கோவை சி.ஐ.ட்டி பொறியியல் கல்லூரியில் தமிழ்மன்றத் தொடக்கவிழா....

கல்லூரியா அது?.. மாபெரும் கல்விக்கடல்... 
ஆழம் அதிகம்.. சாதாரணக் கட்டுமரங்கள் நீண்ட தூரம் செல்ல முடியாதல்லவா? 
தமிழ்நாட்டின் தலைசிறந்த பொறியியற் கல்லூரிகளில் முன்வரிசையில் இருக்கும் கல்லூரி... தமிழ்மணம் கமழக் கமழ நடந்தது!

தமிழ்மன்றத்தின் சார்பில், அருமையான மாணவர் மலர் ஒ்னறையும் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறார்கள்... இந்தக் கல்லூரிப் பொறியியல் மாணவர்களின் தமிழார்வம் என்னை வியக்க மட்டுமல்ல மயக்கவும் வைத்தது. 

திரைப்படக் கவிஞர் நா.முத்துக் குமார்,  
பாரதி கிருஷ்ணகுமார்,  தமிழருவி மணியன் எனப் பிரபலமானவர்கள் வந்த மன்றங்களின் தொடக்கவிழாவில் இந்த வருடம் நான். 
நான் முதல்நாள் இரவே அவர்களது விருந்தினர் இல்லம் சென்று தங்கி..
காலையில் விழா நேரத்திற்குப் போனால்....
என்சிசி மாணவர்கள் தாட் பூ்ட் என்று சல்யூட் வைத்து வரவேற்றதைப் பார்த்த என் ஓட்டுநர்நண்பர் “அய்யா என்னங்கய்யா.. ஜனாதிபதிய வரவேற்கிற மாதிரி வரவேற்கிறாங்க..“ என்றதும் எனக்குமே கொஞ்சம் அச்சமாகத்தான் இருந்தது... (என்சிசி மாணவரின் கம்பீர வரவேற்பு நடையின் போது, உடன் நடக்கும் நமக்கு, “கால் தடுமாறிவிடாமல் இருக்கணும்ல” ன்னு கொஞ்சம் எச்சரிக்கையாகவே நடந்தேன்(?) கல்லூரி முதல்வரும் துறைத்தலைவர்களும் மன்றங்களின் பேராசிரிய நிர்வாகிகளும் வாசலுக்கே வந்து வரவேற்று நாகரிகம் காட்டினர்..

உள்ளே நுழைந்தால் அன்று தொடங்கப்படவுள்ள இருபது மன்றங்களின் மாணவ நிர்வாகிகளும் ஏதோ திருமணத்திற்கு வந்ததுபோல - 
மாணவர் தலைவர்கள் எல்லாம் பட்டுவேட்டி பட்டுச் சட்டை...
மாணவியர் தலைவர்கள் எல்லாம் பட்டுப் புடவை, என பயமுறுத்தினார்கள்...

நிகழ்ச்சிகளைத் தொகுத்தளித்த மாணவிகளின் நாவில் மட்டுமல்ல... தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடிய இசைமன்றச் செயலரின் நாவிலும்,  தொழில்முறை நடனம் கற்றவர்போல்  பரதநாட்டியமாடிய மாணவி சிந்துஜாவின் கால்களிலும்கூட தமிழ் நடனமாடியது!

மாணவர் தலைவரின் வரவேற்பு.. முதல்வர், துறைத்தலைவர்களின் உரைகள் டக்டக்னு அடுத்தடுத்து முடிய.. நான் பேசத் தொடங்கினேன்..

ன்பேச்சின் தொடக்கத்திலேயே எனது அச்சத்தை வெளிப்படையாக நான் சொல்ல... மாணவ-மாணவியரிடம் கலகலப்புத் தொற்றிக் கொண்டது.

அப்புறம்... 
நம் வழக்கம் போலப் பொறியியற் கல்லூரியில் சொல்லக் கூடிய தஞ்சைப் பெரியகோவில் பற்றிய செய்திகளை இங்கும் சொல்லத் தவறவில்லை.
(பார்க்க - தஞ்சைப் பெரிய கோவிலில் கட்டுமானப் பொறியியல் இல்லையா?  http://valarumkavithai.blogspot.in/2014/03/blog-post_25.html)

ஒன்றேகால் மணிநேரம் -எல்லாரையும்போல சிரிப்பான செய்திகளை மட்டுமில்லாமல், சீரியசான செய்திகளையும் அவ்வளவு மாணவர்களும் ஆர்வமாகக் கேட்டது நெஞ்சைத் தொட்டது.

கேட்கும் ஆர்வமுள்ள இடத்தில் பேச நமக்கென்ன தடை?
பேசி முடித்ததும், நிர்வாகிகள் அனைவரும் -சுமார் 100பேர்- மேடை ஏறி புகைப்படம் எடுக்கவே அரைமணி நேரமாகிப் போனது.

என்னை இந்தக் கல்லூரி மாணவர்க்கு அறிமுகப்படுத்தி வைத்த நண்பரும் தமுஎச கோவை மாவட்ட நிர்வாகிகளில் ஒருவருமான திரு பாலாஜி நிகழ்ச்சியி்ல் கலந்து கொண்டது மகிழ வைத்ததெனில்  நிகழ்ச்சியின் இறுதியில் வந்து சேர்ந்த எனது அண்ணனும் -
முத்து பாஸ்கரன் எனும் எனது இயற்பெயரைக் கல்லூரிக்காலத்தில் முத்துநிலவன் எனத் தனித் தமழியக்க வழக்கப்படி- மாற்றி வைத்த தமிழறிஞருமான செந்தலை திரு ந.கவுதமன் அவர்கள் விழா நிகழிடத்திற்கே வந்து என்னைக் காண வந்திருந்தது என்னை நெகிழ வைத்தது.. பெரியோர் என்றும் பெரியோரே...

எத்தனையோ கலை-அறிவியல் கல்லூரிகளை விட, இந்தப் பொறியியல் கல்லூரியில் தமிழுணர்வு தாராளமாக உள்ளது என்பதோடு, தொழில்நு்ட்ப அறிவையும் இவர்கள் வளர்த்துவருவது, தமிழ்நாட்டுக்கே வழிகாட்டியாகும் என்பதில் சந்தேகமே இல்லை.

அறிவியல் பார்வையில் தமிழ்கற்றவர்களின் திறன் மேன்மேலும் வளர்வதோடு, தமிழுக்கும் நல்லது செய்யும் எனும் திடமான நம்பிக்கையோடு 6மணிநேரப் பயணத்தின் பின் வீடுவந்துசேர்ந்தேன்.

மனசு அந்த இளைய தம்பிகளைச் சுற்றியே திரிந்துகொண்டிருந்தது..
தமிழ்மன்றப் பொறுப்பாளர் தம்பி சாரதியன், அதற்குள் இரண்டு முறை பேசி பத்திரமாக வந்துவிட்டேனா என்று கேட்டுக் கொண்டே இருந்த கவனம் மகிழ்ச்சியோடு நெகிழ்ச்சியும் தந்தது.... 

28 கருத்துகள்:

  1. சமூகத்தை பேணாத நுட்பியல் கேடானது. எனவே இம்மாணவர்களின் தமிழ் ஆர்வம் மகிழ்ச்சி அளிக்கிறது. பகிர்தலுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே.
      “நுட்பியல்“ - நல்ல தமிழாகவும் சுருக்கமாகவும் இருக்கிறதே நன்றி

      நீக்கு
  2. கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பார்கள். உங்களுக்கு சின்ன கவிதை மன்றம் என்றாலும், பெரிய பட்டி மண்டபம் என்றாலும் இளைஞர்கள் நிரம்பிய கோவை C.I.T போன்ற கல்லூரி வளாகம் என்றாலும் வரவேற்புதான்.

    முத்து பாஸ்கரன் என்பது தங்களின் இயற்பெயர் என்பதனை இப்பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன். மகிழ்ச்சி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கற்றோர்க்கு எனும் பிரிவில் நான் வருவேனா தெரியவில்லை.
      வாயுள்ள பிள்ளை என்று சொல்லலாம்...
      ஆம் நண்பரே, நான் பகலில் பாஸ்கரனாக எரிந்தேன், இரவில் நிலவாகத் திரிந்தேன்.. இப்போது எப்போதுமே நிலவனாக...நன்றி.

      நீக்கு
  3. பொறியியல் கல்லூரியில் தமிழ் மன்றம்/ உண்மையில் பாராட்டுக்குரியது. அவர்களுடைய தமிழார்வம் எதிர்கால தமிழ் வளார்ச்சிக்கு நிச்சயம் உதவும். வலைப் பதிவுகளில் எழுதிக் கொண்டிருக்கும் பலர் பொறியாளர்களே .
    கல்லூரிக்கும் அங்கு சிறப்புரை ஆற்றிய தங்களுக்கும் பாராட்டுக்கள் ஐயா .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் முரளி..எனக்கே மிக மகிழ்ச்சியான நெகிழ்ச்சியான நிகழ்வு. இதுபோலவே திருநெல்வேலி அருகில் -தூத்துக்குடி மாவட்டத்தில்-உள்ள கிள்ளிகுளம் என்னும் ஊ்ரில் உள்ள அரசு வேளாண் கல்லூரி முத்தமிழ்விழாவும் நினைவில் உள்ளது. பார்க்க -http://valarumkavithai.blogspot.in/2013/02/blog-post_14.html இன்றும் “உண்டால் அம்ம இவ்வுலகம்“தான்!

      நீக்கு
  4. சிறந்த பண்பாட்டை விளக்கினீர்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தக் கல்லூரி மாணவர்கள், ஏற்கெனவே நல்ல பண்பாட்டோடு இருப்பவர்கள் என்பதால் எச்சரிக்கையாகவே பேசினேன்.. பொது மேடைகளில் போடுகிற மொக்கைச் சிரிப்புகளைஎல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டுத்தான் போனேன்.. இருபக்கமும் நிறைவு..

      நீக்கு
  5. பொறியியல் கல்லூரியில் தமிழ் மன்றமா?
    வியப்பு மேலிடுகிறது ஐயா
    கல்லூரி வளாகத்தில தமிழில் பேசினால் அபராதம் வசூலிக்கும் கல்லூரிகளுக்கு மத்தியில்,
    தமிழ் மன்றம் அமைத்துத்
    தமிழ் போற்றும் கல்லூரி
    மிகுந்த பாராட்டிற்க உரியது ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் நண்பரே... அவர்கள் அழகும் ஆழமுமாக வெளியி்ட்டிருக்கும் ஆண்டுமலர்களைப் பார்க்கவேண்டுமே! கலைக்கல்லூரிகள் தோற்றன போங்கள்.. தமிழ்மணம் கமழும் பொறியியல் கல்லூரி என்பது எவ்வளவு மகிழ்வானது...!

      நீக்கு
  6. ரொம்ப காமெடியா தொடங்கி இருக்கீங்க :)
    அப்புறம் எப்டி எல்லா பேரையும் நினைவு வச்சுகிறீங்க அண்ணா!!
    விழா ரொம்ப சிறப்ப இருந்தது அண்ணா:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னையா சொல்கிறாய்...? மறந்துபோய் திருதிரு முழிக்குப் பேர்போனவன் நான்.. ஆனாலும் நம் ஈடுபாடும் நினைவில் நிற்பதும் ஒன்றுக்கொன்று தொடர்புடையன அல்லவா அதுதான்..

      நீக்கு
  7. வணக்கம்
    ஐயா.
    பதிவை பார்த்தவுடன் மகிழ்ச்சி பொங்கியது.. என்றென்றும் தங்களின் சேவைதொடரட்டும் வாழ்த்துக்கள் ஐயா
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: பேனாமுனைப்போராளி:

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கும் தமிழ் எதிலும் தமிழ்... என்பதுதானே நம் இலக்கு..
      அதிலும் கரும்புதின்னக் கூலிகொடுத்து அழைத்தார்கள்.. பிறகு?

      நீக்கு
  8. இயற்பெயர் இன்று தான் அறிந்தேன்...

    // மன நிறைவான திடமான நம்பிக்கை // வாழ்த்துக்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
  9. பொறியியல் கல்லூரியில் தமிழ் மன்றம் - கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது.
    இப்படி தமிழ் ஆர்வம் மிக்க மானவர்களும் இருக்கிறார்கள், தமிழ் படித்தால் கவுரவம் போய்விடும் என்று நினைப்பவர்களும் இருக்கிறார்கள்.

    வாழ்த்துக்கள் ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இவர்கள் இன்றைய நிலையில் சிறுபான்மையினர்தான்.
      புரட்சியோ சுதந்திரப் போரோ நடந்த எல்லா நாடுகளிலுமே, 100விழுக்காடு நடந்ததில்லை அல்லவா..?
      சிறுபான்மைதான் சிறப்பான முன்னோடியாகத் திகழும். சரியா?

      நீக்கு
  10. பொறியியல் கல்லூரியில் தமிழ் மன்றமா ? எங்கள் கல்லூரியில் தமிழ் மன்றம் ஆரம்பித்த போதும் பலர் இப்படித்தான் வியந்து கேட்டனர். நல்ல ஒரு மன்றத்தை தொடங்கி வைத்தமைக்கு வாழ்த்துகள் ஐயா ! உண்மையிலேயே தமிழக கல்லூரிகள் எல்லாவற்றிலும் தமிழ் மன்றம் ஆரம்பிக்கப்பட வேண்டும் ஐயா !

    பதிலளிநீக்கு
  11. இனிய விழா பற்றிய அருமையான பகிர்வு அண்ணா. எங்கள் கல்லூரியில் (மதுரை பாத்திமா) ஆண்டுதோறும் 'முத்தமிழ் விழா' மூன்று நாட்கள் நடக்கும். அந்த நினைவுகள் வந்துவிட்டன.. :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டு மூன்று ஆண்டுக்கு முன் பாததிமாவில் நானும் பேசினேன் அப்போது நீங்கள் இருந்திருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். (அப்ப கலந்துகொண்டு க்லக்கிய நிகழ்வுகளைப் பதிவிடலாம்ல...?)

      நீக்கு
    2. ஆமாம் அண்ணா அப்பொழுது நான் இல்லை, உங்கள் பேச்சைக் கேட்க கொடுத்துவைக்கவில்லை :(
      அப்போலாம் கலந்து கொண்டு கலக்கியது எதுவும் இல்லை அண்ணா..பள்ளியில் பேச்சுப்போட்டியில் சேருவேன், மேடையில் பாதியிலேயே படபடப்பாகி மறந்துவிடுவேன்...கட்டுரைப் போட்டி, வினா விடை என்றால் பரிசுதான்.. அதவிட்டா கோலப்போட்டி ..முதுநிலை வந்தபிறகு தான் வாய் அதிகமானது, பணியிடத்தில் செய்ய வேண்டிய பேச்சுகளினால் ரொம்பவே அதிகமாயுடுச்சு, என்ன இப்போ மேடைதான் கிடைக்க மாட்டேங்குது :)

      நீக்கு
  12. ஐயா! புகைப் படங்களையெல்லாம் பார்த்தாலே விழாவின் பிரம்மாண்டம் தெரிகிறது."தமிழ் மணம் கமழும் பொறியியல் கல்லுரி","பண்பாடான மாணவர்கள்"...படிக்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது ஐயா.இது போன்ற சூழலில் சொல்லவே வேண்டாம்...கலக்கி எடுத்திருப்பீர்கள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சுந்தர், நிறைவான விழா. நெஞ்சுக்கு நெருக்கமான நிகழ்வுகள்.. நெடுநாள் நினைவில் நிற்கும். அந்த இளைஞர்களின் கண்களில் எதிர்கால இந்தியாவின் முன்னேற்றம் ஒளிரக்கண்டேன்

      நீக்கு
  13. உங்கள் பகிர்விலேயே மிக நிறைவான விழா என்பது தெரிகிறது ஐயா...
    மாணவர்களின் தமிழ் ஆர்வம் பாராட்டுக்குரியது... அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  14. பொறியியல் கல்லூரியில் தமிழ் மன்றமா ....வியப்பு மேலிடுகிறது ஐயா.... தாங்கள் கலந்து கொண்டதால் விழா விற்கு பெருமை.

    பதிலளிநீக்கு
  15. பொறியியல் கல்லூரியிலும் தமிழ் வளர்க்கப்படுவது கேட்கும் போது இனிமையாகத்தான் இருக்கின்றது! தமிழன்னைக்குப் பிள்ளைகள் பெருகத்தான் செய்கின்றார்கள்! பிள்ளைகள் அன்னையை நலிவடையச் செய்துவிடுவார்களா என்ன? தாங்கள் அதைத் துவக்கிப் பேசி பெருமை சேர்த்துவிட்டீர்களே!! அருமை ஐயா!

    பதிலளிநீக்கு