முத்துநிலவன் பேச்சு


சமூக மாற்றத்தை உருவாக்கும் கருவியாக எழுத்து இருக்க வேண்டும்
-- கவிஞர் நா. முத்துநிலவன்  பேச்சு

First Published : 24 Apr 2012 10:39:19 AM IST –
  
 புதுக்கோட்டை, ஏப். 22: சமூக மாற்றத்தை உருவாக்கும் கருவியாக எழுத்து இருக்க வேண்டும் என்றார் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்க மாநிலச் செயற்குழு உறுப்பினர் கவிஞர் நா. முத்துநிலவன்.
                                புதுகை மாமன்னர் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் மற்றும் பாரதி புத்தகாலயம் ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய உலக புத்தக தின விழாவில் அவர் மேலும் பேசியது:
                                மாற்றத்தை விரும்புவதும், அதை நோக்கி தனது பயணத்தை தொடர்வதும் எழுத்தாளர்கள், படைப்பாளிகளின் கடமையாக இருக்க வேண்டும். உலக அறிவுக்கும், சமகால நடைமுறை வாழ்க்கைக்கும் தொடர்பில்லாத ஒரு சமுதாயம் உருவாகிக் கொண்டிருக்கிறது. இது சிக்கல் நிறைந்த கட்டத்துக்குள் சமூகத்தை நிறுத்தி விடும் ஆபத்து உள்ளது. தான் எந்தத் துறையில் சிறந்து விளங்க முடியும் என்ற தெளிவு படைப்பாளிக்கு இருக்க வேண்டும்.
                                நூற்றுக்கணக்கான புத்தகங்களை எழுதிக் குவித்த மாமேதை லெனினிடம், ஒரு கவிதை எழுதித் தருமாறு ஒருவர் கேட்ட போது, என் உடம்பில் ஓடுகின்ற ரத்தம் முழுவதும் உறிஞ்சி எடுத்தாலும் என்னால் கவிதை எழுத முடியாது என்றார். தமிழகத்தில் சிறந்த சொற்பொழிவாளராக அறியப்படுகின்ற சாலமன் பாப்பையா, தான் எழுத்திய புத்தகத்தின் அனைத்துப் பிரதிகளும் தன் வீட்டிலேயே இருக்கிறது. ஒன்றுகூட விற்பனையாகவில்லை என்று மனம் திறந்து கூறினார்.
                                மிகவும் கீழ்நிலையில் வாழ்ந்தவர்களை உலகின் மிகச்சிறந்த ஆளுமையாளர்ளாக கொண்டு வந்து நிறுத்தியது புத்தகங்கள்தான்.
                                பல்கலைக் கழக நூலகத்தில் சாதாரண ஊழியராக இருந்த மாவோவை மக்கள் சீனத்தின் நாயகனாக பரிணமிக்கச் செய்தது புத்தகங்களே. அர்ஜென்டீனாவில் தொழு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த சேகுவேராவை புரட்சியாளராக அடையாளப்படுத்தியதற்கு, அவரது மனைவி வீட்டில் அமைத்திருந்த சிறிய நூலகமே முக்கிய காரணமாகும்.
                                தகவல் தொழில் நுட்பப் புரட்சியில புத்தகங்களெல்லாம் குறுந்தகடுகளாக மாறி வருகின்றன. காலத்திற்கேற்றார் போல புத்தக வடிவம் மாறுவது இயல்பு. ஆனால், புத்தகங்கள் என்றும் நிலைத்து நிற்கும் வல்லமையுடைவையாக ஆக்குவது எழுத்தாளர்களின் கையில்தான் உள்ளது என்றார் அவர்.

 தமுஎசக மாநில துணைப்பொதுச்செயலர் கவிஞர் ஜீவி பேசியது:
 எழுத்தாளர்களையும், கலைஞர்களையும் அடையாளப்படுத்துவது புத்தக தினம் போன்ற விழாக்கள்தான். பிற நிகழ்ச்சிகளுக்கு கூடுவதைப் போல புத்தக தின விழாக்களுக்கு மக்கள் கூடுவதில்லையே என சிலர் வருத்தப்பட்டார்கள். பீடிக்கட்டு எல்லா பெட்டிக் கடைகளிலும் கிடைக்கும். குங்குமப்பூவை தேடி அலைந்துதான் பெற வேண்டும். நாம் குங்குமப்பூவைப் போல இருக்கிறோம். நேருவிடம் நீங்கள் விரும்பாதது எது எனக் கேட்ட போது, எப்போதுமே மனிதர்களுடனேயே இருப்பது எனக்கூறினார். விரும்புவது எதுவெனக் கேட்டபோது, போதுமான புத்தகங்களுடன் தனிமைத் தீவுக்குள் சில காலம் வாழ்வது எனக்குறிப்பிட்டுள்ளார். முத்தையா என்கிற மனிதன் மரணமுற்று கண்ணதாசன் என்கிற கவிஞன் நிலைபெற்றிருப்பதற்கு புத்தகங்களே காரணம். எனவே, அனைவரும் புத்தகத்தை நேசிப்போம், வாசிப்போம் என்றார் அவர்.
 விழாவில் அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் எல்.பிரபாகரன், அறிவியல் இயக்க மாநில செயற்குழு உறுப்பினர் கவிஞர் ஆர். நீலா, கல்லூரி முதல்வர் சிவ. கார்த்திகேயன், அறிவியல் இயக்க மாவட்ட நிர்வாகிகள் பொன். கருப்பையா, ராசி. பன்னீர்செல்வன், சி.கோவிந்தசாமி, ஏ.மணிகண்டன், தமுஎகச மாவட்டச் செயலர் ரமா ராமநாதன் ஆகியோர் பங்கேற்றனர். முன்னதாக, தமுஎகச மாநில செயற்குழு உறுப்பினர் கவிஞர் ஜனநேசன், கவிஞர் தங்கம் மூர்த்தி, திருக்குறள் கழகம் ராமையா, கவிஞர்கள் சுவாதி, பீர்முகமது, ஈழபாரதி, கவிபாலா, முத்துப்பாண்டியன், கஸ்தூரிநாதன், சதாசிவம் உள்ளிட்ட மாவட்டத்திலுள்ள 42 படைப்பாளிகளுக்கு பரிசளிக்கப்பட்டது.
------------------------------நன்றி –தினமணி திருச்சி பதிப்பு – 24-04-2012-------------------

எனது புதிய மரபுகள் கவிதைத் தொகுப்பிலிருந்து


தெருப்புகழ்

கல்லத் தனை உள்ளத் தவ ரிடம்
எள்ளத் தனை கஞ்சிக் கென வெயர்
வெள்ளத் தினில் தள்ளா டியகொடும்  நிலைமாறி

வெட்டிப் பயி ரிட்டுப் புனலென
சொட்டித் திடு பச்சைச் குருதியை
விட்டுத் தினம் வைத்துப் பயிரிடும்   உழவோனே

தத்தம் உரி மைக்குப் பயிரினை
வித்திட் டதன் மொத்தப் பலனையும்
ஒத்துக் கொளும் இந்தக் கனவினி  நினைவாக

ஒட்டும் வயி றிங்கிவ் வுழவனை
எட்டும் பொழு தில்லை எனஒளிர்
பட்டப் பகல் வட்டத் திகிரியென் றெழுவோமே
---------------------------------------------------------------------------(1993)

பத்தாம்வகுப்பு தமிழ்வினாத்தாள் 
குழப்பத்தைத் தீர்க்க
தமிழாசிரியர் கழகம் அரசுக்குக் கோரிக்கை
     கடந்த 04-04-2012 அன்று நடந்த பத்தாம்வகுப்பு அரசுப் பொதுத்தேர்வின் தமிழ் முதல்தாள் தேர்வில், சில குழப்பமான வினாக்கள் இடம்பெற்றிருப்பதாகவும், அதனைத் தீர்த்து வைத்து அதற்கான பாதிப்பிலிருந்து தேர்வெழுதிய மாணவர்களை விடுவிக்க தமிழகஅரசு உரிய நடவடிக்கையை எடுக்கவேண்டும் எனவும் தமிழகத் தமழாசிரியர் கழகம் தமிழ்நாடு அரசுக்கும் பள்ளிக்கல்வித்துறைக்கும் கோரிக்கை வைத்துள்ளது.
வினாத்தாள் குழப்பம் -1
      அரசுத்தேர்வுக்குரிய மாதிரி வினாத்தாள்கள் தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையால் இரண்டு மாதத்திற்கு முன்னர் இணையதளத்தில் வெளியிடப்பட்டன. வினாத்தாள் வடிவமைப்பு மாற்றமேதும் இணையதளத்தில் தரப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஐவகை மாதிரி வினாத்தாள்களின் அடிப்படையிலேயே மாணவர்களுக்கு இறுதிப் பயிற்சிகள் தரப்பட்டன. எனவே அரசே வெளியிட்ட ஐவகை மாதிரி வினாத்தாள்களின் அடிப்படையில் பொதுத் தேர்வு வினாத்தாள் அமையவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
வினாத்தாள் குழப்பம் -2 ( எட்டு மதிப்பெண் வினா)
      அரசுத்தேர்வுக்குரிய வினாத்தாள் வடிவமைப்பு (BluePrint) ஒவ்வொரு பாடப்புத்தகத்தின் கடைசியிலும் தரப்பட்டுள்ளது. அதன் அடிப்படையிலேயே மாணவர்களுக்கான காலாண்டு, அரையாண்டு, திருப்புதல் தேர்வு முதலான பயிற்சித் தேர்வுகள் நடத்தப்பட்டன. ஆனால், அரசால் தரப்பட்ட வினாத்தாள் வடிவமைப்புக்கு மாறாக, கடந்த 04-04-2012அன்று நடந்த அரசுப் பொதுத் தேர்வில்  உரைநடை 8மதிப்பெண் நெடுவினா தமிழ் முதல்தாள் தேர்வில் கேட்கப்பட்டிருந்தது (வினா எண்-48 மதிப்பெண்-8) 8மதிப்பெண் கொண்ட வினாஎண்கள்-47,48 நெடுவினா இரண்டில், செய்யுள்பகுதிக்குரிய வினாமட்டும் வினாத்தாள் வடிவமைப்பின் படியே இருக்க, உரைநடைப் பகுதிக்குரிய வினாமட்டும் மாறிவந்தது ஏனென்று தெரியவில்லை. இது, மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் ஆசிரியர்களுக்கும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.
வினாத்தாள் குழப்பம் -3 ( ஐந்து மதிப்பெண் வினா)
     செய்யுள் பகுதியில் “தமிழ்விடுதூது“  5மதிப்பெண் வினா ஒன்று அரசுப்பொதுத்தேர்வில் கேட்கப்பட்டுள்ளது. இந்தவினா புத்தகத்தில் இல்லாதது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், இப்பகுதியில் இல்லாத வடிவத்தில் “இப்பாடல் ஆசிரியரின் பெயர் யாது?”  என்று தற்போது அரசுப் பொதுத் தேர்வில் (வினா எண்45இல், உள்பிரிவு வினா எண்-2) கேட்கப்பட்டுள்ளது.
வினாத்தாள் குழப்பம் -4 (இரண்டு மதிப்பெண் வினா)
      வினாத்தாள் வினா-எண்29இல் “வள்ளலாரின் முழக்கம் எது?என்னும் இரண்டு மதிப்பெண் வினா கேட்கப்பட்டுள்ளது. இதற்கு “அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை“ என்று பொதுவாகச் சொல்லப்பட்டாலும் இதுபோல் எந்த வரியும் வள்ளலாரின் முழக்கமாகப் புத்தகப் பாடப்பகுதியில் குறிப்பிட்டுத் தரப்படவில்லை. இதற்கு ஒவ்வோர் ஆசிரியரும் ஒவ்வொரு விதமாகச் சொல்லித்தந்திருக்க வாய்ப்பு உண்டு. எனவே சந்தேகத்துக்குரிய வினா எதையும் பொதுத்தேர்வில் கேட்காமல் இருப்பதே மாணவர்களுக்கு உதவியாக இருக்கும்.
எனவே மேற்கண்ட காரணங்களால், முழுமதிப்பெண் பெற உழைத்துப் படித்த மற்றும் சொல்லித்தந்த ஆசிரியர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர் என்பதே இன்றயை நிலைமை.
சந்தேகத்திற்குரிய இந்த (8+5+2) 15மதிப்பெண்களை  முழுமையாகவோ பகுதியாகவோ மாணவர்களுக்கு வழங்கிவிடுவதே இதற்கான நியாயமாக இருக்கும் என்பதோடு, இனிவரும் மீதமுள்ள ஆறு தேர்வுகளும் அரசு வெளியிட்ட வினாத்தாள் வடிவமைப்புக்கு ஏற்பவே அமைவதை அரசு உறுதிப்படுத்தி பத்துலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களை இந்தக் குழப்பத்திலிருந்து விடுவித்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தமிழகத் தமிழாசிரியர் கழகம் தமிழக அரசைப் பணிவோடு கேட்டுக்கொளகிறது.
                             
சுப.காந்தி நாதன்
மாவட்டச் செயலர்,
தமிழகத் தமிழாசிரியர் கழகம்,
புதுக்கோட்டை மாவட்டம்                              
செல்பேசி-9842864674

மேலும் தொடர்புகளுக்கு – நா.முத்து நிலவன் - 9443193293
------------------------------------------------------------  
(இந்த அறிக்கையை வெளியிட்ட நாளிதழ்களுக்கு நன்றி - தினமணி திருச்சிப் பதிப்பு பக்கம்-05, தினமலர் திருச்சிப் பதிப்பு பக்கம்-09, தீக்கதிர் அனைத்துப் பதிப்புகள் பக்கம்-03 - நாள்-06-04-2012 மற்றும் தினகரன் திருச்சிப் பதிப்பு பக்கம்-15, நாள்-07-04-2012)
-----------------------------------------------------------------------------------------------------------------------