யார் இந்த “தேசவிரோதி“ கன்னைய குமார்?


தேசவிரோதக் குற்றம் சாட்டப்பட்டு, சிறையிலிருந்து, 
ஜாமீனில் வந்திருக்கும் டெல்லி ஜெ.என்.யூ (ஜவகர்லால் 
நேரு பல்கலை)மாணவர் தலைவர் கன்னைய குமார் உரை-

ஜாமீனில் வெளிவந்தவர் தான் கைதுசெய்யப்பட்ட அதேஇடத்தில் நின்றுபேசிய பேச்சு இது -

“ஜவாஹர்லால் நேரு பல்கலைக் கழகத்துக்கு ஆதரவாக நின்ற அனைவருக்கும் நன்றி. ஜேஎன்யுவை காக்கவும், ரோகித் வெமுலாவுக்கு நீதி கிடைக்கவும் துணையாக நிற்கும் ஊடகத்துறையினர், குடிமை சமூகத்தினர், அரசியல் சார்புள்ளவர்கள், சார்பற்றவர்கள் அனைவருக்கும்  என் நன்றியும் செவ்வணக்கத்தையும் உரித்தாக்குகிறேன்
 
பெருமைக்குரிய நாடாளுமன்றத்தில் அமர்ந்து கொண்டு,எது சரி, எது தவறு என்று தமக்கு மட்டுமே தெரியும் 
என்று நினைத்துக்கொண்டிருக்கிற கனவான்களுக்கும் 
நன்றி. அவர்களுடைய காவல்துறைக்கும், தொலைக்காட்சி சேனல்களுக்கும் நன்றி. ஜேஎன்யு மீது அவதூறு பரப்புவதாகத்தான் இருந்தது இருந்தாலும்கூட அவர்களால்தான் ஜேஎன்யு-வுக்கு பிரைம் டைம் ஒளிபரப்புகளில் 
இடம் கிடைத்தது.
 
எனக்கு யார்மீதும் வெறுப்பு கிடையாது. குறிப்பாக ஏபிவிபி மீது கிடையாது. ஏனென்றால், ஜேஎன்யுவில் இருக்கும் ஏபிவிபி என்பது நாட்டின் இதர பகுதிகளில் இருக்கும் ஏபிவிபியைவிட தேசத்தை கருத்தில் கொண்டது. 
 
அரசியல் வித்தகர்கள் என்று கருதிக்கொள்ளும் அறிவாளிகளுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள வேண்டும். கடந்த ஜேஎன்யு மாணவர் தேர்தலின்போது, ஏபிவிபியின் முக புத்திசாலியானவேட்பாளரை நான் எவ்வாறு எதிர்கொண்டேன் என்று அவர்களே பார்த்துக்கொள்ளட்டும். 
 
ஆக, நாட்டின் இதர பகுதிகளில் ஏபிவிபியின் நிலை எப்படியிருக்கும் என்று நீங்களே கற்பனை செய்து கொள்ளலாம். எனக்கு ஏபிவிபி மீது எந்தவித வெறுப்புணர்வும் கிடையாது. ஏனென்றால், நாங்கள் ஜனநாயகத்தை விரும்புகிறவர்கள், அரசமைப்பை உண்மையிலேயே நம்புகிறவர்கள். எனவே ஏபிவிபியை எதிர்க்கட்சியாகத்தான் பார்க்கிறோமே தவிர, எதிரிகளாக அல்ல. ஏபிவிபி நண்பர்களே, உங்கள்மீது பழிவாங்கும் விதத்தில் ஏதும் செய்ய மாட்டேன், நீங்கள் அதற்குத் தகுதியானவரும் அல்ல. 
 
இப்போது நடந்திருக்கும் விஷயத்தில் ஜேஎன்யு, தான் யார் என்பதைக் காட்டியிருக்கிறது. எது சரி எது தவறு என்பதைக் காட்டியிருக்கிறது. அதற்கு என் வணக்கத்தைதெரிவித்துக் கொள்கிறேன். சரியானதை சரி என்றும் 
தவறை தவறு என்றும் சொல்வதற்காக நாம் இங்கே 
நின்று கொண்டிருக்கிறோம். சுவாரசியமான விஷயம் 
என்னவென்றால், இது தன்னிச்சையாக எழுந்த எதிர்  வினை. 
இதை ஏன் சொல்கிறேன் என்றால், அவர்களுடைய   முயற்சிகள் எல்லாம் திட்டமிட்டவையாக இருந்தன. 
நம்முடைய எதிர்வினைகளோ, எந்தத் திட்டமிடலும் 
இல்லாமல் தன்னிச்சையாக எழுந்தவை. 
 
இந்த நாட்டின் அரசமைப்பில், இந்த நாட்டின் சட்டத்தில்இந்த நாட்டின் நீதியமைப்பின்மீது எமக்கு நம்பிக்கை 
இருக்கிறது. அதே சமயத்தில், மாற்றம்ஒன்றே மாறாததுஎன்பதிலும் நம்பிக்கை இருக்கிறது. 

ஆகவே, மாறும், மாறியே தீரும், நாம் மாற்றத்தின்பக்கம் நிற்கிறோம், இந்த மாற்றம் நடந்து கொண்டே இருக்கும். நமது அரசமைப்பின்மீது நம்பிக்கை இருக்கிறது. 
அரசமைப்பின் முன்னுரையில் கூறப்பட்டிருக்கிற 
இலட்சியங்களின்மீது நம்பிக்கையுடன் சொல்கிறோம். அதில் கூறப்பட்டுள்ளதே - 
சோஷலிசம், மதச்சார்பின்மை, சமத்துவம் – 
அதன்பக்கத்தில் நிற்கிறோம். 
 
நான் ஒன்றை சொல்லிக்கொள்கிறேன் நான் இன்று 
உரையாற்றப் போவதில்லை. நான் இன்று என் அனுபவத்தை மட்டுமே உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன். ஏனென்றால், முன்னர் எல்லாம் நான் படிப்பது 
அதிகமாகவும், அமைப்புமுறையை கேள்வி கேட்பது 
குறைவாகவும் இருந்தது. இந்த முறை, படிப்பு குறைவாகவும் கேள்வி கேட்பது அதிகமாகவும் இருந்தது. 

அந்த அனுபவத்தில் சொல்கிறேன். ஜேஎன்யுவில் மாணவர்கள் ஆராய்ச்சி செய்கிறார்கள். அவர்களிடம் பிரைமரிடேட்டா இருக்கிறது. நிறைய தகவல்கள் இருக்கின்றன. 
இந்தநாடு, அரசமைப்பின்மீது நம்பிக்கை கொண்டுள்ளது.பாபாசாகேப் அம்பேத்கரின கனவை நனவாக்க விரும்புகிறது. இந்த வார்த்தை போதும் என்று நினைக்கிறேன், புரிய வேண்டியவர்களுக்குப் புரிந்து விடும். சப்-ஜுடிஸ் விஷயத்தில் நான் ஏதும் சொல்ல விரும்பவில்லை. 
 
பிரதம மந்திரி ட்வீட் செய்தார். அவர் சொன்னார் – 
சத்யமேவ ஜெயதே. 

பிரதமர் அவர்களே... உங்கள் கருத்துகளோடு எனக்கு 
பல விஷயங்களில் பெரும் வேறுபாடு உண்டு. 
இருந்தாலும், சத்யமேவ ஜெயதே உங்களுடையதல்ல. அது இந்த நாட்டுக்குச் சொந்தமானது, அரசமைப்பில் 
உள்ளது. எனவே நானும் சொல்கிறேன் 
சத்யமேவ ஜெயதே. ஆமாம், உண்மை வெல்லும். 
 
இந்தப் போராட்டத்தில், மக்களுக்கு ஒரு விஷயத்தைச் சொல்லிக்கொண்டு என் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறேன். அந்த விஷயம் என்னவென்றால், தேசத்துரோகம் என்பது மாணவர்கள் மீது அரசியல் கருவியாகப் பயன்படுத்தி யிருக்கிறார்கள் என்று மட்டுமே நினைத்து விடாதீர்கள். நானும் கிராமத்திலிருந்து வந்தவன். ஊரிலிருந்து வரும்போது ரயில்வே ஸ்டேஷனில் வித்தை காட்டப்படுவதுண்டு. மந்திரவாதி வித்தை காட்டுவான். அவன் வித்தை காட்டுவது மட்டுமல்ல, மோதிரத்தையும் விற்பான். மந்திர மோதிரத்தை அணிந்தால் உங்கள் நோக்கங்கள் எல்லாம் நிறைவேறும் என்பான். 
 
அதேபோலத்தான் நம் நாட்டில் கொள்கை வகுப்பவர்கள்சிலர் இருக்கிறார்கள். கறுப்புப்பணம் வரும் என்றார்கள். ஹர் ஹர் மோதி என்றார்கள். விலைவாசி குறையும் 
என்றார்கள்கள். சப்கா சாத், சப்கா விகாஸ்... 
அந்த வெற்றுச் சவடால்கள் எல்லாம் மக்களின் மனதில்இப்போதும் இருக்கிறது. 
 
இந்தியர்களாகிய நமக்கு எதையும் எளிதில் மறந்துவிடுவது வழக்கம். ஆனால் இந்த முறை அவர்கள் காட்டிய நாடகம் மிகப் பெரியது, எனவே மக்களால் மறக்க முடியவில்லை. அதனால்தான் இந்தச் சவடால்களை மறக்கடித்துவிட வேண்டும் என்று அவர்கள் நினைத்தார்கள். 
 
ஆராய்ச்சி செய்யும் ஸ்காலர்களுக்கு ஃபெல்லோஷிப் 
நிறுத்திவிடுவோம் என்று சொல்வார்கள். அப்போது 
ஸ்காலர்கள் என்ன செய்வார்கள்? பெல்லோஷிப் தொடரவேண்டும் என்று கேட்பார்கள். உடனே அவர்கள் சொல்வார்கள் சரி போகட்டும், 5,000 அல்லது 8,000 பெல்லோஷிப் தொடரும் என்பார்கள். ஆக, உயர்த்துவது பற்றிய கேள்வி மறந்துபோகும். பெல்லோஷிப் தொகையை உயர்த்த வேண்டும் என்று கேட்டது ஜேஎன்யு. எனவே, உங்களுக்கு பெல்லோஷிப் தொகை கிடைக்கிறது என்பதற்காக உங்கள்மீது அவதூறு சுமத்தப்பட்டால் அதற்காக 
வருத்தப்படாதீர்கள். 
 
இந்த நாட்டில் மக்கள் விரோத அரசு ஆட்சியில் 
இருக்கிறது. அரசுக்கு எதிராக நீங்கள் குரல் கொடுத்தல்,அரசின் சைபர் செல் திரிக்கப்பட்ட வீடியோவை 
அனுப்பி வைக்கும், உங்கள் மீது வசைமொழிகளை 
வீசும், உங்கள் குப்பைக் கூடையில் எத்தனை காண்டம்என்று  எண்ணத் துவங்கும். இது நமக்கு கடுமையான  நேரம், நாம் தீவிரமாக யோசிக்க வேண்டிய நேரம். 

ஜேஎன்யு  மீதான தாக்குதல் திட்டமிட்ட தாக்குதல் என்பதை நாம் தீவிரமாக உணர்ந்து கொள்ள வேண்டிய நேரமிது. ஏனென்றால், Occupy UGC இயக்கத்தை சட்டவிரோதமாக்குவது அவர்களுடைய திட்டமிட்ட தாக்குதலின் நோக்கமாக இருக்கிறது. ரோகித் வெமுலாவுக்கு நீதி  கிடைப்பதற்கான போராட்டத்தை அடக்குவது அவர்களுடைய திட்டமிட்ட தாக்குதலின் நோக்கமாக இருக்கிறது. 
மரியாதைக்குரிய முன்னாள் ஆர்எஸ்எஸ்காரர்களே... ஜேஎன்யு விஷயத்தை ப்ரைம் டைமில் நீங்கள் காட்டிக் கொண்டிருக்கிறீர்கள். எதற்காக? மக்களின் வங்கிக் கணக்கில் 15 லட்சம் ரூபாய் போடுவோம் என்று பிரதமர் வாக்களித்தார் என்பதை மறக்கடிப்பதற்காக.  

ஆனால் உங்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்கிறேன் ஜேன்யுவில் அட்மிஷன் கிடைப்பது எவ்வளவு கடினமோ, அதே போல ஜேஎன்யுவினரை மறக்கச் செய்வதும் கடினம். மறக்கடித்து விடலாம் என்று நீங்கள் நினைத்தீர்கள் என்றால், உங்களுக்கு மறந்து போயிருந்தாலும் நாங்கள் அவ்வப்போது அடிக்கடி உங்களுக்கு நினைவூட்டிக்கொண்டே இருப்போம். 
 
இந்த நாட்டின் அரசு எப்போதெல்லாம் அநியாயம்    செயகிறதோ, அப்போதெல்லாம் ஜேஎன்யு அதை      எதிர்த்து எழுந்துநின்று குரல் கொடுத்திருக்கிறது  
அதையேதான் இப்போதும் நாம் செய்கிறோம். 
எமது போராட்டத்தை நீங்கள் நீர்த்துப்போகச் செய்ய 
முடியாது. 
 
எல்லையில் சாகும் வீரர்கள் குறித்துப் பேசுகிறார்கள். 
அந்த வீரர்களுக்கு என் வணக்கத்தை உரித்தாக்க விரும்புகிறேன். ஆனால் எனக்கு ஒரு கேள்வி இருக்கிறது. ஜெயிலில் நான் ஒரு விஷயத்தைக் கற்றுக்கொண்டேன்.போராட்டம் கொள்கை சார்ந்தது என்றால், எதிராளிக்கு தேவையற்ற விளம்பரத்தைத் தேடித்தந்து விடக்கூடாது.

எனவே அந்தத் தலைவரின் பெயரைக் குறிப்பிட மாட்டேன். பாஜகவின் தலைவர் ஒருவர் நாடாளுமன்றத்தில் பேசினார் இந்நாட்டின் இளைஞர்கள் எல்லையில் உயிர்த்தியாகம் செய்கிறார்கள். 
நான் அவரைக் கேட்கிறேன் அவர்கள் உங்கள் புதல்வர்களா? உங்கள் சகோதர்ர்களா? தற்கொலை செய்து கொள்ளும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள், நமக்கு உணவை உற்பத்தி செய்யும் விவசாயிகள் பற்றி எல்லையில் காவல் காக்கும் வீர்ர்களின் பெற்றோர்களாக இருந்துதம்மையே தியாகம் செய்யும் விவசாயிகள் பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
 
வயலில் உழும் வேலை செய்யும் விவசாயி என் தந்தைஎல்லையைக் காக்கும் வீரன் என் சகோதரன். 

எனவே, இந்த நாட்டில் எங்களிடையே விரோதத்தை 
உருவாக்க பொய்யான விவாதத்தைக் கிளப்ப முயற்சி செய்யாதீர்கள். இவர்கள் நாட்டின் உள்ளேயும் இறக்கிறார்கள், நாட்டின் எல்லையிலும் இறக்கிறார்கள். 
நீங்கள் நாடாளுமன்றத்தில் அமர்ந்து கொண்டு அரசியல்செய்து கொண்டிருக்கிறீர்கள். 

நாட்டில் உயிரிழப்பவர்களுக்கு யார் பொறுப்பு? 
உயிரிழப்பவர்கள் அதற்குக் காரணமாக முடியாது, 
சண்டை மூட்டிவிடப் பார்க்கிறார்களே, அவர்கள்தான் பொறுப்பாவார்கள்.
 
எனக்கு ஒரு கவிதை நினைவு வருகிறது
ஒருவருக்கு அதிகம் என்றும் 
ஒருவருக்கு குறைவு என்றும்
பிரிவினைகள் பேதங்களின்றி
எல்லாருக்கும் எல்லாம் என்று
எட்டும் நாள் வரும் வரையில்
அமைதி இல்லை அமைதி இல்லை.
 
ஆகவே நண்பர்களே, உயிரிழப்புகளுக்குப் பொறுப்பு 
யார் என்று யோசியுங்கள். யார் மக்களுக்கிடையில் 
சண்டை மூட்டுகிறார்கள் என்று சிந்தியுங்கள். 
நாட்டில் செத்துக் கொண்டிருப்பவர் என் 
தந்தை, எல்லையில் சாகிறவன் என் சகோதரன். 
 
தொலைக்காட்சிகளில் ப்ரைம் டைமில் பேசும் பேச்சாளர்களைக் கேட்கிறேன் நாட்டில் இருக்கும் பிரச்சினைகளிலிருந்து விடுதலை கேட்பது குற்றமா? யாரிடமிருந்து விடுதலை வேண்டும் என்று கேட்கிறார்கள் அவர்கள். ஏன், நீங்களே சொல்லுங்களேன்....இந்தியாவில் யாராவதுஅடிமைகள் இருக்கிறார்களா என்ன? இல்லை. 

ஆக
நாம்இந்தியாவிடமிருந்து விடுதலை கேட்கவில்லை. 
இந்தியாவிடமிருந்து விடுதலை அல்ல நண்பர்களே
இந்தியாவுக்குள் விடுதலை வேண்டும் என்கிறோம். 
இரண்டுக்கும் வேறுபாடு உண்டு. 
நாம் வெள்ளையரிடமிருந்து விடுதலை கேட்கவில்லை. நம் முன்னோர்கள் போராடிப் பெற்ற சுதந்திரத்தைக் 
கேட்கிறோம். 
 
யார் இந்தக் கன்னைய குமார்?
கன்னைய குமாரின் பெற்றோர் பிஹார் மாநிலம் பெகுசராய் மாவட்டத்தில் மஸ்லன்புர்-பிஹத் என்ற கிராமத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள அரதப்பழசான வீட்டில் வசித்து வருகின்றனர். சுவற்றில் ஆங்காங்கே நீல நிற சுண்ணாம்புப் பகுதிகள் உரிந்து தொங்க ஒரு பாலித்தீன் கவர் முழுதும் மருந்தும் மாத்திரைகளுமாக கன்னைய குமாரின் தந்தை தார்ப்பாய் ஒன்றில் அமர்ந்திருந்தார். இவர் சிறு விவசாயிதான், ஆனால், 2 ஆண்டுகளுக்கு முன்பாக இவரை பக்கவாத நோய் தாக்கியது. அதிலிருந்து அவர் படுத்தபடுக்கைதான். தாயார் மீனாதேவி அங்கன்வாடியில் பணியாற்றி வருகிறார். இவர் மாதம் ரூ.4,000 சம்பளம் பெற்று வருகிறார். 

தி இந்து (ஆங்கிலம்) நாளிதழ் கன்னைய குமார் தந்தை ஜெய்சங்கர் சிங்கை தொடர்பு கொண்ட போது, "என் மகன் ஒரு அப்பாவி. அவன் மீது எந்தத் தவறுமில்லை எனும்போது, அவன் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்என்றார்.

மேலும், மாணவர்கள் தேச-விரோத கோஷங்களை எழுப்பிய போது காண்பிக்கப்பட்ட வீடியோவில் தன் மகன் இல்லை என்றும், “நாட்டில் உள்ள ஆயிரமாயிரம் இளைஞர்கள் போலவே அவனும் தேசப்பற்று உள்ளவன் தான். ஆனால் இடதுசாரி கருத்தியலை பின்பற்றி வருகிறான். இந்துத்துவ அரசியலை எதிர்ப்பதால் பலிகடாவாக்கப்பட்டுள்ளான்என்றார்.... 
-------------------------------------------------  
தகவலுக்கு நன்றி - http://tamil.thehindu.com/india
ஒரு முக்கியமான குறிப்பு-

இவர் கைதுசெய்யப்படுவதற்குக் காரணமான “தேசவிரோத பேச்சை”யும் நீங்கள் அவசியம் படிக்க வேண்டும். http://thetimestamil.com/2016/02/20/

9 கருத்துகள்:

  1. இளைஞர்களின் கனவு தேசத்தில் இனி ஆர் எஸ் எஸ் க்கு இடம் இருக்காது. நன்றி கன்னையா குமார், நன்றி தோழர் முழு உரையை தந்தமைக்கு,,,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி, இதுவும் முழு உரையன்று. இந்த இளைஞன் நாளைய இந்தியாவை நல்வழியில் நடத்துவான் எனக் காட்டும் உரையின் பகுதியே..

      நீக்கு
  2. 'தேசபக்தி என்பது மக்களை அதன் அரசாங்கத்திடமிருந்து காப்பது' என எங்கோ கேட்ட, படித்த ஞாபகம்.

    பதிலளிநீக்கு
  3. அய்யா வணக்கம்.
    நீங்கள் என்பதால் பதில் இடுகிறேன்.

    இந்தப் பிரச்சினை வெகு சாமர்த்தியமாக RSS Vs Left என்று மாற்றப்பட்டுள்ளது. RSSஐ எதிர்க்கிறேன் பேர்வழி என்று தேசத்தையே எதிர்ப்பதாகப் போய்கொண்டுள்ளதன் உதாரணம் இது. அதுதான் பாமர மக்களை விட்டு இடது சாரிகள் விலகிப் போதவற்கான காரணங்களில் ஒன்றாக இருக்க இயலும்.

    23 பக்க நீதிமன்ற தீர்ப்பையும் வாசித்துவிட்டுத்தான் இதை எழுதுகிறேன். எனவே இணையத்தில் காணப்படும் உளரல்களில் இதைச் சேர்க்க வேண்டாம்.

    9ஆம் தேதி குழப்பம் நடந்துள்ளது. 11ஆம் தேதி தேசத்திலும் அரசியலமைப்பிலும் நம்பிக்கை உள்ளதாக வலிய வந்து உரையாற்றுகிறார் கண்ணையா குமார் - ஏன்? கோர்ட் அதை எவ்வாறு எடுத்துக் கொண்டுள்ளது?

    உரிமை பற்றிப் பேசும் நம்மவரின் கடமை என்ன?

    இந்தத் தீர்ப்பு கல்விக் கூடங்களின் ஆசிரியர்கள் படிக்கவேண்டிய தீர்ப்பு என்றே நினைக்கிறேன். தீர்ப்பில் எங்காவது இந்த அரசியல் பிரச்சினை பற்றி பேசி உள்ளார்களா?

    இணையத்தில் கம்பு சுழற்றப்படும் எந்த ஒரு வார்த்தையும் கண்ணையாவின் ஜாமீன் மனுவில் எதிரொலிக்கவில்லை. மாறாக, நான் தப்பே செய்யலை. விட்டுவிடுங்கள் என்கிற கெஞ்சல்தான் இருக்கிறது.

    நீதிபதியின் தீர்ப்பிலும், நீ குற்றமற்றவன் என்று கூறவில்லை. அன்னையின் கண்டிப்பும் கனிவுமே இருக்கிறது.

    ஆதரித்தே கூறப்படும் உங்கள் பதிவுக்கான பின்னூட்டங்களில் ஒரு எதிர் கருத்து இருந்துவிட்டுத்தான் போகிறதே.

    உரிமையுடன்
    பாண்டியன்
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் கூறும் 'தீர்ப்பை' நானும் வாசித்தேன். முதலில் கண்ணையாக் குமாரின் மேல் 'தீர்ப்பு' இன்னும் வரவில்லை. வழக்கே இன்னும் நடக்கவில்லையே! அவர் ஜாமீன் கேட்டு அனுப்பிய மனுவுக்கு பதில்தான் அது, குற்றத்தை நிருபித்து விட்டதாக வழக்கு நடக்கும்முன்பே, அமைந்து இருப்பதுதான் அதன் வேடிக்கை! குற்ரவாளி தன் மீது சுமத்தப்பட்ட குற்ற்த்தை மறுக்க வாய்ப்பளிக்காமல் எப்படி நிருபணமான செயலாக கருதி அதிக ஆவலுடன் ஆலோசனை கூற முடியும்?

      நீக்கு
  4. நீண்ட நாள் கழித்து, தளத்திற்கு மீண்டும் வந்ததற்கு நன்றி பாண்டியன். தெரிந்த தகவலை வைத்துத்தானே நாம் எந்த முடிவுக்கும் வரவேண்டியுள்ளது? எனக்கொன்றும் கன்னையா எதிரியோ, நண்பனோ இல்லையே? உண்மையை அறிந்தால் அதைச் சொல்வதில் எனக்கொன்றும் தடையில்லை. அந்தத் தீர்ப்பு எங்கே கிடைக்கும்? இணைப்பு இருந்தால் -நீங்கள் விரும்பினால்- இங்கேயே தரலாம். அல்லது எனது தனி மின்னஞ்சலுக்கு அனுப்பினாலும் சரியே! மீண்டும் நன்றி.

    பதிலளிநீக்கு
  5. அய்யா வணக்கம்.

    தங்கள் கவனத்திற்கு.
    http://www.scribd.com/doc/301714554/Delhi-High-Court-s-Bail-Order-for-JNU-President-Kanhaiya

    அன்புடன்
    பாண்டியன்.

    பதிலளிநீக்கு
  6. I admire Pandian ayya and endorse his views._Rajan

    பதிலளிநீக்கு