இனிய தமிழில் இந்திய தேசிய கீதம்

இந்திய நாட்டு வாழ்த்துப் பாடலை (தேசிய கீதத்தை) தமிழிலேயே பாடச்சொன்னால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நான் பலமுறை சிந்தித்ததுண்டு. சிலமுறை முயற்சியும் செய்திருக்கிறேன்.

ஆனால், தேசிய கீதத்தை அந்தந்த மாநில மொழியில் பாடுவது தவறு என்று யாரோ சொன்னதை நம்பி, பேசாமல் இருந்துவிட்டேன்...
(சின்னப்புள்ளத் தனமாவுல்ல இருக்கு...?)

நான், வடஇந்திய நகரங்கள் சிலவற்றுக்குச் செல்ல நேர்ந்த போது, எனக்கு இந்தி தெரியவில்லை என்றறிந்த “இந்தியர்”(பல மாநிலத்துக் காரர்கள்தாம், அந்தந்த மொழியோடு இந்தியையும் தெரிந்து வைத்திருப்பவர்) பலரும் என்னை அந்நிய நாட்டானைப் பார்ப்பது போலவே பார்த்ததை நான் என்ன சொல்ல?

என்னருகில் வந்து “இந்தி நை மாலும்?” என்று ஆச்சரியத்தோடு கேட்டவர் பலர்.
எனக்கு வந்த எரிச்சலை வெளியில் காட்டிக்கொள்ளாமல், “குச் நை மாலும்” என்று அழுத்திச் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி விடுவேன்...

மொழி வெறியால், என் தேச உணர்வு காயப்படுத்தப் படுவதை எண்ணிப் பலமுறை வருந்தியிருக்கிறேன்.

அதற்கு மருந்து தருவது போல இதோ எனக்குப்பிடித்த இசையில் எனக்குப் புரியும் எனது மொழியில், எனக்குப் பிடித்த எனது தேசிய கீதம்.

இதை எனக்கு மின்னஞ்சல் செய்த ஆசிரியர் திரு ஜெகந்நாதன் அவர்களுக்கு நன்றி -

மக்களின் மனங்களை ஆள்பவள் நீயே
இந்திய வளங்களின் அரசி

பஞ்சாப் சிந்து குஜராத் மராட்டியம்
திராவிடம்  ஒடிசா  வங்கம்
விந்திய இமயம் யமுனா கங்கை
முக்கடல் நின்புகழ் பாடும்

உன்புகழ் பாடி மகிழ்வோம்
உன் ஆசி வேண்டி நிற்போம்
உன்வெற்றி தனையே புகழ்வோம்

இந்திய வெற்றியின் தாரகை நீயே
இந்திய வளங்களின் அரசி

வெற்றி வெற்றி வெற்றி
உனக்கே என்றும் வெற்றி

--பாடல் வரிகளைத் தமிழில் தந்தவர் மற்றும் படத்தொகுப்பு - திரு ஜெகந்நாதன், ஆசிரியர்

யூ ட்யூப் இணைப்பில் ஒளி-ஒலியுடன் பார்த்துக் கேட்டு ரசிக்க ...

திருக்குறளில் தளைப் பிழையா?

முனைவர் நா.அருள்முருகன் அவர்கள்
முதன்மைக் கல்வி அலுவலர் - புதுக்கோட்டை
--------------------------------------------- 
புதுக்கோட்டை மாவட்டத்தில் “அனைவர்க்கும் இடைநிலைக் கல்வி இயக்கம்“ சார்பில், அரசுப் பள்ளிகளில் 9,10ஆம் வகுப்புப் பாடம் நடத்திவரும் பட்டதாரி ஆசிரியர்களுக்குப் பணியிடைப் பயிற்சி நடந்து வருவது பற்றி முன்னமே நமது வலையில் எழுதியிருக்கிறேன். பார்க்காதவர்கள் பார்க்க-  http://valarumkavithai.blogspot.in/2013/07/blog-post.html

அதன் நிறைவு நாளாகிய இன்று, முற்பகலில் என்வகுப்பை நடத்திவிட்டு வந்தபின், வேறொரு வேலையாக  எங்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் திரு நா.அருள்முருகன் அவர்களைச் சந்திக்கச் சென்றேன். பின்னர், இன்றுதான் பணிமனை நிறைவடைகிறது என்பதை நினைவூட்டி, அவர்கள் ஏதாவது ஒரு மையத்திற்கு வந்து தமிழாசிரியர்களைச் சந்திக்க வேண்டும் என்று அழைத்தேன். எங்கெங்கே நடக்கிறது என்று கேட்டுக்கொண்டவர், “வேறு பல வேலைகளும் இருக்கின்றன, அருகில் உள்ள பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடக்கும் பயிற்சியைப் பார்ப்போமே? என்று கூறிக்கொண்டே, நடக்க ஆரம்பித்து விட்டார்.
அவர்தான் எங்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்...!
கடந்த மாதத்தில் ஒருநாள், என்னைப் புதுக்கோட்டைத் திருக்குறள் கழகத்தில் பேச அழைத்திருந்தார்கள். விழா நாளைக்கு முந்திய நாள் அவர்களைப் பார்க்கப் போயிருந்த போதும், நான் அடுத்தநாள் பேசப்போவது பற்றிச் சொல்லவில்லை. ஏனெனில், வழக்கமாக 20, 30 பேர்தான் திருக்குறள் கழகக் கூட்டத்திற்கு வருவார்கள் என்பதால் அவரை அழைத்து அவருக்கு நேரவிரயம்செய்ய வேண்டாமே என்று நினைத்தே அழைப்பைத் தவிர்த்தேன் ஆனாலும், வேறு நண்பர்களின் வழியாகத் தகவல் அறிந்த அவர்கள், தனது சொந்த மோட்டார் சைக்கிளை ஓட்டிக்கொண்டு விழாவுக்கு வந்துவிட்டார். விழாக் குழுவினர் வேண்டியும் மேடைக்கு வராமல், “அய்யா பேச்சைக் கேட்கத்தான் வந்திருக்கிறேன்என்று முதல் வரிசையில் அமர்ந்து முழுப்பேச்சையும் கேட்டுவிட்டுத்தான் சென்றார். அப்படியோர் எளிமையான மனிதர்! அதோடு நல்ல தமிழறிஞரும் கூட! நேமிநாதம் பற்றி ஆய்வு செய்து தமிழில் முனைவர் பட்டம் பெற்றவர். தேர்ந்தெடுத்துப் படிக்கும் பழக்கமுள்ள நல்ல வாசகர். மிகச் சிறந்த கவிஞர்!  ஆனால், எந்த பந்தாவும் காட்டாத இயல்பான அரிய மனிதர்.
அவர் தமிழாசிரியர் பணிமனைக்கு வந்ததும், நேராக மேடையேறி, தான் பேச விரும்புவதைப் பேசிவிட்டு நடையைக் கட்டிவிடும் பிற அலுவலர் போலன்றி, 15 நிமிடத்திற்கும் மேல் கருத்தாளர் மகா.சுந்தரின் வகுப்பைக் கேட்டுக்கொண்டிருந்தார். பின்னர் மகா.சுந்தர் கேட்டுக் கொண்டதற்கிணங்க, அருகிலிருந்த திருக்குறள் நூலை எடுத்துக் கொண்டு மேடை ஏறியவர் நேராகக் கரும்பலகையிடம் போனார்....
பின்வரும் 5,6 திருக்குறள்களை எழுதினார்..
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்... –குறள்-38
அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை  அஃதும்... – குறள்-49
அறத்திற்கே  அன்பு... மறத்திற்கும் அஃதே துணை –குறள்-76
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு – குறள்-80
விழுப்பேற்றின் அஃதொப்பது - குறள-162    எழுதியபின் தமிழாசிரியர்களைப் பார்த்துக் கேட்டார்... “இந்தக் குறள்களில் வரும் ஆய்த எழுத்து எத்தனை மாத்திரை பெறுகிறது?”  தமிழாசிரியர்கள் பலரும் பள்ளி மாணவர்களைப் போல உற்சாகமாக, “அரைமாத்திரை“ என்று சத்தமாக-சரியாகச் சொன்னார்கள்.
சரிதான் அப்போதுதான் வெண்பாவுக்கு உரிய வெண்டளை பிழையாது“ என்ற அய்யா, அடுத்து ஒரு குறளைச் சொல்லி என்னை எழுதச் சொன்னார்கள். அய்யா ஏதோ ஆய்வு நோக்கில் சொல்ல வருகிறார் என்பதைப் புரிந்து கொண்ட நானும், அவர்கள் சொன்ன குறளைக் கரும்பலகையில் எழுதினேன்.
வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
யாண்டும் அஃதொப்ப தில் – குறள்-363
இப்போது அய்யா மீண்டும் கேட்டார்கள், “இந்தக் குறளில் ஆய்த எழுத்துக்கு அரைமாத்திரை கொடுத்தால் நேரொன்றாசிரியத் தளை அல்லவா வருகிறது? இந்தக் குறளில் வள்ளுவர் தளைப் பிழை செய்துவிட்டாரா?
“ஒருவேளை ஆய்தக் குறுக்கம் என்றும் கால் மாத்திரை அளவு தான் என்றும் வைத்துக்கொண்டால் மற்ற இடங்களில் அந்தக் குறுக்கம் வராதது ஏன்? என்று ஆய்வு செய்யுங்கள் என்று சொன்னதும் தமிழாசிரியர்கள்  அசந்து போனார்கள்... 
இதுவரையிலான மாவட்ட அலுவலர்களிடமிருந்து, “நோட்ஸ் ஆப் லெசன் எங்கே?”  ”தாமதமாய் ஏன் வருகிறீர்கள்?முதலான கேள்விகளையே  கேட்டுப் பழகிய ஆசிரியர்களின் காதுகளில், ஓர் அலுவலர் “திருவள்ளுவர் வெண்டளையில் பிழை செய்துவிட்டாரா? அல்லது ஆய்த எழுத்துக்கு வேறு வடிவம் இருந்திருக்கிறதா? இதுபோல மாத்திரை மாறுமிடங்கள் வேறு எங்கெங்கு வந்திருக்கின்றன? ஆய்வு செய்யுங்கள்“ எனக் கேட்ட கேள்வி இது வரை விழுந்ததில்லை தானே?
அய்யா சொல்லிவிட்டு அவர்பாட்டுக்கு அடுத்த வேலைக்குப் போய்விட்டார்.
எனக்கும் இதற்கு விடை தெரியவில்லை, இரவுத் தூக்கமும் வரவில்லை.
எங்கள் மாவட்டத்தில் இருந்து தற்போது திண்டுக்கல் மாவட்டத்திற்கு மாற்றலாகிச் சென்றிருக்கும் தம்பி –இலக்கணப் புலி, இலக்கணத்திலேயே ஊறிக்கிடந்து ஆய்வுகள் செய்துவரும்- கொ.சுப.கோபிநாத் இருந்திருந்தால் பதிலும் சொல்லி தொல்காப்பிய மற்றும நன்னூல் நூற்பாவையும் சொல்லியிருப்பார் அய்யா என்று நான் சொன்னேன். அவரும் ஆமோதிப்பது போலத் தலையாட்டினார்.
அல்லது,
தமிழறிஞரும் கோவை சர்வசன மேல்நிலைப் பள்ளியின் மேனாள் தமிழாசிரியருமான அண்ணன், செந்தலை ந.கவுதமன்  அவர்கள்தாம் இதுபற்றிய இலக்கண விளக்கத்தைக் கொடுக்க வல்லார் என்றும் நினைத்துக் கொண்டேன்.
இந்த இலக்கண விளக்கத்தை யாரிடம் கேட்பது?
வள்ளுவர் கால வழக்கு எப்போது மாறியது? ஏன் மாறியது?
வள்ளுவரே வழக்கானது எப்படி?
“மாறுவது மரபு இல்லையேல் மாற்றுவது மரபு“ என்பது சரிதான்.
ஆனால், வெண்பா இலக்கணமோ, ஆய்தக் குறுக்க இலக்கணமோ மாறுமா?  
திருவள்ளுவர் தளைப் பிழை செய்துவிட்டாரா? 
------------------------------------------------ 
இந்த ஆய்வின் தொடர்ச்சியைக் காண  http://valarumkavithai.blogspot.in/2013/08/blog-post_5.html  வருக நண்பர்களே... - நா.மு.
--------------------------------------------------

சிவாஜி கணேசனின் நினைவு நாள் - நா.முத்துநிலவன் பங்கேற்பு

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 12ஆவது நினைவு நாள்

சிவாஜி மன்றத்தின் புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் சுப்பையா தலைமையில் திருக்கோகர்ணம் ஐடிஐ அருகில்உள்ள பள்ளத்திவயல் சாராள் சிறுவர் இல்லத்தில் அன்னதானம் நடந்தது. சிறப்பு விருந்தினராக்க் கலந்து கொண்டு குழந்தைகளுக்கான அன்னதானத்தைத் தொடங்கி வைத்தார் கவிஞர் முத்துநிலவன். (படம்)
அப்போது அவர் “சிவாஜி கணேசனின் ஆளுமை இன்றைய நம் தமிழ்த்திரைப்படக் கலைஞர்களிடம் நீடிக்கிறது. பள்ளிக் குழந்தைகளின் மாறுவேடப் போட்டிகள் தமிழ்நாட்டில் எங்கே நடந்தாலும் அங்கு நம் குழந்தைகளின் மழலை வாயில் வீரபாண்டிய கட்டபொம்மன் வேடமும், வீர வசனமும் தவறாமல் இடம் பெறுகிறது என்றால், அவரது கலை இப்போதும் வாழ்கிறது என்றுதானே பொருள்? சிவாஜிக்கு மத்திய அரசு சிறந்த நடிகர் விருது தரவில்லை என்று சிலர் இன்னும் குறைப்பட்டுக் கொள்கிறார்கள். பட்டதாரிகளுக்குத்தான்  பட்டம் தர முடியும். பல்கலைக்கழகத்திற்கே யார் பட்டம் தரமுடியும்? என்று கேட்டுப் புகழாரம் சூட்டினார்.
அவரது முதல்படமே தமிழ்த்திரைப்பட வரலாற்றில் புயலாக வந்தது. அதுமுதல் அவரது உச்சரிப்பு, மாணவர்களுக்குத் தமிழ்ப்பாடம் சொல்லித்தரும் நம் தமிழாசிரியர்களுக்கே தமிழ் கற்றுத்தருவதாயிருந்தது. அவரது வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் படங்கள் இன்றும் தேசப்பற்றைத் தருவதாக உள்ளன. இப்பொழுது வரும் குத்து, தூள், சுள்ளான், கில்லி முதலான தமிழப்படத் தலைப்புகளை வைத்தவர்கள் அவரிடமிருந்து கற்றுக்கொள்ளவில்லை. அதனால்தான் மறுதயாரிப்பில் வந்த சிவாஜிகணேசனின் கர்ணன் படம் தமிழகத்தின் பல இடங்களில் நூறு நாள்களைக் கடந்து ஓடியதை இன்றைய திரைப்படக் கலைஞர்கள் கவனிக்க வேண்டும் சிவாஜியின் படங்கள் பலவும் இன்றைய தமிழர்களுக்குப் பாடமாகத் திகழ்கின்றன. பண்பாட்டை, குடும்பப் பாசத்தை, கடமை உணர்வை, உழைப்பின்மேன்மையை அவர்படங்களில் பல எடுத்துக் காட்டுவனவாக உள்ளன இவ்வாறு கவிஞர் முத்துநிலவன் பேசினார்.
சிவாஜி மன்றத்தின் மாவட்டப் பொதுச் செயலர் நாகூர்கனி, நகரத் தலைவர் சுப்ரமணியன், நகரச் செயலர் குமார், மாவட்டப் பொருளர் குணசேகரன், நகரத் துணைச்செயலர் அப்துல் ரசாக், மாவட்டச் செயலர் ஸ்ரீதர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். சாராள் சிறுவர் இல்லத்தில் உள்ள 45சிறுவர்-சிறமிகள் மற்றும் முதியோர்களுக்கு அன்னதானம் செய்த சிவாஜி மன்ற நிர்வாகிகளுக்கு சாராள் சிறுவர் இல்லத்தின் நிர்வாகிகள் பிலிப் டைசன் தம்பதியினர் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
----------------------------------------------------------------
செய்தி – தினமணி 23-07-2013 (திருச்சிப் பதிப்பு, புதுக்கோட்டை, பக்கம்-3)
புகைப்படம் – திருக்கோகர்ணம் அசினா ஸ்டுடியோ-அப்துல் ரசாக்.

----------------------------------------------------------------

கவிஞர் வாலியின் இறுதி நிகழ்ச்சி எழுப்பும் கேள்விகள்



(கவிஞர் வாலிக்கு இறுதி அஞ்சலி செய்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர்களில் ஒருவரான கவிஞர்.இரா.தெ.முத்து. படம்-கவாஸ்கர்)
----------------------------------------------------------
தமிழின் மகாகவி பாரதியின் இறுதி ஊர்வலத்தில் வெறும் பதினெட்டுப் பேர்களே கலந்துகொண்டனர் என்றால், அன்றைய (11-07-1921)தகவல் தொடர்பு நிலையோடு தொடர்புடையதாகத்தான் புரிந்துகொள்கிறோம். இன்றும், தமிழக ஊடகங்களால் கொண்டாடப்பட்ட பிரபல திரைப்படக் கவிஞர் வாலிக்கும் அந்தக் கதிதான் எனும்போது, இந்த அவமானம் யாருக்கு என்னும் கேள்வி எழுகிறது.

அவர்கள் வீட்டில் இறுதி ஊர்வலம் மாலை 5மணிக்கு என்று தெரிவித்துவிட்டு பிற்பகல் இரண்டுமணிக்கே வீட்டை விட்டுக் கிளம்பியது ஏன்?

மின்மயானத்தில் அந்தக் கவிஞனுக்கு ஓர் இரங்கல் கூட்டம் நடத்தக் கூட யாரும் ஏற்பாடு செய்யவில்லையே! ஏன்?

இறுதி ஊர்வலம் கூட சரியாக ஏற்பாடு செய்யப்படவில்லையே ஏன்?

முதல்வர்களாகவும் திரைப்படத்தால் உயர்ந்தவர்களாகவும், இவற்றைவிட கவிஞர் வாலியோடு நெருக்கமானவர்களாகவும் அறியப்பட்ட இந்நாள்-மேனாள் முதல்வர்கள் சார்பாக மயானத்திற்கு யாரும் வரவில்லையே ஏன்?

மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதுபெற்ற புகழ்பெற்ற கவிஞருக்கு இறுதி மரிாதை  செலுத்தத் தமிழக அரசின் சார்பில், அமைச்சர்கள் எவரும் மயானத்திற்கு  வரவில்லையே ஏன்?

இந்த நமது கேள்விகளோடு,

பெசந்த் நகர் மின் மயானத்தில் வாலிக்கு இறுதிமரியாதை செய்ய  வந்த வைரமுத்து, பாக்யராஜ், மேத்தா, பா.விஜய், கபிலன் போன்ற கலைஞர்கள் மிகச்சிலருக்குக்கூட, கவிஞர் வாலிக்கு ஒர் இறுதிஅஞ்சலி உரை நிகழ்த்தி, விடை கொடுக்க வேண்டும் என்று உணர்வில்லாது போனது ஏன்? என்று கேட்கும் கவிஞர் இரா.தெ.முத்துவின் கேள்விக்கும் யார் விடைசொல்வார்கள்?
http://thisaichol.blogspot.in/2013/07/blog-post.html

கவிஞர் கண்ணதாசன் பாடல் ஏனோ நினைவுக்கு வருகிறது...
“ஆடும்வரை ஆட்டம் ஆயிரத்தில் நாட்டம்
கூடும்வரை கூட்டம், கொள்ளிவரை வருமா?...
வீடுவரை உறவு, வீதிவரை மனைவி
காடுவரை பிள்ளை, கடைசிவரை யாரோ?”
கடைசி வரை யாரோ????????

கவிஞர் வாலி மறைந்தார் - நா.முத்துநிலவன் அஞ்சலி

பிரபல தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் வாலி மறைந்தார் 
---------------- 
18-07-2013 இன்று தனியார் மருத்துவமனையொன்றில் காலமானார்.
அவருக்கு வயது 82. அவர் சில காலம் நோய்வாய்ப்பட்டிருந்தார்.
கடந்த ஜுன் 8ம் நாள் அன்று வசந்தபாலனின் தெருக்கூத்து படத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல் எழுதிக்கொடுத்துவிட்டு வீடு திரும்பியவர் , அன்று இரவே உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இடையில் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.
ஆனால் அவர் உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டது.
தீவிர சிகிச்சை பயனளிக்காமல் இன்று மாலை ஐந்து மணி அளவில் அவர் இறந்தார்.
ரங்கராஜன் என்ற இயற்பெயர் கொண்டவாலி பிறந்து, வளர்ந்தது திருவரங்கத்தில். தன் நண்பர்களின் துணையுடன் நேதாஜிஎன்னும் கையெழுத்துப் பத்திரிக்கையைத் துவக்கினார். அதன் முதல் பிரதியை வெளியிட்டவர் எழுத்தாளர் கல்கி.
வாலிக்கு ஒவியத்திலும் ஆர்வம் மிகுந்திருந்தது. நன்றாகப் படம் வரையும் திறமையும் இருந்தது. அந்தக் காலகட்டத்தில் ஆனந்த விகடனில் ஓவியங்களை வரைந்து கொண்டிருந்த மாலியைப் போலவே தானும் ஒரு ஓவியராக வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தவரிடம் அவருடைய பள்ளித் தோழர் ஒருவர் மாலி'யைப் போல நீயும் சிறந்த சித்திரக்காரனாக வரவேண்டும் என்றுகூறி 'வாலி' என்னும் பெயரைச் சூட்டினார் என்று கூறப்படுகிறது.
வாலி ஏறத்தாழ ஐந்து தசாப்தங்களாக தமிழ்த் திரையுலகில் முக்கியமானதொரு ஆளுமையாக விளங்கினார். இவ்வளவு நீண்ட காலம் நிலைத்து நின்ற திரைப்படப் பாடலாசிரியர் வேறு எவரும் இல்லை என்கிறார் திரைப்பட ஆய்வாளர் வாமனன். வாலி பத்தாயிரம் பாடல்களுக்கும் மேல் எழுதியதாகக் கருதப்படுகிறது.
2007ம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது பெற்ற வாலி பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம் மற்றும் அவதார புருஷன் போன்ற கவிதை நூல்களையும் படைத்துள்ளார்.
அவரது மறைவிற்கு திரையுலகப் பிரமுகர்கள் பலர் அஞ்சலி செலுத்துவருகின்றனர். 
நன்றி - http://www.bbc.co.uk/ 
 -------------------------------------------------------------- 
கவிஞர் வாலி மறைந்தார் - 
ஒரு பாடல் மால்மறைந்தது!


சுமார் 15,000 திரைப்பாடல்கள் எழுதியதாகச் சொல்லப்படும் அவருடைய பாடல்களில் ஆகச்சிறந்த பாடல், படகோட்டி படத்தில் எம்ஜிஆருக்காக அவர் எழுதிய இந்தப் பாடல்தான்


தரைமேல் பிறக்க வைத்தான் எங்களைத்

தண்ணீரில் பிழைக்க வைத்தான்

கரைமேல் இருக்க வைத்தான் பெண்களைக்

கண்ணீரில் குளிக்க வைத்தான்


கட்டிய மனைவி தொட்டிலில் பிள்ளை

உறவைக் கொடுத்தவர் அங்கே

அலைகடல் மேலே அலையாய் அலைந்து

உறவைக் கொடுப்பவர் இங்கே

வெள்ளி நிலாவே விளக்காய் எரியும்

கடல்தான் எங்கள் வீடு

முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும்

இதுதான் எங்கள் வாழ்க்கை  -- (தரைமேல் பிறக்க


கடல்நீர் நடுவே பயணம் போனால்

குடிநீர் தருபவர் யாரோ?

தனியாய் வந்தோர் துணிவைத் தவிர

துணையாய் வருபவர் யாரோ?

ஒருநாள் போவார் ஒருநாள் வருவார்

ஒவ்வொரு நாளும் துயரம்

ஒருஜான் உயிரை வளர்ப்பவர் உயிரை

ஊரார் நினைப்பது சுலபம்    -- (தரைமேல் பிறக்க

      (இந்தப் பாடலுக்குக் கோனார் நோட்ஸ் எதுவும் தேவைப்படாதுல்ல?) 
      
             தனது மற்ற படங்களில் எல்லாம் வேகமாக ஓடிஆடி, ஏறி இறங்கிக் குதித்துத் தன்னை மிகுந்த உற்சாகியாகவே காட்டிக்கொள்ளும் எம்ஜிஆர் அனேகமாக -ஒரு பாடல் முழுவதும் உட்கார்ந்தும்  -- மெல்ல ஒரே இடத்தில் நடந்து நடித்த பாடல் காட்சி இது ஒன்றுதான் என்று நினைக்கிறேன். அதற்குக் காரணம் வாலியின் பாடல் வரிகளின் வலிமை.  
           அண்மையில மறைந்த திரு டி.எம்.சௌந்தர்ராஜன் அவர்களின் மணிக்குரலில் இந்தப் பாடலைக் கேட்டவர்கள் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. இந்தப் பாடலைத் தமிழ்நாட்டின் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட மேடைகளில் திண்டுக்கல் திரு ஐ.லியோனி அவர்களின் தலைமையிலான பட்டிமன்றங்களின் போது பாடியிருக்கிறேன் என்பதை நன்றியுடன் நான் சொல்லியாக வேண்டும். ஏனெனில், என்னுடன் பேசும் மதுக்கூர் இராமலிங்கம் ஒருமுறை நகைச்சுவையாகச் சொன்னார் -“வாலி எழுதி, டிஎம்எஸ் பாடின இந்தப் பாடலைப் பாட டிஎம்எஸ் வாங்குன காச விட இந்தப் பாட்டப் பாடி நீ அதிகம் சம்பாதிச்சிட்டியேண்ணே?!!”  அந்த அளவிற்கு லியோனியும் நான் பாடுவதை ரசிப்பார். ஒரு வேளை நான் அந்தப் பாடலைப் பாட மறந்துவிட்ட நேரங்களில், அவரே நினைவூட்டுவது போலக் குறிப்புத் தருவார். அந்த அளவிற்கு என்வாழ்விலும் இந்தப் பாடல் வரிக்கு வரி கலந்துவிட்டது என்பது உண்மைதான்.
      கடந்த ஜூன் 7ஆம் தேதி, தான் எழுதிய அழகிய சிங்கர்நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டதுதான் அவர் கலந்துகொண்ட கடைசி இலக்கிய நிகழ்ச்சி. அடுத்தநாள் இயக்குநர் வசந்தபாலனின் தெருக்கூத்து  படத்திற்காக ஏஆர் ரகுமானுடன் பணியாற்றி எழுதிய பாடல்தான் அவரது கடைசித் திரைப்பாடல்.
      டி.ராஜேந்தர் பாணியில் மேடைக் கவிதை எழுதுவது அவருக்கு மிகவும் பிடிக்கும்.
கலைஞர் முதல்வராக இருந்தபோது – தயாநிதி மாறன் தொலைத்தொடர்புத் துறையின் மத்திய அமைச்சராக இருந்தபோது- நடந்த கவியரங்கம் ஒன்றில் – கலைஞர் ஒரு கிலோ அரசியை (சில ரேஷன் கடைகளில்) ஒரு ரூபாய்க்குத் தந்ததையும், அதே நேரத்தில், தயாநிதி மாறன் “ஒரு ரூபாய்க்கு ஒரு தொலைபேசி அழைப்பு“ என்பதை நடைமுறைப் படுத்தியதையும் சேர்த்து வச்ச 'பஞ்ச்கவிதை' மிகவும் புகழ்பெற்றது                
“தாத்தா கொடுத்தது ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ
         பேரன் கொடுத்தது ஒரு ரூபாய்க்கு ஒரு helloஎன்பது போலும் அவரது கவிதைகள் பலப்பல! (பிறகு அதுவும் மாறி-ஒரு மணித்துளிக்கு ஒரு பைசா என்று மலிவாகி- இப்போது தொலைத்தொடர்புத் துறையே நூறு விழுக்காடும் அந்நியமயமானதன் காரண கர்த்தாவும் அவர்தான் என்பதையெல்லாம் இப்ப நினைக்க வேண்டியிருக்கிறது!)

அய்யாவையும் பாடினார், அம்மாவையும் பாடினார்!
      கலைஞர் முதல்வராக இருந்தபோது –அவரும் விரும்பி அழைத்து- நடத்திய பொங்கல் தொலைக்காட்சி கவியரங்குகளில் கவியரங்கத்திற்கே உரிய முறையில் சொல் விளையாட்டு நடத்தி பார்வையாளர்களின் கைத்தட்டலை அரங்கில் அள்ளிக்கொண்டது போலவே, பின்னர் ஜெயலலிதா முதல்வரான கையோடு “ரங்கநாயகியேஎன்று (ஒரு புகழ்பெற்ற வார இதழில்) எழுதிய கவிதையையும் சேர்த்துத்தான் வாலியை நினைக்க வேண்டியிருக்கிறது.  
    கவிஞர் வாலி இராமயாணத்தைப் புதுக்கவிதையில் சொன்னதும் இப்படித்தான் இருந்தது. எம்ஜிஆர் ஒரு பெரும் அரசியல் தலைவராக உருவெடுக்க்க் காரணமான பலநூறு பாடல்களை எழுதிய பாவம் வாலியையே சாரும்.  “பெரியாரின் சீடரான“ அண்ணாவைத் தலைவராக்க் கொண்டவர் என்று தன்னைக் காட்டிக் கொண்டாலும், ஒருநாளும் “சாமி இல்லைஎன்ற பெரியாரின் கருத்தை எம்ஜிஆர் காட்டிக்கொண்டதே இல்லை! –வெகுஜனத் தலைவருக்கு அது ஆகாது என்பதால்!
       அதனால்தான், “கடவுள் ஏன் கல்லானான் மனம் கல்லாய்ப்போன மனிதர்களாலே“ என்பன போலும் “சீர்திருத்தப் பாடல்“ வகைகளை மட்டுமே எம்ஜிஆர் எடுத்தாண்டார்.
அந்த எம்ஜிஆர் ஒரு சமயம் கண்ணதாசன் மேல் வருத்தத்தோடு இருந்த போதுதான் வாலி எம்ஜிஆருடன் நெருக்கமாக முடிந்தது. 1962 -தேர்தல் நேரத்தில்- வெளிவந்த “நல்லவன் வாழ்வான்” படத்தில் இடம்பெற்ற, “சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள்”  எனும் பாடல் தான் வாலி எம்ஜிஆருக்காக எழுதிய முதல் பாடல்.
     கண்ணதாசனுக்கு எம்ஜிஆர் “ஆகாமல்“இருந்த நேரத்தில் கிடைத்த வாலியை மிகவும் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார் எம்ஜிஆர். அந்த நேரம்தான் (1964) படகோட்டி வந்தது. அதில் அனைத்துப் பாடல்களையும் வாலியே எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

எம்ஜிஆரின் அடையாளப் படம் படகோட்டி. (TYPICAL MGR FILM) அதில்
ஒரு காதல் ஜோடிப் பாடல் (தொட்டால் பூ மலரும்) 
ஒரு காதல் ஜோடி சேரும் பாடல் (பாட்டுக்குப் பாட்டெடுத்து)
ஒரு காதல் பிரிவுப் பாடல் (என்னை எடுத்து தன்னைக் கொடுத்து) 
ஒரு எதார்த்தப் பாடல் (தரைமேல் பிறக்க வைத்தான்) 
ஒரு தத்துவப் பாடல் (கொடுத்ததெல்லாம் கொடுத்தான்) 
ஒரு கவர்ச்சிப் பாடல் (அழகு ஒரு ராகம்) நம்பியார் பார்வையில் நாயகி சரோஜா தேவியே வந்து கிளப் டான்ஸ் ஆடுவார் -அப்றம் எப்டி மீனவப்படத்துல கவர்ச்சி காட்றது?)
ஒரு ஜாலிப் பாடல் (கல்யாணப் பொண்ணு) (எம்ஜிஆர் மாறுவேடம்னா ஒரு மீசை அல்லது ஒரு –ரிகஷாக்காரன் படத்துல வர்ர மாதிரி- பெரிய மரு ஒண்ண எடுத்து மூஞ்சியில ஒட்ட வச்சிக்கிறது அவ்ளோதானே? அவ்ளோதான், அடையாளம் தெரியாதுல்ல?)
 ஒரு பூடகப் பாடல் (நானொரு குழந்தை)
 என்று வகைக்கு ஒன்றாகப் போட்டுத் தாக்கியிருப்பார் எம்ஜிஆர். 
 அனைத்துப் பாடல்களும் வாலியே எழுதியன என்பது குறிப்பிடத்தக்க செய்தி
 பின்னர் வந்த பெரும்பாலான படங்களில் அனேகமாக “எம்ஜிஆர்-ஃபார்முலா“பாடல்களை எழுதும் வாய்ப்புகள் வாலிக்கே வழங்கப்பட்டன என்பது திரைப்படத்துடன் கலந்த தமிழகத்தின் அரசியல் வரலாறு!
நான்கு தலைமுறையாக எழுதிக்கொண்டிருந்தவர் வாலி ?
                எத்தனை காலம் மனிதன் வாழ்ந்தான் என்பது கேள்வியில்லை அவன்
               எப்படி வாழ்ந்தான் என்பதை அறிந்தால் வாழ்க்கையில் தோல்வியில்லை என்றதற்கு ஏற்ப, 82வயது வரை வாழ்ந்தார் என்பதைவிடவும் 80வயதிற்கும் மேல் எழுதிக்கொண்டே இருந்தார் என்பதுதான் ஒரு வியப்பான செய்திதான். ஆனால், இன்றைய விடலைக் கதாநாயகற்கு ஏற்ப, “முக்காலாபாடல்களையும் முக்கும் பாடல்களையும் (எப்படி எப்படிவாலி இதையும் எழுதினதெப்படி?) அவர் எழுதியது அவருக்கே பெருமை சேர்ப்பதாக இல்லை என்பதை மறைக்க முடியாது. எல்லாரும் மெட்டுக்குப் பாட்டெழுதுவதாகச் சொல்கிறார்கள் நான் துட்டுக்குத்தான் பாட்டெழுதுகிறேன் என்று பகிரங்கமாகவே சொன்னவர் அவர்.
அந்த வகையில் 
அவர் கேட்டவர்க்கு, கேட்ட நோக்கமறிந்து, ஒரு சூப்பர் மார்க்கெட் போல அவரது நவீன மொழியில் சொ்ல்வதானால், “பாடல் மால்போலவே வாழ்ந்து எழுதிக்குவித்து, மறைந்து விட்டார் என்றுதான் சொ்ல்ல வேண்டும். 

    ரஜினிகமலுக்கான அம்மா செண்டிமெண்ட் பாடல் சிலவும்,  சில எம்ஜிஆர் பாடல்களும்
                “என்மதமா உன்மதமா ஆண்டவன் எந்த மதம்?

     நல்லவங்க எம்மதமோ ஆண்டவன் அந்த மதம்“ – முதலான சிலபாடல்களும், பல்லாண்டுகள்   அவரைப் பேச வைக்கும் என்பது உண்மைதான்.
      வைரமுத்து திரைப்பாடல்களில் கண்ணதாசனை அடுத்துச் சிகரங்கள் பலவற்றைத் தொட்டுவருகிறார் என்பதும், அவர் கண்ணதாசனைப் போலவே பாடல்களையல்லாமல், கவிதைகளாலும் பிற எழுத்துகளாலும் பேசப்படுகிறார் என்பதும் வாலிக்குள் நிகழ்த்திய மாற்றமே அவரைப் புதுக்கவிதை எழுத வைத்த்தாக நான் நினைக்கிறேன். இல்லையெனில்,
வாரஇதழ்கள் கேட்டதற்கேற்ப ராமாயணமும், மகாபாரதமும் எப்படி புதுக்கவிதையில்...?
இவையிரண்டுக்கும் முன்னமே புதுக்கவிதைத் தொகுப்பு ஒன்றை வெளியிட்டிருந்ததும் இதே காரணத்தால்தான் என்றும் நான் நினைக்கிறேன். அதில் யானைக்கு மதம் பிடிக்கவில்லை என்னும் ஒரு நல்ல கவிதை இருப்பதாக என் நினைவு சொல்கிறது.


கவிதைகள், நாடகங்கள், சிறுகதைகள், உரைநடை என அவர் எழுதிய நூல்கள்           இருபதுக்கும் மேல்...
இவற்றில்- 
பொய்க்கால் குதிரைகள் (புதுக்கவிதைகள்),
வாலி ஆயிரம் (திரைப்படப்பாடல்கள்),
அவதார புருஷன் (புதுக்கவிதையில் இராமாயணம்),
பாண்டவர் பூமி (புதுக்கவிதைகயில் மகாபாரதம்),
நானும் இந்த நூற்றாண்டும் (திரையுலகில் வாலி)
முதலான அவரது நூல்கள் புகழ்பெற்றவை.

கவிஞர் வாலிக்கு 2007ஆம் ஆண்டு, மததிய அரசின் பத்மஸ்ரீ விருது கிடைத்தது.

மறக்க முடியாத இவரது பாடல்கள் - 
நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்
புதிய வானம் புதிய பூமி
மூன்றெழுததில் என் மூச்சிருக்கும்,
ஏமாற்றாதே ஏமாறாதே,
ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கையில்லை,
சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ,
தரைமேல் பிறக்கவைத்தான்,
எல்லாவற்றிற்கும் மேலாக-எம்ஜிஆர் அமெரிக்கா புரூக்ளின் மருத்துவ மனையில் இருந்தபோது தமிழகமே பாடித்துதித்து அழுத -

இறைவா உன்மாளிகையில்
  எத்தனையோ மணிவிளக்கு....
  தலைவா உன் காலடியில் என்
  நம்பிக்கையின் ஒளிவிளக்கு

  ஆண்டவனே உன் பாதங்களை நான்
   கண்ணீரில் நீராட்டினேன் - இந்த
  ஓருயிரை நீ வாழ வைக்க - இன்று
   உன்னிடம் கையேந்தினேன்

  உள்ளமதில் உள்ளவரை
  அள்ளித்தரும் நல்லவரை
  விண்ணுலகம் வாவென்றால்
  மண்ணுலகம் என்னாகும்?

  உன்னுடனே வருகின்றேன்
  என்னுயிரைத் தருகின்றேன்
  மன்னன் உயிர் போகாமல்
  இறைவா நீ ஆணையிடு...
  இறைவாநீ ஆணையிடு ஆணையிடு ஆணையிடு 
     
       திரையுலகில் தனக்கு “புனர்ஜென்மம்“ தந்து வாழவைத்த எம்ஜிஆரை, வாலி தன் தமிழ் வேண்டுதலால் அரசியலில் “புனர்ஜென்மம்“ தந்து வாழவைத்த பாடல் என்று இந்தப் பாடலைச் சொல்லலாம். தலையைக் காட்டாமலே தமிழகத்தின் முதல்வராக எம்ஜிஆர் (1984) தேர்ந்தெடுக்கப்பட்டதில் இந்தப் பாடலுக்கும் ஒரு பெரும் பங்குண்டு! இந்திரா காந்தி இறந்தபின் ராஜிவ் காந்தி இந்தியப் பிரதமராகவும், அமெரிக்க மருத்துவமனையிலிருந்த எம்ஜிஆர் தமிழக முதல்வராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு! அந்தத் தேர்தலில் காங்கிரஸ் அதிமுக கூட்டணி எழுப்பிய தேர்தல்முழக்கம் கேட்ட யாருக்கும் மறக்காது - 
“தாயில்லாப் பிள்ளைக்கு ஒரு ஓட்டு, வாயில்லாப் பிள்ளைக்கு ஒரு ஓட்டு” 
இதுதான் தமிழக-இந்திய அரசியல்! இதில் மறைமுகமாக எம்ஜிஆருக்கு உதவியவை, லட்சக்கணக்கான ஒலிபெருக்கிகள் வழியாகக் கிராமங்களில் எல்லாம் ஒலிபரப்பான வாலியின் இந்தப் பாடல் வரிகள் என்பது முக்கியமான குறிப்பு.

       கவிஞர் கண்ணதாசன் இறந்தபோது வாலி எழுதியதாக ஒரு வார இதழில் நான் பார்த்த கவிதை ஒன்று மறக்க முடியாதது-
      “எழுதப் படிக்கத் தெரியாத
       எத்தனையோ பேரில்
       எமனும் ஒருவன்,
       ஒரு கவிதைப் புத்தகத்தை
       கிழித்துப் போட்டுவிட்டான்
இது கூட ஆங்கிலக் கவியொன்றைத் தழுவி எழுதப்பட்டதுதான்.
பாரதி பற்றிப் பாரதிதாசன் பாடிய புகழ்பெற்ற நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா எனும் வானொலிக் கவிதையே பாரதிதாசனுக்கும் பொருந்தும் என்பார்கள். அதுபோல, எத்தனை விமர்சனங்கள் இருந்தாலும் கண்ணதாசன் பற்றிய இந்த வாலியின் கவிதை வாலிக்கும் பொருத்தம்தான்.
வாலிபக்கவிஞர் வாலி வயதாகாமலே 82வயதில் இறந்துவிட்டார்.
மீனவருடன் அந்தக் கடல்மீனும் கண்ணீர்விடுகிறது.

        எங்கள் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் ஒரு இசுலாமியத் தாயிடம் முலைப்பால் குடித்த பிள்ளைதான் ரெங்கராஜன் எனும் வாலி என்பது உட்பட இன்னும் செய்திகள் ஏராளம் இருக்கின்றன. சொன்னால் கட்டுரை நீீீீீீீீீண்டுகொண்டே போய்விடும் என்பதால் வாசகர்களும் தேடிப்படிக்க சிலவற்றை விட்டு இந்த அளவில் அந்த வாலிப-அவதாரபுருஷ-கவிக்கு எனது அஞ்சலியைச் செலுத்தி நிறைவு செய்கிறேன். 
----------------------------------------------------------- 
இந்த நமது வாலியைப் பற்றிய வலைப்படைப்பு நமது வலைப்பக்கத்தின் 175ஆவது படைப்பு என்பது குறிப்பிடத்தக்கது- நா.முத்துநிலவன்.
------------------------------------------------------------  
பி.கு. -------- 
இந்த நம் படைப்பை, முகநூல் வழியாகப் படித்த தீக்கதிர் நாளிதழின் ஆசிரியர்குழுத் தோழர் மயிலை பாலு, தொலைபேசியில் பேசினார். அதன்படிகலை-இலக்கிய இணைப்பாகத் திங்கள் கிழமைதோறும் தீக்கதிரோடு வெளிவரும் இலக்கியச் சோலையில்             22-07-2013 அன்று கடைசிப் பக்கக் கட்டுரையாக வெளி வந்துள்ளது.

தீக்கதிர்-நாளிதழ் ஆசிரியர் குழுத் தோழர்களுக்கு நன்றி -  
--------------------------------------------------------------
--நம் கட்டுரையில் ஒரு பிழை நேர்ந்துவிட்டது -
----------------------------------------------------------------------
 நான்யார், நான்யார், நீயார்?” என்னும் பாடல்தான் எம்ஜிஆருக்காக வாலி எழுதிய முதல் பாடல் என்று வந்திருப்பது தவறு. அந்தப்பாடல், எம்.ஜி.ஆருக்காகப் புலமைப் பித்தன் எழுதிய முதல்பாடல் (1964)என்பதே சரி. எம்ஜிஆருக்காக வாலி எழுதிய முதல்பாடல் நல்லவன் வாழ்வான்”(1962) படத்தில் இடம்பெற்ற சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள் என்னும் பாடல்தான். தவறைச் சுட்டிக்காட்டிய நமது மதிப்பிற்குரிய  சன் டிவி திரு.வீரபாண்டியன்,  புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தொகுதியின் மேனாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக இலக்கிய அணி மாநிலப்பொதுச்செயலருமான கவிச்சுடர் இரா.சு.கவிதைப்பித்தன்,  நாகர்கோவில் BSNLEU சங்கத் தலைவர்கள் இந்திரா-பழனிச்சாமி, ஈரோடு தோழர் கணபதி ஆகியோர்க்கு என் நன்றி.

----------------------------------------------------------------------------------------------------  இந்தத் திருத்தத்தை  நமது வலையில் வெளியிடுவது போலவே,  தீக்கதிரின் இலக்கியச் சோலை ஆசிரியர் குழுவையும் கேட்டுக் கொண்டுள்ளேன். வலையில் திருத்தம் வெளியிடுவதை விட,  மூலக் கட்டுரையில் திருத்தம் செய்துவிடுவதே சிறந்தது என்பதால் அப்படியே செய்தும் விட்டேன் என்பதை நமது வலை நண்பர்களுக்கும் தெரிவிக்கிறேன். இனி இதுபோல தகவல் பிழை நேராமல் பார்த்துக்கொள்வேன் என்று உறுதியளிப்பதோடு,  தவறு நேர்ந்தால் தோழர்கள் தவறாமல் தெரிவிக்கவேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். நன்றி வணக்கம். 
-----------------------------------------------------------------