பதிவர் விழாவில் ஒரு குறையும், மேலும் சில விழாப் படங்களும்!

புகழ்பெற்ற “ஞானாலயா“ நூலக நிறுவுநர்
 திருமிகு பா.கிருஷ்ணமூர்த்தி,
விழாவில் கௌரவிக்கப்படுகிறார்
---------------------------------------------------------------------------- 


விக்கி மீடியாவின் இந்தியத் திட்ட இயக்குநர் திரு அ.இரவிசங்கர் உரை
-------------------------------------------------------------------------------------------------------------- 


புதுக்கோட்டையில் நடந்து முடிந்த பதிவர் விழாவில் எந்தக் குறையும் இல்லைஎன்று, வந்து சென்ற நம் பதிவர்கள் பதிவுகளைப் போட்டு வாழ்த்துகிறீர்கள். மற்றவர் பதிவுகளிலும் போய் பின்னூட்டங்களிட்டுப் பாராட்டுகிறீர்கள்! அந்த அன்பிற்கு எங்கள் இதய நன்றி!

ஆனால் நமது விழாவிலும் ஒரு பெரும் குறை நேர்ந்துவிட்டது....

ஆம் நண்பர்களே! அது...

பற்றாக்குறை!

எங்களுக்கு மனமிருந்த அளவிற்குப் பணமில்லை!

நண்பர்களே! பலரும் தெரிவித்திருப்பது போல, இது
பதிவர் திருவிழா மட்டுமல்லாமல்,
உணவுத்திருவிழா,
பண்பாட்டுத் திருவிழா,
புத்தகத் திருவிழா,
ஓவியத் திருவிழா,
இசைத் திருவிழா,
மரக்கன்று நடும்விழா,
சிந்தனை உரைவிழா  என எமது விழாக்குழுவினரின் அன்பை, விருந்தோம்பலை, உழைப்பைப் பாராட்டி வந்தாலும், வெளியூரிலிருந்து வந்த பதிவர்களின் எண்ணிக்கைக் குறைவு காரணமாக, அவர்களுக்காக செய்த ஏற்பாடுகளில் விழாக்குழு ஏமாந்துபோனது உண்மைதான்!

வருவதாகப் பதிவு செய்தவர்களில் 
பாதிப்பேர் கூட வரவில்லை!
-----------------------------------------
த.இ.க. உதவி இயக்குநர் முனைவர்  மா.தமிழ்ப்பரிதி  உரை
--------------------------------------------------------------------------------------------------------------
 சரி, “விழாக்குழு நம் வருகையை நம்பி உணவு மற்ற ஏற்பாடுகளைச் செய்திருப்பார்களே, வரமுடியவில்லை என்று ஒரு தகவலாவது சொல்வோம்என்று சொல்லியிருக்கலாம். அப்படி ஒருவர் கூடச் சொல்லவுமில்லை என்பதுதான் ஏமாற்றத்தின் காரணம்!

“செய்யாத குற்றத்திற்குத் தண்டனை உண்டா?என்று பையன் ஆசிரியரிடம் கேட்டானாம். அதற்கு அவர், “அது எப்படிப்பா? செய்யாத குற்றத்திற்கு தண்டனை தரமுடியும்?என்று சொல்ல, “அப்படின்னாச் சரி, நா இன்னிக்கு வீட்டுப்பாடம் செய்யலஎன்று போய்விட்டானாம்!

அதுமாதிரி, வராத குற்றத்திறகு யார் என்ன சொல்ல முடியும்?

வந்தவர்கள் எழுதுவதையும் சொல்வதையும் கேட்டு, “அடடா.. போய் வந்திருக்கலாம் போல“ என்று மனம் வருந்துவோரே! இந்த பதிவுலக ராஜ்யம் உங்களுடையது! உங்களை நம்பி ஏற்பாடுகள் செய்த எங்களை ரட்சிப்பீராக!

புரவலர் பட்டியல்படி சுமார் ஒரு லட்சம் ரூபாய் வந்திருப்பது உண்மை!
நன்கொடைப் பட்டியலோ ரூ.100 முதல் தொடங்குகிறது! அந்த வகையில் புரவலர் தொகையும் சேர்த்து மொத்த வரவு 1.5ஐத் தாண்டவில்லை! ஆனால், செலவோ அதைத் தாண்டிவிட்டது! 

எனவே, நன்கொடைப் பெயர்ப் பட்டியலுடன் தொகையை வெளியிடுவதோடு, வரவு-செலவு மொத்தத்தையும் வெளியிடும் முன்பாக பற்றாக்குறையாக வெளியிட விழாக்குழு விரும்பவில்லை. இன்னும் ஒருவாரத்தில் மொத்த வரவு-செலவையும் உறுதியாக வெளியிடுவோம். அதில் மாற்றில்லை.

விழாக்குழுவிலும் ரூ.5000தந்தோர் சிலருண்டு! ஒன்றும் தராதோரும் உண்டு! இவர்களை மட்டுமின்றி, பதிவு செய்த அனைவரையும், முன்பு சிறிது தந்தோரையும் இதுவரை தராதோரையும் இப்போது மீண்டும் உரிமையுடன் கேட்கிறோம். நன்கொடைப் பட்டியலில் உங்கள் பெயர் நல்ல தொகையுடன் இடம்பெற நீங்கள்தான் உதவவேண்டும்.
------------------------------------------------
விக்கிபீடியாவில் தொடர்ந்து எழுதிவரும்  தஞ்சைப் பதிவர் முனைவர் பா.ஜம்புலிங்கம் விழாவில் கௌரவிக்கப்படுகிறார்
-------------------------------------------------------------------------------------------------------------- 
எனவே,
என்ன செய்யலாம் என்று யோசித்த போது...
நடந்த விழா பற்றிய கருத்துக் கேட்பதற்காக நேற்று (13-10-2015) மாலை வழக்கம்போல நம் நண்பர்களின் UK -INFOTECH இல் கூடிய விழாக்குழு பின்வரும் ஆலோசனைகளை முன்வைக்கிறது -

இந்தப் பற்றாக்குறையை ஈடுகட்ட
(1)  கையேட்டுக்காகப் பதிவுசெய்த அனைவரும் பணம்அனுப்பி, புத்தகம் வாங்கிக்கொண்டால் சரியாகிவிடும் என்பது முதல் யோசனை

ஒரு பிரதி ரூ.150 எனினும் ரூ.250 அனுப்பினால் எங்கள் செலவில் இரண்டுபிரதிகளை அனுப்பி வைக்கிறோம்.ரூ.500எனில் 4பிரதிகள்.

(2)   ரூ.1,000 அனுப்புவோர், விரும்பினால், அவர்களது நண்பர்கள் 4பேருக்கு இரண்டிரண்டாகவோ, 8 பேருக்குத் தனித்தனியாகவோ முகவரி தந்தால் எங்கள் செலவில் நாங்களே அந்த முகவரிகளுக்கு அனுப்பிவைப்போம். கவனிக்க - ரூ.1000 அனுப்புவோர்க்கு மட்டுமெ இப்படிப் பிரித்தனுப்பும் பணியைச் செய்ய முடியும். அதற்குக் குறைவாக அனுப்பினால் ஒரே முகவரிக்குத்தான் அனுப்ப முடியும். எப்படியும் தமிழ்நாடு தாண்டும் முகவரிகளுக்கு அஞ்சல்செலவை ஏற்கவேண்டும்.

(3)   வெளிநாடுகளில் வசிப்போர் விரும்பினால், விமானம் (அ) கப்பலில் அனுப்பும் செலவையும் ஏற்போர்க்கு, கேட்கும் பிரதிகளை அனுப்பலாம். அல்லது அவர்தம் நண்பர்களின் தமிழக முகவரிக்கு அனுப்ப மேற்காணும் தொகையை மட்டும் அனுப்பினால் போதுமானது (வெளிநாட்டுக்கு நூல்களை அனுப்பும் நண்பர்கள் எளிய வழி என்னவென்று தெரிவித்தால் அதன்படி செய்வோம்)
நான்குபக்க வண்ண அட்டைகளுடன்
உயர்ந்த தாளில் அச்சிடப்பட்ட கையேடு
331 தமிழ்-வலைப்பதிவர் விவரம் - 144 பக்கம்
(க்யூ ஆர் கோடுடன்)

----------------------------------------------------------------- 
நண்பர்கள் உதவ வேண்டுகிறேன்...
 இப்படியான நூல் விற்பனையில் ஒரு 30,000 ரூபாய் வந்தால் இந்தக் குறையும் –அதாவது பற்றாக்குறையும் – இல்லாமல் போகும்.

குமுதம் வார இதழ் ஒருபிரதி கூட விற்காமல் போனாலும் வாராவாரம் ஓர் இதழுக்கு 5ரூபாய் லாபம் என எங்கோ படித்தேன். அவ்வளவு விளம்பர வருமானமாம்! (அப்படியெனில் விற்கும் 6லட்சம் பிரதிகளுக்கு எவ்வளவு லாபம்? கணக்குப் பார்த்துக்கோங்க..) ஆனால், நமக்கோ கையேட்டுக்கு அவ்வளவாக விளம்பரமும் கிடைக்கவில்லை.

எனவே, நண்பர்கள் தமது நண்பர்களுக்குப் பிரதிகளை அனுப்புவதற்கும் விழாக்குழுவுக்குச் செய்யும் உதவியாகவும் கையேட்டை வாங்கி உதவ வேண்டுமென்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி, வணக்கம்.

வழக்கம் போல வங்கிக் கணக்கு விவரம் –

“வலைப்பதிவர் திருவிழா-2015” நிகழ்விற்கென, தனியே ஒரு வங்கிக் கணக்குத் தொடங்கப்பட்டுள்ளது. அந்த விவரம் வருமாறு :-

NAME - MUTHU BASKARAN N 
SB A/c Number - 35154810782
CIF No. - 80731458645
BANK NAME - STATE BANK OF INDIA, 
PUDUKKOTTAI TOWN BRANCH 
BRANCH CODE - 16320
IFSC - SBIN0016320
---------------------------------------------------------------- 

இதில் STATE   BANK   OF   INDIA வங்கி தவிர மற்ற வங்கிகளில் பணம் போட்டால், இந்த வங்கியில் ரூ.50, 100 என்று பிடித்தம் வேறு செய்து எடுத்துவிடும் வங்கி நடைமுறை நண்பர்களுக்குப் புரிய வேண்டும்

பணத்தை வங்கியில் செலுத்திவிட்டால் எனது செல்பேசிக்கு குறுஞ்செய்தி வந்துவிடும். ஆனால் யார் பணம் அனுப்பியது எனும் விவரத்தையும், கையேட்டுப் பிரதிகளை அனுப்ப வேண்டிய நண்பர்கள் முகவரிகளையும் மின்னஞ்சலில் உடன் தெரிவிக்க வேண்டுகிறேன்.

ஆக.. நம்ம கணக்கு வழக்கும் நட்பும் உறவும் இன்னமும் தொடருது!

ஆமா..எதிலயும் கொஞ்சமாச்சும் பாக்கி வைச்சாத்தான் நட்போ உறவோ தொடரும்னு சொல்றாங்களே... அது இதுதானோ?
------------------------------------
பி.கு. இதுதான் குறையா அய்யா..என்போர் ஆறுதலுக்காக விழாவில் என்னால் நேர்நத இரண்டு தவறுகளைச் சொல்லிவிடுகிறேன் -

(1) நடுவர்களுக்காகத் தயாரிக்கப்பட்ட கேடயத்தில் அய்யா திரு செல்லப்பா யாகசாமி அவர்களின் கேடயமும், திரு முனைவர் மு.பழனியப்பன் அவர்களின் கேடயமும் விட்டுப்போனது. கடைசி நேரத்தில் தடுமாறி, அவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டேன். அவர்களின் பெருந்தன்மையான பண்பால் நெகிழ்ந்தும் போனோம்.
(பின்னர் தயாரித்து விட்டோம், விரைவில் தந்தனுப்புவோம்)

(2)அவ்வளவு வேலைகளை இழுத்துப்போட்டுச் செய்த சகோதரி மு.கீதா நன்றியுரையைப் பெரிதாகத் தயாரித்து வைத்திருந்தும் 5மணியைத் தாண்டிவிட்டதால் சுருக்கமாகச் சொல்லும்படி நான் சொன்னதால் அவர்கள் மட்டுமின்றி வேறுசில பதிவர்களும் வருந்தியது உண்மை. (சகோதரி சரியாகவே புரிந்துகொண்டாலும் எனக்கு உறுத்துகிறது)
--------------------------------------------------------
அப்புறம்... முன்னர் நானிட்ட இப்படத்தைச் சிலர் ரசித்தார்கள்.
இப்போதைய எங்கள் நிலைமைக்கும் ஏற்றதாக இருப்பதால் மீண்டும்...

8 கருத்துகள்:

  1. நமது நண்பர்கள் இதை புரிந்து கொண்டு சரி செய்வார்கள் கவிஞரே கவலை வேண்டாம்
    தமிழ் மணம் 1

    பதிலளிநீக்கு
  2. வலைப் பதிவர் கையேடு வாங்கிறேன் . வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. ஏகப்பட்ட குறும்பு.....நாசுக்கு.......உங்கள் கவலை...எங்களுக்கும்....எல்லாம் சரியாகும்...விடுங்கள்...எவ்வளவோ பார்த்துட்டோம்...படம் பார்த்தேன்...கதை தெரியவில்லை....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதையா? அது நம் கதைதானே செல்வா! (விளக்கம் நேரில் மட்டுமே தரப்படும்)

      நீக்கு
  4. உண்மைதான் அண்ணா...பதிவு செய்தவர்களுக்காக தயாரிக்கப்பட்ட உணவு வீணானது.கைப்பை ,கையேடு எல்லாம் தேங்கி நிற்கிறது...வர இயலாது என்பதை தெரிவித்து இருந்தால்...நாம் அதற்கு தகுந்த படி குறைத்திருக்கலாம்..நிறைவான விழா என்பதில் மகிழ்வே...பற்றாக்குறை கணக்கை வெளியிட விருப்பமில்லை ..விரைவில் சரியாகி விடுமென நம்புகின்றேன்...இது போல் அடுத்த வருட விழாவில் பதிவு செய்தவர்கள் வர இயலவில்லையெனில் முன்பே கூறிவிட்டால்....விழா ஏற்பாடு செய்வோருக்கு வசதியாக இருக்கும் ....ல அண்ணா..

    பதிலளிநீக்கு
  5. ஏதாவது குறை இருக்கவேண்டும் என்பதற்காக இப்பற்றாக்குறை போலுள்ளது. நன்கொடை அதிகமாக வரும் என எண்ணியிருந்தேன். தங்களின் இப்பதிவு மூலமாகத்தான் உண்மை நிலை உணர்ந்தேன். ஒவ்வொரு வலைப்பதிவரும் குறைந்த அளவு ஒரு தொகையைச் செலுத்தவேண்டும் என நிர்ணயித்திருந்தால் இது தவிர்க்கப்பட்டிருக்கலாமோ என எண்ணத்தோன்றுகிறது. தங்கள் இப்பதிவைப் பார்த்தவுடன் நானும் ஒரு நன்கொடையாளர் ஆகிவிட்டேன். அதிகமாக நன்கொடை வந்திருக்கும் என்ற எனது தவறான கணிப்புக்காக வருந்துகிறேன். தாங்கள் கூறுவதுபோல நடக்கும் ஒவ்வொன்றும் பாடம்தான்.

    பதிலளிநீக்கு