கம்பனும் காரல் மார்க்சும் - ஒரு முன்னோட்டம்




இந்தத் தலைப்பில் 
ஒரு நீண்ட கட்டுரை    எழுத வேண்டும் என்று நீண்ட நாளாக நெஞ்சுக்குள் ஓடிக் கொண்டே இருந்தது.   இப்போதுதான் அதற்கான காலம் கனிந்திருக்கிறது. கட்டுரை எழுது முன் பேசிவிடும் ஒரு வாய்ப்பைக் காரைக்குடிக் கம்பன் கழகத்தார் எனக்குத் தந்திருக்கிறார்கள். வரும் 01-12-2012 சனிக்கிழமை மாலை, காரைக்குடிக் கம்பன் மணிமண்டபத்தில் என்னை இந்தத் தலைப்பில் பேச வரும்படி அழைத்திருக்கிறார்கள்.
     எத்தனையோ –நூற்றுக்கும் மேற்பட்ட- கட்டுரைகள் எழுதியாயிற்று, எத்தனையோ –மூவாயிரத்திற்கும் மேற்பட்ட- மேடைகளில் பேசியாயிற்று. இதில் என்ன “முன்னோட்டம்“ என்கிறீர்களா? தலைப்புத்தான் காரணம்.
     தமிழ் இலக்கிய வரலாற்றைக் கம்பனை விட்டுவிட்டு எழுத எந்தக் கொம்பனாலும் இயலாது. போகிற போக்கில் –சேக்கிழார் போலும் மதவெறி பிடித்த புலவர்களை- தட்டிவிட்டுப் போவதுபோலக் கம்பனையும் தட்டிவிட்டுப் போகலாம் என்று எண்ணுகிறவர்கள்தாம் ஏமாந்து போவார்கள்.
     கம்பனை-  “தீ பரவட்டும்என்று கொளுத்தியதும் தவறு.
தேரெழுந்தூரில் அவனைத் தெய்வமாக்கியதும் தவறு. இரண்டையும் செய்தவர்கள், சென்னை உலகத் தமிழ் மாநாட்டின்போது கம்பனுக்குச சிலையும் வைத்தார்கள்!
வள்ளுவன், கம்பன், பாரதி மூவரும் தமிழின் முப்பெரும் மகாகவிகள். இதை நான் பல மேடைகளிலும் எனது கட்டுரைகளிலும் திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறேன். கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டில் கம்பனைப் பற்றிய ஆய்வுகள் இடம்பெற வேண்டும் எனக் கோரி நான் எழுதிய கட்டுரை 17-05-2010 “ஜனசக்தி“ நாளிதழ் கடைசி முழுப்பக்கம் வெளியானது.   இந்த வலைப்பக்கத்திலும் பார்க்கலாம்  http://valarumkavithai.blogspot.in/2012/01/blog-post.html
நண்பர் பட்டிமன்றப் பேச்சாளர் இனியவனும் தனது வலையில் அதை எடுத்து இட்டிருக்கிறார். http://iniyavanin.blogspot.in/2010/05/blog-post_26.html
கம்பனை ஒப்பிட்டு ஏராளமான ஆய்வுநூல்கள் வந்திருந்தாலும், “கம்பனும் கார்ல்மார்க்சும்“ எனும் தலைப்பில் இதுவரை வரவில்லை என்றே நினைக்கிறேன். நாம்தான் தொடங்க வேண்டும். இது மார்க்சிய வாதிகளுக்கு மட்டுமல்ல, கம்பனின் தமிழை உண்மையாக நேசிப்பவர்களுக்கும் நல்லதுதான் என்று நான் நம்புகிறேன்.
இது ஒரு புதியவம்புதான்.... கலகம்பிறக்காமல் நியாயம் இல்லையே!
ஆனாலும் நமக்குச் சரியென்று பட்டதைச் சரியென்று சொல்லித்தானே பழக்கம்? அதைத்தானே மார்க்சும், பெரியாரும் நமக்குச் சொல்லித்தந்திருக்கிறார்கள்? அவர்கள் வழியே இயங்குவோம்.
    ”மானுடம் வென்றதம்மா!” - என்று மன்னராட்சிக்காலத்திலேயே  பாடிய மகாகவி கம்பனின் தமிழ் சரியான பார்வையோடு புரிந்துகொள்ளப் பட வேண்டும் என்பதே எனது நோக்கம்.
-------------------------------------- 
கட்டுரை உள்ள நம் வலைப்பக்க இணைப்புக்குச் சொடுக்குக -
http://valarumkavithai.blogspot.in/2013/03/blog-post_754.html
-------------------------------------------------------------------

”கேடி பில்லா கில்லாடி ரங்கா” - வேண்டாம் பாண்டிராஜ் இந்த விபரீத தலைப்பு!


                      
       பசங்க, வம்சம், மெரினா படங்களைத் தொடர்ந்து இயக்குனர் பாண்டிராஜ் இயக்கும்  படம் கேடி பில்லா கில்லாடி ரங்கா”. விமல்சிவகார்த்திகேயன், பிந்துமாதவி, ரெஜினா, சூரி, சுஜாதா நடிக்கின்றனர்.
                                            (இணையத்தில் கிடைத்த செய்தி
                                       ( http://cinema.nakkheeran.in/Talkies.aspx?T=1731)

                   “பசங்க“ படத்தை எடுத்த இளம் இயக்குநர் பாண்டிராஜ் அதன் மூலம் பாராட்டுகளை அள்ளிக் குவித்தார். அவர் பிறந்த எங்கள் மாவட்டமான புதுக்கோட்டை மட்டுமல்ல ஊர்-உலகமே புகழ்ந்தது.
                   புதுக்கோட்டை மாவட்டம் நச்சாந்துப் பட்டிப் பள்ளியில் படித்த அனுபவத்தை அப்படியே திரை மொழியில் கொண்டுவந்து கல்வி உலகத்தை மட்டுமின்றித் திரைஉலகத்தையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.
                   அந்தப் படத்திற்குத் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அந்த ஆண்டின் சிறந்த படங்களில் ஒன்றாகத் தேர்வு செய்து, பரிசளித்துப் பாராட்டியது. சங்கத்தின் தலைவர் பேரா.அருணன், பொதுச்செயலர் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன், மற்றும் துணைப்பொதுச்செயலராக இருந்த எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி ஆகியோர் பரிசளித்துக் கௌரவிக்க, சென்னையில் நடந்த அந்தவிழாவில் அந்தப் படத்திற்கான பாராட்டுரையை அப்போது சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவராக இருந்த நான்தான் ஆற்றினேன்.
                  அப்போது நான் பேசிய பேச்சின் இடையே, ஆசிரியர்கள் என்பவர்கள் பள்ளியில் இருக்கும் பெற்றோர்கள், பெற்றோர்கள் என்பவர்கள் வீட்டில் இருக்கும் ஆசிரியர்கள் என்பதாகப் பெற்றோர்களும், ஆசிரியர்களும் மட்டுமல்ல, மாணவர்களும் புரிந்துகொண்டால் கல்வி கற்கணடாகும். என்று பேசினேன். 
                    இது நான் எப்போதும் பேசுவதுதான். இதை எடுத்துத் தனது “ஈஸியாக ஜெயிக்கலாம், ஜாலியாகப் படிக்கலாம்“ எனும் நூலில் முதல் பக்கத்தில் மேற்கோள் போலக் கட்டம் கட்டிப் போட்டுக் கொண்ட என் மாணவர் கிருஷ்ண.வரதராஜன், இது பற்றி எனக்கு நன்றி கூடத் தெரிவிக்க வில்லை என்பதும், இதை அறியாத “புதிய தலைமுறை“ வார இதழ், அந்த நூலைப் பற்றிய அறிமுகத்தில் இதே வாசகத்தைத்தான் பக்க நடுவில் கட்டம் கட்டிப் போட்டிருந்தது என்பதும் தனி ஒரு சோக நகைச்சுவை!
                  மேடையில் இருந்து இதைக் கேட்டுக்கொண்டிருந்த இயக்குநர் பாண்டிராஜ். தனது அடுத்த படமும் கல்வியைப் பற்றியதுதான் என்றும், “கவிஞர் முத்துநிலவனின் இந்த வரிகளை அந்தப் படத்தில் பயன்படுத்திக் கொள்ள அவர் அனுமதிக்க வேண்டும்“ என்றும் பேசினார். நானும் “நல்லாப் பயன்படுத்திக்கங்க இயக்குநரே!“ என்று அப்போதே தெரிவித்தேன்.
                   ஆனால் அவரது அடுத்தடுத்த வம்சம், மெரினா படங்களில் அந்த வரிகளைப் பயன்படுத்தியதாகத் தெரியவில்லை. சரி, போகட்டும்.
                   இப்போது அந்த அறிமுகம் தந்த உரிமையில் கேட்கிறேன் -
                   
                    அடுத்த உங்கள் படத்திற்கு “கேடி பில்லா கில்லாடி ரங்கா” என்று பெயர் வைத்திருப்பதாகப் பத்திரிகையில் படித்தேன், வேண்டாம் பாண்டிராஜ் இந்த விபரீத தலைப்பு! 
                     என்னதான் நகைச்சுவையாகப் படமோ, படத்தலைப்போ இருந்தாலும் இந்த இருவரும் யார் என்ற செய்திப் பின்னணி தெரியாமல் தலைப்பு வைக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.
                    யார் இந்த பில்லாவும் ரங்காவும்- 
                    இந்த இணைப்பைச் சொடுக்கிப் பாருங்கள்...           
                    http://www.leadandhra.com/News/4180
பார்க்க நேரமில்லாதவர்களுக்குச் சொல்கிறேன் - 1978இல் இந்தியத் தலைநகராம் டெல்லியில் பள்ளிச் சிறுவன் சிறுமியான சஞ்சய் மற்றும் கீதாவைக் கடத்திக்கொண்டுபோய் படுகொலை செய்த பாவியர்தாம் அந்த இருவரும். அதிலும் பச்சிளம் குழந்தையான கீதாவைக் கொடுமையான முறையில் பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற படுபாவிகள்தாம் அந்த இருவரும். பின்னர் 1982இல் அவர்களுக்குத் தூக்குத் தண்டனை தரப்பட்டது என்பதை அன்றைய ஊடகங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டின.
                   அந்தச் செய்தி தந்த வெளிச்சத்தில்தான் அமிதாப்பச்சன் “டான்” என்று படம்எடுத்துக் கல்லாக் கட்டினார். உடனே அந்தப் படத்தைத் தமிழில் எடுத்து, அதற்கு “பில்லா“ என்று பெயர் சூட்டினர் பெருங்குணத்தார். வசூலில் பெரும் போடு போட்ட அந்தப் படம்தான் ரஜினியை சூப்பர் ஸ்டார் ஆக உறுதிப்படுத்தியது என்பார்கள் கோலிவுட் வரலாறு தெரிந்தோர்.
                    மீண்டும் இதே பெயரில் அஜீத் நடித்த படம் வெற்றிபெறவே அதன் இரண்டாம் பாகம் தயாராவதாகவும் கேள்வி. இவர்களிடம் நாம் போய் இந்தக் கேள்வியைக் கேட்கமுடியாது, ஏனெனில் இவர்கள் யாரும் “பசங்க“ படம் எடுத்த பாண்டிராஜ் போல மாணவர் உலகத்தைப் பற்றிக் கவலைப்பட்டுப் படம் எடுத்தவர்கள் இல்லை.
                      பசங்க, மெரினா போல, குழந்தை உளவியலும், குழந்தைகளுக்கான கல்வியின் அவசியத்தையும் அறிந்து, புரிந்து படம் எடுத்து வெற்றியும் பெற்ற பாண்டிராஜ் அதற்கு நேர் எதிராக பில்லா ரங்கா என்று படம் எடுப்பதைத்தான் தாங்க முடியாமல் எழுதிக்கொண்டிருக்கிறேன்.
                       திரைப்படங்களுக்குப் பெயர் வைக்கும்போது காரணமில்லாமல் தான் வைக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருக்கும் இயக்குநர்கள் உண்டு. (ப்ச்.. மெஸேஜ் சொல்லியிருக்கிறார் என்று யாரும் சொல்லிவிடக் கூடாது என்பதில் எவ்வளவு தெளிவு பாருங்கள்...
                       இப்படித்தான் இரட்டையாகப் பிறந்த தந்தைக்கு மீண்டும்இரட்டைக் குழந்தைகள் எனும் கதைக்கு “ஜீன்ஸ்”(GENES) என்று அறிவியல் படிப் பெயரிட்டிருக்கும் சங்கர் எனும் இயக்குநரை என் போன்றவர்கள் சிந்தித்துப் பாராட்டி விடுவார்களோ என்று அஞ்சித்தான் அந்தப் பட விளம்பரத்தில் ((JEANS) என்று போட்டுவிட்டார் சங்கர் ! தெளிவு! தெளிவு! )
                      எத்தனையோ தியாகத் தலைவர்கள், தத்துவமேதைகள், அறிவுலக மற்றும் கலையுலக மேதைகள் வாழ்ந்து சாதித்து மறைந்த நம் நாட்டில் இப்படி சமூகப் பொறுப்பில்லாமல் கேடிகளின் பெயரைத் தன் திரைப்படத்திற்கு வைக்கும நிலை --அவர் முன்னர் கவலைப்பட்டு எடுத்த பிஞ்சுக் குழந்தைகளின் நெஞ்சில் நஞ்சைக் கலக்கும் செயல்தான் என்பதை உணர்ந்து-- நலல இயக்குநரான பாண்டிராஜ் அவர்களுக்கு எப்போதும் வரவேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
------------------------------------------------------------------------------------------------------------
நன்றி - “கீற்று” இணைய இதழ் - http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=21956:2012-11-12-10-37-24&catid=10:cine-news&Itemid=130
எடுத்து வெளியிட்ட  மாத இதழ் ”மணிப்புறா” புதுக்கோட்டை - ஏப்ரல்,2013
------------------------------------------------------------------------------------------------------------

தீபாவளி 13-11-2012 அன்று கலைஞர் தொலைக்காட்சியில் நான்...

என்ன பண்ணச் சொல்றீங்க...? 
அல்லது தரிசு நிலம் பரிசு! 
(படைப்புக்கு ஒரு தலைப்புத்தான் வைக்கணுமா என்ன?)

1980கள் தொடங்கி, நான் எத்தனையோ கட்டுரை-கவிதைகளைத் தினமணி, ஜனசக்தி, செம்மலர், கணையாழி உள்ளிட்ட பல அச்சிதழ்களிலும், பதிவுகள், திண்ணை, கீற்று முதலான இணைய இதழ்களிலும் எழுதியிருக்கிறேன். இப்போதும் எழுதிவருகிறேன்.

கவிஞர் மீரா அவரது “அன்னம்“ பதிப்பகத்தின் வழியாக 1993இல் வெளியிட்ட எனது “புதிய மரபுகள்“ கவிதைத் தொகுப்பு அந்த ஆண்டின் கலைஇலக்கியப் பெருமன்றப்பரிசை வென்றதோடு, கடந்த ஆண்டுவரை -பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக- மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்தில் எம்.ஏ தமிழிலக்கிய வகுப்புக்குப் பாடநூலாக இருந்தது.

“பாரதிதாசன் இணையம்“ நடததிய உலகளாவிய கவிதைப் போட்டியில் முதல்பரிசு தந்தார்கள். கவிஞர் பாலாவும் கவிஞர் மு.மேத்தாவும் சேர்ந்து புதுக்கோட்டை நகரில் எனக்கு “பாரதிதாசன் விருது“ தந்தார்கள்...
1989இல் “புதுக்கோட்டை மாவட்ட அறிவொளி இயக்கப் பிரச்சாரத்திற்காக நான் எழுதிய “சைக்கிள் ஓட்டக் கத்துக்கணும் தங்கச்சி“ பாடல் மாநிலம் தாண்டியும் பல மொழிகளில் -எங்கள் மாவட்ட ஆட்சியராக இருந்த திருமிகு ஷீலா ராணி அவர்களால் வெளிவந்து புகழ்தந்தது.

எல்லாம் சரி...
ஏன் இந்த சுய தம்பட்டம் என்கிறீர்களா?
சுய ஆற்றாமைதான்!
இவற்றையெல்லாம் விடவும் நான் சமீப காலமாக தொலைக்காட்சிப் பட்டிமன்றங்களில் திண்டுக்கல் திரு.ஐ.லியோனி அவர்களின் குழுவில் அணித்தலைவராகப் பேசுவதுதான் உலகம் முழுவதும் அறியப் பட்டிருக்கிறது!
எனவே நான் பட்டிமன்றப் பேச்சாளராகவே அறியப்பட்டுவிட்டேன்...

இதனால் நன்மை-விமர்சனம் இரண்டையும் எதிர்கொண்டு வருகிறேன்.
நண்பர்கள் -மின்சாரத் தேவதையின் அருள்பெற்ற இடங்களில் வாழ்வோர், நேரமும் மனமும் இருந்தால் பார்க்கலாம்.

வரும் தீபாவளி (13-11-2012) அன்று காலை 9-00மணிக்கு கலைஞர் தொலைக்காட்சிப் பட்டிமன்றத்தில் முதல் பேச்சாளனாக நான் பேசியிருக்கிறேன்.

நண்பர்களையும் பார்க்கச்சொல்லி, குடும்பத்தினருடன் நீங்களும் பார்த்துவிட்டு என்னிடம் தொலைபேசியில் பேசுவோர்க்கு தஞ்சாவுரில் தண்ணிபாயாத நிலம் பத்து நூறாயிரம் காணி தரிசாக -மன்னிக்கவும் பரிசாக- வழங்கப்படும் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேனுங்கோவ்... - ---உங்கள் நா.முத்து நிலவன்.
Cell - +91 94431 93293


அருணன் எழுதிய ”காலந்தோறும் பிராமணியம்” – நூல் அறிமுகம்.


சமூக ஆய்வாளர்கள் படிக்க வேண்டிய ஆகச் சிறந்த ஆய்வு நூல்!
 
நான் எத்தனையோ ஆயிரம் புத்தகங்களைப் படித்திருக்கிறேன். சில ஆயிரம் புத்தகங்களை என்வீட்டில் சிறு நூலகமாகவும் வைத்திருக்கிறேன் – அதற்காகவே என்வீட்டில் ஒரு மாடி கட்டி அதில்தான் இப்போது குடியும் இருக்கிறேன். (மூத்தமகள் வால்கா – தன் கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன்- துபையில் இருக்கிறாள், மகன் நெருடா – தன் மனைவி, குழந்தைகளுடன்- சென்னையில் இருக்கிறான். மூன்றாவதாகப் பிறந்த மகள் லட்சியாஇப்போதுதான் செட்டிநாடு பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு கணினிக்கல்வி படித்து வருகிறாள் –எனவே, நூலகம் இருக்கும் மாடிப்பகுதியை வாடகைக்கு விடமுடியாமல், கீழ்வீட்டை வாடகைக்கு விடலாம் என்ற முடிவுக்கு இப்போதுதான் வந்திருக்கிறோம்...)
என் மனைவி முதன்முறையாகக் கருவுற்றிருந்த போது நான் படித்த “வால்காவிலிருந்து கங்கை வரைஎனும் வங்காள எழுத்தாளர் ராகுல சாங்கிருத்தியாயனின் நூல் என்னைப் பெரிதும் பாதித்தது. பலநாள்கள் என்னைத் தூங்க விடவில்லை! அதன் காரணமாகவே என் முதன் மகளுக்கு “வால்கா“ என்று பெயரிட்டேன்.
இப்போதும் “என்னைப் பாதித்த நூல்வரிசையில் “வால்காவிலிருந்து கங்கை வரைநூலைத்தான் முதல் நூலாக வைத்திருக்கிறேன். அதன் பிறகு ஆர்.பி.டி எனும் ரஜினி பாமிதத் எழுதிய “இன்றைய இந்தியாமொழிபெயர்ப்பு நூல் ஆய்வு நூல் எப்படி இருக்க வேண்டும் என்று தடம் போட்டுத் தந்தது. தமிழில், வையாபுரியாரின் “காவிய காலம்”,  “தமிழ்ச் சுடர்மணிகள்நூல்கள் அவற்றின் ஆய்வுப் பார்வையில் என்னைப் பெரிதும் கவர்ந்தன.
இடையில் “பாரதி-காலமும் கருத்தும்எனும் ரகுநாதன் அவர்களின் நூலும், கோ.கேசவன் எழுதிய “பள்ளு இலக்கியம்- ஒரு பார்வைமுதலான நூல்களும், பின்னர் “பாரதி-மறைவு முதல் மகாகவி வரைஎனும் -அ.மார்க்சும் கா.சிவத்தம்பியும் சேர்ந்து எழுதிய- நூலும் என்னைப் பெரிதும் ஈர்த்தன.
இலக்கியத் தகவல் தரும் நோக்கில் உ.வே.சா. தொடங்கி பெ.சு.மணி தொடர, வீ.அரசு வரை பலரும் எழுதிய மற்றும் தொகுத்தளித்த நூல்கள் நமக்குப் பயன்பட்டாலும், ஆய்வு நோக்கில் நம்மை வியக்கவும் தொடரவும் வைத்த நூல்கள் அவற்றில் வெகு சிலவே.
கார்த்திகேசு சிவத்தம்பியின் ஆய்வுகள் என்னை வியக்க வைத்தாலும் அவரது நடை அலுப்படித்ததையும் சொல்லாமல் இருக்க முடியவில்லை. உள்நுழைந்து சொல்வதாகச் சொல்லி அவர் இழுக்கும் இழுவை நடையை என்னால் ரசிக்க முடியவில்லை, ஆனாலும் அவரது “தமிழ் இலக்கணம் காட்டும் தமிழ்ச் சமூக நிலை”(?)  மற்றும் “சங்க காலம் – வீரயுகம்முதலான நூல்களின் ஆய்வுச் சாரம் தந்த மகிழ்ச்சியையும மறுக்க இயலாதுதான்.
இவ்வாறே சமகால ஆய்வாளர் எஸ்.வி.ராஜதுரை, வ.கீதா இருவரும் எழுதிய “இந்து-இந்தி-இந்தியாமுதலான- சில ஆய்வு நூல்கள் மலைக்க வைத்தாலும் தேவைக்கு அதிகமான சான்றுகள் கொஞ்சம் அச்சுறுத்திவிட்டன.
“சங்க காலம்“ பற்றிய தலித்தியப் பார்வையில் எழுதப்பட்ட நூல்கள் சில மகிழ்ச்சியளித்தாலும் ஆய்வுப் போதாமைக்கும் சான்றாக நிற்கின்றன.
இவற்றைக் கடந்து வந்தபிறகு –
அருணன் எழுதிய ஆய்வுநூல் தொகுதிகளை அவ்வப்போது பார்த்து, வியந்திருந்தாலும் அதை அவர் சமகாலம் வரையும் நீட்டியிருப்பதுதான் மிக மகிழ்ச்சி தருவதாக உள்ளது. இரண்டாயிரம் ஆண்டுக்கால இந்தியாவின் நீண்ட வரலாற்றைச் சமூகவியல் பார்வையில் யாரேனும் தரமாட்டார்களா? (அல்லது நாம்தான் எழுத வேண்டுமோ?) எனும் மயக்கத் தயக்கத்தில் நான் இருந்தபோது இந்த நூல்கள் வந்து பெருமகிழ்வு தந்திருக்கின்றன.
இந்த “இந்தியா பற்றிய சமூக ஆய்வு நூல்கள்“ பற்றிய விமர்சனத்தைத் தனியே வைத்துக்கொள்ளலாம். இப்போது மகிழ்ச்சியோடு அறிமுகம் செய்வதையே பெரும் பெருமையாகக் கருதுகிறேன்.
எட்டுப் பாகங்கள் – ஏழு நூல்கள் –  3236 பக்கங்கள்!
பாகம் 1 –வேதகாலமுதல் சோழர்காலம் வரை-பக்கம் -384
பாகம் 2,3–சுல்தான்கள் காலம், முகலாயர் காலம்-பக்கம்-588
பாகம் 4 –கிழக்கிந்தியக் கம்பெனி காலம் –பக்கம்-264
பாகம் 5 –பிரிட்டனின் நேரடி ஆட்சிக் காலம் – பக்கம் - 552
பாகம் 6 –நேரு காலம் – பக்கம் – 396
பாகம் 7 –இந்திரா காலம் – பக்கம் - 416
பாகம் 8 –ராஜிவ், ராவ் காலம் – பக்கம் – 636

இதனை எழுதிய பேராசிரியர் அருணன் அவர்களுக்குத் தமிழர்களும், இந்திய ஆய்வாளர்களும் பெரிதும் கடமைப் பட்டிருக்கிறார்கள்.
இலக்கியம் – வரலாறு – மார்க்சியம் ஆகிய இந்த மூன்றிலும் தெளிவாகத் தேர்ந்த ஒருவர்தான் இந்தமாதிரியான ஆய்வுகளைச் சரியாகச் செய்யமுடியும் என்பதை இந்த நூல்களைப் படிப்பவர்கள் உணர முடியும்.
எட்டுப்பாகங்கள் அடங்கிய ஏழு நூல்களின் விலை ரூ.2,000. ஆனால், இருபது விழுக்காடு கழிவு தந்து அஞ்சல் செலவையும் பதிப்பகமே ஏற்றுக்கொள்கிறது.

நூல் கிடைக்குமிடம் –
வசந்தம் வெளியீட்டகம்,
69-24ஏ அனுமார் கோவில் படித்துறை,
சிம்மக்கல், மதுரை-625 001
தொலை பேசி-0452 2625555,
நூலாசிரியரின் அலைபேசி- 9443701997
மின்னஞ்சல் – vasanthamtamil@yahoo.co.in
--------------------------------------------------------------------------------------------------