தமிழாசிரியர்கள் செய்யும் தமிழ்நடைப் பிழைகள்...


அனைவர்க்கும் இடைநிலைக் கல்வித்திட்டம் (RMSA - என்பது, இந்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறையும், மாநில அரசுகளின்  பள்ளிக் கல்வித்துறையும் இணைந்து நடத்தும் ஒரு நல்லதிட்டம். இதன்படி, உயர்நிலை-மேல்நிலைப் பள்ளிகளில் பணயாற்றிவரும் 9,10ஆம் வகுப்புகளின் அனைத்துப் பாடங்களின் ஆசிரியர்களுக்கான “பணியிடைப் பணிமனை(Workshop on Duty) இந்தியா முழுவதும் நடந்து வருகிறது. 1முதல் 8வகுப்பு வரையிலான அனைவர்க்கும் ஆரம்பக் கலவித்திட்டம்  என்பதன் 9ஆம் வகுப்புத் தொடர்ச்சியே (RMSA)  ஆகும்.

இதன்படி, 2013-“14 நிகழும் கல்வியாண்டில், 9ஆம் வகுப்பில் படிக்கும்  மாணவர்க்கு, தேர்வு-மற்றும் மதிப்பீட்டு முறை (Syllabus, and Evalution) மாறிவிட்டது. 

எனவே, ஆண்டு முழுவதும் ஒரே புத்தகம் என்பதும், ஆண்டு இறுதித் தேர்வே அந்தந்த மாணவரின் அடுத்த வகுப்பிற்கான தேர்ச்சியை முடிவு செய்யும் என்பதும் மாற்றப்பட்டுவிட்டது நல்லதே!

அடுத்த கட்டமாக, அடுத்த ஆண்டு பத்தாம்வகுப்பிற்கும் இது நீட்டிக்கப்பட உள்ளது.
அப்போது, இப்போதுள்ள தேர்வுமுறையும் மதிப்பீட்டு முறையும் அடுத்தஆண்டும் இருக்குமா எனும் கேள்வி ஒருபுறமிருக்க...
கடந்த 12,13-07-2013 தேதிகளில், அனைவருக்கும் இடைநிலைக்கல்வித்திட்ட இயக்கத்தின் சார்பாக, புதுக்கோட்டை மாவட்டக் கல்வித்துறை நடத்திய -ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புத் தமிழாசிரியர்க்கான பயிற்சிவகுப்பில் கலந்துகொண்டு நான் எடுத்த பாடக்குறிப்புகள்...
--------------------------------------------------
தமிழாசிரியர் செய்யும் தமிழ்நடைப் பிழைகள்...

1.     தமிழாசிரியர்களாகப் பணியாற்றிவரும் பெண்கள் தம்மைத் “தமிழாசிரியை“  என்று சொல்வதும், அவ்வாறே பதிவேடுகளில் எழுதுவதும் தவறு.      
        ஆசிரியர் என்பதே மரியாதை கலந்த பலர்பாற்சொல். தவிரவும், ஆண் ஆசிரியர்கள் தன்னை “ஆசிரியன்“ என்று சொல்வதில்லை. ஏனெனில், பலர் பாலுக்கு உரிய சொல்லைப் பலர்பாலாகவே எழுதுவதுதான் சரி. பெண்பாலைத் தனித்துத் தெரிவிக்க வேண்டியதும் இல்லை. இவ்வாறே தலைமை ஆசிரியை என்பதும் தவறு. (ஆங்கிலத்தில் CHAIRMAN  எனும் சொல் இதன் காரணமாகவே CHAIRPERSON என்று மாற்றப்பட்டது என்பதையும் இவ்விடத்தில் ஒப்பிட்டுக் கொள்ளலாம்)
2.     முன் எழுத்து இடும்போது (INITIAL) தமிழில் இடுவதில்லை.நா.MUTHU NILAVAN’என்றோ ‘N.முத்துநிலவன்என்றோ முன்எழுத்தை மாற்றி எழுதுவது தவறல்லவோ?  இதில் கவனமில்லாதாராய்த் தமிழாசிரியர் பலர் உளர். ஆங்கிலத்தில் எழுதும்போது ஆங்கிலத்திலும், தமிழில் பெயரெழுதும்போது தமிழிலும் எழுதுவதுதான் சரி. இது மொழியைப் பற்றிய அலட்சியமன்றி வேறில்லை.

3.     கையெழுத்தைக் கூடத் தமிழில் இடுவதில்லை  
உலகமுழுவதும் எழுதப்படிக்கத் தெரிந்தோர் எல்லாரும் தத்தம் தாய்மொழியில் கையொப்பமிடுவதையே வழக்கமாக மற்றும் பெருமையாகக் கருதும் போது, தமிழர்- தமிழாசிரியர் சிலர்...ஏன் இப்படி? கேட்டால் வங்கியில் ஆங்கிலத்தில் இருப்பதையே விரும்புகிறார்கள் என்று சொல்வது சரியான காரணமன்று. வங்கிக் கணக்கு மற்றும் உடனடிக் கணக்கட்டை (ஏடிஎம் கார்டு) உட்பட நாம் முன்னர் இட்டதுதான் சரிபார்க்கப் படுகிறதே அன்றி அது எந்த மொழியென்று எந்திரம் பார்ப்பதில்லை. நம் கையெழுத்து மாற்றமடையும் பொழுது மட்டும் வங்கிக்குத் தெரிவித்தால் போதும்

4.     32வது ஆண்டு விழாவும், 30ம் ஆண்டு விளையாட்டுவிழாவும்
இவற்றை முறையே 32ஆவது, 30ஆம் என்று எழுதுவதே சரியாகும். இவற்றையே “32“என்பதை “முப்பத்திரண்டுஎன்று எழுதுவோமானால் அதன் பிறகு வது மற்றும் ம் எனும் பின் இணைப்பைச் சேர்ப்பது சரிதானா என்று யோசித்தால் இத்தவறு புரியும்.                               
5.     முதலிய, ஆகிய – இரண்டும் ஒன்றல்ல.
முதலிய என்பது பட்டியல் முடியவில்லை என்பதையும், ஆகிய என்பது இத்துடன் பட்டியல் முடிந்துவிட்டது என்பதையும் உணர்த்தும்.
எ.டு-
(1)சேரர், சோழர், பாண்டியர் ஆகியோர் பழந்தமிழகத்தின் மூவேந்தர்                                                   (2) பாரதிதாசன், பட்டுக்கோட்டையார், இன்குலாப், கந்தர்வன் முதலான கவிஞர் பலர் மக்களுக்கான கவிதைகளை மக்களுக்காகவே எளிமையாக எழுதினர், இப்பட்டியல் தொடரும்.

6.     திருவள்ளுவர் என்ற புலவர், முத்துநிலவன் என்ற கவிஞர் இரண்டுமே சரியல்ல.
“என்ற“ என்பது கடந்த காலம். “என்னும்“ என்பதே நிகழ் மற்றும் எதிர்காலம்.           (முத்துநிலவன் என்ற கவிஞர் எனில் முத்துநிலவன் இறந்துவிட்டான் என்பது பொருள். காலஞ்சென்றவரே யானாலும் “திருவள்ளுவர் என்ற“ என்பதைவிடவும் “திருவள்ளுவர் என்னும் எனக் “காலம் கடந்தவராக“க் காட்டுவதே சரியானது)

7.     சரியாக ஆறுமணியளவில் -  
அதுதான் சரியாக என்று சொல்லியாயிற்றே, பிறகு எதற்கு அளவில்? “எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, 1984 என்று நினைக்கிறேன்... என்பதைப்போன்றதே இதுவும்.

8.     மக்கட்தொகைக் கணக்கெடுப்பு நடத்துவது சரியா?
“மக்கள் தொகை“என்பதே சரி. அல்லது இரண்டெழுத்தும் புணர்ந்து “மக்கட்டொகை“ என்றுதான் எழுத வேண்டும். இது சாதரண மக்களுக்குப் புரியாது.                 எனவே “மக்கள் தொகை கணக்கெடுப்பு“ நடத்துவதே சரியானது.
இதனை மேலும் சிந்தித்தால், நாட்கள் என்பதும் இப்படியே. நாட்பட்ட கள் (அதாவது, “ரொம்ப நாள் ஊறப்போட்டு வச்ச கள்“) என்றுதான் பொருள் தரும். சர்ர்ர்ரிரிரிங்ளா? 
9.     எனது மகள் திருமணம் –
எனது மகள், எனது தந்தை, எனது அம்மா என்றால் குடும்பத்தில் ஏதோ குழப்பம் என்று பொருள். ஒருவரை ஒருவர் மனிதனாகக் கூட மதிப்பதில்லை. மிருகங்களாகவே நினைக்கிறார்கள் என்பதுதான் பொருள் என்றால் அதிர்ச்சி அடையாதீர்கள்...
“அது“ என்பது,

10.  திருவளர்ச்செல்வி வி.சிரிப்ரியா – திருவளர்ச்செல்வன் செயபாசுகரன்
அழகான தொடர் “திருவளர் செல்வி“ என்பது. வினைத்தொகை என்பது மட்டுமன்று. வாழ்நாள் முழுவதும் திரு (செல்வமும், பிற பெருமைகளும்) வளரக்கூடிய செல்வி எனப் பொருள்படும் திருவளர்செல்வியின் இடையில் திருமணத்திற்கு முன்பே வைக்கக் கூடாத இடத்துல “ச்“வச்சதாரு?
--------------------------------
இனி, பொதுவாகத் தமிழர் அனைவருமே செய்துவரும் தமிழ் நடைப் பிழைகள்...
1.        டென்மார்க்கா இடென்மார்க்கா
2.        கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
3.        கோர்வையாப் பேசத் தெரியணும்
4.        முகர்ந்து பார்த்தேன் நாத்தம் கொடலப் புடுங்கிருச்சி...
5.        முன்னூறு ரூவா
6.        எந்தன் மனக்கோவில், இதோ எந்தன் தெய்வம் –திரைப்பாடல் தொடர்கள் சரியா?
7.        பதட்டப் படாதீங்க...
8.        கண்ராவி
9.        உப்பிலியப்பன் என்ன தப்புச் செஞ்சான்?
10.     சின்னத்தம்பி தப்பு பண்ணிட்டான்      தொலைபேசி தொலைக்காட்சி
11.     இடுப்பு எலும்பில் லேசான காயம்
தொடரும்......  
 
(தொடரும்... வார மாத இதழ்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் மட்டும்தான் தொடரும் போடணுமா? நாங்களும் போடுவம்ல...?)
---------------------------------------------
ஆதார நூல்கள் -
(1)     "நல்ல தமிழில் எழுத வேண்டுமா?'   - அ.கி.பரந்தாமனார்பாரி நிலையம்,
(2)     உரை நடையா ? குறை நடையா ? ஆசிரியர்: மா. நன்னன்
(3) உங்கள் தமிழைத் தெரிநதுகொள்ளுங்கள் - ஆசிரியர்: தமிழண்ணல்
(4) பிழையின்றித் தமிழ்பேசுவோம் எழுதுவோம் – ஆசிரியர்: கோ.ஞானச்செல்வன்.
(5) இனிய தமிழில் –பிழையில்லாமல்– எழுதலாம், பேசலாம் – நா.முத்துநிலவன்,
(2008ஆம் ஆண்டு நடந்த, தன் மகனின் காதல் திருமணம் (மற்றும் சாதிமறுப்பு, சடங்குமறுப்பு) திருமணத்திற்கு வருகைதந்த அனைவர்க்கும் தேங்காய்,பழம் தருவதற்குப் பதிலாக, இலவயமாகத் தந்தனுப்பிய 36பக்கச் சிறுநூல்)
--------------------------------------------------
செய்தி வெளியீட்டுக்கு நன்றி - திரு மோகன்ராம், செய்தியாளர் தினமணி நாளிதழ் 14-07-2013 திருச்சி-புதுக்கோட்டைப் பதிப்பு
புகைப்படம் - திரு ராஜ்குமார், ஜனசக்தி செய்தியாளர் மற்றும் தினமணிப் புகைப்படக்காரர்,             உதவி திரு மதியழகன், தீக்கதிர் செய்தியாளர், புதுக்கோட்டை.
--------------------------------------------------------------------

13 கருத்துகள்:

  1. தமிழில் கையெழுத்து கவனிக்கப்பட வேண்டிய ஒன்று...

    அறிந்து கொள்ள வேண்டிய மற்ற விளக்கங்கள்...

    நன்றி ஐயா... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. அனுப்புனர்: Venugopalan SV
    தேதி: 16 ஜூலை, 2013 8:47 AM

    அன்பின் தோழர் நா. மு அவர்களுக்கு

    பயனுள்ள அம்சங்கள் நிறைந்திருந்த இந்த அஞ்சலின் கடைசி வரியில்,
    தன மகனின்

    காதல் மற்றும் சாதி மறுப்பு என்று எப்படி எழுதப் போயிற்று?
    காதல் திருமணம் காதல் மறுப்பு திருமணம் என்றாகிவிடாதா...

    மறுப்பு திருமணம் என்றால் போதாதா.. மறுப்புத் திருமணம் என்று எழுதணுமா

    பிழைகளைச் சுட்டிக் காட்டும்போது அன்போடும் பரிவோடும் ஏற்கும் விதத்திலும் எடுத்துச் சொல்லலாமே...
    மொழி மீதான அலட்சியம் அன்றி வேறில்லை என்று எதற்குச் சாட வேண்டும்...
    அதில் ஓர் அதிகாரத் தோரணை வந்து விழுகிறதல்லவா

    எஸ்விவி

    பதிலளிநீக்கு
  3. இனிய தோழர் வேணு அவர்களுக்கு, வணக்கம். தங்களின் உடனடி மறுமொழி மகிழ்வளித்தது.
    பிற மொழிகளில் அந்தந்த மொழியாசிரியர்கள்தாம் படைப்பிலக்கியத்தில் முன்னணயில் இருக்கிறார்கள் என்று கேள்விப்படும்போது நம் தமிழாசிரியர்களைப் பார்த்து எனக்குக் கடும் கோபம் வருகிறது. அந்த வகையில் தமிழாசிரியர் அல்லாத தாங்கள் எண்ணற்ற படைப்புகளைத் தந்துகொண்டே இருப்பது எனக்கு மகிழ்ச்சியையும், தங்கள் மீதொரு மரியாதையையும் தருகிறது. அதனால்தான், நேரடியாக “கமெண்ட்ஸ்“ பகுதியில் எழுதாமல் தாங்கள் தனியஞ்சல் செய்தாலும் அதை எடுத்து எனது படைப்புகளின் பின்னூட்டம் பகுதியில் இட்டு, இதோ பதிலும் எழுதிக்கொண்டிருக்கிறேன். தாங்கள் சொல்லியிருந்த திருத்தத்தைச் செய்துவிட்டேன் நன்றி. மற்றொன்று - “மறுப்புத் திருமணம்“ என்று எழுதணுமா என்றும் கேட்டிருந்தீர்கள். இந்த க் ச் போடுவது, பொருள் மாறுபடும் இடமறிந்து செய்தால் போதும் என்பதே என் கருத்து(பெரும் புலவர் பலரிதை ஏற்பதில்லை என்பது வேறு!) அப்படியெனில் உங்கள் கடிதத்தின் கடைசியில் “எதற்காகச் சாடவேண்டும்“ என்று ச் சேர்த்தீர்கள்? இதை ஊடகங்கள் வழிநடத்துவதாகவே கருதுகிறேன். உங்களைப் போன்றவர்கள் தமிழால் -வருவாய் ஈட்டி- பிழைப்பு நடத்தும் நிலைமை இல்லாமலே நிறைய எழுதுகிறீர்கள், எதார்த்தமாகச் சிந்திக்கிறீர்கள். ஆனால், தனக்குச் சோறுபோடும் தமிழின் மீதும் அலட்சியமாக இருக்கும் தமிழாசிரியர்கள் மேல் எனக்குக் கோபம் வருவது சரியென்றே நினைக்கிறேன். தொடர்ந்து பேசலாம்... நன்றி.

    பதிலளிநீக்கு
  4. முகநூல் பின்னூட்டம் -
    Kavivarman Srinevasan commented on your link.
    Kavivarman wrote: "துமிழாசிரியர்கள் செய்யும் தமிழ்நடைப் பிழைகள்…. கட்டுரையின் தகவல்கள், மற்றும் படிக்கவேண்டிய புத்தகஙகள் என்று ஒரு அற்புதமான ஆக்கம். உங்களால் மட்டுமே முடிந்த பணி. ஆர்வமுடன் படிக்கத் தோன்றுகிறது. நன்றி தோழரே…"

    பதிலளிநீக்கு
  5. சுஜாதா இப்படித்தான் வெகு ஆழமான கருத்துக்களை கூட விளையாட்டை சொல்வார்.ரோஜாவை ரோஜாவோடு கூட ஒப்பிடுவது தவறு என்று சொல்வார்கள்.அண்ணா இது ஒப்பிடுஅல்ல உவமை என்று சொல்லலாமா (இந்தஆங்கிலஆசிரியர்)?

    பதிலளிநீக்கு
  6. தமிழில் கையெழுத்து கவனிக்கப்பட வேண்டிய ஒன்று..



    பதிலளிநீக்கு
  7. இது பற்றி இன்னும் எழுதலாம் என்னும் நம்பிக்கை தந்த நண்பர்கள், தனபாலன்,மரியா ரத்தினசாமி, மகிவதனா ஆகியோர்க்கு என் நன்றி... தொடர்வோம்.. (அதற்குள் வேறு ஏதாவது வேலை வந்து கையைப் பிடித்து இழுக்காமல் இருக்கணுமே?!)

    பதிலளிநீக்கு
  8. அனுப்புனர்: Murugesh Mu
    பெறுநர்: "நா.முத்துநிலவன் MUTHUNILAVAN"
    தேதி: 18 ஜூலை, 2013 7:54 PM

    இனிய தோழருக்கு,
    வணக்கம்.
    தமிழாசிரியர்கள் செய்யும் தமிழ்க் கொலையை
    மிகச் சரியாய் கு(த)ட்டியுள்ளீர்.
    மேலும், ஆங்கில எழுத்தை அப்படியே
    முன்னெழுத்தாக தமிழில் எழுதும் போக்கும்
    மாற்றப்பட வேண்டும்.
    ( எ.கா.​ = எம்.முருகேஷ் )

    தமிழ்ப் பணி தொடரட்டும்.
    -மு.மு

    பதிலளிநீக்கு
  9. இவர்களை தமிழில் பேச வைப்பதே எனக்கு பெரும்பாடாக இருக்கிறது ஐயா. நீங்கள் நம்ம மு.க.அ விடம் சொல்லி எங்களுக்கும் வகுப்பு எடுக்கக் கூடாதா? தொடக்கக் கல்விக்குத் தானே முக்கியம்

    பதிலளிநீக்கு

  10. அய்யா வணக்கம்,

    தங்கள் வருகைக்கும் நம்பிக்கைத் தரும் கருத்திற்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். தமிழில் பெயர் எழுதும் போது ஆங்கிலத்தில் பெயர் வைத்து எழுதும் நடைமுறையை கொண்டு வந்தது நமது ஆசிரியர் பெருமக்கள்தாம். அவர்களது சிறு பிழை இன்று ஆலமரமாய் விழுது ஊன்றி வளர்ந்து இருக்கிறது. அதை அகற்ற வேண்டியது நமது தலையாய கடமை என்பதை உணர்ந்தே அந்தக் கட்டுரையை எழுதினேன்.

    தங்களது கருத்தும் அவ்வாறே இருப்பது கண்டு மகிழ்வுறுகிறேன் அய்யா. நமது தமிழ் கூறும் பெருமக்கள், இத் தவறை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. மெத்தப் படித்தவர் முதல், பாமரர் வரை இதை தவறு என்றும் உணர்வதில்லை.

    'ஊர் கூடி தேர் இழுத்தால்' மட்டுமே தேர் நிலை கொள்ளும் என்பதுபோல், தங்களது கருத்து எனது கருத்திற்கு பலம் சேர்ப்பதாக இருக்கிறது. இன் நிலை போக்க தங்களோடு இணைந்து பணியாற்ற விழைகிறேன்.

    இதை நாம் தொடந்து முன்னெடுத்துச் செல்வோம்.

    நன்றி அய்யா!

    அன்புடன்
    -தோழன் மபா.
    சென்னை-109.

    பதிலளிநீக்கு
  11. சீரி( றி)ய கட்டுரை ; சிறந்த ஆய்வு ; வெல்க கொள்கை !

    பதிலளிநீக்கு
  12. அருமை தோழர். தொடர்ந்து சுட்டிக் காட்டும் போதுதான் பிழைகளை முற்றிலும் நீக்க முடியும்.

    பதிலளிநீக்கு
  13. பிழையின்றி தமிழ் எழுத பயிற்சி தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா! சிறு இடைவெளி ஏற்பட்டுவிட்டது. தொடர்ந்து வர முயற்சிக்கிறேன்!

    பதிலளிநீக்கு