சில தொலைக்காட்சியில் சில நல்ல நிகழ்ச்சிகள்!


பசங்களா! நான் உங்கள் ரசிகன் டா!
  பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன். இவர்தான் நான் உட்பட தமிழ்நாட்டில் பலரும் செல்பேசியில் “ரிங்டோனாக“ வைத்திருக்கும் – “தமிழுக்கும் அமுதென்று பேர்“ எனும் பாரதிதாசன் பாடலை இசைக்கருவிகள் எதுவும் இல்லாமலே சென்னைப் பல்கலை மாணவர்களை அற்புதமாகப் பாடவைத்த திரை இசைக்கலைஞர்!  
   “ஒருவார்த்தை ஒருலட்சம்எனும் வார்த்தை விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சியை வழக்கம் போல் சுவையாக மட்டுமின்றி நல்ல தமிழில் அழகாக வழங்குகிறார். தமிழ்நாடு முழுவதிலிமிருந்து பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 36 அணிகள் தங்களது திறமையைக் காட்டி வருகின்றனர். 8 முதல் 11வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் ஒரு அணிக்கு இருவராக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள். இதற்காக, சிறந்த பள்ளிகளிலிருந்து சிறந்த மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 12 அணிகள் மொத்தம் ஐந்து கட்டப் போட்டிகள் சுவாரசியமாக நடைபெற்று இறுதிக்கட்டப் போட்டி நடக்கும்.
   முதல் கட்டப் போட்டியிலிருந்து 12 அணிகள் மட்டுமே அடுத்தக் கட்டப் போட்டிக்கு தகுதி பெற முடியும். இரண்டாம் கட்டப் போட்டியிலிருந்து 6 அணிகள் மட்டும் காலிறுதிக்கு தகுதி பெறும். இதிலிருந்து 3 அணிகள் போட்டியிட்டு இறுதிப் போட்டிக்கு 2 அணிகள் மட்டுமே தகுதி பெறும். ஒரு லட்சம் பரிசு வெற்றி பெறும் அணிக்கு 'ஒரு வார்த்தை ஒரு லட்சம் ஜுனியர்' பட்டமும், ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசும் காத்திருக்கிறது.
   இந்த நிகழ்ச்சி ஞாயிறு  மாலை 7மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது.  காலிறுதிப் போட்டிகள் நடந்து வருகின்றன.
     இதில் பாராட்டத் தக்க சில நல்ல செய்திகள் உள்ளன.
விளம்பரத்தில் நம் உள்நாட்டுத் தயாரிப்பான “காளிமார்க் பவன்டோ“ விளம்பரம் முக்கிய இடம்பெறுகிறது! தொகுப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் மற்ற தொகுப்பாளர்கள் பலரும் –இளமையாக (யூத்?) இருக்க வேண்டுமென்று நினைத்துச் செய்வதுபோல- கிறுக்குத்தனம் செய்வதில்லை. 
  முடிந்தவரை அந்தக் குழந்தைகளை உற்சாகப் படுத்தியே பேசிவருகிறார். அதுவும் முடிந்த வரை –செயற்கைப் பூச்சற்ற- நல்ல தமிழில் ! “உங்களுக்கான நேரம் இதோ தொடங்குகிறது!” 
     அருமை ஜேம்ஸ் வசந்தன்! மிக அருமை! தொடருங்கள்!
    இதில் மூலத்துறை ஊ.ஒ.ந.நி.பள்ளி, 8ஆம் வகுப்பு மாணவர்கள் மற்ற ஆங்கிலவழி 11ஆம் வகுப்பு மாணவர்களை அசர அடித்து, சென்னை வேலம்மாள் பள்ளி மாணவிகளோடு அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கிறார்கள்... வாழ்த்துகள்  பசங்களுக்கு மட்டுமல்ல அருமையாக இந்த மாணவர்களைத் தயாரிக்கும் ஆசிரியர்களுக்கும் ஒளிபரப்பிவரும் விஜய் தொலைக் காட்சிக்கும் தான்!! அதிலும் அந்தச் சிறுவர்களின் முன்தயாரிப்பு உழைப்பும், நிகழ்ச்சியில் அவர்கள் காட்டும் அக்கறை மற்றும் அழகும் அருமை!
   பள்ளி கல்லூரி மாணவ-மாணவியர்கள், இளைஞர்கள் மற்றும் பெற்றோரும் பார்க்க வேண்டிய நல்ல நிகழ்ச்சி இது! (நிகழ்ச்சித் தொகுப்பாளர்களும் பார்த்து எப்படி ஒரு நிகழ்ச்சியைத் தமிழில் அழகாகத் தொகுத்து வழங்கலாம் என்றும் கற்றுக் கொள்ளலாம்!)

இதுபோல –
“புதியதலைமுறை“ தொலைக்காட்சியில் பிற்பகல் 2.30க்கு வரும்
“மகளிரும் மக்களாட்சியும்  நிகழ்ச்சி – மிகவும் அருமை!
  ஒரு கல்லூரி மாணவிகளோடு திறந்த வெளியில் மரத்தடியில் முன்னோடிப் பெண்கள் அமர்ந்திருக்க நூற்றுக்கணக்கான மாணவியர் கலந்து கொண்டு பேசினர். 
  தமிழகத்தின் புகழ்வாய்ந்த பெண்ணியக் கருத்தாளர்களான சகோதரி அருள்மொழி, எழுத்தாளரும் முன்னாள் இ.ஆ.ப.அதிகாரியுமான சகோதரி சிவகாமி நடுவிலிருக்க, இந்தப்பக்கம் பா.ஜக.வின் தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தர் ராஜனும், அந்தப் பக்கம் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர், மகிளா காங்கிரசின் தமிழகத் தலைவியான விஜயதரணி ஆகியோர் அமர்ந்திருந்தனர். புதிய தலைமுறைச் செய்தியாளரான இளம்பெண் ஒருவர் நிகழ்ச்சியை மிகச் சிறப்பாகத் தொகுத்து வழங்கினார்.
   மாணவியர் முதலில் தயங்கினாலும் பிறகு கேள்விக் கணைகளை அள்ளி வீசினர்... பெண்கள் அரசியலுக்கு வருவதில், வந்தும் தொடர்வதில், தலைமையேற்று நடத்துவதில் உள்ள பெண்களுக்கான பிரத்தியேகப் பிரச்சினைகள் முதல் பொதுவான அரசியல் போக்கு வரை அலசி எடுத்தார்கள்.. மிக அருமையான நிகழ்ச்சி இது!
  மாணவியர் குறிப்பாக இளம்பெண்கள் பார்க்க வேண்டிய நிகழ்ச்சி!
பரவாயில்லை, நம்ம தொலைக்காட்சிகளும் நல்ல சில நிகழ்ச்சிகளைத் தரவே செய்கின்றன! வாழ்த்துவோம்... வரவேற்போம்!
-----------------------------

12 கருத்துகள்:

  1. ஒரு வார்த்தை ஒரு லட்சம் - நல்ல நிகழ்ச்சி. பார்ப்பதுண்டு.

    பதிலளிநீக்கு
  2. அன்புள்ள அய்யா,

    விஜய் தொலைக்காட்சியில் ‘ஒரு வார்த்தை ஒருலட்சம்’ மாணவர்கள் பங்கேற்கும் அருமையான நிகழ்ச்சியைப் பார்ப்பது உண்டு.

    புதிய தலைமுறை தொலைக்காட்சியில் இடம்பெறும் ‘மகளிரும் மக்களாட்சியும்” நிகழ்ச்சி பார்த்ததில்லை.

    இரண்டு தொலைக்காட்சிகளுக்கும் பாரட்டுகள்... வாழ்த்துகள்.

    நன்றி.

    த.ம.1

    பதிலளிநீக்கு
  3. ஒரு வார்த்தை ஒரு லட்சம் பார்க்க தவறுவது இல்லை... வீட்டுக்குள் பதில் சொல்ல போட்டியும் நடக்கும்... புதிய தலைமுறை நிகழ்ச்சி பார்க்க வேண்டும்... நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
  4. காலத்தின் தேவையான கட்டுரை

    பதிலளிநீக்கு
  5. ஒரு வார்த்தை ஒரு லட்சம் நிகழ்ச்சி நான் விரும்பிப் பார்க்கும் ஒன்று. சிந்தனையை தூண்டும் நல்ல தமிழ் நிகழ்ச்சி
    முன்னர் சூப்பர் சிங்கர் போல ஆச்சி தமிழ் பேச்சு எங்கள் மூச்சு என்ற நிகழ்ச்சியை நடத்தி வந்தது. ஒரு தொடர் மட்டுமே முழுதுமாக முடிவடைந்தது. அடுத்தது ஏனோ பாதியில் நின்றுவிட்டது. விஜய் டிவி அந்த நிகழ்ச்சியை மீண்டும் லாப நோக்கின்றி தொடங்க வேண்டும்
    பம்பரமாய் சுற்றி வரும் தாங்கள் இதை எல்லாம் கிடைக்கும் நேரத்தில் பார்த்து ரசித்து பகிர்வது அருமை ஐயா

    பதிலளிநீக்கு
  6. ஒரு வார்த்தை ஒரு லட்சம் நிகழ்ச்சியை சில பகுதிகள் பார்த்து இருக்கிறேன்! பாரட்டுக்கு ஏற்ற நிகழ்ச்சி! புதிய தலைமுறை தொலைக்காட்சி நிகழ்ச்சி கண்டது இல்லை! அதுவும் இல்லாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சி பார்ப்பது குறைந்து போய்விட்டது. பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  7. உங்கள் பாராட்டில் இரண்டு நிகழ்ச்சிகள்...
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. எனது குழந்தைகளை பார்க்கச் சொல்லத் தூண்டும் நிகழ்ச்சிகளில் ' ஒரு வார்த்தை ஒரு லட்சம் ' என்ற நிகழ்ச்சியும் உண்டு.

    பதிலளிநீக்கு
  9. ஒரு வார்த்தை ஒரு லட்சம் நிகழ்ச்சி மாணவர்கள் மத்தியில் தமிழை வளர்க்க (சொற்களஞ்சிய பெருக்கம்) உதவும் நிகழ்ச்சி. மாணவர்களின் செயல்பாடுகள் பார்த்து வியந்திருக்கிறேன். இந்நிகழ்ச்சியைப் பற்றி தாங்கள் பகிர்ந்திருப்பதன் மூலம் ஒரு நல்ல நிகழ்ச்சியை நம் நண்பர்களைப் பார்க்க தூண்டுமென்பதில் மகிழ்ச்சி அய்யா.

    பதிலளிநீக்கு
  10. ஒரு வார்த்தை ஒரு லட்சம் அருமையான நிகழ்ச்சி அண்ணா. அதை நான் விரும்பிப் பார்ப்பதுண்டு. மாணவ மணவிகளின் திறமையை, குறிப்பாகத் தமிழ் மொழியில் என்பது மிகவும் சிறப்பான நிகழ்ச்சி. ஜேம்ஸ் வசந்தன் அருமையாகத் தமிழில் பேசுகின்றார். அவரது குரலும் அப்படியே! நீங்கள் இங்கு அதைக் குறிப்பிட்டிருப்பது மிகவும் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  11. நன்று. ஸிறப்பு. ஸிறப்பு.

    http://concurrentmusingsofahumanbeing.blogspot.com

    பதிலளிநீக்கு