கவிதை என்பது யாது? - முன்னுரை(2)


கவிதை என்பது யாது?
கவிதைக்கு இலக்கணம் 
தேவைதானா?.

இந்தக் கேள்விகள் 
பள்ளிப் பருவத்திலிருந்தே என்னைக் குடைந்ததில் 
இந்த நூல் கருக்கொண்டது.


முன்னுரையின் முதற்பகுதி படிக்காதவர்கள் படிக்கச் சொடுக்குக -

முதற்பகுதி படித்தவர்கள் தொடர்ந்து படிக்க -

தமிழ்க்கல்வியும் அது தந்த சிந்தனையும் சில பதில்களைத் தந்தன-
அவற்றில் ஒன்று – இலக்கணம் அவசியம்தான். ஆனால், இலக்கணம் இருந்தால் மட்டுமே கவிதை ஆகிவிடுமா? எனும் கேள்வியும் எழுந்தது.
எடுத்துக் காட்டாக -
“அண்ணன் என்பவன் தம்பிக்கு மூத்தவன்
“திண்ணை என்பது தெருவில் உயர்ந்தது“
இது நான்கு சீர் மற்றும் ஆசிரியப்பாவுக்கான அகவல் ஓசையும் கொண்டது என்பதாலேயே இது கவிதையாகுமா? எனும் கேள்வி சரியானது தானே?

சரி இன்னொரு புறம், இலக்கணமே சுமையாகிவிடாதா? எனும் கேள்வியும் சரியாகத்தான் தெரிகிறது. பாரதிதாசன் இலக்கணத்தோடு ஆசிரியப்பாவில்  எழுதியதைப் பலரும் கண்டுகொள்ள வில்லை!  
இரவில் வாங்கிய இந்திய விடுதலை
என்று விடியுமோ யார் அறிகுவரே? – எனும் வரிகள் பெறாத புகழை, அந்த உள்ளடக்கத்தைக் கடன் வாங்கி, முன்பின் அறியாத அரங்கநாதன் என்பவர் இலக்கணமின்றி எழுதிவிட்டுப் போன -
“இரவில் வாங்கினோம்,
விடியவே இல்லை எனும் இரட்டை வரி பெற்றது எப்படி? இதற்குள் இருக்கும் “விடியவே இல்லை“ என்பது முற்றிலும் சரிதானா? அல்லது எப்போதும் ஈர்ப்பைத் தரும் எதிர்க்கருத்தின் மகிமையா?

இவை இரண்டில் எது கவிதை? கேள்வி மீண்டும் தொடர்கிறதல்லவா?
இது பற்றி “கவிதையின் கதைநூலில் தொடர்வோம்.

சரி தமிழ்க்கவிதை வரலாற்றில் மனிதகுல அல்லது தமிழ்ச்சமூகம் இணைந்து கிடக்கும் இடங்களில் முக்கியமான குறிப்புகள் சிலவற்றைப் பார்ப்போம்.
மனிதகுலத்தின்- தமிழ்ச்சமூகத்தின்- முதல் நிலை
இனக்குழு மக்கள் சமூதாயம் என்பதாகும்.
அதாவது அப்போது யாருக்கும் எதுவும் சொந்தமில்லை, கிடைக்கும் எதையும் குழுவில் இருக்கும் அனைவரும் பகிர்ந்து கொள்வதே வழக்கம். அதற்கான தலைவரும் இதற்கு விதிவிலக்கல்ல. அடுத்த குழுவுடனோ, உணவு தேடிப் போகும்போதோ மட்டுமே தலைவர் அந்த மதிப்பைப் பெறுகிறார். அதிலும் பெரும்பாலும் பெண்ணே தலைமையேற்றிருக்கிறாள்! ஏனெனில் குழந்தையின் தாயைத்தான் அடையாளம் தெரியுமே அன்றி தந்தை யாரென்று தெரியாது! அதற்குப் பெயர்தான் தாய்வழிச் சமூகம்!
தமிழ்க் கவிதையின் பழம்பெரும் புதையலான “சங்க இலக்கியம்“ தொகுப்பில் உள்ள ஆதி வடிவம் ஆசிரியப் பாவாக உள்ளது.

அதிலும் 3வரிகொண்ட ஆசிரியப் பாவால் ஆன ஐங்குறுநூறும், 8வரி வரை போகும் நற்றிணையும், 30வரி வரையான அகநானூறும், 60வரிவரையான புறநானூறும் என சங்க இலக்கியத்தின் பெரும்பாலான செய்யுள் வடிவம் அகவல் ஓசை கொண்ட ஆசிரியப்பாவாகவே உள்ளது! (சங்க இலக்கியத் தொகுப்பில் மேலும் உள்ள பிற பாவகைகள் குறித்து நூலில் பார்ப்போம்)

அகவல் என்றால் அழைப்பது. அடுத்தவரை அழைப்பதில் தானே மொழி தோன்றியிருக்க முடியும்? சைகையை அடுத்து, அழைப்பதற்குத்தானே மொழியின் பயன்பாடு தொடங்கும்?
ஆக,
நாடுகண்ட வாழ்நிலையின் ஆதி இனக்குழு வடிவமும்,
ஏடுகண்ட பாவகையின் அகவல் பாவடிவமும் ஒத்திருப்பது முதற்சான்று.

ஆனால், அடுத்து வந்த தலைமை, இனக்குழுத் தலைவர் போலில்லாமல், சற்றே மக்களைவிட்டு அந்நியமாகி, இனக்குழுக்கள் ஒன்றோடு ஒன்று மோதி, உணவுத் தேவைக்காக அடுத்த குழுவினைக் கொன்று அல்லது வென்று இரண்டு மூன்று குழுக்கள் ஒன்றாகி சற்றே பெரிய குழுக்கள் உருவாகி, முடிவேய்ந்த வேந்தர்கள் வேளாண்மையில் விளைந்த வேளிர்கள் சிறு மன்னர் எனச சமூக நிலை சற்றே முன்னேற மக்கள் அவல நிலைக்குத் தள்ளப் படும்போது, வாழ்நிலை சிதைவடைகிறது...

“அடுதலும் தொடுதலும் புதுவது அன்று இவ்வுலகத்து இயற்கை“ என்று ஒரு பக்கம் மன்னர்கள் சண்டை தொடர மக்கள் அலைக்கழிக்கப் பட்டனர். இது கண்ட அறநூலார்... “இப்படிச் செய்யாதே இப்படிச் செய்என்று சொன்ன பதினெண்கீழ்க்கணக்கு அறநூல்கள் பெரும்பாலும் வெண்பாவில் அமைந்தன.
கட்டுப்பாடுகளைப் பற்றிச் சொன்ன அறநூல்கள் அனைத்தும், கட்டுப்பாடு மிக்க வெண்பாவிலேயே எழுதப்பட்டன! –இது இரண்டு!

சிறிய மீன்களை விழுங்கிப் பெருமீன்கள் வளர்ந்தன.
சிற்றரசுகளை விழுங்கிப் பேரரசுகள் எழுந்தன.
அதுவரை வேந்தர்-மன்னர்களாக இருந்தவர்களைப் பாடிய 60வரிகள் போதவில்லை! பெருவேந்தர்கள் பேரரசர்களைப் பாட இன்னும் பெரிய வரிகளைக் கொண்ட புதிய வடிவங்கள் தேவைப்பட்டன..
ஆடம்பரமான பெருமன்னர்கள், 
சொல்வல்லாரின் தேவை எழுந்த்து
விருத்தங்கள், பலநூறு-ஆயிரம் வரிகள் கொண்ட 
காவியங்கள் எழுந்தன!

பேரரசர்களைப் பாடப் 
புதிய புதிய செய்யுள்களின் அணிவகுப்பு எழுந்தது!
நமக்கே இதைச் சொல்ல 
3வரி தேவைப்படுகிறது!-இது 3ஆவது சான்று.

இனக்குழுத் தலைவர் போலில்லாமல், பெருமன்னர்களின் ஆடம்பர வாழ்க்கை முற்றிலும் மக்களைவிட்டு அகன்ற நிலையில் கொதித்துப் போன மக்களின் கொதிப்பை அடக்க விதி நம்பிக்கையை விதைக்க ஒரு கூட்டம் எழுகிறது..
“திருவுடை மன்ன்னைக் காணில் திருமாலைக் கண்டேன்என்று சொல்லி அரசனை ஆண்டவனின் அம்சம் என்று மக்களை மயக்குகிறது...மக்களை பல்வேறு வகையிலும் இசைவடிவத்தோடு இறங்கி அடிக்கிறது!

“தமிழோடு இசைபாடல் மறந்தறியேன்என்று தாழிசை, துறை, விருத்தம் இசைப்பாடலுடன் சிற்றிலக்கிய, பக்திஇலக்கியம், வளர்கின்றன!

உண்மையைச் சொன்னால் பக்தி இலக்கியக் காலத்தில்தான் பெரும்பாலான மக்களிடம் கவிதை இலக்கிய வடிவம் சென்று சேர்கிறது! அதுவரையில் மேல்தட்டு அரசர், புலவர், பாணர் என இருந்த தமிழ்ச் செய்யுள் கவிதை முதன்முதலாக பக்தி இலக்கியக் காலத்தில்தான் ஊருக்குள் வருகிறது!

மதங்களின் பெயரால் ஒன்றுபடுத்த சிறுதெய்வங்கள் எல்லாம் இணைந்து பெருந்தெய்வ மத அமைப்புகள் தோன்றுவது ஆண்டவனுக்குத் தேவையோ இல்லையோ ஆள்பவருக்கு தேவையாக இருப்பது இயல்புதானே?!

பின்னர் இதையும் மீறி, புதிய பார்வையும், சாதி-மத-மூட நம்பிக்கைகளை எதிர்த்தும், அரசரையே எதிர்த்தும் அதிரடியாக எழுந்த சித்தர்களின் குரல் மருத்துவத்தோடு, மக்களின் குமுறலையும் வெளிப்படுத்த வழக்கிலிருந்த கவிதை வடிவத்தோடு புதிய எளிய வெண்கலிப்பாக்களில் எழுதினர்...
“சாதியாவது ஏதடா மதங்களாவது ஏதடா?”
“பறச்சி யாவது ஏதடா? பார்ப் பனத்தி ஆவது ஏதடா?
“தாவாரம் இல்லை, தனக்கொரு வீடில்லை,
தேவாரம் ஏதுக்கடி குதம்பாய்?” எனும் சித்தர் பாடல்கள் சீறி எழுந்தன..

இதன் பிறகு பெரிய அரசுகள் இல்லை... பெரிய இலக்கியங்களும் இல்லை
வெளிநாட்டவர் வருகையில் நல்லதும் கெட்டதும் கலந்து நடந்த்து..

உலக மனித வாழ்க்கை அரசியல் சமூக அமைப்பு எல்லாம் மாறி...எல்லாரும் படிக்கலாம், எழுதலாம் என்கிறபோதுதான் புதுக்கவிதை வருகிறது...
இவ்வாறு, மனித வாழ்க்கை மாறும்போதெல்லாம் கவிதையின் உள்ளடக்க உருவ மாற்றம் –பாம்பு சட்டையை உரித்துக் கொள்வதுபோல- தொடர்ந்து நடந்திருக்கிறது...இப்போதும் நடக்கிறது.

இன்னார்தான் படிக்கலாம் என்ற பழைய அமைப்புத் தகர்ந்து யாவரும் படிக்கலாம் என்னும்போதுதான் எல்லாரும் எப்படியும் எழுதலாம் என்னும் புதுக்கவிதை தோன்ற முடியும் இல்லையா?
இப்படித்தான் கவிதை வரலாறும் மனித தமிழ்ச்சமூக வரலாறும் கிட்டத்தட்ட ஒன்றாகவே மாறிமாறி –சில நேரம் ஒன்று இன்னொன்றை மாற்றிவிடும்படி- மாறி வந்த கதைதான் கவிதையின் கதை!


(முன்னுரை இன்னும் முடியவில்லை.. அடுத்த வாரம் பார்ப்போம்)

22 கருத்துகள்:

  1. கவிதையின் கதை முன்னுரை பலவற்றை எங்களுக்குத் தெளிவுறுத்துகின்றன. இலக்கணம் தொடர்பான சொற்பயன்பாடு (ஆசிரியப்பா, அகவல் ஓசை போன்றவை)புரிந்துகொள்ள சற்றே கடினமாக இருக்கிறது. நாளடைவில் புரிந்துகொள்வோம் என நம்புகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துக்கு நன்றி அய்யா.
      அகவல் என்பது அழைப்பது,உதவிக்காகவோ தகவல் சொல்வதற்கோ அடுத்தவரை நம்மிடம் அழைப்பது. இந்த ஓசையே ஆசிரியப்பாவின் ஓசையாக உள்ளது.
      செப்பல் என்பது சொல்வது,அடுத்தவருக்குச்சொல்வது பெரும்பாலும் அறிவுரை இதுவே வெண்பாவின் ஓசை. எடுத்துக்காட்டுகளை நூலில் காண்போம் அய்யா,நன்றி.

      நீக்கு
  2. முன்னுரை வரிகள் முத்தாய்ப்பாக உள்ளன. இலக்கணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் , ஒரு கவிதைக்கு சந்தம் எவ்வாறு அவசியம் என்பதனையும் நூலில் விளக்குவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அய்யா. சந்தம்(ஓசை ஒழுங்கு)தான் செய்யுளின் அடிப்படை. இதை எளிமைப்படுத்தவே அசை, சீர், தளை, அடி, தொடை என இதன் இலக்கணம் அமைக்கப்பட்டது. சொல் அழகிலும் ஓர் ஒழுங்குள்ளது. எதுகை, மோனை, இயைபு என இது இலக்கணமானது.

      நீக்கு
  3. பதில்கள்
    1. இது முன்னோட்டம்தான், விளக்கம் தான் நூலாக விரிய இருக்கிறது வலைச்சித்தரே! வருகைக்கு நன்றி.

      நீக்கு
  4. நல்ல விளக்கங்கள் .வீதி கூடத்தில் தாங்கள் இசைத்த பாடலின் ஒரு இடத்தில் என் உடல் மயிர் கூச்செறிந்தது.... உணர்ச்சி வயமான பாடல் , உணர்வு பூர்வமானதும் தான் ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே! அண்மையில் மறைந்த நண்பர் கே.ஏ. குணசேகரனின் வெங்கலக் குரலில் நீங்கள் அந்தப் பாடலைக் கேட்டிருந்தால் இன்னும் உணர்ச்சிவசப் பட்டிருப்பீர்கள்..மண்ணின் இசைக்கு மாபெரும் இழப்பு

      நீக்கு
  5. கவிதை பற்றிய எண்ணங்களுடன்
    சிறந்த கருத்துப் பகிர்வு

    இந்தியாவின் 67வது குடியரசு நாள் வாழ்த்துகள்!

    மின்நூல் வடிவமைப்பும் வெளியீடும் பற்றி அறிந்திட......
    http://www.ypvnpubs.com/2016/01/blog-post_26.html

    பதிலளிநீக்கு
  6. முன்னுரையில் சொல்லப்பட்ட கவிதை பிறந்ததும் வளர்ந்ததுமான சுருக்கமான விளக்கம் சிறப்பு! பல தகவல்கள் அறிய முடிகின்றது! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரு சுருக்க விளக்கம் தான் நண்பரே. விளக்கமான விளக்கம் இனிமேல்தான் இருக்கிறது... நன்றி.

      நீக்கு
  7. அருமை ஐயா..எனக்கு கவிதை எழுத ஆசை ஆனால் எனக்கு இலக்கணம் முழுமையாகத் தெரியாது ஐயா..தங்களோடு முயற்சிக்கிறேன் ஐயா..நன்றி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “காரிகை கற்றுக் கவிபாடுவதினும்
      பேரிகை கொட்டிப் பிழைப்பது மேலே” என்றொரு தொடர் உண்டும்மா. இலக்கணம் படித்தபின்தான் கவிதை எழுதவேண்டும் எனில் முடியவே முடியாது. கரையில் இருந்துகொண்டு நீச்சல் பழகமுடியுமா என்ன? அருகிலுள்ளோர் துணையோடு நீரில் குதித்து நீந்திப் பழக வேண்டும்..செந்தமிழும் நாப் பழக்கம்தானே?

      நீக்கு
  8. அருமையான விளக்கம் கவிதைக்கு கட்டுப்பாடு இல்லை பாடுபொருள்தான் முக்கியம் என்பது என் சிற்றறிவு ஐயா.

    பதிலளிநீக்கு
  9. சமுக வரலாரையும் கவி வரலாரையும் ஒரே கட்டுரையில் வாசித்தது மகிழ்ச்சியாகவும் விறு விறுபபாகவும் இருக்கிறது அப்பா... நன்றி ...

    பதிலளிநீக்கு
  10. ஆஹா அய்யா! கவிதையின் கதை கேட்டு பல தகவல்கள் அறிந்தேன். குறிப்பும் எடுத்துக் கொண்டேன். தங்களின் ஆய்வு மிகப்பெரிய அளவில் பேசப்படும் என்பது உறுதி. மகிழ்ச்சியாக உள்ளது அய்யா.
    "பேரரசர்களைப் பாடப்
    புதிய புதிய செய்யுள்களின் அணிவகுப்பு எழுந்தது!
    நமக்கே இதைச் சொல்ல
    3வரி தேவைப்படுகிறது!" தங்களுக்கே உரிய நகைச்சுவை உணர்வு ததும்பும் வரிகள். பகிர்வுக்கு நன்றிங்க அய்யா.

    பதிலளிநீக்கு
  11. முன்னுரை ஈர்க்க முழுநூல் வருவது
    எந்நாள் உரைத்திடுவீர் இன்று
    :))

    நூலைப் படிக்க ஆவல் அதிகரிக்கிறது அண்ணா.

    பதிலளிநீக்கு
  12. I used to think that This would never happen as it happened to Kamals MaruthaNayagam...

    Really great feat..
    eager to read this entire series..
    vote +

    பதிலளிநீக்கு
  13. கவிதை என்ற நூலின் முன்னுரை பயனுள்ள பல செய்திகளை அறிந்து கொள்ளும்விதமாய் அமைந்துள்ளது. சங்க இலக்கியத்தின் பெரும்பான்மையான செய்யுள் வடிவம், அகவல் ஓசை கொண்ட ஆசிரியப்பாவில் அமைந்துள்ளது; கட்டுப்பாடுகளை அறிவுறுத்திய அறநூல்கள் அனைத்தும், வெண்பாவால் கட்டமைக்கப்பட்டுள்ளன; பக்தி இலக்கியக்காலத்தில் தான், பெரும்பான்மையான மக்களிடம் கவிதை இலக்கியவடிவம் சென்று சேர்ந்தது போன்ற அரிய விபரங்கள் அறிந்தேன்.
    கவிதையின் வரலாறும், தமிழ்ச்சமூக வரலாறும் ஒன்றையொன்று சார்ந்து பின்னிப்பிணைந்துள்ள விபரத்தை படிப்படியாக விளக்கியுள்ளீர்கள். இதுநாள் வரை கவிதையின் வரலாறு பற்றி எதுவும் தெரியாமலிருந்த நான், இம்முன்னுரையின் மூலம் பல புதிய செய்திகளை அறிந்துகொண்டேன். எளிமையாக எல்லோருக்கும் புரியும்வண்ணம் அமைந்துள்ள நடையும் சிறப்பு. முன்னுரை தொடர்ந்து வாசிக்கும் ஆவலை ஏற்படுத்துகிறது. தொடருங்கள் அண்ணா.

    பதிலளிநீக்கு
  14. கவிதை பற்றிய அறிமுகம் முன்னுரையாக,,,,
    தொடர்கிறேன் ஐயா

    பதிலளிநீக்கு
  15. பல செய்திகளை அறிந்து கொள்ள முடிந்த கவிதையின் முன்னுரை அருமை ஐயா...

    பதிலளிநீக்கு
  16. சிறப்பான முன்னுரை எது கவிதை என்பதை புரிந்து கொள்ள தங்கள் விளக்கங்களும் வினாக்களும் உதவும் என்பதில் ஐயமில்லை. ஊன்றிப் படித்து தெளிவு பெற முயற்சிக்கிறோம்

    பதிலளிநீக்கு