படிப்பாளியா? சிந்தனையாளரா?



புகழ்பெற்ற தெனாலிராமனின் 
“திலகாட்ட மகிடபந்தனம்“ கதை. 

தெரியாதவர்கள் மட்டும் படிக்கலாம்
மற்றவர்கள் கடைசிப் பத்திக்குப் போய்விடலாம்.

ஒரு பெரும் படிப்பாளி நாடு நாடாகப் போனான்.
‘’நான் படிக்காத புத்தகமில்லை. என்னோடு வாதம் செய்து ஜெயிக்க யாருண்டு?” – சவால் விட்டான், 
விஜய நகரத்துக்கும் போனான்.        
ராஜா கிருஷ்ண தேவராயர் தெனாலிராமனைத் தேர்ந்தெடுத்தார் நீதான் அவனோடு வாதம் செய்து ஜெயிக்க வேண்டும்என்றார்.

 அடுத்தநாள் 
அவை கூடியது.
 
ராஜாவும் பெரிய பெரிய அறிஞர்களும் சூழ்ந்திருந்தனர்.
 
அந்தப் பக்கம் படிப்பாளி’ 
அருகில் ஏராளமான புத்தக மூட்டைகள்,
 
இந்தப்பக்கம் தெனாலிராமன் ,
அருகில் ஒரே ஒரு பெரிய புத்தகம்!

 
அந்தப் பெரிய அளவில் ஒரு புத்தகத்தை 
படிப்பாளிஅதுவரை பார்த்ததில்லை. 
சந்தேகம் வந்தது. நாம் இதுவரை படிக்காத புத்தகமாக
இருக்கிறதே!யோசித்தபின் கேட்டான். 
அது என்ன புத்தகம்?” 
தெனாலி சொன்னான், திலகாட்ட மகிட பந்தனம்
இதிலிருந்துதான் நான் கேள்விகளைக் கேட்கப்
போகிறேன். இப்போது படிப்பாளி பரபரப்பானான்.
இது என்னடாது, வம்பாப் போச்சு
இப்படி ஒரு புத்தகத்தை இதுவரை நாம் கேள்விப்பட்டதும் இல்லையே! எல்லா நாடும் சுற்றி ஏராளமான மொழி கற்று வந்த நமக்கு இன்று என்ன சோதனை?’ இருந்தாலும் சொன்னான்.
திலகாட்ட மகிட பந்நதனம் தானே! ஹஹ்ஹா! நான் படித்திருக்கிறேன்,ஆனால் இன்றைக்கு எடுத்து வரவில்லை, நாம் நாளை சந்திப்போம்” என்றான். 

அவ்வளவுதான் -அன்றிரவே சொல்லிக்கொள்ளாமல்; போய்ச் சேர்ந்தான் அந்த உலகப்புகழ் படிப்பாளி!
 
ராஜா கிருஷ்ண தேவராயருக்கு சந்தோசம்.
தனது நாட்டின் மானம் காப்பாற்றப் பட்டதற்கு நன்றிகூறி,
தெனாலிராமனுக்குப் பரிசுகளும் தந்தார். 
பிறகு, ஆவலை அடக்க முடியாமல் கேட்டார்.  
அந்தப் புத்தகத்தைக் கொடு” 
பெரும் படிப்பாளிக்கே தண்ணி காட்டிய புத்தகமல்லவா?” திறந்து பார்த்தார்.
 
புத்தகத்தைச் சுற்றிக் கட்டியிருந்த மணிக்கயிற்றை அவிழ்த்தால், அது புத்தகமே அல்ல!! புத்தகம் போல செய்யப்பட்ட ஒரு மரப்பெட்டி அது!!! 
அதோடு ஒரு மாடுகட்டும் கயிறு,
கொஞ்சம் எள்ளு, சில காய்ந்த குச்சிகள்! ஆவ்வளவுதான் உள்ளே இருந்த பொருள்கள்!!
என்ன இது?” என்பது போலத் தெனாலியைப் பார்த்தார்.
தெனாலி சொன்னான்:
திலகம்(எள்), காட்டம்(விறகு), மகிடபந்தனம்(எருமை கட்டும் கயிறு). அறிவாளியை அறிவால் எதிர்த்துத் தோற்றுப்போனாலும் பிழையில்லை. ஆனால் உண்மையான அறிவாளி அடுத்தவரின் அறிவை மதிப்பவனாகவே இருப்பான் வெறும் படிப்பால் கர்வமிக்க படிப்பாளியை அவனது அறியாமை கொண்டே தோற்கடித்துவிடலாம்... நாம வெற்றிபெறாமலே அவனைத் தோற்கடிக்க முடியும் என்று நான் நம்பினேன்.. 
இதுதான் நடந்தது.“                          
  ----------------------------
ஏற்கெனவே இந்தியா முழுவதும் புழங்கிவரும் மார்க்கண்டேயன் கதையின் தெலுங்கு, தமிழ்வடிவம்தான் இந்தத் தெனாலிராமன் கதை.

படிப்பு – மனப்பாட சக்தி போதும், சுயநலம் வளர்க்கும், பணம் தரும், உறைந்து கிடக்கும், முதல் மதிப்பெண் பெற்றால்தான் வெற்றி, வரையறை மீறாத செக்குமாட்டின் உழைப்பு தேவைப்படும்.    வாழும் காலத்தில் வாழ்க்கை இனிக்கும், அடுத்த தலைமுறை மறந்துவிடும்.
சிந்தனை சுய அறிவு தேவை, பொதுநலம் பேணும், புகழ் தரும், வளரும்- வளர்க்கும், மதிப்பெண் இரண்டாம்பட்சமே., இலக்கணத்தை - எதிர்ப்புகளை  மீறி வளரத் துணிவும் தேவை.  பெரும்பாலும் வாழும் காலத்தில் வசை மொழிகளே கிடைக்கும், வாழ்வு கசப்பாகும் அடுத்த தலைமுறை வாழ்த்தும்.  
        
இப்போது ஒரு கேள்வி,
நம்பிள்ளைகள் படிப்பாளியாக வரவேண்டுமா?
சிந்தனையாளராக வரவேண்டுமா?

'இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளியர் ஆதலும் வேறு''– குறள்-374
(அறிவாளியாக இருப்பதும் செல்வந்தராக இருப்பதும் ஒருவருக்கே வாய்ப்பதில்லை, இதுவே உலக இயற்கை)

இப்ப எனக்கொரு சந்தேகம் -
கூகுள் இமேஜில்  “தெனாலி“ என்று தேடினால், எல்லாப் படங்களிலும் தெனாலி குடுமிவைத்த பிராமணராகவே இருக்கிறாரே! இதை யார் முடிவு செய்தது?

----------------------------------------   

6 கருத்துகள்:

  1. சிந்தனைவாதியாக இருக்கவேண்டும் என்பதே என் கருத்து. சிந்தனை என்பது பக்குவப்படும் நிலையில் ஒருவரை உருவாக்கும். படிப்பு மற்றும் படிப்பாளி என்பதானது சில நிலைகளில் அதிகமாக எதிர்மறை எண்ணங்களை உருவாக்கத் துணை புரிகிறது. ஆனால் சிந்தனைவாதிக்கு அச்சூழல் எழ வாய்ப்பில்லை, எழுந்தாலும் சிந்தனைவாதியால் எச்சூழலையும் எளிதாக எதிர்கொள்ளமுடியும்.

    பதிலளிநீக்கு
  2. அண்ணா நல்ல சிந்தனைக்கு வித்திடும் கதை. ஆனால் அறிவாளிகள் பணக்காரர்களாக இருக்கமுடியாது எனும் விஷயம் இப்போ பொருந்துமா என தெரியவில்லை அண்ணா! படிப்பாளி வேண்டுமானால் பணக்காரராக வாய்ப்பு குறைவு என்று சொல்லலாம். இது பற்றி தாங்கள் உலகம் சுற்றிகொண்டிருந்தபோது ஒரு பதிவிட்டிருந்தேன். பொழுது கிடைக்கையில் படித்துபாருங்கள். இப்போ கூட சில நாட்களுக்கு முன் வருடம் ஒன்றரை கோடி சம்பளத்துக்கு கேம்பஸ் இன்டர்வ்யு வில் தேர்வான மாணவர் பற்றி விகடனிலும், இதுபோல வருடத்திற்கு ஏழு இலக்க சம்பளம் கால்லூரி இறுதி ஆண்டில் கேம்பஸில் பெற்ற மாணவர்கள் பற்றி செய்திகளிலும் கேட்கிறோமே!! என் தம்பிகூட கேட்டான் "" நீங்க தானே சொல்லி கொடுக்குறீங்க,,, உங்களுக்கு இது போல் சம்பளம் சாத்தியமா?' என்று?. அவன் என்கிட்டே படிச்ச புள்ளயா இருந்தா அந்த செய்தியே எனக்கு நிறைவை தந்துவிடும் என்றேன். சரிதானே அண்ணா:))
    ---------------------------
    நீங்கள் அந்த படத்தை போட்டிருந்த போதே நினைத்தேன். இப்போ டிஸ்னி தொலைக்காட்சி யில் தெனாலிராமன் எனும் கார்டூன் போடுகிறார்கள். அந்த படத்தை தான் நீங்கள் இங்கு போட்டிருகிரீர்கள். அந்த கார்டூன் இன்னும் மோசம். தெனாலியை எதற்கு மேல் கேவலப்படுத்த முடியாது எனும் அளவில் இருக்கும். கஸ்தூரி அதை ban செய்து விட்டதால் மகியும்,நிறையும் அதை பார்ப்பதில்லை:))

    பதிலளிநீக்கு
  3. லிங்க் கொடுக்க மறந்துவிட்டேன்:)
    http://makizhnirai.blogspot.com/2014/12/under-my-sky-2.html இது தான் அந்த பதிவு:)

    பதிலளிநீக்கு
  4. படிப்பாளியாகி நல்ல வருவாய் தரும் வேலைதேடி, தன்பெண்டு தன்பிள்ளை தானுண்டு... எனும் பாவேந்தரின் வரிகளுக்கொப்ப வெந்ததைத் தின்று விதி வந்து சாகும் வெற்றுப் பிண்டங்களாக நம் பிள்ளைகள் ஆகாமல், எதையும் ஆய்வுக்குட்படுத்திச் சிந்தித்து அதன்வழி மாற்றங்கள் தேடும் அறிவார்ந்த அடுத்த தலைமுறை வரவேண்டுமென்பதே நமது எண்ணமாகும். அதற்கு அடித்தளமாக, சிந்தனைத் தீயைத் தூண்டத்தக்கதான கல்விமுறை மாற வேண்டும்.

    பதிலளிநீக்கு
  5. அருமையான கதைப் பகிர்வு ஐயா...
    கடைசி பாரா சூப்பர்.
    சில நாட்களுக்கு முன்னர் மகாகவி பாரதிக்கு வைத்திருந்த பேனரில் பாரதியார் ஐயர் என்று போட்டிருந்தார்கள்... அவரையும் சாதி என்னும் வட்டத்துக்குள் கொண்டு வரப் பார்க்கிறார்களே என்று நினைத்தேன். இங்கு படித்தால் தெனாலி ராமனையும் குடுமியுடன் போட்டிருப்பது குறித்து தங்கள் கேள்வி... ஒரு வேளை அப்போதைக்கு அவங்கதான் அறிவாளின்னு நினைச்சிட்டாங்களோ என்னமோ... யாரு கண்டா...

    பதிலளிநீக்கு