வறுமையும் வளமையும் பரம்பரைச் சொத்து - இசைப்பாடல்


பண்டைப் புகழும் பாரம்பரியப்
     பண்புகள் மிக்கதும் இந்நாடே அற்பச்
சண்டையில் எங்கள் அண்டை வீட்டவர்
    மண்டை உடைவதும் இந்நாடே!           (1

எல்லா வகையிலும் வல்லோர் எங்களை
    ஏளனம் செய்வதும் இந்நாடே! வெறும்
செல்லாக் காசென மனிதப் பண்புகள்
    சிரிப்பாய்ச் சிரிப்பதும் இந்நாடே!            (2

வற்றா நதிகளும் வண்டல் பூமியும்
   வளம் கொழிப்பதும் இந்நாடே! தினம்
பற்றாக் குறைகளும் பட்டினிச் சாவும்
   பரம்பரை யாவதும் இந்நாடே!                (3


வேலைப் பளுவால் மாதச் சம்பளர்
    வெந்து கிடப்பதும் இந்நாடே! பட்ட
நூலைப் பிடித்தவர் வேலைக் கலைந்துயிர்
    நொந்து கிடப்பதும் இந்நாடே!              (4


அங்கே வெள்ளமும் இங்கே வறட்சியும்
    அவதிப் படுவதும் இந்நாடே! தினம்
கங்கா காவிரித் திட்டம் பற்றிய
    காலட்சேபமும் இந்நாடே!                     (5

விடுதலைப் போரில் வேற்றுமைக் கெதிராய்
    வீரம் தெறித்ததும் இந்நாடே! - இன்று
அடுதலும் கெடுதலும் ஆண்டவராலே
    ஆல்போல் தழைப்பதும் இந்நாடே!         (6

புத்தன் ஏசு காந்திய வழியார்
    போதனை செய்வதும் இந்நாடே! மத
ரத்தக் களறியும் சாதிக் கொடுமையும்
     நித்தம் நடப்பதும் இந்நாடே!                 (7

இகம்பர சுகம்பெற எண்ணற்ற முனிவர்
    எழுந்தருள் செய்ததும் இந்நாடே! தினம்
திகம்பர முனிபோல் எங்கள் குழந்தைகள்
    தெருவில் அலைவதும் இந்நாடே!         (8

சீற்றம் கொண்டவர் அவசரமாகச்
    சிதறிப் போவதும் இந்நாடே! ஒருகை
சோற்றுக் காகவே ஓட்டும் போடுகிற
    சுதந்திர நாடும் இந்நாடே!                         (9

சுதந்திரம் வந்ததும் சொர்க்கம் வருமென
    சொல்லித் திரிந்ததும் இந்நாடே! அட்டத்
தரித்திரம் எங்கள் சரித்திர வாழ்வில்
    நரித்தனம் செய்வதும் இந்நாடே!             (10

தலைவர்கள் எளிமையைக் கட்டிக் காக்கவே
    செலவுகள் செய்வதும் இந்நாடே - இந்த
நிலைமை உணர்ந்தே கூணர் நிமிர்ந்தே
    நெருப்பு விழிப்பதும் இந்நாடே!               (11

எந்தையும் தாயும் வறுமையில் வாடி
    இறந்து கிடந்ததும் இந்நாடே! அவர்
சந்ததி இன்று சங்கம் அமைத்தொரு
    சமர் தொடங்குவதும் இந்நாடே!
    சமர் தொடங்கியதும் இந்நாடே!              (12

(பாரதி மன்னிக்க... அவனது வரிகளை மாற்றியதற்காக)
---------------------------------------------------------------------------------------  
(எனது “புதிய மரபுகள்“ கவிதைத்தொகுப்பிலிருந்து...
எந்தையும் தாயும் – எனும் இசைப்பாடல்.

இந்தப் பாடலை நான் எழுதி இருபதாண்டுகளுக்கும் மேலாகிறது. இதை இன்று எழுதியது போல எண்ணி எனது வலைப்பூவில் எடுத்து வெளியிடுவதில் உண்மையில் நான் வெட்கப்படுகிறேன் ஆனால்என்ன செய்ய?
இந்த நூறாண்டுக்கு முன் பாரதி பாடியதையும்,
இருபது நூற்றாண்டுக்கு முன்வள்ளுவன் எழுதியதையும்
பெருமைபொங்க எடுத்தெடுத்துப் பேசும் நாம்,
கவிகளின் குரலைச் செயற்படுத்தாமல் அவர்களைப் பாராட்டுவது உண்மையில் அவர்களை இழிவுசெய்வதேஎன்று எப்போது புரிந்துகொள்வோம்1990களின் பிற்பகுதியில், ‘செம்மலர்’-இலக்கிய இதழில் வெளிவந்த இப்பாடலுக்கு இசைவடிவம் தந்து, தமது கம்பீரக்குரலால் பாடியதோடு, அடுத்து வெளிவந்த தனது “கரிசல் கிருஷ்ணசாமியின் பாடல்கள்குறுவட்டில் வெளியிட்டு தமிழகம் முழுவதும் கொண்டு சேர்த்த மக்கள்கலைஞன் நெல்லை கரிசல்குயில்கிருஷ்ணசாமிக்கு என்நன்றி.)
------------------------------------------- 

7 கருத்துகள்:

  1. மாற்றப்பட்ட வரிகளும் அருமை ஐயா... செயற்படுத்துதல் மிகவும் முக்கியம்... பாடலின் இசைவடிவம் (mp3) உள்ளதா ஐயா...? அதையும் பதிவில் ஏற்றி விடலாம்...

    பதிலளிநீக்கு
  2. வறுமையும் வளமையும் பரம்பரைச் சொத்து-நிதர்சனமான வரிகள். நெஞ்சில் நின்றன.

    பதிலளிநீக்கு
  3. // இருபது நூற்றாண்டுக்கு முன்வள்ளுவன் எழுதியதையும்
    ‘பெருமை’ பொங்க எடுத்தெடுத்துப் பேசும் நாம்,
    ‘கவிகளின் குரலைச் செயற்படுத்தாமல் அவர்களைப் பாராட்டுவது உண்மையில் அவர்களை இழிவுசெய்வதே’ // உண்மைதான் ஐயா!!!!
    இருபதாண்டுகளுக்கும் மேலானாலும் இன்றைய நிலை போலவே உள்ளதே!! வருத்தம்தான்!!!

    பதிலளிநீக்கு
  4. அருமையான பாடல்! பகிர்வுக்கு நன்றி! அன்று படிக்க வாய்ப்பில்லை! இன்று மீண்டும் வெளியிட்டமையால் என்னை போன்றவர்கள் படித்திட ஒரு வாய்ப்பு கிட்டியது! இதில் தவறேதும் இல்லை ஐயா!

    பதிலளிநீக்கு
  5. அண்ணா, என்னவென்று சொல்வது!
    கண்ணில் நீர் வந்துவிடும்போல கருத்தும்,
    படிக்கும்போதே அமரும் மெட்டும்!
    நச்சு நச்சுனு வார்த்தைகளும்!
    இனியும் நாம்மெல்லாம் கவிதை எழுதலாமாகுது மனசாட்சி!
    அட்டகாசம், அட்டகாசம்!! AWESOME !!

    பதிலளிநீக்கு
  6. "பண்டைப் புகழும் பாரம்பரியப்
    பண்புகள் மிக்கதும் இந்நாடே – அற்பச்
    சண்டையில் எங்கள் அண்டை வீட்டவர்
    மண்டை உடைவதும் இந்நாடே!" என்ற
    அடிகளைக் கொஞ்சம் மாற்றி
    "பண்டைப் புகழும் பாரம்பரியப்
    பண்புகள் மிக்கோரும் தமிழரே – அற்பச்
    சண்டையில் எங்கள் அண்டை வீட்டவர்
    மண்டை உடைவதும் தமிழரிடையே!" என்றைரைத்தால்
    "ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
    ஒற்றுமை நீங்கில் தாழ்வு" என்று
    நம்மாளுகள் படிக்கலாம்

    பதிலளிநீக்கு
  7. from: Murugesh Mu haiku.mumu@gmail.com
    to: "நா.முத்துநிலவன்"
    date: 13 February 2014 12:47
    அரசு ஊழியர் சங்கக் கட்டடத்தில்
    ‘கரிசல்’கிருஷ்ணசாமி பாட,
    கலங்கிய கண்களோடு
    உட்கார்ந்திருந்த அனைவரின் முகமும்
    என் மனக் கண்களில்
    இந்தப் பாடலைப் படிக்கையில்
    வந்துபோகிறது...தோழரே.
    ( கைக்குட்டையெடுத்து
    கண்ணீர்த் துடைத்த
    தோழர் கந்தர்வனின் முகம் மட்டும்
    கூடுதலாய் குளோசப்பில்.)
    -மு.மு

    பதிலளிநீக்கு