குழந்தைகளைச் செல்லப்பெயர் வைத்துக் கொஞ்சுங்கள்!

       குழந்தைகள் அதிகம் எதிர்பார்ப்பது, பாராட்டைத்தான். தன்னை எல்லாரும் கவனிக்க வேண்டும் என்பதைத்தான். செல்லம் கொஞ்சும் இடத்தைத்தான் அந்தக் குழந்தைகள் விரும்பும். அதை அம்மாவோ அப்பாவோ செய்யும்போது அதன் செயல்பாடு அனைத்தும் அவர்களைப் பார்த்தே அமையும்.
               தினங்களைக் 
              கொண்டாடுவதை விட்டு,
               நாம் எப்போது
               குழந்தைகளைக் 
              கொண்டாடப் போகிறோம் 
                                                                     -அப்துல் ரகுமான்
     
     எனது ஆசிரியப் பணியில் நான் பார்த்துக் கற்றுக் கொண்டது ஒன்றுண்டு – அது, “எந்த ஆசிரியர் பிள்ளைகள் விரும்பும்படி நடந்துகொள்கிறாரோ, அந்த ஆசிரியரின் பாடத்தை விழுந்து விழுந்து படிப்பார்கள். ஒருவேளை அந்த ஆசிரியரைப் பிடிக்கவில்லை என்றால் அந்தப் பாடமே அவர்களுக்கு வேப்பங்காயாய் மாறிவிடும். தான் விரும்பும் ஆசிரியரின் பாராட்டைப் பெறவேண்டும் என்பதே அந்தக் குழந்தையின் பெரிய ஆசையாக மாறும், அதை ஒரு நல்ல ஆசிரியர் பயன்படுத்திக் கொள்வது அந்தக் குழந்தையின் நன்மைக்கு மிகவும் அவசியம்“ என்பதுதான் அது.
இதைப் புரிந்துகொண்ட நான், அவ்வாறு நடந்துகொள்ளத் தொடங்கியபின், அதுவரை படிக்காத -படிக்கப் பிடிக்காத- பிள்ளைகளும் விரும்பிப் படிக்கத் தொடங்கியதை என் அனுபவத்தில் கண்டேன். அதன்பின், நான் பேசிய ஆசிரியர் கூட்டங்களில் எல்லாம் இதைச் சொன்னபோது, அவ்வளவு பேரும் இதன் உளவியல் உண்மையை ஒப்புக்கொண்டார்கள். இது ஒரு சாதாரண உளவியல் உண்மைதான்.
இதே உண்மை பெற்றோருக்கும் பொருந்தும்.
குழந்தைக்கு இயல்பிலேயே –புதியவரான ஆசிரியரை விடவும்- அம்மா-அப்பா மீதான பாசம் அதிகமாகத்தான் இருக்கும். ஆனாலும், அடுத்தடுத்த குழந்தையின் புதிய வரவு “தன்மீதான பாசத்தைப் பங்குபோட அடுத்த குழந்தை வந்துவிட்டதோ?எனும் எதார்த்தமான பொறாமை எல்லாக் குழந்தைக்கும் இருக்கும். அப்படி இல்லாத படி, அடுத்த குழந்தை வயிற்றிலிருக்கும் பொதே மூத்த குழந்தையை மனத்தளவில் தயாரிக்க வேண்டிய தாய்-தந்தையர் பெரும்பாலும் அதைச் செய்வதில்லை என்பதால் இதைச் சொல்ல வேண்டியிருக்கிறது. அப்படி முன்தயாரிப்பு இருந்தால், ஒரு தொலைக்காட்சி விளம்பரத்தில் வருவது போல “புதிய உறுப்பினரே வருக“ எனும் பேனருடன் தம்பி (அ) தங்கையை மூத்தவர் வரவேற்பது சிறப்பாக இருக்கும்.
இதோடு-
தன்னைத்தான் தன் அம்மா, அப்பா, ஆசிரியர் அதிகம் நேசிக்கிறார் என்பதாக –ஒருபருவம் வரை- குழந்தையை நம்பச் செய்ய வேண்டும். அதுதான் அந்தக் குழந்தையின் பன்முக வளர்ச்சிக்கும், எதிர்கால முன்னேற்றத்திற்கும் முக்கியமாகும். சுயமாகச் சிந்திக்கும் பருவம்-வயது- வரும்வரை இதை ஒரு நடிப்பாகக் கூட தாயும் தந்தையும் ஆசிரியரும் செய்வது தவறல்ல என்றே என் அனுபவம் சொல்கிறது.
சொந்தச் சிந்தனை வந்தபிறகு, தனது துறை எது என்பதைத் தேர்வு செய்துகொண்டு அதை நோக்கிய பயணத்தை அந்தக் குழந்தை தொடங்கும்போது, அதன் ஈர்ப்புத் திசை மாறும். அப்போது, இந்த நடிப்பை விட்டு, அதற்குத் தேவையான “பயண“ உதவிகளைச் செய்வதை அவர்கள் புரிந்து கொள்வார்கள்.
அதுவரை –
அதாவது பெண்குழந்தையோ ஆண்குழந்தையோ பருவம் அடையும்வரை, இந்தப் பாசப் பிணைப்பை விட்டுவிடாமல் தொடர்ந்தால் நாம் நினைக்கும் திசையில் குழந்தையைக் கொண்டுசெல்ல நிச்சயமாக முடியும்.
இதில் ஒருவயதில் இருந்தே, முக்கியப் பங்காற்றுபவை, தொடுதல் கொஞ்சுதல், அவர்களிடம் கூடுதலாக நேரம் செலவழித்தல் முதலானவை ஆகும். இதை ஏன் பிரித்துச் சொல்கிறேன் எனில், அன்பைச் சிலபேர் வெளிக்காட்டத் தெரியாமல், “குழந்தையின் நன்மைக்காக“ என்பதை மனதில் கொண்டு, செல்லம் கொடுத்தால் கெட்டுப் போய்விடும் என்றும் கண்டிப்பாக இருந்தால்தான் நல்லது, அவர்கள் நல்லதற்குத்தானே கண்டிக்கிறோம்? என்று பழம்பஞ்சாங்கம் போல முடிவு செய்து முரட்டுத்தனமாக நடந்துகொள்வார்கள். அந்த இடம்தான் சிக்கலின் தோற்றம். அன்பான தொடுதல் ஆயிரம் சொற்களுக்குச் சமமாகும்.
அவர்களுடன் அதிக நேரம் செலவிடும்போதும், தொலைக்காட்சி, செய்தி, நட்பு வட்டத்தில் கேள்விப்பட்டது எல்லாவற்றைப் பற்றியும் அவர்களோடு பேசவேண்டும். அதுபற்றி எந்தத் தயக்கமும் இல்லாமல் விவாதிக்கும் அளவிற்குச் சுதந்திரமாக உணரவேண்டும். அதுதான் முதல் தேவை. சிலர் அவர்களிடம் பேசாமல் அவர்களின் நண்பர்களிடம், சிறுமியெனில் தோழியரிடம் பேசுவது பெற்றோர்-குழந்தை இடையே இடைவெளியை அதிகரிக்கவே உதவும். இதிலென்ன ஈகோ குழந்தையின் நன்மைக்கு எவ்வளவோ சிரமத்தை ஏற்கத் தயாராக இருக்கும் பெற்றோர் ஈகோ பார்த்து, பின்னர் தானும் வருந்தி, பிள்ளையையும் இழக்கும் நிலையை நான் பார்த்திருக்கிறேன்.
வெகு எளிதான மகிழ்ச்சியான வழி குழந்தைகளை அவர்கள் கைக்குழந்தையாக இருக்கும்போதிலிருந்து கொஞ்சிக் கொஞ்சி அவர்களிடம் அதிகமாகப் பேசுவதுதான். அதிலும், ஒவ்வொரு குழந்தைக்கும் ஏதேனும் ஒரு நல்ல செல்லப் பெயரை வைத்து, -அவர்களின் தனித்தன்மையை உணர்ந்தது போல செயலில் காட்டி- அதை அவர்கள் விரும்புகிறார்களா என்பதையும் தெரிந்துகொண்டு, இல்லையேல் அவர்களிடமே கேட்டு அவர்கள் விரும்பும் பெயரை வைத்து, அவ்வப்போது கொஞ்ச வேண்டும். அதிலும், சின்னக் குழந்தைகள் அவர்களைத் தொட்டுத் தொட்டுப் பேசுவதை மிகவும் விரும்புவார்கள் அதில் ஒரு நெருக்கத்தை உணர்வார்கள். இதில் பெற்றோருக்கு என்ன நட்டம் வரப்போகிறது  ஆனால் நிச்சயமாக லாபம் உண்டு.
குழந்தையின் நம்பிக்கையைப் பெறுவதும், அதன் பன்முகத் திறனை வளர்த்து அதிலும் சிறப்பான திறனைக் கண்டுபிடித்து, அதன்வழி வளர்ப்பதும் எளிதாக மாறும்.
ஆசிரியர், மாணவரின் கையெழுத்தைத் திருத்த எளிமையான ஒரு வழியுண்டு. மாணவரின் கையெழுத்தில் ஏதாவது ஒரு நல்ல பகுதியைக் கண்டுபிடிக்க வேண்டும். அது அழகான எழுத்தாக இருக்கலாம், வரிசை மாறாமல் எழுதுவதாக இருக்கலாம், பிழையில்லாமல் எழுதுவதாக இருக்கலாம், ஒன்றுபோல எழுதுவதாக இருக்கலாம், சொந்தமாக எழுதுவதாக இருக்கலாம், மற்றவரிடமிருந்து வித்தியாசப் படுத்தி வேறொரு கோணத்தில் எழுதியதாக இருக்கலாம், தலைப்புத் தந்து எழுதுவதாக இருக்கலாம், நோட்ஸ் இல்லாமல் தானாக முயன்று எழுதியதாக இருக்கலாம், இவற்றில் ஏதும் இல்லாவிடினும் உரிய காலத்தில் எழுதியதாக இருக்கலாம். இவற்றில் ஏதாவது ஒன்று இருந்தாலும் போதும் அதையே ஆசிரியர் குறிப்பிட்டுப் பாராட்டி “நன்று“ என்றெஎழுதி ஒப்பமிட்டால் போதும், வெற்றியைத் தொடலாம். கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி நன்று மிகநன்று மிகமிக நன்று என்று தொடர்ந்து, அதன்பின் இல்லாதவற்றைச் சுட்டிக்காட்டி இருப்பதைப் பாராட்டி எழுதிவிட்டால் ஆசிரியரின் அன்பைப் பெற அந்தக்குழந்தை எதையும் செய்யத் தயாராகிவிடும். அந்தப் பிடிப்பைப் படிப்பாக மாற்றத் தெரிந்த ஆசிரியர் மந்திர ஜாலம் நடத்தலாம்.  
இதே முறைதான் பெற்றோருக்கும்.
குழந்தையிடம் இருக்கும் ஏதாவது ஒரு நல்ல குணத்தைப் பாராட்டிப் பாராட்டி விடவேண்டிய குணத்தை விட வைக்கலாம். அதற்கு முதலில் பாராட்டுவதும், அதற்கு அது விரும்பம் செல்லப் பெயரை வைத்துக் கொஞ்சுவதும் மிகமிக அவசியம்.

நீண்ட பெயர்களைச் சுருக்குவது ஒன்று. விஜயகுமாரை விஜி என்றாக்கலாம். இல்லை பொதுவாகப் பெண்குழந்தைகளை அம்மு, குட்டி எனவும், ஆண்குழந்தை என்றால் ராஜா, சுட்டி என்றும் அழைக்கும் வழக்கம் நம்மிடம் உண்டு. இதையன்றி அவர்கள் விரும்பும் பெயர்களைச் சொல்லி அழைத்து, அவ்வாறே கொஞ்சலாம்.
குழந்தைகளைக் கொஞ்சுவது, தேவதைகளோடு பேசுவதாகும். அதற்குப் பெற்றோரும் குழந்தையாக மாறவேண்டும். அந்த உலகத்தில் நமக்கு அப்போதுதான் அனுமதி கிடைக்கும். கிடைத்துவிட்டால் சொர்க்கம் என்பது அதுதான்.
பெற்றோர்கள், வீட்டில் இருக்கும் ஆசிரியர்கள்!
ஆசிரியர்கள், பள்ளியில் இருக்கும் பெற்றோர்கள்!
இப்படி அமைந்துவிட்டால் அந்தக் குழந்தை 
எதிர்காலத்தை எளிதாக வெல்லும். 
---------------------------------------- 
படத்திற்கு நன்றி - கூகுளார் வழி -http://subhaananthi.blogspot.in/ 
மற்றும் முகநூல் - https://ta-in.facebook.com/Ilovemymothermorethananyoneintheworld 

32 கருத்துகள்:

  1. ஆழமான அருமையான இன்றைய
    இயந்திரச் சூழலில் சுயம் அறியாது திரியும்
    பெற்றோருக்கு தெளிவூட்டிப்போகும்
    அற்புதமான பதிவு
    ஆசிரியர் பெற்றோர் ஒப்பீடு
    மிகக் குறிப்பாக முடித்தவிதம் மிக மிக அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அய்யா உளவியலறிந்த தங்களின் வாழ்த்தால் மகிழ்ந்தேன். எனது சமீபததிய கவலை மூன்று. ஒன்று நம் நாட்டைச் சீரழிக்கும் சாதி, இரண்டாவது அதில் அதிகம் பாதிக்கப்படும் பெண்கள், மூன்றாவதாகவும் ஆபத்தாகவும் படுவது குழந்தைகளி்ன் எதிர்காலம். எனவேதான் எழுதினாலும், பேசினாலும் என்னையறியாமல் இவை என்னைத் தூண்டிவிடுகின்றன அய்யா. வருகைக்கு நன்றி அய்யா.

      நீக்கு
  2. அய்யா,
    வணக்கம். இவ்வளவு இலகுவாக அதே நேரம் செறிவாக மொழியைப் பயன்படுத்துகின்றமை குறித்து வியக்கிறேன். பிள்ளை இல்லாதவர் அடையக்கூடிய “புத்“ எனும் நரகத்திலிருந்து தாய்தந்தையைக் காப்பாற்றுவதால் புத்திரர் எனப்படுவதாய் வடமொழி கூறும். ஆனால், புத்திரர்க்குத் தாய்தந்தையர் சொர்க்கத்தைக் காட்டும் வழிமுறை குறித்துக் காட்டிற்று உங்கள் பதிவு.
    “மக்கள் மெய்தீண்டல் உடற்கின்பம்“ எனும் குறளில் மக்களது உடலைத் தீண்டுவது தாய்தந்தையருக்குத்தான் இன்பம் விளைவிக்கும் என்பதாய்ப் படித்திருக்கிறேன்.
    ““சின்னக் குழந்தைகள் அவர்களைத் தொட்டுத் தொட்டுப் பேசுவதை மிகவும் விரும்புவார்கள் அதில் ஒரு நெருக்கத்தை உணர்வார்கள்.““
    என்ற தங்கள் கருத்தைப் பார்த்தபோது மக்கள் மெய் தீண்டலால் இன்பம் மக்களுக்கா, பெற்றோருக்கா, அல்லது இருவருக்குமேயா எனப் பொருள் விரித்து ஆயத் தோன்றுகிறது.
    வரவரப் பின்னூட்டங்களை ரொம்ப நீட்டுகிறேனோ எனத் தோன்றுகிறது அய்யா!
    பொறுக்க!
    நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி விஜூ. மக்கள் மெய்தீண்டலின் இன்பம் இருவருக்குமே என்பதுதான் என் கருத்து. தங்களின் ஒப்பீடுகளில் புதிய செய்திகள் கிடைப்பதால் நீளம் பற்றிக் கவலைப்படாதீர்கள். என் பதிவுகளிலும், பதிவுகளை விடவும் பின்னூட்டப் பதில்களில் அதிக வேலை கிடைக்கிறது எனக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும் உள்ளது. எனவே எழுதுங்கள் நண்பரே.

      நீக்கு
  3. ஐயா! அருமையான பதிவு.! குழந்தைகளைச் செல்லப் பெயர் வைத்து அழைக்கும்போது,'தான்' மதிக்கப்படுவதாக உணர்கிறார்கள்.உற்சாகமடைகிறார்கள்.உற்சாகமாக இருக்கும் குழந்தைகள் தானே உயர்ந்த நிலையை அடைவார்கள்..தங்களின் அனுபவத்தில் விளைந்த அற்புதமான பதிவு..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சுந்தர் என்ன ஆச்சு புதிய பதிவு எதையும் காணோம். எதையாவது எழுதிக்கொண்டே இருக்கணுமய்யா. விரைவில் எதிர்பார்க்கிறேன்.

      நீக்கு
  4. // பெற்றோர்கள், வீட்டில் இருக்கும் ஆசிரியர்கள்!
    ஆசிரியர்கள், பள்ளியில் இருக்கும் பெற்றோர்கள்! // மிகச்சரி..
    நல்லதொரு கருத்தைக் கொண்டு அமைந்த அருமையான பதிவு ஐயா. ஒவ்வொரு பெற்றோரும் ஆசிரியரும் அறிந்துகொள்ள வேண்டியது.
    நன்றி..முகநூலில் பகிர்ந்து கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது பற்றி நான் ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். பாண்டிராஜின் பசங்க படம் பற்றிப் பேசியபோது அவர் மிகவும் விரும்பிப் பாராட்டிய வரிகள் அவை. ஆனால் அதற்கும் முன்பிருந்தே நான் சொல்லிவருகிறேன். முகநூல் பகிர்வுக்கும் நன்றி மா.

      நீக்கு
  5. தமிழ்மணம் ஓட்டுப் பட்டை இல்லையே ஐயா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுதான் எனக்கும் புரியவில்லை மா... இப்படிச் சொல்லாமல் கொள்ளாமல் காணாமல் போனால் என்ன செய்வது? (முரளி அய்யாதான் சொல்லவேண்டும்)

      நீக்கு
  6. சொன்னது அனைத்தும் உண்மை தான் ஐயா...

    கட்டிப்பிடி வைத்தியம் என்றும் தேவை...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் வலைச்சித்தரே, கமல் இதை ஜனரஞ்சகமாகச் சொல்லிவிட்டார். அவர் கலைஞானி என்பது உண்மைதானே?

      நீக்கு
  7. மிக நீண்ட
    அனுபவங்களின் தொகுப்பு
    மீண்டும் மீண்டும் படிக்க வேண்டிய பதிவு ...
    நன்றி
    http://www.malartharu.org/2014/06/time-management-part-one.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி மது. எல்லாம் நம் வகுப்புப் பிள்ளைகளிடம் பெற்ற அனுபவங்களின் பின்னூட்டம்தான். மாணவர்களிடம் தானே அதிகமாகக் கற்றுக்கொள்ள முடிகிறது. என்ன.. நான் கற்றுமுடிப்பதற்குள் ஓய்வு பெற்றுவிட்டேன்.. எனக்குக் கற்றுத் தந்த என் மாணவர்கள் எல்லாம் இப்போது ஒவ்வொருவராக வந்து எழுத வைக்கிறார்கள்.. கற்போம், எழுதுவோம். நன்றி

      நீக்கு
  8. வணக்கம் ஐயா
    ஆழமான உளவியல் கருத்துகளை எளிமையான நடையில் சொல்லி விட்டீர்கள். இரண்டு அல்லது மூன்று குழந்தைகளிடம் கொஞ்சி விளையாடி விட்டால் நம்மை அவர்களை விட்டு நகர விட மாட்டார்கள். நாம் அவர்களை விட்டு பிரிந்தால் அழுது இருக்க வைப்பார்கள். பள்ளிக் குழந்தைகள் நம்மை ஓய்வாக இருக்க விட மாட்டார்கள். ஆங்கில ஆசிரியர் வரல நீங்க வாங்க ஐயானு ஒரே அடம் பண்ணி வகுப்புக்கு அழைத்துச் சென்று விடுவார்கள். சுமாராக படிக்கும் மாணவர்களைக் கூட தட்டிக் கொடுத்து நல்லா படிக்கனும் என்று சொல்லி விட்டால் போதும் அடுத்த நாள் அதைப் படிச்சுட்டேன் இதைப் படிச்சுட்டேனு ஒப்புவிக்கிறேன், எழுதிக் காட்டுறேனு நம்மைச் சுற்றி வருவார்கள். அன்பு குழந்தைகளின் மனதில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் அவர்களின் உள்ளார்ந்த சக்தியைப் பாராட்டு தட்டி எழுப்பிக் கொண்டு வந்து விடும். ஆம் ஐயா குழந்தைகளைக் கொஞ்சுவது, தேவதைகளோடு பேசுவதாகும். சிறப்பான உளவியல் சிந்தனை. பகிர்வுக்கு நன்றிகள் ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'குழந்தைகளைக் கொஞ்சுவது, தேவதைகளோடு பேசுவதாகும்" ஆமாம் பாண்டியன். விக்ரம் நடித்த “தெய்வமகள்“ படத்தில் இறுதிக் க்ட்ட வழக்குமன்றத் தீர்ப்பை, அந்த இருவரின் மௌன மொழிப் பரிமாற்றம் மாற்றிப்போட்டதை நான் மிகவும் ரசித்தேன். மிக உயர்ந்த உளவியல் அடிப்படையில் அமைந்த காட்சி. பல நேரம் அறிவுபூர்வமாக சிந்திப்பதை விடவும் இதயபூர்வமான உணர்வுகளே நம்மைக் கொண்டுசெலுத்தும் இ்ல்லையா? அதுதான் என் பதிவின் மையம். நன்றி.

      நீக்கு
  9. """“எந்த ஆசிரியர் பிள்ளைகள் விரும்பும்படி நடந்துகொள்கிறாரோ, அந்த ஆசிரியரின் பாடத்தை விழுந்து விழுந்து படிப்பார்கள். ஒருவேளை அந்த ஆசிரியரைப் பிடிக்கவில்லை என்றால் அந்தப் பாடமே அவர்களுக்கு வேப்பங்காயாய் மாறிவிடும்."""""" இது பாலர் பள்ளியில் இருந்து பட்டப்படிப்பு வரை பொருந்தக்கூடிய உண்மை ஐயா!! குழந்தைகளுக்கு அளிக்கப்படும் ஊக்கம் அவர்களது தேடலை விரிவுபடுத்தக்கூடியது என்பதும் உண்மை ஐயா!! அருமையான பதிவு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “குழந்தைகளுக்கு அளிக்கப்படும் ஊக்கம் அவர்களது தேடலை விரிவுபடுத்தக்கூடியது” - சரியாகச் சொன்னீர்கள் நண்பா. நன்றி

      நீக்கு
  10. "பெற்றோர்கள், வீட்டில் இருக்கும் ஆசிரியர்கள்!
    ஆசிரியர்கள், பள்ளியில் இருக்கும் பெற்றோர்கள்!
    இப்படி அமைந்துவிட்டால் அந்தக் குழந்தை
    எதிர்காலத்தை எளிதாக வெல்லும்." என்ற
    உண்மையை எல்லோரும் ஏற்றிடுவோம்!

    பதிலளிநீக்கு
  11. பெரிய பொண்ணு பேரு பூரி பிரியங்கா, சின்னப் பொண்ணுக்கு லட்டும்மா, பையனுக்கு சின்ன பட்டு. இப்படித்தான் எங்க வீட்டில் பசங்களுக்கு செல்லப் பேரு. அதுங்க, எனக்கும் செல்லப் பேரு வச்சு கூப்பிடுதுங்க.

    பையனுக்குதான் கையெழுத்து சரிவரல. பத்தாவது வகுபுக்கும் வந்துட்டான். ஆனா, கையெழுத்து மட்டும் மாறல. என்னப் பண்றதுன்னும் புரில. இதே கையெழுத்து தொடர்ந்தால் பப்ளிக் எக்சாமில் எப்படியும் 50மார்க் குறைஞ்சுடும். எதாவது வழி சொல்லுங்க!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “அதுங்க, எனக்கும் செல்லப் பேரு வச்சு கூப்பிடுதுங்க“ - ஆகா நாம் விரும்புவதைவிட விரும்பப்படுவது பேரின்பமல்லவா சகோதரீ பையனோடு சும்மா பேச்சுவாக்கில் அவனுக்குப் பிடிதத நண்பர், உறவினர்களின் பெயர், பிடித்த தின்பண்டம் மற்றும் பொருள்களின் பெயர்களைக் கேட்டு அதை நீங்கள் தனி ஒரு நோட்டில் எழுதிக்காட்டி அவனை எழுதச் சொல்லுஙகள். அடுத்து, தமிழச்செய்தித்தாளில் அவனுக்குப் பிடித்த (திரைப்படம், குற்றச் செய்திகள் தவிர்ந்த) தலைப்புச் செய்திகளை நீங்கள் சொல்லச் சொல்ல எழுத வையுங்கள். தொலைக்காட்சியில் ஓடும் தமிழ்ச் செய்திகளில் Flash Newsகளைக் கவனித்து சரியாக எழுதினால் ஒரு பேனா வாங்கிக் கொடுங்கள். (சும்மா கொடுப்பதைவிட அவன் பெற்ற பரிசுக்கு ஈர்ப்பு அதிகம்) தரமான திரைப்படப் பாடல் வரிகளைக் கூட எழுத வைக்கலாம். எல்லா்வற்றிலும் அவனுக்குப் பிடித்ததாக இருப்பது முக்கியம். பிறகு பாடங்களுக்கு வரலாம்.

      நீக்கு
  12. ஐயா,

    குழந்தைகள் பற்றிய உளவியலை மிக அழகான, எளிமையான வார்த்தைகளினால் அருமையாக விளக்கியுள்ளீர்கள்.

    குழந்தைகளுடன் நாம் செலவிடும் ஆக்கபூர்வமான நேரங்களின் அளவே அவ்ர்களின் வளமான எதிர்காலத்தை நிச்சயிக்கும்.

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    எனது முதல் சிறுகதை : முற்பகல் செய்யின்...

    http://saamaaniyan.blogspot.fr/2014/06/blog-post.html

    தங்களின் கருத்தினை அறிய மிக ஆவலாக உள்ளேன் ஐயா. நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “குழந்தைகளுடன் நாம் செலவிடும் ஆக்கபூர்வமான நேரங்களின் அளவே அவ்ர்களின் வளமான எதிர்காலத்தை நிச்சயிக்கும்“ உண்மை உண்மை! சாமானியரே! அவசியம் படித்து எழுதுவேன்.

      நீக்கு
  13. உண்மையான வரிகள் சார்..பணம் நோக்கி ஓடும் பெற்றோர்கள்..விரட்டும் அலுவலக வேலையும் வீட்டு வேலையும் இதில் எங்கே பெற்றோர்களுக்கு குழந்தையைக் கொண்டாட நேரமிருக்கிறது ....சார்!பல வார்த்தைகள் தரும் உணர்வை அன்பான ஒரு தொடுதல் உணர்த்திவிடும் ...நல்ல பதிவு நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  14. உண்மையை, உள்ளபடி உண்மையானபடி எழுதியிருக்கிறீர்கள் ஐயா. இன்றைய வாழ்வில் பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் உள்ள இடைவெளி கூடிக்கொண்டே போகிறது வருந்ததக்க விசயமே...

    பதிலளிநீக்கு
  15. உளவியல் நோக்கில் அமைந்துள்ள சிறப்பான பதிவு. தங்களின் அனுபவங்கள் எங்களுக்கு மிகவும் பயனுடையதாக இருக்கின்றன. குழந்தைகளுடன் பழகவேண்டிய மற்றும் அணுக வேண்டிய முறை தாங்கள் கூறியவாறு அமைந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும். செல்லப் பெயரில் குழந்தைகளை அழைக்கும்போது நமக்கும் அக்குழந்தைக்கும் கிடைக்கும் சுகம் அலாதியானது. அதை நான் உணர்ந்துள்ளேன். ஒவ்வொரு பெற்றோரும் படிக்கவேண்டிய பதிவு. பணத்தைத் தேடி அன்பைத் தொலைத்துக்கொண்டிருக்கும் பெற்றோர்கள் அவசியம் படிக்கவேண்டும். நன்றி.

    பதிலளிநீக்கு
  16. உண்மைதான் நான் என் மாணவர்கள் வழியாகவும் என் குழந்தைகள் அவர்களின் ஆசிரியரைப் பற்றிச் சொல்லும் போதும் உணர்ந்துள்ளேன்....எங்கள் பள்ளி ஆசிரியர்களிடம் இதைப் பகிர்ந்து கொண்டேன்...வாழ்க....வணக்கம்

    பதிலளிநீக்கு
  17. யதார்த்தமான உளவியற் கட்டுரை. வழக்கம் போல அருமை. ஆசியராக இருப்பதனால் குழந்தைகளின் நெருக்கம் அதிகம். எனவே சுலபமாக எழுதி விடீர்கள் போல. அனால் குழந்தைகள் புரிந்து கொள்ள நாம் இன்னொரு ஜென்மம் எடுக்கவேண்டும். அடுத்த ஜென்மத்திலும் ஆசிரியாராக பிறக்கவும் அந்த குழந்தைகளுக்கு நான் பாடம் சொல்லிகொடுக்கவும் வேண்டுமா? ஜென்மமே வேண்டாம் என்பதே அனைவரின் நம்பிக்கை. உங்களுக்கு மறு ஜென்மத்தில் நம்பிக்கை இல்லை என்பது எனக்கு தெரியும். ஆனால் எனக்கு உண்டே? இந்த கட்டுரை எனக்கு ரொம்ப பிடிக்கிறது. ரொம்ப நல்ல கட்டுரை. வாழ்த்துக்கள் தோழரே.

    பதிலளிநீக்கு
  18. எட்டாம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு, "கட்டுரைப் பகுதி" தலைப்பு “தேசிய ஒருமைப்பாடு”. பாடப்பகுதியில் இருந்தவற்றுடன் சொந்தமாகவும், பாரதியின் வரிகளை மேற்கோள் காட்டியும் எழுதிய என் தேர்வுத்தாளில் "மிக மிக நன்று" என்று எழுதியது என்னை "மேற்கோள்" காட்டி எழுதத் தூண்டியது. அதற்காகவே பாரதியின் கவிதைகளை விரும்பிப் படிக்கவும் வைத்தது.

    ழ, ல, ள வேறுபாட்டினை 9 ஆம் வகுப்பில் கரும்பலகையில் படம்வரைந்து விளக்கமளித்தது இன்றும் லகர, ளகர வேறுபாடு உணர்ந்து உச்சரிக்க முடிகிறது.

    10 ஆம் வகுப்பு இலக்கணத்திற்கு என்று தனியாக 10 (அ) மற்றும் 10 (ஆ) பிரிவு மாணவர்களை இணைத்து வகுப்பில் எடுத்த சார்பெழுத்துகள் பகுதியும், எட்டுத்தொகை நூல்கள் பகுதியும் இன்றும் பசுமையாய் நினைவில் உள்ளது.

    "நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
    ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
    கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று
    இத்திறத்த எட்டுத் தொகை" – வெண்பா

    "உயிர்மெய் ஆய்தம் உயிரள பொற்றள
    ப ஃகிய இஉ ஐஔ மஃகான்
    தனிநிலை பத்தும் சார்பெழுத் தாகும்" - நன்னூல்

    தந்தை என்றாலும், மனதார பள்ளிப் பருவத்தில் எனக்கு புடிச்ச சாரு!!! எங்க தமிழ் அய்யா தான்

    பதிலளிநீக்கு
  19. அண்ணா ஏதோ நானே எழுதி படிக்கிறேனோ என்ற எண்ணம் தோன்றியது.இது குறித்து அவள் விகடனுக்கு நான் எழுதிய கடிதம் ஒன்று பாராட்டப்பட்டது,(அப்போ சுட்டி விகடன் இல்லை) நான் என் எல்லா மாணவர்களுக்கு எப்படி ஒரு ஸ்பெஷல் பெயர் கொடுத்து தான் அழைப்பேன், நிறையை பெப்பி என்றும் மகியை மாக்கி என்றும் அழைப்பேன், சிலர் சொல்வார்கள் நியுமராலஜி பார்த்து வைத்த பெயர் சுருக்கினால் பலன் இராது என்று,ஹ்ம்ம்.
    அப்புறம் என் வகுப்பு மாணவர்கள் நோட்டுக்களில் குட் போடமாட்டேன் அதற்கு பதில் லாலிபாப், கோன் ஐஸ் போன்ற குட்டி கார்ட்டூன்கள் வரைந்து கையெழுத்திடுவேன். அதற்கே மாணவர்கள் போட்டிபோடுவார்கள்:)) வேறு என்ன சொல்ல அண்ணன் வழி தங்கை:)

    பதிலளிநீக்கு
  20. அருமை அருமை அவசியமான பதிவும் கூட கூட நன்றி வாழத்துக்கள் ....!

    பதிலளிநீக்கு