கல்கியில் வெளிவந்து கல்லூரிப் பாடநூலில் இடம்பெற்ற எனது சிறுகதை

காந்திபுரத்து ராமுக்கண்ணு                              
(கல்கியில் வெளிவந்து, ம.சு.பல்கலை துணைப்பாடமான “புதியகாற்று” தொகுப்பில் இடம்பெற்ற, எனது இரண்டாவது சிறுகதை இது)

ச்சரியம் பூக்க அந்தச் சிறுவனை மீண்டும் பார்த்தேன்.
   சைக்கிள் கேரியரில் அனசலாக இருந்த டீ கிளாஸ் சாய்ந்துவிடாமல் கவனமாக இருந்தான்.  பன்னைப் பிய்த்து மெதுவாக டீயில் நனைத்துத் தின்று கொண்டே பேசினான். சாமியார் மாதிரி பேச்சு! உலகத்தின் எந்தப் பெரிய கஷ்டமும் இனி அவனை எதுவும் செய்து விட முடியாதது போல!
   திரும்பவும் - மறந்து போன மாதிரி- கேட்டேன்: 
ஆமா உம் பேரென்ன சொன்னே?
     நிமிர்ந்து ஒரு தரம் என் முகத்தைப் பார்த்துவிட்டுச் சொன்னான்: 
ராமுக்கண்ணு  எம்.பி.பி.எஸ்.
     நனைந்த பன்னிலிருந்து டீ வழிந்து விடாமல் வெடுக்கென்று வாய்க்குள் தள்ளிக் கொண்டான்.
     பத்துப் பன்னிரண்டு வயதிருக்கும். அதையும் குறைத்துக் காட்டும் வாடிய முகம். பிறந்த போது உச்சந்தலையில் எண்ணெய் வைத்திருப்பார்கள் போல அலரி அடங்கிக் கிடந்த செம்பட்டை முடி. இந்த வயதிலேயே பழகிவிட்ட சாராயத்தால் பெருத்திருந்த கண்கள். வரிச்செலும்பு துருத்திய மார்புக் கூடு. வயசை மீறி ஊதிய வயிறு. சுமையற்கட்டுக் கைப்பிடித் துணிபோலக் கசங்கிக் கனமேறிப் பின்புறம் நைந்து கிடந்த டவுசரில் பட்டன் இல்லை. இறுக்கி முடிச்சுப் போட்டிருந்தான்.
     ஏழாம் வகுப்பில் எனக்குப் பாடம் கிடையாது. காலையில் முதல் வகுப்பு முடிந்தவுடன் இவனைப் பார்க்கப் போன போது தான் இவன் வரவில்லை என்று பையன்கள் சொன்னார்கள்.
     சார்! எம்.பி.பி.எஸ்.ஸோட தாத்தா செத்துப் போயிட்டாரு சார்.
     இல்ல சார்! அவனை நா வர்றப்பக் கூட சாராயக் கடையிலே பார்த்தேன் சார்! மீனு வித்துக்கிட்டிருந்தான் சார்.
     லே! ஓவ்வொருத்தனாச் சொல்லு! தாத்தா செத்துப் போயிட்டாரா. எப்படா?
     ஆமா சார். நீங்க சொன்னதிலேர்ந்து ரெண்டு மூணு நா ஒழுங்கா வந்துகிட்டிருந்தான் சார். நேத்து ராத்திரி- நடுச்சாமத்துல  அவுங்க தாத்தா செத்துப் போயிட்டாரு சார். அவன் இனிமே பள்ளிக் கூடத்துக்கு வர மாட்டானாம் சார். எட்டாம்ப்பு ஜெயாவைக் கேட்டுப் பாருங்க சார்?
     பையன்கள் அவனவனுக்குத் தெரிந்த தகவல்களை உறுதிப் படுத்துவதில் குறியாயிருந்தார்கள்.
     எனக்குள் குற்ற உணர்ச்சி மெள்ளப் பரவியது. 
         ‘இவனை மீண்டும் கவனிக்காமல் விட்டு விட்டோமா?
     ஆனால் இந்தப் பள்ளிக்கூடத்துக்கு மாற்றி வந்ததிலிருந்தே எனக்கு ஆச்சரியமாகவும் அவமானமாகவும் பட்டதெல்லாம் இங்கு மிகவும் சர்வ சாதாரணமாக இருந்ததும் எனக்கு என்னவோ மாதிரி இருந்தது!
     தஞ்சாவூர் எல்லையைத் தொட்டுக் கொண்டு இருந்தது காந்திபுரம். அந்தப் பக்கம் நகரம். இந்தப் பக்கம் புதுக்கோட்டை சாலையைத் தொடும் புஞ்சைக் காட்டுப் பகுதி. காவிரியில் தண்ணீர் வந்த காலத்திலேயே இது வானம் பார்த்த சீமைதான். இப்போது ரெண்டுங்கெட்ட பிழைப்பு. ஆலாய்ப் பறக்கும் சேரி ஜனங்கள். சாராய ஊறலை நம்பிப் பல குடும்பங்கள். வேறு வேலைக்கு வழியில்லாத வாலிபர்கள் அடியாள் வேலைக்கு பழக்கப் பட்டிருந்தார்கள் அப்படியே சாராயத்திற்கும். தற்காலிக வருமானத்துக்காக முந்திரிக் காட்டுக்குப் போய்வரும் பாவப்பட்ட பெண்கள். அவர்களின் வருகைக்காகக்காத்திருக்கும் குடும்பம். சாப்பாட்டுக்காக மட்டுமே பள்ளிக்கூடம் வரும் பிள்ளைகள். பழகிப் பார்த்த போதுதான் ஃபார்மாலிடி அறியாத பால்மனசுகள் பாசத்துக்கு ஏங்குவது புரிந்தது.
     பள்ளிக்கூட நாளிலேயே மத்தியானச் சாப்பாடு முடிந்ததும் சின்னச் சின்ன வேலைகளுக்குப் போய் விடும் பையன்களைப் பார்க்க நமது சுய ஆற்றாமை மேலெழும். அரசாங்கம், ஆசிரியர் சங்கங்கள், அந்தப் பகுதிப் பெரியவர்கள் என்று பள்ளிக்கூடம் தொடர்பான யாருக்குமே இது பற்றி அக்கறையில்லையோ என்று கோபம் கோபமாக வரும்.
     நான் இங்கு வந்த புதிதில் எட்டாம் வகுப்பில் ஒருத்தன் சாராய வாடையோடு இருந்ததை விசாரிக்கப் போய் ஆறாம் வகுப்பிலேயே அது சர்வ சாதாரணம்தான் என்பது தெரிந்தது. மாணவர்களுக்கும் மாணவி களுக்குமான பொதுக் கழிவறை ஒன்றுதான் இருந்தது, பெரும்பாலும் மாணவிகள்தான் அதை -எப்போதாவது- பயன்படுத்தி வந்தார்கள். அதில் நீளமான வெள்ளை பலூன் ஒன்று கிடந்து பயல்கள் எடுத்துப்போய் விளையாடியதை அதட்டப் போய் அதை முதல் நாள் பத்தாம்ப்பு சாமித்துரையின் புத்தக மூட்டையில் பார்த்ததாக  ஒருவன் சொன்னான்!
     ஒவ்வொன்றும் முகத்தில் அறை விழுந்த நிகழ்ச்சிகள்!
     போன வாரம் ஏழாம் வகுப்பில் வருகைப்பதிவு எடுத்த போது ராமுக்கண்ணு ஏன் வரலைஅடிக்கடி வரமாட்டான் போல? என்று கேட்டதற்குப் பையன்கள் சொன்ன பதில் ஒவ்வொன்றும் மதுரைச் சொக்கநாதருக்கு விழுந்த அடி போல யார் யாருக்கோ மனசு வலிக்க விழுந்திருக்க வேண்டிய அடிகள் - என் கன்னத்தில் விழுந்தது போல..
     சார்! அவன் சந்தைக்குப் போயிருப்பான் சார்.
     இல்ல சார்! சந்தையில பேப்பர் பொறுக்குவான் சார்.
     செவ்வாக்கிளமெ-சந்தை அன்னிக்கு-அவன் வர மாட்டான் சார்!
     மத்தநாள்ல சாராயக் கடையில சாக்னா வித்துகிட்டிருப்பான் சார்.        எப்பயாச்சும் மத்தியானச் சோத்துக்கு மட்டும் வந்துருவான் சார்;.
     ராமுக்கண்ணுப் பயலை நான் முதன்முதலாகப் பார்த்ததே என் முகத்தில் விழுந்த முதல் அறையாக எப்போதும் நினைவிலிருக்கும்..
     அவன் வந்தால் என்னைப் பார்க்க வரச்சொல்லிப் பலமுறை அவன் வகுப்புப் பயல்களிடம் சொல்லியிருந்தும், அவன் டிமிக்கி கொடுத்துக் காணாமலே போய்க் கொண்டிருந்தவன், ஒரு முறை வந்தான் -
     மதிய உணவிற்காக ஆசிரியர்கள் எல்லாரும் ஒரே பொது அறையில் அவரவர் மதிய உணவைப் பிரித்துக் கொண்டு, -எங்கள் பள்ளியில் வேலை பார்க்கும் அனைவரும் ஒரே இடத்தில் உணவைப் பகிர்ந்து உண்பதே வழக்கம்..ஒவ்வொருவருக்கும் 6,7 குழம்பு, கறிவகை கிடைக்குமே!
     அப்போதுதான் ஒரு சிறுவன் -பயல்கள் சொல்லியிருந்த அடையாளம் சரிதான், அவன் ராமுக்கண்ணுதான்.. புயல்போல வந்தான் - மேல் சட்டை யில்லாத மெலிந்த வயிறு புடைத்த சிறுவன்.. கையில் நெலிந்த தட்டு, சத்துணவுச் சோறும் குழம்பும் மண்ணோடு கலந்து கிடந்தது.. என்னை அறியாமலே “ஐயோ யார்ரா இப்படிப் பண்ணது?” என்று கத்திவிட்டேன்.
     “சார் பாருங்க சார்..என் சோத்துல மண்ணள்ளிப் போட்டாங்கெ சார்!”
     பதறிப்போய் எழுந்தேன்..“டேய் யார்ரா இப்படிப் பண்ணது? நீ நீ.. ராமுக்கண்ணு தானே? ஏன்டா யார்ரா இப்படிப் பண்ணது?”
     பின்னால் வந்தவன் பதறாமல் அமைதியாகச் சொன்னான் -
     “சார் இவன் எப்பயாச்சும் சோத்துக்கு மட்டும்தான் வருவான். மதியம் சாப்பாடு அட்டண்டன்ஸ் கணக்கு உதைக்கும். பள்ளிக்குடத்துக்கு வராம சாப்பாட்டுக்கு மட்டும் வந்தா மண்ணள்ளிப் போடச் சொல்லி பீ.டீ.சார்தான் சார் சொன்னாரு” அவன் அமைதியாகத்தான் சொன்னான்.. என் நெஞ்சு படபடவென்று வந்தது.. ரூல்ஸ்படி சிக்கல் சரிதான்.. ஆனா சோத்துல மண்ணள்ளிப் போடுறதா என்ன இது என்று பதறினேன். அவன்,
    “சோத்துக்காகத்தான் சார் வந்தேன். சட்டையில்லாம வந்தா பயக ஓட்றாங்கெ சார்..எப்படி சார் நா க்ளாஸ்ல இருக்க முடியும்? அதான் மத்தியானம் மட்டும் வந்து சாப்பிட்டுப் போய்டுவேன் சார்..”
     அவன சமாதானப் படுத்தி, வேற சாப்பாடு வாங்கிக் கொடுத்து, அனுப்பினேன் சட்டை தந்தால் பள்ளிக்கூடம் வருவதாகச் சொன்னான்.
     ரெண்டு நாள் கழித்து அவன் வந்த போது பார்த்தேன். பழுப்பேறிக் கசங்கி-அடுக்குப் பானையிலிருந்து  சுருட்டி மடக்கி எடுத்தது போல் இருந்த ஒரு சட்டையைப் போட்டுக் கொண்டு வந்திருந்தான். பழைய மஞ்சள் பை ஒன்றில் ஒரு நோட்டோ புத்தகமோ இருந்திருக்க வேண்டும்.
     எஸ்.சி. எஸ்.டி.க்கென்று இலவசப் புத்தகம் தருவார்கள் என்பதால் பெரும்பாலானவர்கள் இங்கு ரெண்டு மூன்று மாதங்களுக்குப் புத்தக மில்லாமல்தான் இருப்பார்கள். அந்தப் புத்தகமும் பள்ளிக் கூடம் திறந்து நாலைந்து மாதம் கழித்துத் தான் வரும். அதுவும் இவன் ஒழுங்காய் வராததால் கிடைத்திருக்காது. (இது 1990இல் எழுதிய சிறுகதை!)
     ஆசிரியர் அறையில் தயக்கமில்லாமல் அருகில் வந்து குனிந்து கொண்டே சார்! சாயந்தரம் பள்ளிக்கூடம் விட்டதும் எங்க தாத்தா ஒங்கள வந்து பாக்குறம்ணு சொல்லச் சொல்லிச்சு சார்…” என்று சொல்லி விட்டு நிமிர்ந்து பார்த்த போது லேசாகச் சிரித்த மாதிரி தெரிந்தது.
     அட எண்ணெ தடவாட்டியும் தலையச் சீவியிருக்கிற மாதிரி தெரியுதே! வெரி குட்! சரி.. எதுக்குத் தாத்தா வர்றாராமா! சரி நீ போ கிளாசுக்குப் போய்ட்டுச் சாயந்தரம் மணி அடிச்சதும் என்னைப் பாத்துட்டுப் போகணும் ராமுக்கண்ணு என்ன?
     மாலையில் பள்ளிக்கூடம் விட்டதும் ராமுக்கண்ணு ஓடி வந்தான். கூடக் கிளம்பிய ஆசிரியர்களிடம் நான் கொஞ்சம் பின்னால் வருவதாகச் சொல்லி அனுப்பி விட்டு ராமுக் கண்ணுவுடன் ரோட்டுக்கு வந்து அருகில் இருந்த பெட்டிக் கடையில் சிகரெட் ஒன்று வாங்கிப் பற்ற வைத்துக் கொண்டே இவனிடம் பேச்சுக் கொடுத்தேன்.
     தாத்தாதான் யார் கேட்டாலும் ராமுக்கண்ணு எம்.பி.பி.எஸ். என்று சொல்லச் சொல்லியிருந்தாராம். ஏன் என்று இவனுக்குத் தெரியாதாம். தாத்தாவுக்கு மாதம் அம்பது ரூவா பிஞ்சினு வருதாம். இப்ப ரொம்ப வயசாயிருச்சாம். தேவர் வீட்டுக் கொட்டகையிலதான் இருக்காங்களாம்.
     வணக்கமுங்க. உங்களைப் பத்திப் பசங்கள்லாம் சொல்லிக் கிட்டேயிருக்கும். சிரிப்புச் சிரிப்பாப் பாடம் நடத்துவிங்களாம்...
     வணக்கம். வாங்கய்யா அந்தக் கட்டையில உக்காருவம் என்று தாத்தாவிடம் இயல்பாகவே பேசத் தொடங்கினேன்.
     அது ஏன் பேரு கூட எம்.பி.பி.எஸ்.னு சேத்துச் சொல்றான்?கேட்டா  நீங்கதான் அப்படிச் சொல்லச் சொன்னீங்கங்றான்!
     பாவமாக ரோட்டைப் பார்த்துக் கொண்டிருந்து விட்டுத் திரும்பினார். பெருமூச்சு விட்டிருக்க வேண்டும். லேசாக நடுக்கம் கண்ட தேகம். உழைத்துக் கருத்துச் சுருங்கிய உடம்பு. சுக்கு போல இரும்பாக ஒரு காலத்தில் இருந்திருக்க வேண்டும். மெதுவாகச் சொன்னார்-
     இவனோட பாட்டி ரொம்ப நா சீக்காளியாகக் கெடந்தா. ஆசுபத்திரி கூடக் கொண்டு போய்க் காம்பிக்க முடியல. இந்தப் பய ஒரு நா சொன்னான்: தாத்தா நா பெரிய படிப்புப் படிச்சு அப்பத்தாவுக்கு வைத்தியம் பாக்குறன் தாத்தாவ்னு. அந்தச் சந்தோசத்துல ரெண்டு நா கெடந்துட்டு கண்ண மூடிட்டா மவராசி. ரெண்டு வருசமாச்சி அப்ப ஏதோ வேகத்துல இவன எப்பிடியாவது டாக்குட்டருக்கு படிக்க வைக்கணும்னு ஒரு வெறி. எங்க எசமான் ஒருத்தரு தெய்வம் மாதிரி இருந்து இவன் படிப்புக்கெல்லாம் ஒதவுறம்னு சொல்லியிருந்தாரு. அவர போன எலக்ஷன் நேரத்துல.. ரோட்டுல வுட்டு வெட்டிட்டானுவ..._ம்…”
     அப்பா இல்லியா?
     இருக்கான். வெருவாக்கெட்ட பய. எங்கிட்டோ புதுக்கோட்டையில ரிக்சா ஓட்டிக்கிட்டு எவளோடயோ இருக்கானாம்.  இவன் ஆயி பாவம்! நல்ல சாதியில பொறந்து இவன்ட்ட வந்து கொஞ்ச நா நல்லாத் தான் இருந்தாவ. அவன் அப்படிப் போனான். இவளும் அப்பிடி இப்பிடி இருந்து பாத்துட்டு இப்ப எங்கியோ மன்னார்குடில இருக்காளாம். இவந்தான் இங்கிட்டே கெடந்து என்னோட சீப்படுறான்
     தொயந்து படிக்க வைக்கிணும்னுதான் பாத்தேன். இவனுக்கும் படிப்புன்னா அம்புட்டு ஆச. இப்ப ஒரு வருசமா எனக்கும் ஒடம்புக்கு முடிய மாட்டேங்கிது. நடக்கவே சீவனில்ல. ரெண்டு வவுத்துக்கு ஒரு வளியும் தெரியல. இந்த வயசிலயே எங்கெங்கயோ போறான். என்னான்னமோ லோல்பட்டு அரை வவுத்துக்குப் பாத்துக்கக் கத்துக் கிட்டான். எனக்கு அவன்தான் தொணை, அவனுக்கு நானு..
     நீங்கதான் மவராசன் - அவனுக்கு ஒரு வளியக் காட்டணும். தெய்வத்துக்கிட்ட சொல்ற மாதிரி ஒங்ககிட்டச் சொல்லிக்கிறேன். நா இன்னம் எத்தினி நாளோ தெரியல…”
     மூச்சு வாங்கியது. கண் மூடி மூடித் திறந்தார்.
     எனக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. ஏதோ தைரியம் சொல்லி அனுப்பி வைத்தேன்.
     இவனுக்கு உதவித் தொகை வாங்கித் தரலாம் என்றால் இவன் தொடர்ந்து பள்ளிக்கூடத்துக்கு வந்திருக்க வேண்டும். தொடர்ந்து வர வேண்டும் என்றால் சாப்பாட்டுக்குஎனக்கு அன்றிரவு தூக்கமில்லை.
     அடுத்த நாள் அந்த ஊர்ப் பெரியவர் ஒருவரைப் பார்த்து ஒரு செட் புத்தகமும் நோட்டும் கேட்டேன். பேனாவோடு சேர்த்து வாங்கிக் கொடுத்தார். நான் ஒரு தட்டும் பையும் வாங்கி அவர் மூலமாகவே கொடுத்தேன்.
     இரண்டு மூன்று நாள் ஒழுங்காக வந்து கொண்டிருந்தான்.
     நேற்று  சந்தை  திரும்பவும் காணாமல் போய் விட்டான்.
     பள்ளிக்கூடம் விட்டதும் சந்தைப் பக்கம் போனேன். மேல் சட்டை இல்லாமல் கிழிந்த டவுசரோடு சாக்கு மூட்டை இரண்டு கால்களுக் கிடையில் நின்றது. முக்கால் அளவு பழைய பேப்பர்கள் சேர்ந்த சாக்கு இவன் உயரமிருந்ததை லாவகமாகச் சுமந்துகொண்டிருந்தான்..
     சுருங்கிய முகம் எனக்கே இங்கு வந்து இப்படி இவனைப் பாத்திருக்க வேண்டாம் போலத் தோன்றியது. இருந்தாலும் வேறு என்ன செய்ய..?
     சைக்கிளை நிறுத்தி அருகில் போனேன்.
     இந்தப் பேப்பரைப் போட்டு என்ன செய்யப் போறே?
     பேசாமல் இருந்தான். என்னைப் பார்ப்பதைத் தவிர்த்து என் பழைய சைக்கிளைப் பார்த்தான். அக்கம் பக்கம் கிடந்த பேப்பர்களில் கண் ஓடியது. சுத்தி சந்தைக் கூட்டம். சந்தைக்கே உரிய கலந்து கட்டியான இரைச்சல். எனக்கு எல்லாவற்றின் மேலும் எரிச்சலாக வந்தது...
     மீண்டும் அவனுக்கு மட்டும் கேட்பது போல் அதட்டலாகக் கேட்டேன்:
     சொல்றா என்ன பண்ணப் போறே?
     மெதுவான குரலில் குனிந்து கொண்டே சொன்னான்:
     சட்டையில்லன்னு எல்லாரும் கிண்டலடிக்கிறாய்ங்கெ…” நிமிர்ந்து பார்த்து விட்டு அவசரமாக வேறு பக்கம் திரும்பிக்கொண்டான்.
     சரி வா என்று கூறித் திரும்பினேன். அவன் வருவது போல் இல்லை.
     “…ந்தாhh. அங்கெ சட்டை விக்கிறாங்க. கொஞ்சம் தள்ளிக் கை காட்டினான். பையைத் தடவிப் பார்த்தேன். எனக்கே என் மீது எரிச்சல் வந்தது.
     சந்தையில வாங்க வேணாம். உனக்கு நா வேற நல்ல சட்டையா வாங்கித் தாரேன் பேசாம வா.
     இல்ல சார். அங்கிட்டுப் பளைய சட்டையெல்லாம் விக்கிறாங்க. மீனு வித்து மூணர் ரூவா வச்சிருக்கேன்.இந்தப் பேப்பரைப் போட்டா  முழுசாக முடிக்காமல் முன்னே போனான். விறுவிறுவென்ற நடை.
     சந்தையின் ஒரு பக்கத்தில் பழைய சட்டைத்துணிகள் வியாபாரம். எங்காவது ஓரிரு சின்னக் கிழிசல்களுடன் கூடிய பல தரப்பட்ட துணிகள். சட்டை டிரவுசர் பாவாடை புடவை கூவிக் கூவி விலை சொன்னார்கள்.
     சாரதாஸ்ரஞ்சனாஸ் விளம்பரங்கள் நினைவு வந்து பின்னணியில் இந்தச் சந்தைக் கடை இரைச்சலிட்டது. எனக்கு என்னவோ போலக் கிறுகிறுப்பாயிருந்தது. ஒரு மரத்தடியில் நின்று கொண்டேன். அவனை இப்போது தடுக்கச் சக்தியில்லை. சிகரெட் வேற இல்ல..
     பேப்பர் போட்;ட காசும் போதவில்லையாம்.
     நாளைக்கு எப்படியும் ஒரு சட்டை வாங்கி விடுவோம் என்று சமாதானப்படுத்தி. அவனையும் அழைத்துக் கொண்டு திரும்பினேன்.
     ன்று- இதோ
     பன்னைத் தின்று டீயையும் குடித்து முடித்துப் புறங்கையால் வாயைத் துடைத்து விட்டுக் கொண்டான். டவுசரை ஒரு தரம் இறுக்கி முடிந்து அரைஞாண் கொடியை மேலேற்றிப் போட்டுக் கொண்டான். நூல் நூலான அரைஞாண் கயிறு. “அண்ணாக் கொடி” அறுந்த கொடியாக..
     தாத்தாவை காலையிலேயே முனிசிபால்டி வண்டியில் கொண்டு போய் விட்டார்களாம். அழுது கூடவே ஓடியவனைப் பக்கத்தில் இருந்தவர்கள்தான் தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள். யாரோ கொண்டு வந்து கொடுத்த மத்தியானச் சாப்பாட்டையும் தொடவில்லையாம்.
     சரிடீ கிளாஸைக் குடுத்திட்டு வா.
     கொஞ்ச தூரத்தில் எனது நண்பருடன் ஓவிய ஆசிரியர் வந்து கொண்டிருந்தார். இவனைப் பற்றி நேற்றுத்தான் பேசியிருந்தோம். நண்பர் கவிதை எழுதும் பழக்கமுடையவர். கண்கள் விரிய அவனைப் பார்த்தார். ஆதரவாகத் தோளைத் தொட்டு உன் பேரென்ன தம்பீ! என்று கேட்டார்.
     ராமுக்கண்ணு எம்.பி.பி.எஸ் என்று அழுத்தமாகக் கூறியவன். டீக் கிளாஸை எடுத்துக் கொண்டு கடையை நோக்கிப் போனான்.
--------------------------------------------------------------- 
(கல்கி 02-09-1990 இதழில் வெளிவந்த எனது இரண்டாவது சிறுகதை இது. பின்னர் தமுஎச மாநிலக்குழு தொகுத்த “புதிய காற்று“ சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்று, நெல்லை மனோண்மணீயம் சுந்தனார் பல்கலையில் பட்டப்படிப்பிற்குத் துணைப்பாடமாக இருந்தது)

17 கருத்துகள்:

  1. இவனைப்போல் இன்னும் பல்லாயிரக்கணக்கான ராமுக்கண்ணுகள் நம் சமூகத்தில் இருக்கின்றனர். இதை நினைக்கையிலேயே மனசு கனக்கிறது,இவர்களுக்கு தேவை இரக்கமோ, பரிதாபமோ அல்ல. அடித்தட்டு மக்களையும் பற்றி கவலைப்படக்கூடிய அரசமைப்பு ஏற்பட்டால் மட்டுமே இவர்களின் வாழ்வுக்கு வழி பிறக்கும். அதை அமைக்க முயல்வதே இப்பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு.

    பதிலளிநீக்கு
  2. கதையைப் படித்துமுடிந்தவுடன் மனம் கொஞ்சம் கனத்தது. அதேசமயம் இந்நேரம் அவன் எங்கோ மருத்துவராகப் பணிபுரிந்துகொண்டிருப்பான் என்று மனம் நினைத்தது. நேர்மறை எண்ணங்கள் ஒருவரை முன்னுக்குக் கொண்டுவரும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. இதுபோன்ற சில நிகழ்வுகளை நான் என் இளமைக்காலத்தில் சந்தித்ததால் அவை எனக்குப் பாடமாக அமைந்ததோடு, என்னை நெறிப்படுத்தி நல்ல நிலைக்குக் கொண்டு வந்ததை நான் உணர்கிறேன். என்னை அதிகம் பாதித்தது இக்கதை.

    பதிலளிநீக்கு
  3. மனதை பாதித்த சிறுகதை. அடித்தட்டு மக்களின் வாழ்வை படம்பிடித்து காட்டியது. நான் சிறுவயதில் படித்த கிராமத்துப் பள்ளியை நினைவுப்படுத்தியது. அற்புதமான நடையும், இயல்பான வர்ணனையும் கதையோடு மேலும் ஒன்றவைத்தது. தங்களின் மற்ற கதைகளையும் படிக்கும் ஆர்வம் ஏற்பட்டது.
    த ம 2

    பதிலளிநீக்கு
  4. இயல்பான கதை....இவ்வாறு தான் முடியும்எங்கோ மருத்துவராக இருப்பார் என்பதை விட ஏதோ நல்ல நிலையில் இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  5. அய்யா அந்த மருத்துவரை பிறகு சந்தித்தீர்களா?

    அருமையான கதை,,

    பதிலளிநீக்கு
  6. மிகச்சிறப்பாக எழுதப்பட்டுள்ள கதை. படிக்கும்போதே மனம் பதறியது. இதுபோல நம் நாட்டில் எவ்வளவு ராமுக்கண்ணு எம்.பி.பி.எஸ் கள் இருக்கிறார்களோ?

    கல்கியில் வெளிவந்துள்ளது கேட்க மகிழ்ச்சி. சிறுகதைத் தொகுப்பு நூலில் இடம் பெற்று, பல்கலைக்கழக பட்டப்படிப்புக்குத் துணைபாடமாக ஆனது கேட்க மேலும் மகிழ்ச்சி. :)

    மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள், சார்.

    பதிலளிநீக்கு
  7. மனதைக் கனக்க வைத்து விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  8. வாழ்க்கையிலே கஷ்டத்தையும்
    கஷ்டமே வாழ்க்கையாகவும் ... ...
    இப்படி எத்தனை எத்தனை ராமுக்கண்ணு எம். பி. பி. எஸ்.கள்?

    இக்கால கொள்ளை கல்வி நிறுவனங்களையும் நினைவு கூர வேண்டும்..

    பதிலளிநீக்கு
  9. மனம் கனத்துவிட்டது. இப்படி அடித்தட்டு வாழ்க்கையில் இருக்கும் குழந்தைகள் எத்தனை பேர் இருக்கின்றார்கள்! அதுவும் சாராய வாடையுடன்? இயல்பாக மனதுடனேயே அப்படியே காட்சிகளாய் விரிந்து, பயணிக்கும் கதை நடை..அருமை!

    பாராட்டுகள்! வாழ்த்துகள் ஐயா/அண்ணா

    பதிலளிநீக்கு
  10. ஏற்கனவே படித்து மனதில் நின்ற கதை . என்ன ஒரு உயிரோட்டமான நடை!

    பதிலளிநீக்கு
  11. சிறந்த வழிகாட்டலைக் கூறி நிற்கும்
    சிறந்த கதை - அருமையான
    கருப்பொருள் - தங்கள்
    படைப்பிற்கு கிடைத்த வெற்றிக்கு
    எனது பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
  12. மனதை தொட்டு உலுக்கி விட்டது கதை.....
    வாழ்த்துக்கள் நண்பரே வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  13. தங்கள் கதை பல்கலைக்கழக பாடதிலுள்ளது கேட்டு மகிழ்ந்தேன்.கதையும் நன்று.

    பதிலளிநீக்கு
  14. உள்ளந்தொட் ட கதை பாராட்டுக்கள். பல உள்ளங்களை போய் சேரவேண்டும் .... கனவுகள் நிலைபெற வேண்டும் மனித நேயம் மிக்கவர்கள் மண்ணில் உதிக்க வேண்டும்

    பதிலளிநீக்கு
  15. இது தான் நான் படிக்கும் உங்களின் முதல் கதை. மனதைத் தொட்டது இக்கதையில் வரும் மனித நேயமிக்க ஆசிரியர் போன்று நிஜ வாழ்க்கையில் இன்னும் சிலர் இருப்பதால் ராமுக்கண்ணுகள் எம் பி பி எஸ் ஆகாவிட்டாலும், சமுதாயத்தில் நல்ல இடத்தைப் பிடிக்கும் வாய்ப்புண்டு. கடமைக்காக பாடம் போதிக்காமல் மாணவனின் தனிப்பட்ட வாழ்விலும் அக்கறை செலுத்தி அவன் முன்னுக்கு வர உதவும் மனித நேயமிக்க ஆசிரியர்கள் போற்றப்பட வேண்டியவர்கள். அதே சமயம் சாப்பாட்டில் மண் அள்ளிப் போட்டு அவன் மட்டுமின்றி யாருமே சாப்பிடமுடியாமல் செய்யும் இன்னொரு ஆசிரியரின் குரூரத்தனம் அதிர்ச்சியளிக்கிறது. கல்கியில் வெளி வந்தமைக்கும், பல்கலைக்கழகப் பாடநூலில் இருப்பதற்கும் பாராட்டுக்கள் அண்ணா!

    பதிலளிநீக்கு
  16. நான் அரசுப் பள்ளிகளில் ஆலோசனை வழங்கஹ் செல்லுமிடங்களில் சந்திக்கும் குழந்தைகளை கண் முன்னே நிறுத்தியது உங்கள் கதை... 1990 லேயே அப்படித்தான் இருந்திருக்கிறது என்னும் நிதர்சனம் நெஞ்சை உலுக்குகிறது...

    பதிலளிநீக்கு