9,11ஆம் வகுப்புகள் தேவையில்லை?

எங்கள் தாத்தா அவருடைய பெருமைகளைச் சொல்லும்போது "அந்தக் காலத்தில் அவன் என் கூடப்படிச்சவன்'டா, அப்பவே ரெண்டாம் வகுப்பிலிருந்து 'டபுள்ப்ரமோஷன்' வாங்கி நேரா நாலாம் வகுப்புக்குப் போனவன். அதுமட்டுமில்ல, மூணு வருச ‘பி.ஏ.,டிகிரி’ய ஒரே வருசத்துல முடிச்சு 'ஹானர்ஸ்' வாங்குனவன்" என்று சொல்வார்.
இனிக்கவேண்டிய  கல்வி  கசப்பது ஏன்?
              அதுபற்றி ஆச்சரியமாக இருந்தாலும், வேறு ஒன்றும் கேட்டுக்கொண்டதில்லை. ஆனால். இப்போது நமது, நண்பர்களின் பிள்ளைகள் --9,11 ஆம் வகுப்புகளில் படிப்பதாக நாம்சொல்லும் குழந்தைகள்-- அந்த வகுப்புப் பாடங்களையே படிக்காமல் அப்படியே 10,12 வகுப்புப்பாடங்களை இரண்டுவருடம் படிப்பதைப் பார்த்ததும் எனக்குத் தாத்தாவின் நினைவுதான் வந்ததது! இந்த 'டபுள் ப்ரமோஷன்' ஏன்? இது நமது குழந்தைகளுக்குச் சரியானதுதானா?

              
தமிழ்நாட்டின் பெரும்பாலான மெட்ரிக்பள்ளிகளிலும், பலதனியார் / சில அரசுப்பள்ளி களிலும்கூட 9 மற்றும் 11ஆம் வகுப்புகளை  நடத்தும் வழக்கமே இல்லை!
                எட்டாம் வகுப்பு ஆண்டுத்தேர்வில் வெற்றி பெற்றமாணவ-மாணவியர்க்கு, 9ஆம் வகுப்பில் சேர்ந்தவுடனேயே, 10ஆம் வகுப்புப் பாடப்புத்தகங்களும் சேர்த்துத் தரப்படுகின்றன. தரப்படுவது என்ன,'மெட்ரிக் குலேஷன்' பள்ளிகளில்-ஆங்கில வழியில் -படிக்கும் மாணவர்கள் 9,10ஆம் வகுப்புப் பாடநூல்கள் இரண்டையும் ஒரே நேரத்தில் வாங்கிவிட வேண்டும்! ('மெட்ரிக்குலேஷன்' பள்ளிகளில்தான் வெளியில் புத்தகங்களை வாங்க முடியாதே!) அப்படி வாங்கிய 9ஆம் வகுப்புப் பாடப் புத்தகங்கள் சில, ஒரு சில வாரங்களே நடத்தப்படும்! 'பெருந்தன்மை'யான சில பள்ளிகளில் காலாண்டு வரை நடப்பதுண்டு! அதற்கு மேல் நிச்சயமாக 10ஆம் வகுப்புப் பாடங்கள் துவங்கி விடும்! அதிலிருந்து அந்த மாணவர்கள் 10ஆம்வகுப்புப் பாடங்களையே இருமுறை -அதாவது சுமார் 1 3/4 ஆண்டுகளும் (இரண்டுவருடமும்) படிக்கிறார்கள்!
                இதே கதை(கதி)தான் 11ஆம்வகுப்பு (+1) மாணவ-மாணவிகளுக்கும்!  இதில் கூத்து என்னவென்றால், மெட்ரிக்குலேஷன் பள்ளிகளைப் போலவே  பெரும்பான்மையான அரசு மேல்நிலைப்பள்ளிகளில் -11ஆம் வகுப்பின் அரையாண்டுத் தேர்வுக்குப் பிறகு 12ஆம் வகுப்புப் பாடங்களைத் தொடங்கிவிடுவது இப்போதெல்லாம் சர்வ சாதாரணமாகிவிட்டது என்பதுதான்!  
                இப்படி --ஒன்பதாம் வகுப்பு மாணவர், 10ஆம் வகுப்புப் பாடத்தையே இரண்டுவருடமும், 11ஆம் வகுப்பு மாணவர், 12ஆம் வகுப்புப் பாடத்தையே இரண்டுவருடமும்-- ஒரேபுத்தகத்தை 'உருப்போட்ட' மாணவர்கள், தொழிற்கல்வி நுழைவுத் தேர்வுகளில் 'உருப்படாத' மதிப்பெண் எடுத்த ரகசியமும் இதுதான்! நல்ல வேளையாக நுழைவுத்தேர்வுகளைத் அரசு நிறுத்திவிட்டது. என்றாலும், இந்த 'டபுள் புரமோஷன்' மட்டும் நுழைவுத்தேர்வுக்கு முன்னும் பின்னுமாக இன்னும் தொடரவே செய்கிறது!
               அந்தந்த வயதிற்கேற்றவாறு இருக்கக் கூடிய உளவியல் -சொல்லாற்றல்- பொதுகவனிப்புத் தன்மைக்கும் ஏற்பத்தான் பாடங்கள் தயாரிக்கப்படுவதாகக் கல்வியாளர்கள் சொல்கிறார்கள். இது உண்மைதான் எனில், இந்த வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு -ஒரே தாண்டாகத் தாண்டி- அடுத்த வகுப்புக்கு மாணவர்களைக் 'கடத்தி' கொண்டு போவது ஏன்?
               இப்படியான பள்ளிகளில், மாணவர்கள் மனப்பாட எந்திரமாக மாற்றப்படுவதன்றி வேறு வழியென்ன? பாடமும் புரியாமல், மனப்பாடமும் செய்ய முடியாமல் மாணவர்கள் படும் அவதியும், 'முடியாத'மாணவர்கள் கடுமையான தண்டனைக்கு ஆளாவதும் பள்ளிக் கூடத்தையே வெறுப்பதும், வாழ்க்கையே வெறுத்துப் போவதுமான நிலைமை தொடர் கதையாவதும் இப்படித்தானே! எப்படியாவது மதிப்பெண் வாங்கும் எந்திரமாக மாணவர்களை ஆக்கிவிடும் அவசரம்தானே இது?
              9 மற்றும் 11 ஆம் வகுப்பு பாடங்களை நடத்தாத பள்ளிகளை, பள்ளிக் கல்வித்துறை கண்டறிந்து, அந்தப் பள்ளிகள் அந்தப் பாடப் புத்தகங்களை முழுவதும் நடத்தி, ஆண்டுத் தேர்வுக்குப் பிறகே அடுத்த வகுப்புப் பாடங்களைத் தொடங்க வேண்டும் என்பதை அறிவுறுத்த வேண்டும்.
அதுவரை,மொழிப்பாடங்களில் செய்யுள்-உரைநடை-இலக்கணம், மொழிப்பயிற்சி மற்றும் கட்டுரை ஆகிய அனைத்தையும் ஒரே தேர்வில் எழுதிவந்தமாணவர்க்கு,9ஆம்வகுப்பில்தான்இரண்டு தேர்வுத்தாள்களாகப் பிரிக்கப் படுகிறது. தமிழ் முதல்தாள், இரண்டாம் தாள் என்பது போலவே, ஆங்கிலத்திலும் 9ஆம் வகுப்பிலிருந்துதான் இரண்டு தேர்வுகள் வைக்கப்படுகின்றன. அப்போதுதான் மொழிப்பயிற்சி சற்று மேம்படும் என்பதே இதன் நோக்கம்.
             14 வயதில் -அதாவது ஒன்பதாம் வகுப்பில்- இந்த மொழிப்பயிற்சி விரிவாகத் தொடங்கப் படுவதற்கு அந்தவயதிற்கான கல்வி உளவியலே முக்கியமான காரணமென்பது கல்வியாளர் கருத்து.
             இப்படி, முறையே 9,11 வகுப்பில் 10,12ஆம் வகுப்புப் பாடங்களை நடத்திக் கொண்டிருக்கும் ஆசிரியர்கள் அதையே தமது 'பாடக் குறிப்பேடு'களில் (Notes of Lesson) எழுத முடியாது!  அப்போதுதான், 'பூனை வெளியே வந்துவிடுமே?' இந்த நிலையை மாற்றி, முறைப்படுத்துவதன் மூலமாக ஆசிரியர்கள் அந்தந்த வாரமும் மாணவர்களுக்கு நடத்துவது ஒன்று, ஏடுகளில் எழுதிவைப்பது ஒன்று என்னும் 'ஏமாற்று' வேலைக்கும் இடந்தரவேண்டியதில்லையே?
            இதோடு, மொழிப்பாடங்களில் அந்தந்த வயதிற்குரிய மொழிப்பயிற்சிகள் மீறப்படும் போது, அல்லது விடப்படும்போது, அதன் தொடர்ச்சி எவ்வாறு மாணவர்களுக்குக் கிடைக்கும்? மொழிப்பயிற்சி முழுமையாகமலே எப்படி அந்த மாணவர்கள் 10, 12 ஆம் வகுப்புத் தேர்வை எழுதமுடியும்?                              
           கணிதப்பாடத்திலும், அறிவியல், வரலாற்றுப் பாடங்களிலும் முந்திய வகுப்பின் தொடர்ச்சியாகப் பல பாடங்கள் வருகின்றன. 9,11 ஆம் வகுப்புப் பாட நூல்களையே பார்க்காத மாணவர்களால் எப்படி அவற்றை உள்வாங்கிக் கொள்ளமுடியும்? எந்திரகதியாக 'உருப்' போடுவதன்றி வேறுவழியென்ன?
           ஆனால், கல்வியாளர் கருத்தையும், மாணவர் நலனையும் பற்றிக் கவலைப் படாதவர் கள்தான் இந்தப் புதியவகையிலான 'டபுள் ப்ரமோஷனை' நடத்துகிறார்கள். இவர்களின் இந்தச் செயல் சரிதான் எனில், 9,11 ஆம் வகுப்பையே கல்வித்துறையினர் எடுத்துவிடலாமே?
          அப்படிஎடுத்துவிடலாமெனில், இப்போது நடைமுறையில் இருக்கும் 15 வயதுக்குப் பதிலாக, 14 வயதிலேயே பள்ளி இறுதித்தேர்வை (SSLC) எழுதச் சொல்லிவிடலாமே? அதேபோல 17 வயதுக்குப் பதிலாக 16வயதிலேயே மேல்நிலைத் தேர்வை (+2) எழுதச்சொல்லிவிடலாமே? (இல்லை இல்லை தவறாகச் சொல்லிவிட்டேன், 14வயதில் SSLC, அடுத்த வருடமே+2, 16வயதில் கல்லூரிக்கே போய்விடலாம்!பிறகு 18 வயதில் இளங்கலை(BA), 20 வயதில் முதுகலை (MA) முடித்துவிடலாம்... வாழ்க்கையிலேயே இரண்டு வயதை 'மிச்சம்'பிடிக்கலாம்ங்கோ...!)
          மாணவர்கள் 9,11ஆம் வகுப்புகளை இழப்பதன்மூலம் அந்தந்த  வருட அமைதியை இழக்கிறார்கள். 'அடுத்த வருடம்தான் அரசுத்தேர்வு' எனும் நினைவு தரும் மனஅமைதி முதலில் போய்விடுகிறது. முதலில் 10ஆம் வகுப்பு அரசுத்தேர்வுக்கு ஒன்பதாம் வகுப்பிலிருந்தும், பிறகு 12ஆம்வகுப்பு அரசுத்தேர்வுக்கு 11ஆம் வகுப்பிலிருந்தும் -ஒவ்வோராண்டுக்காலம்- முன்தயாரிப்பு எனும் நிதானம் மலையேறி 2+2 ஆக 4 ஆண்டுகளுமே பரபரப்புத்தான்! எதையுமே பரபரப்பாகச் செய்தால், அதன் ஆழ அகலப் பரிமாணங்கள் தெரியாமலேபோகும் என்பது எல்லா விஷயங் களுக்குமே பொருந்தும்தானே? 'அவசரத்தில் அண்டாப் பானையில்கூட கை நுழையாது'தானே?
          அந்த மாணவ -மாணவிகளைப்  பார்த்திருக்கிறீர்களா? உண்மையிலேயே நன்றாகப் படிக்க வேண்டும் என்று நினைக்கிற மாணவர்கள்தான் அதிகமாகச் சிரமப்படுகிறார்கள்! (இந்தத் தத்துவத்தை அறிந்த சிலர்தான், 'பாடமே இது பொய்யடா-வெறும் 'மார்க்' கடைத்த பையடா' என்று 'வேறு'வழிகளில் பயிற்சிபெறுகிறார்கள்!)  'நன்மாணாக்கர்'களோ பாவம் -பரிதாபமாக அதிகாலை 4-1/2மணிக்கே எழுந்து, 5-6கணக்கு, 6-7இயற்பியல்,  7-8வேதியல். பிறகு 9-5 பள்ளிக்கூடம். பிறகு 5-1/2 மணிக்கு வீட்டுக்கு வந்தவுடன் உடை மாற்றிக்கொண்டே ஒருவாய் காப்பியை வாயில் ஊற்றிக்கொண்டே பரபரப்பார்கள்! மீண்டும்,-"மாலை முழுதும் விளை யாட்டு"என்றெழுதிய பாரதியை மனசாரத் திட்டிக்கொண்டே 6-7தாவரவியல், 7-8விலங்கியல் என்று சென்றிடுவார் எட்டுத்திக்கும்! அப்படி ('ட்யூஷன்') சென்றால்தானே (மதிப்பெண்) செல்வங்கள்யாவும் கொணர்ந்திங்கு சேர்க்க முடியும்?
           "இந்தப் பரபரப்பான உலகத்தில் எல்லாம் சகஜமப்பா!" என்று எதிலும் ஒட்டாதவர்களாக - கண் அங்கேயிங்கே பாவாமல், குதிரைக்கு ஒரு கண்பட்டையைப் பூட்டி விடுவார்களே அதுமாதிரி -உலக நியாய, அநியாயங்களைக் கண்டுகொள்ளாமல், இப்படி, 'தானுண்டு, தன்‘ட்யூஷன்’உண்டு' என்று, அப்போதே அவர்களுக்கு பிரச்சினைகளிலிருந்து 'அந்நியமாதல்-ஞானம்' வந்துவிடாதா என்ன?
            இது நம் தமிழகஅரசு பள்ளிக்கல்வித்துறைக்குத் தெரிந்தோ தெரியாமலோ  நடக்கிறது. நிச்சயமாகத் தெரிந்து-அனுமதியுடன் நடக்கவாய்ப்பில்லை. ஆனால், நடப்பது நிச்சயம் ! ஊரறிந்த ரகசியம்! இப்படி நடப்பது சரியா, சரியில்லையா எனும் விவாதத்திற்கே இடமில்லை.
           இதுதொடர்வது சரிதானா? என்பதுதான் இப்போது  கேள்வி.
           அதிகமில்லை கனவான்களே! ''அந்தந்த ஆண்டு மாணவர்க்கு, அந்தந்த ஆண்டுக்குரிய பாடங்களில் மட்டுமே தேர்வு நடத்தப் படவேண்டும். இதைமீறி, ஓராண்டு நடத்த வேண்டிய பாடங்களை 3மாதம், 6மாதத்தில் நடத்துவதாகத் தெரிந்தாலோ, அடுத்த வகுப்புக்குரிய பாடங்களை முந்திய ஆண்டிலேயே நடத்தினாலோ, அந்தக் கல்வி நிறுவனங்கள் மீது தமிழக அரசு - பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை மேற்கொள்ளும்'' எனும் சுற்றறிக்கையை இயக்குநர் அலுவலகத்திலிருந்து

அனுப்பிக் கண்காணித்தாலே போதுமானது.
         --------------------------------------------------------------------------------------- 

10 கருத்துகள்:

  1. அண்ணா மார்க்கு எடுக்கவேண்டும் என முட்டிமுட்டி படிக்கிற பிள்ளைகள் ஒரு பக்கம் ,படிப்பை விட விளையாட்டு ,ஓவியம் ,கவிதை என கலக்குகிற பிள்ளைக பாடு இருக்கே பத்தாவது பரீட்சை முடியிறவரை "இதுக்கொண்ணும் கொறச்சல் இல்ல முதலில் படி"என்றே தாழ்வுமனப்பன்மையை ஏற்படுத்திவிடும் சமூகத்தில் இலக்கியத்தில் நோபல் பரிசையும் ,ஒலிம்பிக்கில் தங்கத்தையும் எப்படி எதிர்பார்க்க முடியும்.என்னை போல் முட்டாள்கள் போன்சாய் போல் வளர்க்கப்படும் குழந்தைகளுக்காக
    வருந்தியும் பயன் என்ன?

    பதிலளிநீக்கு
  2. மாணவர் நலனில் அக்கறை உள்ள அருமையான பதிவு... வாழ்த்துக்கள்...

    //இதுதொடர்வது சரிதானா? என்பதுதான் இப்போது கேள்வி.//

    நிச்சயமாகச் சரியில்லை... பெற்றோர்களும் சிந்திக்க வேண்டிய விசயம்...

    பதிலளிநீக்கு
  3. உண்மைதான் சார்.10ஆம் வகுப்பு,12ஆம் வகுப்பு மாணவர்கள் முகத்தை பார்த்தாலே தெரிந்து விடும் .ஒரு வித இறுக்கத்துடனும் சோகத்துடனும் .போருக்குச் செல்லும் குழந்தைகள் போல...

    பதிலளிநீக்கு
  4. ஐயா, தமிழகத்தில் நாம் பள்ளியின் தரத்தை அளவிடும் முறையில் உள்ள தவற்றின் விளைவு இது. ஒரு தொழிற்சாலைக்கு இலக்கி நிர்ணயிக்கலாம், இன்று டாஸ்மாக்கிற்குக் கூட இலக்கி நிர்ணயிக்கிறார்கள். ஆனால் பள்ளிக்கு தேர்ச்சியில் இலக்கு நிர்ணயிப்பதன் பலன் இது. ஒரு நாள் இதன் பலனை அறுவடை செய்யத்தான் போகிறோம்.

    பதிலளிநீக்கு
  5. // 'உருப்போட்ட' மாணவர்கள், தொழிற்கல்வி நுழைவுத் தேர்வுகளில் 'உருப்படாத' மதிப்பெண் எடுத்த ரகசியமும் இதுதான்...! //

    உண்மையான, உணர வேண்டிய ரகசியம் ஐயா...

    இது தொடர்வது கண்டிப்பாக சரியில்லை...

    பதிலளிநீக்கு
  6. பயனுள்ள தகவல்.
    சிறந்த ஆய்வுக் கண்ணோட்டம்.
    பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
  7. அய்யாவிற்கு வணக்கம்..
    கல்வியில் காணப்படும் களவாணித்தனத்தைத் தோலுரித்துக் காட்டியிருக்கிறது தங்கள் கட்டுரை. இது போன்ற நிகழ்வுகள் மெட்ரிக் பள்ளிகளில் தான் நடைபெறுகிறது. மாணவர்கள் நான்கு ஆண்டுகளும் புத்தகப் புழுக்களாக வலம் வந்து மன அழுத்தத்திற்கு ஆளாகும் நிலையைக் கண்டு கொள்வாரில்லை. பாடத்தை மட்டுமே மனனம் செய்து மனிதனுக்கு தேவையான வாழ்வியல் திறன்கள், மதிப்புக்கல்வி என அனைத்தும் இருப்பது தெரியாது படித்து முடித்தும் விடுவது வேதனை தான். மாணவர்களை நல்ல குடிமகனாக உருவாக்க வேண்டும் எனும் கல்வியின் உயரிய நோக்கம் வெற்றி பெற வேண்டுமென்றால் மொழித்திறன்கள் அந்தந்த வயதிற்கு ஏற்றவாறு கற்பிக்க வேண்டுமெனும் தங்கள் கருத்து கல்வியாளர்களின் பார்வைக்கும் அரசின் கவனத்திற்கும் சென்றடைந்து மாற்றம் ஏற்பட வேண்டும் நடக்கும் என்றே நம்புவோம். பகிர்வுக்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  8. கல்வியின் இன்றைய நிலையை படம்பிடித்துக் காட்டும் கட்டுரை....
    அருமை ஐயா..

    பதிலளிநீக்கு
  9. கட்டுரையின் கருத்துக்கள் எனக்குள்ளும் முட்டி மோதிக் கொண்டுதான் இருக்கின்றன.

    உங்கள் பாணியில் பதிவிட்டிருக்கிரீர், "... வெறும் மார்க் அடைத்த பையடா" அருமையான வாக்கியம்.

    நமது மதிப்பீட்டு முறைகளை நாம் மீளமைக்க வேண்டும். இந்த ஆண்டோடு இந்த பழைய சனியன் பிடித்த தேர்வுமுறையிலிருந்து பத்தாம் வகுப்பு விடுதலை பெரும் என்று நம்புகிறேன்.

    வரட்டும் சி.சி.இ ...
    காத்திருப்போம். நம்பிக்கையோடு ...

    பதிலளிநீக்கு