புதுக்கவிதை வரலாற்று ஆய்வுக் கட்டுரை


புதுக்கவிதை -- வரவும் செலவும் 
-- நா.முத்துநிலவன் --

புதுக்கவிதை தோன்றிய சமூகப் பின்னணி:
‘அளவு மாற்றம் குணமாற்றத்தை நிகழ்த்தும்’ எனும் மார்க்சிய விஞ்ஞானம் கலை இலக்கியத்திலும் மெய்ப்பிக்கப்பட்டது.
‘கல்வியும் புலனெறி வழக்க- கலைஇலக்கியமும். ஒரு சிலருக்கு என்றிருந்த நிலப்பிரபுத்துவக் கலாச்சாரத்தின் விளைச்சல் முதலாளியத்தின் வரவால் நெகிழ்ச்சியுற்றது. 17.18 ஆம் நூற்றாண்டுகளில் சமூக உறவுகளில் பெருத்த மாற்றங்கள் நிகழவே அதன் தவிர்க்க முடியாத விளைவாக-கல்வி கலாசார விளைச்சல் வெகு ஜனங்களைப் பாதிக்கத் தொடங்கியது-அதில் அச்சு இயந்திர வரவு குறிப்பிடத்தக்கது. வெகுஜனப் படிப்பிலும் கலை இலக்கிய அரசியல் தொடர்புகளிலும் அளவு மாற்றம் நிகழவே கலை இலக்கியத்திலும் குணமாற்றம் நிகழ்வது இயல்பானதே.

இதுவே கடந்த நூற்றபண்டின் ஆரம்ப முதல் நாவல் சிறுகதை கவிதை பற்றிய திறனாய்வு இலக்கியங்களையும் புதுக்கவிதைகளையும் விளையச் செய்தது. நிலப்பிரபுத்துவத்தின் குறுகிய எல்லைகளோடிருந்த கலை இலக்கிய மரபுகள் முதலாளியத்துக்குரிய விரிந்த களத்துக்கேற்றவாறு மாறின.

இந்தக் காலத்தில் வேதகால (குழுமக்கள் சமுதாய நிலையில்) படிப்பாளிகள் காதே கருவியாய்த் தத்துவ விளக்கம் தந்து பெற்றுக் கொண்டமைக்கு ‘சுருதிகள்’ (காதால் கேட்கப்பட்டவை என்பது பொருள்) எனும் சொல் வழக்கு சான்றாகும். அன்றைய இந்தச் சமுதாய நிலையில் வெகு சிலரே படிப்பாளிகள் என்பதும் தவிர்க்க முடியாமலிருந்தது
          பின்னர் குறுமன்னர்-பெருமன்னர் காலத்தில்-(நிலப்பிரபுத்துவ சமுதாய நிலையில்) ஏடுகளும் எழுத்தாணிகளுமே கருவிகளாய்க் கற்று வந்தனர். இப்போது வட்டம் சிறிதே வரிவடைந்து நின்றது. என்றாலும் அது வெகு ஜனங்களைப் பாதிக்கவில்லை. 
           வெகு அண்மையில் -ஒரிரு நூற்றாண்டுக்குள் குடியரசுகள் தோன்றிய (முதலாளி சமுதாய நிலையில்) அச்சும் நுணுக்கான எழுதுபொருள் கண்டுபிடிப்புகளும் பெருகிவிட்ட நிலையில் சந்தைக்காக வேணும் படிப்பைப் பரவலாக்குவது வெகுஜனங்களையும் படிப்பையும் தவிர்க்க முடியாமல் இணையச் செய்துவிட்டது இது கலை இலக்கியப் புதுமைகளுக்கு அடிப்படையில் சமூக மாறுதல்கள் இருப்பதை வலியுறுத்துவதாகும்.

புதுக்கவிதை தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட பின்னணி
            1910 களில் மேலைநாடுகளில் நிகழ்ந்த இலக்கிய மாற்றங்களை 'பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்களைத் தமிழ்மொழியில் பெயர்க்க'ச் சொன்ன-பாரதிதான் தமிழில்சிக்கெனப் பிடித்துக் கொண்டு எழுதத் தொடங்கினான்.
          ஆனால் தமிழின் முதல் புதுக்கவிதைத் தொகுதியை வழங்கிய பெருமைக்குரிய (புதுக்குரல்கள் -1962 சி.சு.செல்லப்பா அவர்கள் பண்டிதர்களிடமிருந்து தமிழைக் காப்பாற்றுவதாக நினைத்துக் கொண்டு ஃபிராய்டித்தில் சிக்கி புதுக்கவிதையை வேறுபாதைக்கு அழைத்துச் செல்லவும் தலைப்பட்டார்.
           தமிழில் புதுக்கவிதைக்காகவும் விமரிசன இலக்கியத்திற்காகவும் என ‘எழுத்து’ இதழைத் தொடங்கிப் பெரும்பங்காற்றிய பெரியவர் சி.சு.செல்லப்பா அவர்கள் ‘அகவுலகம்’ ஃபிராய்டிசத்தினால் விசாலமடைந்து உள்ளததைத் துழாவி இந்தக் கவிஞர்கள் ஏதோ புதிய உண்மையைக் கொணர்ந்தவர்கள் என்பதாக முன்னுரையில் கூறுவது புதுக்கவிதைக் குழந்தையைப் பாதுகாத்து வேறு எங்கோ அழைத்துச் செல்ல முனைவதைத்தானே காட்டுகிறது?
         இதனால்தான்-
         “புதிய தடம் காணுதற்கு
         பொழுதில்லை ஆதவினால்
         விதிவழியே செய்த
      வினைவழியே போகின்றேன் -- ஞா.மாணிக்கவாசகம்) என்பன போன்ற விரக்திக் கவிதைகளைப் புதுக்கவிதை வடிவத்தில் அறிமுகப் படுத்துகிறார்.
       புpறந்தது முதல் பேசாதிருந்த ஒரு பிள்ளை பெரும்பாடுபட்டு மருத்துவம் செய்த பிறகு முதல்முதலாகப் பேசத் தொடங்கியதுமே பெற்றவனைப் பார்த்து எப்போது தாலியறுப்பாய்? என்று கேட்டதாகச சொல்லும் கதையை நிறைவுறுத்துகிறது இப்புதுக்கவிதை முதல் தொகுதியின் சில கவிதைகள்.
    இது போன்ற பழங்கருத்தை-உலுத்துப்போன ஒப்பாரிகளை சொல்வதற்கு எதற்கு இந்தப் புதிய வடிவம்? விலங்கை உடைத்த கைகள் விரக்தியில் துவள்வதா?
       அசைநிலையும் சீர்-தளையும் இயல்பான உணர்ச்சிகளை மக்களின் அன்றாடச் சுமை-சுவையுணர்வுகளை இயல்பாகக் கூறத்தடையாக இருப்பதாகக் கருதியே சுவை குறையாமல் அதே நேரம் தளைச் சுமையை உதறிவிட்டு வசன கவிதையும் புதுக்கவிதையும் பிறந்தன. மீண்டும் பழைய குருடி நிலை ஏன்?
       இது மாறிவரும் உலகத்தின் புதிய வெளிச்சங்களைக் காண முடியாத கருத்துக் குருடர்களின் நிலையேயன்றி வேறென்ன? இதற்கு ‘அக உலக மதிப்பீடு’ பிராய்டிசத் உன்னதம்’ எனும் தத்துவப் பிகற்றல் வேறு!
இதுபற்றி சொறிந்து சுகம் காணுகிற சொறிசிரங்கு நோயாளி பிறருக்கு அச்சகம் இல்லையே என்று கர்வம் கொண்டு கூறுவது போல இருக்கிறது இவர்களின் அக உலக மதிப்பீடுகள்….இவர்கள் போராட்டங்களைக் கண்டு வெருளுவதால் தாங்கள் அக ஒட்டங்களையே கூர்ந்து கவனிக்கிறார்கள் என்று போராசிரியர் நா.வானமாமலை அவர்கள் கூறுவது மிகப் பொருத்தமே.
        மரபுக் கவிதையாகட்டும் புதுக்கவிதையாகட்டும் இந்த ‘உன்னதத்’ தத்துவங்க சிக்கிக் கொள்ளாமல் நமது வர்க்கக் கவிஞர்கள் மிகத் தெளிவாகவே இருக்கிரார்கள் கவிஞர் கந்தர்வன் பிரகடனப்படுத்துவது போல. “சாராம்சத்தில் அந்தத் தத்துவங்கள் என்பவை விவரம் தெரிந்தவனே வீட்டிற்குள்ளேயே இரு என்பது தானே?..... அது எங்கள் வாழ்க்கை முறையில்லை. அதனால் அது பாடுபொருளும் இல்லை….விரக்தியை விதைக்க வேண்டியவர்க்கு கஞசா விற்கட்டும். எதற்குப் பேனாவை எடுக்கவேண்டும்? “(2) என்று நாம் உரக்கவே சொல்லிக் கொண்டுதான் ஒரு போராளிக்குரிய கம்பீரத்தோடு பேனாவை ஏந்துகிறோம்.
       புதிய உள்ளடக்கத்திற்கான போராட்டத்தில் பிறந்த புதுக்கவிதையின் வடிவத்தில் பழையகள் புதிய மொந்தை போல- சிலர் கவிதைகளை வழங்கிய கொண்டிருக்க 'கணையாழி' ‘ழ’ முதலிய (புதுக்கவிதைக்கு முக்கியத்துவ தந்துவந்த) இதழ்களோ உளறுவாயனைவிட ஊமையனே தேலாம் என்றாக்கி விடடன.
      ஆம் சிலநேரம் இவர்கள் இருண்மை படிவம் குறியீடு இவற்றின் பின்னணியில் தரும் கவிதா உத்திகள் சிலரது மேதாவித்தனத்தை வெளிப்படுத்தியதன்றி வேறு வெகுஜனப் பயன் விளைவித்தாகத் தெரியவில்லை.
           “விக்கா வுக்கா வித்தா விப்போய் 
                விட்டா னட்டூர்; சுட்டூர் புக்கார் 
           இக்கா யத்தா சைப்பா டுற்றே 
                இற்றோ டிப்போய் வைப்பீர் நிற்பீர்” - பழைய ஒட்டத்தரின் மரபுப்பாட்டாவது விளங்கிலிடும் போலுள்ளது. புதுக்கவிதையின் ‘ஆத்மா நாம்’ தருகின்ற-
         ‘நிஜம் நிஜத்தை நிஜமாக 
         நிஜமாக நிஜம் நிஜத்தை
         நிஜத்தை நிஜமாக நிஜம் 
         நிஜமும் நிஜமும் நிஜமாக
         நிஜமோ நிஜமே நிஜம் 
        நிஜம் நிஜம் நிஜம்”- என்னும் கவிதையின் தத்துவ விளக்கத்தை எந்த அறிவு ஜீவியிடம் போய்க் கேட்பதோ தெரியவில்லை. ஆனால் எதுவும் புரியவில்லை என்பது மட்டும் நிஜம்.
         இவ்வாறு புதுக்கவிதையின் தோற்றமும் அவசியமும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டும் தவறாக வழி நடத்தப்பட்டும் வந்ததால் மரபுக் கவிதைகளின் மீது மக்களின் நம்பிக்கை 1970 களிலும் கூட நீடித்து நிற்க முடிந்தது.
     அதே நேரத்தில் 70களில் கோவை வானம்பாடிகளின் வெளிச்சங்களாலும் பாப்லோ நெருடா மாயகாவ்ஸ்கி பாரதி ஆகியோரின் அடியொற்றிய முற்போக் கவிஞர்களின் கருத்தாழமும் உருவ எளிமையும் கொண்ட தமிழ்க் கவிதா முயற்சிகளாலும் மக்களின் நம்பிக்கை புதுக்கவிதைகளின் மீது வலிமையடைந்து வந்தது. ஆனாலும் இது பழம்பண்டிதர்களுக்கு அதிர்ச்சிய+ட்டுவதாகவே நீடித்தது. 
          எனவேதான்.
      “புதுக்கவிஞர்கள் சிலர் கூடி இலக்கணக் கட்டுக் கோப்பை உடைத்தெறி என்கிறார்கள். இந்தப் போக்கு நீடித்து மரபுகள் கெட்டு ஒரு தாறுமாறான நிலை ஏற்படும் இதைத்தடுப்பது புலவர் குழுவின் பொறுப்பு” என்று 1977 ஆம் ஆண்டி கூட அவர்கள் பும்பிக் கொண்டிருந்தார்கள்

புதுக்கவிதையின் பலமும்-பலவீனமும்
      “இந்தச்சீருக்கு அடுத்த சீரும் அடியும் இப்படித்தான் அமையவேண்டும். என மரபுக்கவிதையின் வழக்கம். இது எழுதுவோரின் என்ன ஒட்டத்திற்கு இடைய+று எனினும் படிப்போர் நினைவு நிறுத்தற்கு எளிது. ‘எந்தச் சீரும் எந்த அடியும் மிகுந்தும் குறைந்தும் வரலாம்’ என்பது புதுகவிதையின் வழக்கம். இது எழுதுவோரின் எண்ண ஒட்டத்திற்கு எளிது எனினும் படிப்போரின் நினைவில் நிற்காமல் வார்த்தைகள் மாறிப்போகும்.
         எனினும் சுமார் மூவாயிரம் ஆண்டுக்கால மரபுக்கவிதைகள் தராத தாக்கத்தையும் சமூக மாற்றத்துக்ககான கருத்து மோதல்களையும் சுமார் முப்பது நாற்பது ஆண்டுக்கால புதுக்கவிதைகள் தந்துவிட்டன என்றால் மிகையில்லை.
கவிஞரின் பலவீனமல்ல கட்டமைப்பின் பலவீனம் .
        “பாரதி கம்பன் வள்ளுவர் போன்ற சிறந்த கவிகளும் கூட இலக்கணத்திற்கு வளைந்து கொடுப்பதற்காகக் ‘கூறியது கூறல்’ என்ற குற்றத்திற்கு ஆளாகிறார்கள். ‘செல்வத்துள் செல்வம் செவிச்வெல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை’ என்ற குறளைப் பாருங்கள். முதல் முன்று சொர்களிலேயே கவிதையின் அர்த்தம் புலப்பட்டுவிடுகிறது. வெண்பா இலக்கண நிறைவிற்காக கடைசி நான்கு சொற்களைக் கவிஞர் பிடித்து இழுக்க வேண்டியுள்ளது. யாப்பு இலக்கண மரபுப்படி எழுதும்போது எவ்வளவு பெரிய கவிஞனுக்கும் இந்த இடைஞ்சல் வந்து விடுகிறது. (4) என்கிற விமரிசகர் பாலா அவர்களின் கூற்று மரபின் பலவீனத்தையும் புதுக்கவிதையின் பலத்தையும் எடையிடுவதாக உள்ளது.

        இதனால்தான் ஆசிரியப்பாவுக்குரிய நாற்சீர் ஓசையில் பாரதிதாசன் எழுதிய “இரவில் வாங்கும் இந்திய விடுதலை 
      என்று விடியுமோ யார் அறிகுவரே” (5)  எனும் மரபுக்கவிதை பறாத வெற்றியை. அதே கருத்தை எடுத்தாண்ட ஏ.அரங்கநாதனின்
“இரவில் வாங்கினோம் விடியவே இல்லை” –எனும் புதுக்கவிதை பெற்று  பிரபலமாகிவிட்டது.

புதுக்கவிதை வெற்றியும் தத்துவத் தோல்விகளும்:
        வடிவபலத்தோடு புதுக்கவிதை எழுதியவர்களும்கூட தத்துவ பலவீனங்களால் வெற்றி பெறாமல் போனதுதான் விபரீதம் 
பாரதிக்குப் பின்னால் புதுக்கவிதை முயற்சிகளில் வெற்றிபெற்ற வந்தவராகிய ந.பிச்சைமூர்த்தி அவர்கள்.
“பகுத்தறிவுச் சந்தையில்
ஓவ்வொருவரும் கையில்
முற்றுப் புள்ளிகளை
மூர்க்கமாய் வைத்துக்கொண்டு
மனத்தில் பட்ட துறையில்
முளையடித்துக் கொண்டிருந்தார்
சிலர்-சுருதியுடன்
சிலர் வருணாசிரமத்துடன்
சிலர் சங்க இலக்கியத்துடன்
சிலர் மார்க்ஸ் என்கல்சுடன்
வேறுசிலர் எதனுடனோ…
கமாத்தான் இருந்தது”
(6) என்று எழுதி ‘எதிலும் சேர்ந்துவிடாதே! நீ நீயாகவே இரு! என்பது போல உபதேசிக்கிறார். நியாயத்திற்கும் அநியாயத்திற்குமான யுத்தத்தில் நீ நியாயத்தைச் சாராமலே 'நடுநிலைமை'க் காப்பாற்று தனியாக இரு! ஸ்தாபனமாகி விடாதே நான் அப்படித்தான் இருக்கிறேன். –என்பதாக எழுதுவது யாரை பலப்படுத்த? நியாயத்தைச் சாராத நடுநிலை அநியாயத்திற்கான ஆதரவல்லவா? அரசியல் பேசாவே என்பதற்குள் ளிருக்கும் அரசியல் சார்பு போன்றதல்லவா இது? கவிஞா நீ எந்தக் கருத்தையும் பிராச்சாரம் செய்யாதே! எதையும் சார்ந்து நிற்காதே –என்கிற 'தூய்மை வாதம்' யாருக்குச் சார்பானது? பிரச்சினைகளில் ஈடுபடாதே! தீர்க்கத் தூண்டிவிடாதே பேசாமலிரு! எனும் கருத்து காட்டுமிராண்டி காலத்து ‘தவம்’ அல்லவா? 'துட்டரைக்கண்டால் தூரவிலகு' எனும் பழங்கருத்தைக் தூக்கி எறிந்துவிட்டு.
 ” பாதகம் செய்பவரைக் கண்டால்-நீ
   பயங்கொள்ளல் ஆகாது பாப்பா!
   மோதி மிதித்துவிடு பாப்பா! -அவர்
  முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா” என்ற பாரதியின் பிரிணாமம் பாரதிக்குப் பிறகு நம் காலத்திலேயே- இதுபோன்ற புதுக்கவிதைகளால் பின்னோக்கி இழுக்கப்படுவதை எப்படி அனுமதிக்க முடியும்?
இதுபோலவே புதுக்கவிதையிலும் புதுப்புது உத்தித அழகியல் சோதனைகளில் ஈடுபட்ட
“காதிக வீதியிலே
கருட வாகனத்தில்
உலோகப் பறவைகள்
ஒலி மலர் தூவ
வெண்புறாச் சிறகு
தோரண மாட
சுமாதான தேவதை
ஊர்வலம் வருகிறாள்”
என்பது போன்றும் “விளக்கு விசாரிக்கப்படுகிறது” என்னும் ஆசிரியப்போராட்டத்தில் சிறைக்குள்ளிருந்தும் சிறந்த கவிதைகளை எழுதிய அப்துல் ரகுமான் அவர்கள் - 
“தத்துவ சித்தாந்தம் லட்சியம் என்று ஒவ்வொருவனுக்கு ஓவ்வொரு சிறை” (7) என்று எழுதி எந்த சுதந்திரத்திற்காக கவிதாயுதம் ஏந்தி நிற்கிறோம் என்பதை மறைத்துவிடுகிறார்.

         ஆனால் இன்னொரு பக்கம் கூர்மையான சொற்ளோடும்  தொலைநோக்கு விஞ்ஞானப் பார்வையோடும் வரும் கவிதைகளை வெறும் கோஷம் என்று உதட்டைப் பிதுக்குவோர் இருப்பதும் கவனித்தற்குரியது. 
பிரச்சனைகளைக் கண்டுகொள்ளாமல் கண்ணனையோ வர்ணணையோ பாடினால் ‘ஆகா’ இதுவன்றோ உயர்ந்த கவிதை ‘என்பதும்’ எதார்த்தமாகவும் கலையழவோடும் இருந்தால்கூட உள்ளடக்கம் பிரச்சனைகளையோ தீர்வுகளையோ கொண்டருந்தால் ‘அது வெறும் கோஷம்’ என்பதும் ஏமாற்றல்லாமல் வேறென்ன? 
இந்தவகை தூய இலக்கியவாதிகள் கபடவேடத்தையும் இனங்கண்டு.
“ஓம்சக்தி ஒம்சக்தி என்றேன்-இது
     உயர்ந்த கவிவார்த்தை என்றார்!
ஒங்குக புரட்சியெனச் சொன்னேன்-இது
     உளறல் வெறுங்கோலும் என்றார்” என்று. கவிதையாலேயே தோலுரித்துக் காட்டுகிறார் நமது வர்க்கக் கவிஞர் நவகவி

எளிமைப்படுத்துவது வேறு மலினப்படுத்துவது வேறு:-
       இளமைக்கு உரிய எள்ளலும் துள்ளலும் புதுக்கவிதைக்கும் பொருந்தி வருவது கண்டு வெம்பி போகின்றனர் வேடதாரி விமரிசகர்கள்.
பேருந்தின் ஒரு பக்கத்தில் ‘அடுத்த குழந்தை தாமதப்படுத்துங்கள்’ என்றும் எதிர்பக்கத்தில் ‘கால தாமதம் ஊழலை வளர்க்கும்’ என்றும் எழுதியிருப்பதைச் சொல்லி ‘இரண்டு வரிகளையும் அடுத்தடுத்ப்படியுங்கள் என்ன? சிரிக்கிறீர்களா? இதுதான் புதுக்கவிதை ‘ என்றுமேடையில்கிண்டல் செய்து காலட்சேபம் நடத்தும் புலவர் கீரன்கள் இன்றும் இருக்கிறார்கள்.
       இந்த வெறும் கிண்டல் சிரிப்பாக இருக்கலாம். ஆனால் ‘புதுக்கவிதையே இப்படித்தான் என்று கிண்டல் செய்வது எந்தநோக்கத்தில்?

கிண்டலுக்குப் பெயர் பெற்ற நமது கவிஞர் கந்தர்வன் 
“எம்.ஏல்.ஏ.சட்டையில்
சில பைகள் தைத்தார்
எம்.பி.சட்டையில்
ஏராளம் பை தைத்தார்
மந்திரி-
பையையே சட்iயாய்
மாட்டிக் கொண்டார்” என்று மேடையில் முழங்கும்போது சிரிப்பும் வருகிறது. சிந்தனையும் வருகிறது. இந்த வெற்றியைப் புதுக்கவிதையின் வெற்றியாக அங்கீகரிக்க மறுப்பது ஏன்?

ஆனால் பெரிய விஷயங்களைக்கூட கிண்டலாகச் சொல்வதாக எண்ணித் தடுமாறிப் போகும் பெரிய கவிஞர்களும் உண்டு.
“புதுக்கவிதை-
சொற்கள் கொண்டாடும்
சுதந்திர தின விழா”  (திருத்தி எழுதிய தீர்ப்புகள்) என்று நறுக்காகச் சொல்லிப் புதுக்கவிதையிலும் வெற்றி பெற்ற மரபுக்கவிஞர் ரைமுத்து அவர்கள் நல்ல பல கவிதைகளைத் தந்தவர்கள்தான் ஆனானலும் இலங்கைப் பிரச்சனைக்கு எளிதாகத் தீர்வு சொல்வதாக எண்ணி.
“அவன் தீர்க்க தரிசி தான்!
இந்திய தேசப்படத்தில்
இலங்கையையும் சேர்த்து
எழுதினானே!”(9) என்று எழுதி இலங்கையை இந்தியாவோடு இணைத்துவிடுவதுதான் பிரச்சனைக்குத் தீர்வு என்றும் எழுதி விடுகிறாh. இது என்ன? இந்தியாவில் ஏற்கனவே எத்தனை பிரச்சினைகள்? இந்தியாவின் பிரச்சினைகள் தீர்ந்து விட்டது போலவும் இலங்கையை இணைத்துக் கொண்டால் அதன் பிரச்சனையும் தீர்ந்து விடும் என்பது போலவும்…. சரிதானா தீர்வு?

       கிண்டல் செய்யும்போதும் பிரச்சினைகளைப் பாடும்போதும் தத்துவத்தெளிவோடும் இலக்கியப் பயன்பாட்டோடும் பாடுகிற கவிஞர்களால்தான் மொழிக்கும் அதைப் பேசுகிற மக்களுக்கும் பயன் தர முடியும்.

போலிக் கவிஞர்கள்:- 
எழுத்தாளர்களும் கலைஞர்களும் அவரவர் சமூகத்தின் விளைவு ஆவர். அவர்கள் மனிதர்களிடம் பேசுகிற மனிதர்கள். அவர்களுக்கு உள்ள ஒரே ஒரு சிற்ப்பம்சம் என்னவென்றால் அவர்களிடம் எழுச்சி கொள்கிற  உணர்ச்சி வேகத்தில் மக்களிடம் அவர்கள் கஷ்டங்களையும் அறியாமையையும் துன்பங்களையும் எடுத்துச் சொல்வதனால் மக்களுக்கு அவர்கள்ச் சுற்றியுள்ள அசிங்கம் எது.அழகு எது என்று புரிந்து கொள்ள உதவுகிறார்கள்” (10) என்பதற்கிணங்க அழகையும் அசிங்கத்தையும் அடையாளம் காட்டவந்த கவிஞர்களை தன்னைப் பற்றிய கர்வம் மீது எழுதி அழகைப்பாடும் அசிங்கங்களாகிப் போன சோகமும் புதுக்கவிதையில் உண்டு!

          காதல் தோல்விப் பொருளில் புத்தகம் புத்தகமாகப் புலம்பித் தீர்த்து மாணவக்கவிகளில் ‘கதாநாயகக் கவிஞராயிருப்பவர் மேத்தா அவர்கள். ஆரம்பத்தில் இவர் ‘கண்ணீர் பூக்களையே’ அதிகமாகச் சிந்திப் பிரபலமான “என்னுடைய பேனாவே என்மீது பெறாமைப்பட்டது” (ஊர்வலம்) என்ற கூறி மக்களைவிட உயரமாகப் போய்விடுகிறார். இப்போது புதுக்கவிதை எழுதாதே என்று கறுப்புச்ச சட்டங்களை இயற்றி வருகிறார்.
இப்பொதெல்லாம் புதுக்கவிதை எழுதுவது-மாலை நேர உலாப் போல இளைஞர்களின் பொழுது போக்காக மாறிவிட்டது. என்றாலும் ‘எழுதாதே’ என்று கூறுவதற்கு கவிதைச் சுரங்கம் யாருக்கும் குத்தகைக்கு விடப்படவில்லையே!
         ‘சுட்டியில் வெளிவந்த ஒரு கவிதையை தினமலர்-வாரமலரில் ஒரு பெண் திருடிப்போட்டு விட்டாள் என்று அங்கலாய்த்துக்கு கொண்டது-அந்தப்பத்திகை. உண்மை என்னவென்றால் சுட்டியில் வெளி வந்ததே திருட்டுக்கவிதைதான். திருப்பூர் நடராஜன் அவர்களின் 'விழிப்பு" இதழில் கவிஞர் டி.என்.துரை அவர்கள் எழுதிய
“எம்ப்ளாய்மெண்ட நிய+ஸ்” எனும் தலைப்பிட்ட
“வாராவாரம் வாங்கிச்சலித்த
அப்பாவி எம்.ஏ..கேட்டான்
அயுள் சந்தா எவ்வளவு? “ எனும் கவிதைதான் ஒரிஜினல்! இந்த மூளைத் திருடர்களைத்தான் தடை செய்ய வேண்டுமே யன்றி முளைக்குருத்துகளையல்ல 9 நூறு பூக்கள் மலரட்டும் என்பதுதானே நமது விருப்பம்!

‘நாங்கள் நிர்வாணத்தை விற்பனை செய்கிறோம்-
ஆடை வாங்குவதற்காக" -  என்று விலை மாதர்களின் நிலையை எதார்த்தகவிதையில் காட்டி ‘கறுப்பு மலர்களில் வெற்றி பெற்ற நா.காமராசன் பின்னர் ஆர்.எஸ்.எஸ். இயக்கங்களில் அனுபவ முத்திரைகளோடு ‘வளர்ந்த பிறகு திரைப்படப் பாடல்களிலேயே திருப்பங்களைத் தந்து மக்கள்கவியாக மலர்ந்திருந்த பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தையே 'கொச்சைக் கவிஞன்……அவன் பாடியது இலக்கியமே யாகாது" என்று தத்துவ முத்துக்களை உதிர்த்துவிட்டு இப்போது இவர் சினிமாவில் வரும்.’கிளப்பு’ டான்ஸ்களில் தத்துவம் படைத்து வருகிறார்.
       
முற்போக்குக் கவிஞர்களின் முன்னிற்கும் பணிகள்:-
        மேற்கண்டவாறு எளிமையிலும் ஆழத்திலும் இலக்கியப் பயன்பாட்டிலும் தெளிவோடு ருக்கும் முற்போக்குக் கலை இலக்கியவாதிகளின் முன் ஏராளமான கடமை காத்து நிற்கிறது.

        நமது முற்போக்குக் கவிஞர்களிடம் மட்டுமே பாரம்பரியமிக்க தமிழின் பரிணாமக் கருத்தான புதுக்கவிதை நமக்கே உரித்தான -- சொல் ஜாலமில்லாத எளிமை--  வரக்தியில்லாத வீரம் -- கிண்டல் நயம் -- தத்துவத் தெளிவு ஆகிய அனைத்தும் இணைந்து சொற்புனை நலத்தாலும் கற்பனை வளத்தாலும் சிறந்து வெற்றிநடைபோட்டு வருகிறது. 

      சுஜாதா போன்ற சுக இலக்கியவாதிகள் வேண்டுமானால் புதுக்கவிதையை நெல்லை கோவை வாணியம்பாடி சிவகங்கை எனும் நாலே திசைகளில் அளவிட்டு (12) நிறுத்திக் கொள்ளட்டும். அது நாம் போகும் திசையெல்லாம் வெளிச்சத்தை விதைத்துக் கொண்டே போவதை சுஜாதா அல்ல…சூரியனே நினைத்தாலும் தடுக்க முடியாது.

       முதலாளித்துவ ஜனநாயகத்தின் விளை;சலான புதுக்கவிதை அதன் உச்சகட்ட வளர்ச்சியில் அரசியல்-சமூக விடுதலை இயக்கங்களோடு இணைந்து சமத்துவ சமூகத்தை அமைப்பதை முதலாளித்துவத்தாலேயே தடுத்துவிட முடியாது.

         இவ்விடம்-நாம் நினைவிலிருந்த வேண்டிய கருத்து ஒன்று நம் இளைய கவிஞர்கள் ‘எழுது’ எழுது என எழுச்சியுறச் செய்யும் போதே ‘எழு’ உட்கார் என்பன போன்ற ஆணை கவிதைகள் அல்ல இன்றைய தேவை போர்க்குணமிகுந்த கருத்தும் பூக்களைப் போன்ற அழகும் இணைந்து வரும் எழுத்துகளே என்பதை உணர வைத்து இயக்கமாக-எழுச்சியுறச் செய்வதே அது!

கவிஞர் மீரா சொல்வது போல-
“ஆம்! எனக்கு நம்பிக்கை இருக்கிறது என் காலத்தில் ஒரு பாப்லோ நெருடாவை நான் இங்கும் பார்க்கத்தான் போகிறேன்.” (12)

விழப்போகும் சுவர் வண்ண மேல் பூச்சால் நிலைக்காது!
அழப்போகும் பசிக்குழந்தை அம்புலியைச் சுவைக்காது
தொழப்போகும் வேலையினைத் தூக்கி எறிந்துவிட்டு;
எழப்போகும் புரட்சி இனி எவன் தடுத்தும் நிற்காது! (14)
--------------------------------------------------------------------------------------------------------------------------------- 




3 கருத்துகள்:

  1. கலை கலைக்காகவா ...கலை மக்களுக்காகவா என்ற போராட்டம் காலம் காலமாக நடந்து வருகிற விஷயம் தான்.இந்த போராட்டத்தின் ஒரு வடிவம் தான் எதனோடும் சேர்ந்து விடாத நடுநிலை போக்கு.
    இது பக்கத்து வீட்டில் இழவு விழுந்தால் கூட எட்டிப்பார்க்காத நகர வாசியின் மனித தன்மையற்ற போக்கேதான்.
    எல்லாமே மாறுதலுக்குட்பட்டது என்கிற சமூக அறிவியர்கருத்துக்கேற்ப கவிதையும் மாறுதலுக்குட்பட்டது தானே.
    அழகாய் ஒலினயத்தோடு தட்டும்போது கவிதை பிறக்கிரதென்றான் பாபுலோ நெரூடா...அழகையோ ,அழுகையையோ இன்பத்தையோ துன்பத்தையோ எதைப்பற்றி வேண்டுமானாலும் நயத்தோடும் சமூக அக்கறையோடும் வெளிப்படுத்தும்போது அதை இசத்தின் பெயரால் ஒதுக்குவது மடைமையே..
    சிலி நாட்டிலே ஜனநாயகம் அமெரிக்க கைக்கூலி ராணுவத்தின் ரத்த வெறியோடு வேட்டையாடப்பட்ட போது எழுதப்பட்ட வரிகள்........
    எதை எதையோ எழுதுங்கள்
    எப்படியோ எழுதுங்கள் ....
    இலக்கணத்தை பார்த்திருக்க
    இப்போது நேரமில்லை....
    .அடடா எங்கள் மண்ணிலே தான்
    எவ்வளவு ரத்தம்....
    இருப்பதெல்லாம்
    ஒரு விதி தான் ....
    வேற்று தாளெடுத்து
    விஷயத்தை எழுதுங்கள் .....
    எதை எதையோ எழுதுங்கள்
    எப்படியோ எழுதுங்கள் ....
    இலக்கணத்தை பார்த்திருக்க
    இப்போது நேரமில்லை....
    .அடடா எங்கள் மண்ணிலே தான்
    எவ்வளவு ரத்தம்....
    அதே போலத்தான் சமூகத்தை பாதிக்கிற எந்த விசயத்தைப்பற்றியும் படைப்பாளி பார்க்கும்போது அவனவன் சூழலுக்கு ஏற்ற நடையிலே வெளிப்படுத்துகிறான். தங்களது கட்டுரை காலத்துக்கு ஏற்றது.....வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. பிரமிப்பாக இருக்கிறது.. எண்ணற்ற தகவல்களைத் தெறிண்ட்தேன்.
    - சிவா,ஆலங்குடி

    பதிலளிநீக்கு