ஒவ்வொரு வீடும் ஒரு 'குறும்பட' அரங்காக வேண்டும்!


ஆலங்குடியில் இன்றுகாலை முதல் 2நாள்கள் நடக்கும் குறும்பட-ஆவணப் படவிழாவை, தொடங்கி வைக்க  வரும்படிக் கவிஞர் நீலா அழைத்திருந்தார். இரண்டு முழுநாளும் உட்கார்ந்து எல்லாப் படங்களையும் பார்க்க ஆசையிருந்தும் என்வேலைகளுக்கிடையில் அது முடியாமல் மதியமே திரும்பிவிட்டேன். ஆனாலும் 3படங்கள் பார்த்துவிட்டுத்தான் வந்தேன்.
அதில் இரண்டு படம் ஏற்கெனவே  பார்த்ததுதான் 1.நெய்ப்பந்தம் (தமிழ்) 2.IMPOSSIBLE DREAM  (அனிமேஷன் ஆங்கிலக் கார்ட்டூன்) 3.இந்தி டப்பிங் “கேமரா“

“நெய்ப்பந்தம் குறும்படம் பற்றி நண்பர்களுக்குச் சொல்லியே ஆக வேண்டும்
இயக்குநர் எங்கள் ஊர் புதுக்கோட்டை!  அஜீத்தின் இன்றைய “ஆரம்பம்“ திரைப்படம் எல்லாருக்கும் தெரியும். ஆனால், ஆரம்பத்தில் ரொம்பப் பேருக்குத் தெரியாமல் இருந்தபோதே எடுத்த “ராசி“ படத்தின் இயக்குநர் நண்பர் முரளிஅப்பாஸ். (இப்ப ஒரு படத்தில் வில்லனா நடிக்கிறாராம்ல!) அவரது அருமையான குறும்படம்.
இந்திய விடுதலைப் போராட்டக்கால வீரர்களை இப்போதைய இளைஞர்க்குத் தெரிந்திருக்காது! சுதந்திர தினத்தன்று ஏதாவது தொலைக்காட்சியில் வந்து ஏதாவது பேட்டி கொடுத்தால், “பெரிசு அறுவை தாங்கலடா“ என்று சொல்வதும், அடுத்தடுத்த அலைவரிசை ஒன்றில் ஏதாவது சினிமாக்காரர்கள் அளந்துவிட்டுக் கொண்டிருப்பதை உட்கார்ந்து பார்ப்பதை நாமே கூடப் பார்த்திருப்போம்
அப்படிப்பட்டவர்கள் பார்க்க வேண்டிய அருமையான படம்! 18நிமிடம்தான்!
இணைப்பில் யூ-ட்யூப்பில் பார்க்கலாம் –

பார்த்து விட்டீர்களா? இதுபோலும் குறும்படங்களைப் பார்ப்பதும், பார்க்கத் தூண்டுவதும்தான் நமது நாட்டைச் சினிமாக் காரர்களிடமிருந்து மீட்கும் ஒரே வழி!
மற்றெல்லா நாடுகளும்
வரைபடத்தில் இருக்கின்றன,
தமிழ்நாடு மட்டும்
திரைப்படத்தில் இருக்கிறதுஎன்று நெல்லைஜெயந்தா சரியாகத்தான் சொன்னார்.
அடுத்த தலைவரைத் திரைப்படத்தில் தேடுவதும், ஆபாசத்தை விடவும் ஆபத்தான மூடநம்பிக்கையில் ஆழ்ந்து கிடப்பதுமான நமது தமிழ்த் திரைப்படங்களிடமிருந்து நம்முடைய குழந்தைகளைக் காப்பாற்ற ஒரேவழி குறும்படத்தை விட்டால் வேறேது? ஒவ்வொரு வீடும் குறும்பட அரங்காகி, குறைந்த்து 100 குறும்படம்-ஆவணப் படங் களையாவது சேர்க்கவேண்டும். இருளைப்பற்றி எடுத்தெடுத்துப் பேசுவதை விடவும் ஒரு மெழுகுவத்தி ஏற்றுவதுதானே சிறந்தது!
      இதைச் சொல்லித்தான் விழாவை நான் ஆரம்பித்து வைத்தேன்.
      தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் ஆலங்குடிக் கிளை சார்பான ஏற்பாடுகளை, மாநிலத் துணைத்தலைவர் கவிஞர் ஆர்.நீலா, கிளைத்தலைவர் கவிஞர் சுபி, செயலர் எல்.வடிவேலு, மாவட்ட நிர்வாகி கவிஞர்.சு.மதியழகன், ஏனைய நிர்வாகிகள் எஸ.ஏ.கருப்பபையா, வெள்ளைச்சாமி உள்ளிட்டோர் சிறப்பாகச் செய்திருந்தனர்.
      தமுஎகச-வின் மாநிலத் திரைப்படக்குழு ஒருங்கிணைப்பாளர் திருவண்ணாமலை கவிஞர் கருணா, திரைப்பட நடிகரும் சென்னைக் கலைக்குழுக் கலைஞருமான ராமு, புதுக்கோட்டை திரைப்படக் கழக்க் கவிஞர் எஸ.இளங்கோ, கறம்பக்குடி ஸ்டாலின் சரவணன், புதுக்கோட்டை சிவாமேகலைவன் உள்ளிட்ட தமுஎகசவினருடன் கல்லூரி மாணவர்கள் பெண்கள் உள்பட 125பேர் வந்திருந்தனர்.
----------------------------------------------- 

5 கருத்துகள்:

  1. //“மற்றெல்லா நாடுகளும்
    வரைபடத்தில் இருக்கின்றன,
    தமிழ்நாடு மட்டும்
    திரைப்படத்தில் இருக்கிறது”//
    சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்.
    தொலைக் காட்சியையும் சேர்த்துக் கொண்டால்
    மேலும் முழுமையடையும் என்று எண்ணுகின்றேன்.

    பதிலளிநீக்கு
  2. நல்ல நிகழ்வு ...
    நல்ல குறும்படங்களை அறிமுகம் செய்ததற்கு நன்றி..
    அப்புறம்
    ஆலங்குடி திரைப்பட இயக்கத்திற்கும் வாழ்த்துக்கள் (கவிஞர் நீலாவிற்கு ஒரு ஸ்பெசல் வாழ்த்து)

    பதிலளிநீக்கு
  3. ஐயாவிற்கு வணக்கம்
    தங்களது பல்வேறு பணிகளுக்கிடையே நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வது தங்களது சுறுசுறுப்பைக் காட்டுகிறது.விழாவில் தங்கள் பேச்சு மிகச் சரியானது தான். சினிமாக்காரர்கள் நிஜ கதாநாயகர்கள் இல்லையென்பதை புரிந்து கொள்ளத் தவறுவதே அடுத்த தலைவரை அங்கே தேடுவதன் காரணம் என்று நினைக்கிறேன்.இணையத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய நிறைய குறும்படஙகள் இருக்கின்றன. அதில் நல்லவற்றைத் தேர்ந்தெடுத்து பார்க்கும் போது நமது அறிவு விரிவடைவதும், சிந்தனை தூண்டி விடுவதும் அதன் சிறப்பு. இணைப்பிற்கும் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  4. முரளி அப்பாஸ் அண்ணா என் அப்பாவின் நண்பர் .
    நாம் ஊர் ஆட்களின் அருமையை நான் தான் பரப்பவேண்டும் .
    விரைவில் அவருக்கு பெரிய அங்கிகாரம் கிடைக்க வேண்டும் .
    வழக்கம் போல சுவையான ,பயனுள்ள பதிவு அண்ணா .

    பதிலளிநீக்கு