வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் காசி ஆனந்தனைக் காப்பியடித்த யுகபாரதி

மனப்பத்தாயம்“ எனும் அருமையான கவிதை நூலோடு தமிழ்க்கவிதை உலகிற்கு அறிமுகமான யுகபாரதி, எதிர்பார்ப்புகளை எழுப்பினார். நான் கூட அந்தக் கவிதைநூலைப் படித்துவிட்டு –அப்போது அவர் பணியாற்றிவந்த “கணையாழி“ இலக்கிய மாதஇதழ் அலுவலகத்தில் அவரது எண்ணை வாங்கி– மிகவும் பாராட்டிப் பேசினேன். மகிழ்ச்சியாக நன்றி சொன்னார்.(கி.பி.2000 னு நினைக்கிறேன்)
பிறகு, “பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்என்ற வரிகளை, “ஆனந்தம்“ படத்தில் கேட்டும்-பார்த்தும் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். ஆனால் பிறகு பேசவில்லை. திரைக்கு வந்து விட்டால் எல்லாரும் பாராட்டுவார்கள் நம் பாராட்டு அனாவசியம் என்று இருந்துவிட்டேன்.
( இதேபோலத்தான் நா.முத்துக்குமார் “நியூட்டனின் மூன்றாம் விதிகவிதைத் தொகுப்பில் அறிமுகமான புதிதில் அவருடன் அடிக்கடி பேச, அவரும் மகிழ்ச்சியாக நன்றி சொல்லி, அப்போது அப்பல்லோ மருத்துவ மனையில் பணியாற்றிய அவரது தோழி என்று கூறி கவிதாயினி ஒருவரும் தொலை பேசுவார். அவர் பிறகு பாரதிராஜாவின் இணைஇயக்குநர் என்று அறிமுகமாகி இப்போது காணாமல் போய்விட்டார். நா.முத்துக்குமார் பின்னர்வந்த பல படங்களில் பெரும்புகழ் பெற்று புதுக்கோட்டைக்கு வந்தபோது கூடப் பேசவில்லை. நானும் தேடிப்போய்ப் பேசும் பழக்கமில்லாததால் பழசை நினைவூட்ட விரும்பாமல் இருந்துவிட்டேன். புகழ் போதையில் இருப்பவரிடம் நான் என்னத்தப் பேசி என்ன ஆகப்போகுது...?
அதுபோலத்தான் இப்போதும் “மன்மத ராசாபாடலுக்குப் பின் வந்த பாடல்களில் அந்தஅளவிற்குப் பேசப்படவில்லையே என்னும் ஆதங்கமோ என்னவோ நல்ல கவிஞரான யுகபாரதி இப்போது வெளிவந்திருக்கும் “வருத்தப்படாத வாலிபர் சங்கம்“ எனும் படத்தில் எழுதியிருக்கும் “ஊதா கலரு ரிப்பன் யாரு உனக்கு அப்பன்?என்னும் வரிகளில் அப்படியே ஈழக்கவிஞர் காசி ஆனந்தனின் வரிகளைக் காப்பியடித்திருக்கிறார் என்றுதான் சொல்வேன்.
இந்தப் பாடலுக்கான இமானின் இசை கூட 
கிட்டத்தட்ட 
தமிழகம் தாண்டியும் தன் கம்பீரக் குரலால் பகுத்தறிவு விதைத்துவரும் 
தேனிசை செல்லப்பா அவர்கள் பாடுவதையே நினைவூட்டுகிறது!

ஊதா கலரு ரிப்பன்,  யாரு உங்க அப்பன்,
ஏ...நில்லடி அவனுக்கு நா சலாம் போடணும்

ரோஜா கலரு பொம்மி, யாரு உங்க மம்மி,
ஏ சொல்லடி அவளுக்கு நா சபாஷ் போடணும்

மத்தவங்க உரசிப்போனா ஜாலி செம ஜாலி
நீ உரசிப் போனபிறகு பாத்தா ஐ அம் காலி -
இந்த வரிகளில் வரும் விட்டேத்தியான விடலைப் பையன் பாடும் வரிகளில் என்ன மெஸேஜ் சொல்லவருகிறார் எழுதிய யுகபாரதி அல்லது நடித்துப் பாடிய சிவகார்த்தி அல்லது இசையமைத்த இமான்? அல்லது இயக்கிய புதிய இயக்குநர் பெருமகன்?
உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தன் எழுதித் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், உலகில் தமிழர் வாழும் பகுதிகளில் எல்லாம் புகழ்பெற்ற அந்தப் பாடலின் புகழ்பெற்ற வரிகளின் உச்சம் இந்த வரிகள் அல்லவா ? அதைக் கொச்சைப் படுத்ததுவது போலும் முயற்சிக்கு யுகபாரதி துணைபோகலாமா? 

கவிஞர் காசி ஆனந்தனின் பாடல் வரிகளைப் பாருங்கள் –
தமிழா! - நீ பேசுவது தமிழா...?

அன்னையைத் தமிழ்வாயால் மம்மி என்றழைத்தாய்...
அழகுக் குழந்தையை பேபி என்றழைத்தாய்...
என்னடா தந்தையை டாடி என்றழைத்தாய்...
இன்னுயிர்த் தமிழை கொன்று தொலைத்தாய்....

உறவை லவ் என்றாய் உதவாத சேர்க்கை...
ஒய்ப் என்றாய் மனைவியை பார் உன்றன் போக்கை...
இரவை நைட் என்றாய் விடியாதுன் வாழ்க்கை...
இனிப்பை ஸ்வீட் என்றாய் அறுத்தெறி நாக்கை...

வண்டிக்காரன் கேட்டான் லெப்ட்டா? ரைட்டா?
வழக்கறிஞன் கேட்டான் என்ன தம்பி பைட்டா?
துண்டுக்காரன் கேட்டான் கூட்டம் லேட்டா?
தொலையாதா தமிழ் இப்படிக் கேட்டா?

கொண்ட நண்பனை பிரண்டு என்பதா?
கோலத் தமிழ்மொழியை ஆங்கிலம் தின்பதா?
கண்டவனை எல்லாம் சார் என்று சொல்வதா?
கண்முன் உன் தாய்மொழி சாவது நல்லதா?

பாட்டன் கையில வாக்கிங் ஸ்டிக்கா
பாட்டி உதட்டுல என்ன லிப்ஸ்டிக்கா?
வீட்டில் பெண்ணின் தலையில் ரிப்பனா?
வெள்ளைக் காரன்தான் நமக்கு அப்பனா?    


இந்தக் கடைசி வரிகளைக் கேட்கும் மக்கள், பாடுவோர் எவ்வளவு சுமாராகப் பாடினாலும் அதைப்பற்றிக் கவலைப்படாமல், அந்த நெருப்பு வரிகளைக் கேட்டதும் எல்லா இடத்திலும் பெருத்த கரவொலி எழுப்புவதை நான் தமிழ்நாட்டின் பலநூறு மேடைகளில் கேட்டிருக்கிறேன். ரிப்பன் அப்பன் அப்படி ஒரு அழகு இயைபு!
அதைப்போய்க் காப்பியடித்து எழுதலாமா யுகபாரதி?

கண்ணதாசன் கூட, “தோள்கண்டார் தோளே கண்டார்” என்று கம்பனையும், “ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதார்” என்று தேவாரத்தையும் காப்பியடிக்கத்தான் செய்தார். ஆனால், அதை தைரியமாக  தாத்தன் சொத்தை பேரன் எடுத்துச் செலவு செய்வது தப்பில்லையே என்று அழகாகச் சொல்லி அங்கீகாரமும் வாங்கிக்கொண்டார். இது தாத்தா சொத்துமில்லை.. வேறென்ன சொல்ல?

“வருத்தப்படாத வாலிபர் சங்கம்“ 
படத்தின் தலைப்பே பாதிக்கதையைச் சொல்லி விடுகிறது!
மீதிக் கதையில் சிவகார்த்திகேயன் என்ன சிலப்பதிகார வீரத்தையா செப்புவார்?
“வயது குறைவான பெண்ணுக்குத் திருமணம் செய்யக் கூடாது“ 
என்று மெஸேஜ் சொல்லியிருக்காராம்...
வயது குறைவான பெண்ணைப் பார்த்துப் பாடக்கூடிய பாடலா இது?

சினிமாக்காரர்கள் சிந்திக்க மாட்டார்கள்,
சிந்திக்கிறவனையும் விடமாட்டார்கள்.

பார்க்கிற படிக்கிற நாம்தான் அதைச் செய்யணும். 
------------------------------------------------------ 
பின் குறிப்பு - கடந்த மாதத்தில் விகடனின் இணைப்பான டைம் பாஸ் பற்றி எழுதியபோது தமிழ்மணத்தின் அன்றைய பதிவில் இரண்டாவதாக அதிகம்பேரால் படிக்கப்பட்டதைத் தெரிவித்திருந்தேன். இப்போது மீண்டும் இந்த நம் படைப்பு இன்றைய (08-09-2013) தமிழ்மணம் வலைத்திரட்டியின் பதிவுகளில் அதிகம்பேர் பார்த்த 7ஆம் இடத்தில் வந்திருக்கிறது. வாசகர்களுக்கு நன்றி. நண்பர்கள் வட்டமும் கிடுகிடுவென்று உயர்ந்து ஏறிவருகிறது. கடந்த மாதம் 100க்குள் இருந்தது, இப்போது 150ஐத் தாண்டியிருக்கிறது.. இன்னும் பொறுப்பாக நாம் இயங்கவேண்டும் என்று புரிகிறது... பொறுப்பு வரணுமே!
----------------------------------------------- 

14 கருத்துகள்:

  1. முத்துநிலவன் அய்யா,

    //ரிப்பன் அப்பன் அப்படி ஒரு அழகு இயைபு!
    அதைப்போய்க் காப்பியடித்து எழுதலாமா யுகபாரதி?//

    அய்யா நீங்க இப்படிலாம் எழுதுவீங்கனு நினைக்கலை, ஆனால் எழுதிட்டிங்க, சரி நமக்கு தெரிஞ்சதை சொல்வோம்னு ,சொல்கிறேன், கருத்து மட்டுமே!

    ரிப்பன் அப்பன் எல்லாம் என்னா காப்பி ரைட்டட் ஆ அவ்வ்,

    இத பாருங்க ,

    "இந்தியாவில் 1880 முதல் 1884 வரை வைஸ்ராயாக இருந்த ரிப்பன் தான், இந்தியாவில் உள்ளாட்சி அமைப்புகளின் சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தார். இந்த சீரமைப்பு, மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது. இதனால், "ரிப்பன் எங்கள் அப்பன்' என்று அழைக்கப்பட்டார். இவரது நினைவாகவே, மாநகராட்சி கட்டடத்துக்கு ரிப்பன் பில்டிங் என பெயரிட்டனர்.
    "

    நன்றி,

    தினமலர்,

    http://www.dinamalar.com/chennaidinam/News_details.asp?id=299239&cat=MadrasDay_History

    வெள்ளைக்காரன் காலத்திலவே ரிப்பன்,அப்பன் என்ற எகனை,மொகனை எல்லாம் வழக்கத்துல வந்து போச்சுங்க, அப்போ காசி.ஆனந்தன் அதை காப்பி அடிச்சாரா அவ்வ்!

    பதிலளிநீக்கு
  2. இப்படியும் பல உத்திகள் நம் கவிஞர்களிடம் எப்படியும் பாடல் ஹிட்டாகினால் போதும் என்ற நிலை !

    பதிலளிநீக்கு
  3. “வருத்தப்படாத வாலிபர் சங்கம்“
    படத்தின் தலைப்பே பாதிக்கதையைச் சொல்லி விடுகிறது!
    மீதிக் கதையில் சிவகார்த்திகேயன் என்ன சிலப்பதிகார வீரத்தையா செப்புவார்.

    உண்மை.அழகாகச் சொன்னீர்கள்.

    பதிலளிநீக்கு
  4. //ரிப்பன் அப்பன் எல்லாம் என்னா காப்பி ரைட்டட் ஆ அவ்வ்,//

    பஞ்சாயத்து சார்,

    சும்மா விதண்டாவாதம் பண்ணுவதற்காக இப்படி பேசுகிறீர்கள் போல் தெரிகிறது. இந்தப்பாட்டைக் கேடவுடனேயே, எனக்கு எங்கேயோ முன்பு கேட்ட வரிகள் போலவே இருந்தன.

    கவிதை நடையை அப்படியே காசி ஆனந்தனிடமிருந்து கொப்பி (Copy) அடித்திருக்கிறார் பாடலாசிரியர் என்பது எல்லோருக்கும் புரியும். :)

    பதிலளிநீக்கு
  5. திரைப்படத் துறையில் கதைகளை, பாடல்களை, ராகங்களை, நகைச்சுவை காட்சிகளை அப்படியே காப்பியடிப்பதும், உச்ச நடிகர்கள் நடித்த படத்தின் தலைப்பை மீண்டும் தலைப்பிடுவதும் வழக்கமாகித்தான் போய்விட்டன். இரண்டு வார்த்தைகள் தானே அய்யா, யுகபாரதியை விட்டவிடலாம். பொதுவாக நோக்கின் தங்களது ஆதங்கம் உயர்வானது நல்ல படைப்பாளிகளை திரையுலகம் உள்ளே அனுமதிப்பதில்லை, இருப்பவர்களிடம் ஆரோக்கியமான போட்டி, சிந்தனைகள் இல்லை (மக்களிடமும் தான், பாருங்கள் ஊதா கலர் ரிப்பன் பாடல் ஹிட்)

    பதிலளிநீக்கு
  6. சரியாகச் சொன்னீர்கள் ஐயா... எல்லாம் பணம் செய்யும் மாயை...!

    பதிலளிநீக்கு
  7. கவிஞர் காசி ஆனந்தன் அவர்களின் கவிதை வரிகள் தமிழை மறந்து ஆங்கில மோகத்தில் திரிபவர்களுக்கான சவுக்கடிகள். கவிதையைப் பகிர்ந்தமைக்கு நன்றிகள் ஆயிரம் அய்யா. இதைத்தான் முதல் கருத்தூட்டமாக இட்டுயிருக்க வேண்டும். (தங்களின் இந்தப் பதிவு காசி ஆனந்தன் அவர்களின் கவிதையை நண்பர்களுக்கு தெரிவிப்பதற்கான அல்லது ஞாபகம் ஊட்டுவதற்கான உத்தியாகக் கூட இருக்கலாம் என்று தோன்றுகிறது)

    பதிலளிநீக்கு
  8. வவ்வால் அவ்வ்வ்...சாரி அய்யாவுக்கு வணக்கம்.
    என்ன நோக்கத்தில் எழுதுகிறோம் என்பது முக்கியமில்லையா அய்யா?
    காசிஆனந்தன் களப்போராளி. அவர் காப்பியடிக்கவிலலை என்பதிருக்க, அவர் மக்களுக்கு எழுதும்போது காப்பியடித்தாலும் தவறில்லை என்பது என்கருத்து அப்புறம் மக்களுக்கான எழுததிலிருந்து வ.வா.ச.தயாரிப்பாளருக்காக மற்றும் வளர்ந்துவரும் சிவா வுக்காகவும் எழுதும்போதுதான் எழுகிறது சிக்கல். எனினும் பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  9. தம் கருத்தை சுருக்காகவும் நறுக்கென்றும் பதிவு செய்த நண்பர்கள் கரந்தை ஜெயக்குமார் அய்யா, தனிமரம் அய்யா, பேரா.குணசீலன் அய்யா, அ.பாண்டியன் அய்யா, திண்டுக்கல் தனபாலன் அய்யா ஆகியோர்க்கு எனது நன்றிகள். திரு வியாசன் அவர்கள் திரு வவ்வால் அய்யாவுக்கு பதில் சொல்லியிருக்கிறார் அவருக்கும் என் நன்றி. விவாதம் தொடரட்டும். கருத்து மாறுபடுவது தவறல்ல, அதை நல்லமுறையில் நாகரிகமாக வெளிப்படுத்த வேண்டும் அவ்வளவுதான். நண்பர்களுக்கு மீண்டும் நன்றி

    பதிலளிநீக்கு
  10. பாடலைக் கேட்கும்போது பழைய பாடலை கேட்கும் உணர்வுதான் ஏற்படுகிறது. காப்பி அடிக்காமல் திரைப் பாடல் எழுதுவது மிகக் கடினமே. ஏற்கனவே யாரும் எழுதாததை புதிய எதுகை மோனை இயைபுகளை எழுத இயலாது என்றே நினைக்கிறேன். மோகம் என்றால் அடுத்த வரியில் தாகம் என்றே பெரும்பாலும் இருக்கும்.

    பதிலளிநீக்கு
  11. உண்மைதான் நண்பர் முரளி, தமிழ்த்திரைப்படப் பாடலில் எங்கெல்லாம் மேகம் என்று வருகிறதோ, அதற்கு முன்னோ பின்னோ தாகம் என்று வரும். இதுபோலவே -
    குயில் பாடும் என்றும் அடிக்கு முந்திய அல்லது பிந்திய அடி மயில் ஆடும் என்பதாகவே இருக்கும். இது கற்பனை வறட்சி மட்டுமல்ல, கஷ்டப் படாமல் கவிதை எழுதும் பழைய தொழில் நுட்பம். நல்ல கவிஞர் என்று நாம் நினைத்திருக்கும் சிலரும் இந்தப் பட்டியலில் சேரும்போது நமக்குக் கோவம் வருவதும் இயல்புதானே?

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் அய்யா.
    சரியான சாட்டையடி.திரைப்படங்களே இன்றைய சமுதாயத்தை வளர்க்கின்றது .எதற்கும் வருத்தப்படாத வாலிபர்களை உருவாக்குகின்றது.தாயை ,மகளை கெடுத்தாலே வருத்தப்படாத மக்கள் தமிழ்மொழி கெட்டாலென்ன?வருத்தம் வேண்டாம் .வொய் திஸ் கொலவெறி போல் இதுவும் மறைந்து போகும் .ஆனால் இளைஞர்கள் மனதில் விடத்தை அல்லவா ஊன்றிச் செல்கின்றது.

    பதிலளிநீக்கு
  13. அண்ணா ,சமிபத்தில் கூ.உ.தொ .அம்மா ஜெயலெட்சுமி அவர்களுடன் காசி ஆனந்தன் நறுக்குகள் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.இன்ன மாதிரியான எழுத்து.அருமையான பதிவு .

    பதிலளிநீக்கு