  3. வைகறை நம்மை விட்டு பிரிந்த துயரத்திலும் நிதி வழங்குதல், சகோதரிக்கு அரசுப்பணி வாங்க முயற்சி என பல ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை வழங்கி வழி நடத்திய தங்களுக்கும், அயராது உழைத்த நம் நண்பர்களுக்கும், எவ்வித எதிர்பார்ப்பின்றி நிதி வழங்கிய அனைத்து நல்லுங்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும். இன்னும் நாம் பார்க்க வேண்டிய பணிகள் பல தான் தங்களின் சீரிய வழிகாட்டுதல் இருக்கும் போது நம் நண்பர்களுக்கு கவலையேது? என்ன பெயர் சூட்டலாம் நம் இலக்கிய அமைப்பிற்கு என்று விவாதித்த மணித்துளிகள் அண்மையில் கடந்தது போன்ற உணர்வு ஆனாலும் 29 மாதங்களைக் கடந்திருக்கிறோம் என்பது வியக்க வைக்கிறது. வெகுநாள்கள் கழித்து நமது முதன்மைக்கல்வி அய்யா அவர்கள் வீதிக்கு வருகை தருவது மகிழ்ச்சி. அவர்களின் நூல் அறிமுகம் நம்மோடு நடைபெறுவதில் மட்டற்ற மகிழ்ச்சி. நானும் வருவேன். நன்றிங்க அய்யா.

    பதிலளிநீக்கு
  4. ஆசிரியர் அவர்களே, என்ன எழுதுவது என்றே தெரியவில்லை.
    கவிஞர் வைகறை அவர்களை, முதன் முதலாக உங்கள் இல்லத்தில் சந்தித்தது,
    ‘வரலாறு முக்கியம் நண்பரே’ என்று, என்னை அவர் படம் எடுத்தது,
    புதுக்கோட்டை வலைப்பதிவர் மாநாட்டில் அவரை சந்தித்தது, பேசியது,
    சிறப்பு விருந்தினராக திரு வெங்கட்நாகராஜ் அவர்கள் கலந்து கொண்ட வீதி இலக்கியக்களம் 23 ஆவது கூட்டத்தில் ஒரு குழந்தையைப் போல இங்கும் அங்கும் ஓடி ஆடி அவர் ஆற்றிய பணிகள்,
    அவர் தோளில் தூக்கக் கலக்கத்தில் சாய்ந்து இருந்த அவரது மகன் ஜெய்க்குட்டி –

    என்று மனம் நினைவலைகளில் மூழ்கியது. தூத்துக்குடி என்றாலே அடைக்கலாபுரத்தில் நடந்த அவரது நல்லடக்கம் மனதைப் பிழிகின்றது.

    பதிலளிநீக்கு


  5. Favourite poetic lines for Nehru

    The woods are lovely, dark and deep,
    But I have promises to keep,
    And miles to go before I sleep,
    And miles to go before I sleep.
    by Robert Frost

    பதிலளிநீக்கு
  6. வற்றியிருந்த கண்களைக் குளமாக்கி,இதயத்துள் ஈரச்சுமையேற்றின வைகறையின் ஒளிப்படங்களும் அவரின் கவிச்சரங்களும் நிகழ் பதிவுகளும். என்றும் நீங்கா நினைவலைகள்

    பதிலளிநீக்கு
  7. வர நினைத்தாலும் வர இயலாத சூழல்.

    வைகறையின் நினைவுகள் எனக்குள்ளும்.... ஒரே ஒரு முறை சந்தித்திருந்தாலும்...... மனதில் நீங்காத இடம் பெற்றவர்.

    பதிலளிநீக்கு
  8. விழா சிறக்க வாழ்த்துக்கள் .
    வைகறையில் குடும்பம் துயரிலிருந்து மீண்டு வரும் தங்களைப் போன்றோரின் ஆதரவால்.

    பதிலளிநீக்கு