தினமணியில் வெளிவந்த எனது கட்டுரைகள்


எழுதுகோல் தெய்வம்! எழுத்தும் தெய்வம்!
தினமணி -- அக்12.10.1995

நா.முத்துநிலவன்

எழுதுபவர்கள் மூன்று வகையினர் முதல் வகையினர் மிகப் பெரும்பான்மையோர்-கணக்கெழுதுபவர் அல்லது  கடிதம் எழுதுபவர். இவர்களது எழுத்தால் சமுதாயம் எந்தவிதத்திலும் பாதிக்கப்படுவதி;லை. ஆதனால் ஏற்படும் லாப நஷ்டம் இவர்களையே பொருத்தது.
இரண்டாம் வகையினர்-மிகச் சிறுபான்மையோர் தம் அளவில் ஆத்ம திருப்திக்காக எழுதி வெளிப்படுத்தாமலே விட்டு விடுவோர். ;டைரி எழுத்தாளர் போன்ற இவர்களாலும் மற்றவர்களுக்குப் பாதிப்பில்லை.
மூன்றாம் வகைதான் முக்கியமானது இலக்கியமாகவோ தொழிலாகவோ இருப்பது இந்த வகை எழுத்துதான். இந்த இரண்டுமே அவர்களுடைய அளவில் மட்டுமல்லாமல் சமுதாயத்தில் பேசப்படுவதாகவும் பின்பற்றப் படுவதாகவும் இருப்பதால் இந்த வகை எழுத்துதான் கவனம் மிகுந்ததாகவும் அமைகிறது.
அதுவும் அழகான கலைநயத்தோடு கூடிய கதையாக, நாவலாக, கவிதையாக, துணுக்காக ஜோக் ஆக எழுதக் கைவந்தர்கள் எப்படியும் அடுத்தவரை பாதிக்காமல் விடுவதில்லை. அவர்கள் கவனமாக எழுதுகிறார்களோ இல்லையோ அவர் தம் எழுத்துகளில் சமுதாயம் கவனமாக இருக்க வேண்டியுள்ளது.
எழுத்தாளனுக்கு என்ன சமூகப் பொறுப்பு?  ‘அது என் தொழில்’ அவரவர் தொழிலை அவரவரும் ஒழுக்கமாக பார்ப்பது தானே சரி ‘‘எனக்குக் காசு வருகிறது எழுதுகிறேன். இதில் என்ன சமூகப் பொறுப்பு?” என்று ஒருவர் கேட்கக் கூடும். “வையகம் காப்பவரேனும் - சிறு – வாழைப்பழக் கடை வைப்பரேனும்…” எந்த ஒரு தனி மனிதனுக்கும் கூட சமூகப் பொறுப்பு உண்டு என்பது ஒரு பக்கம் இருக்கட்டும்.  எழுத்தைத் தொழிலாகக் கொண்டவனுக்குப் பல மடங்கு பொறுப்பு உண்டு என்பது தான் உண்மை.
பேனா விற்பவனுக்கும் பேனாவைப்  பயன்படுத்துவோனுக்குமான வேறுபாட்டை மறைத்துவிடலாகாது.  மோசமான எழுத்து மக்கள் மனத்தில் நிலைத்து நிற்காது விரைவில்  மறந்து மறைந்து போகும் என்பது உண்மைதான் என்றாலும் பல நூறு ஆண்டுகளாகக் கட்டிக் காத்துவந்த மரபுகளை எளிதில் உடைத்து நல்ல வளர்ச்சியைப் குழப்பி சமூக மாற்றங்களைத் தள்ளிப் போடும் சக்தி, மோசமான பிற்போக்கான எழுத்து என்னும் கலைத்தன்மையால் வெற்றிபெறக்கூடிய எழுத்துக்கும் உண்டு என்பது தானே நமது கவலை.
வார மாத இதழ்கள் இலக்கியப் பகுதியுடன்  வந்தால் இரண்டொரு சிறுகதை நிச்சயம் உண்டு. தமிழின் வார-இருவார-மாத இதழ்களில் மாதாமாதமும் சுமார் 200சிறுகதைகள் வருகின்றன.
இதிலும் மர்மக்கதை துப்பறியும் கதை 'ஃபிக்ஷன்" கதை போன்றவற்றை விட்டுவிட்டாலும் சமூகக் கதைகள் சுமார்100 வரும் இதில் எத்தனை கதைகள் நம் நெஞசில் பலகாலம் நிற்கக் கூடியதாக இருக்கின்றனா?
ஒரு நாற்காலியைச் செய்யும் தச்சுத் தொழிலாளி அதற்கான தேவையும் அழகும் பொருந்திவரும்படி செய்து முடிக்க எடுத்துக் கொள்ளும் உழைப்பும் சிந்தனையும் கூட சில கதாசிரியர்கள் எடுத்துக் கொள்வதி;ல்லையே! நோயைத் தீர்க்காத மருந்து என்பதை விடவும் நோயை வளர்த்து விடும் மருந்தைக் கொடுத்து விடுவதுபோல ஏற்கெனவே இருக்கும் சமூகச் சிக்கலை மேலும் சிக்கலாக்கும் கதாசிரியர்கள் போலி மருத்துவர்களின் ரகத்தை விடவும் ஆபத்தானவர்கள். சமீபத்திய இதழ் ஒன்றில் ஒரு கதை:
‘சாதிகள் இல்லையடி பாப்பா’ எனும் பாடத்தை ஆசிரியர்  நடத்த மறுத்து வேலையை விட்டே போய்விடுகிறார் ஏனெனில் மாணவனிடம் பள்ளியில் சேரும்போதே சாதியைக் கேட்டுக் கொண்டு சாதிகள் இல்லை  என்று பொய் சொல்ல அவரால் முடியாதாம்.
சமத்துவ உணர்வு சரிதான். தராசின் எடைக் குறைவைப் ‘பார்த்து’ சரி செய்யும் நோக்கத்தையே இந்தக் கதாசிரியர் தவறாகப் புரிந்து கொண்டிருப்பதும் அதை எழுதிப் பிரசாரம் செய்வதும்… என்ன பொறுப்பற்ற தன்மை இது?
இதே போல நாவல்களிலும் தொடர்கதைகளிலும் கூட உண்டு.
பெரும்பாலான தொடர்கதைகள் காதல் எனும் பெயரில் வரும் சதைக் கதைகள்தான் ஒரு பெண்ணை ஒருவர் அல்லது இரண்டு மூன்று பேர் வெற்றி கொள்வதில் பல கதைகள் முடிந்து போகும் உண்மையில் வாழ்க்கை அதன் பிறகுதான் தொடங்கும் என்பதையே இவரகள் மறைத்து விடுவது ஒரு பக்கம் எனில் மறு பக்கம் குழப்படி வேலைகள்.
இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த ஒரு வரலாற்றுக் கொடுமையை திசைதிருப்பி நாவல் எழுதி பரிசும் பெற்ற கூத்துகள் தமிழ் இலக்கியத்தில் உண்டு. இப்போதும் உண்டு. கவிஞர் வைரமுத்து சொல்வது  போல ‘காலத்தின் விமர்சனம் இவர்களின் பிணங்களைக் கூட தோண்டி எடுத்து வந்து தூக்கில் போடும’;  என்பது  மட்டும் நிச்சயம். வேறென்ன சொல்லா!
அற்புதமான கலைத்தன்மையோடும் சமூகப் பொறுப்போடும் ஆரம்பத்தில் அறியப்பட்ட கவிஞர் வைரமுது;து இப்போது விடலைக் குரல் பாட்டுக்காக ‘சமூகப் பிரச்சனைகளைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாதே டேக் இட் ஈஸி’ என்பது நியாயம்தானா? அதுவும் அவரது ‘சுடும் வரை நெருப்பு சுற்றும் வரை ப+மி போராடும் வரை மனிதன்’ எனும் உன்னதக் கவிதை ஒரு சிலருக்கே தெரிந்திருக்க இந்த ‘ஈஸிபாலிஸி’ பாடல் உலகம் முழுவதும் உள்ள தமிழ் தெரிந்த குஞ்சு குளுவானுக்கும் போய்ச் சேரக்கூடிய ‘மீடியா’ வில் போய்ச்சேர்ந்து விட்டதே!  ‘அது திருப்திக்கு இது தொழிலுக்கு’  என்று அவர் கூறினாலும் எத்தனை ‘ஈஸி கோயிங்’ இளசுகள் அவரே சொன்ன போராடும் வரை மனிதன் என்பதைப் புறந்தள்ளி விட்டார்கள் என்பது அவருக்கும் நமக்கும் கவலை கருவது அல்லவா?
‘தரைமேல் பிறக்க வைத்தான் -எங்களை
 தண்ணீரில் பிழைக்க வைத்தான்
 கரைமேல் இருக்க வைத்தான் -பெண்களை
 கண்ணீரில் குளிக்க வைத்தான்’ -- என்று மீனவர்களின் மிகுந்த பிரச்சனைகளை ‘கருக்’ கென்று தைக்ககும்படி வளமான தமிழில் சொல்லத் தெரிந்த வாலி அப்போது ‘எப்படி… எப்படி…’ என்று எப்படி எழுதலாம்?’ அந்த ‘அவதார புருஷ’னுக்கு இப்படி அவமாரியாதை வரலாமா?
‘கேட்கிறார்கள் கொடுக்கிறேன் என்பதற்கு இது என்ன அவர்கள் வீட்டுப் பழைய குழம்பா? 
எழுத்து! எரிமலைக் குழம்பல்லவா?
வள்ளுவர் சொன்னபடி ‘கசடறக் கற்று’முடித்து வேலை வாய்ப்பக வாசலில் ‘அதற்குத் தக நிற்கும்’ இளையவர்களாகட்டும் வீடு உண்டு குழந்தைகள் உண்டு என்று குண்டு சட்டிக்குள் குதிரை ஒட்டும் நடுத்தர வர்க்கத்தினராகட்டும் கைகளில் ஏந்திக் கிடப்பது வார-மாத நாவல் இலக்கியங்களைத்தான்.
லட்சக்கணக்கில் உற்பத்தியாகி ஒரு வாரம் கடைக்கம்பிகளில் தொங்கி அடுத்த வாரமே பழைய புத்தகக் கடைக்கு அடிமாட்டு விலைக்கு வந்தாலும் கூட அந்தக் குறுகிய காலத்தில் அவற்றால் ஏற்படும் காலக் கொலையும் கனவுத்திருட்டுகளும் மிக  அதிகம் 
பினாமி  எழுத்தாளர்களை கூலிக்கு வைத்து கொண்டு  குப்பைகளையே கிளறிக்கிளறி எழுதி அட்டை மாற்றி ஊர் மாற்றி பேர் மாற்றி ஒரே கதையை ஒன்பது முறை மாற்றி இவர்கள் எழுதி விற்பதும் எழுத்தாமோ?  ‘நாவல்’ உனும் பெயரில் நாலைந்து ரூபாயில் இவர்கள் தருவது நாசத்தை அல்லவா? இவர்களின் கதைக்கருவே திருட்டு கொலை எனில் இவர்கள் செய்வதும் அதுதானே? கதைத்  திருட்டும் கலாச்சாரக் கொலையும்!
‘நில் கவனி  கொல்’,‘டெட்மார்னிங்’, மை டியர் மர்டரர்’ என்பன போன்ற ‘ரெண்டுங்கெட்டான்’ தமிழில்  எழுதும் இவர்களுக்கும் எழுத்தாளர் எனும் மதிப்பும் மரியாதையும் கிடைப்பது தமிழர்கள் விஞ்ஞாகத் தவமிருந்து பெற்ற  சாபமின்றி வேறென்ன?
‘டிட் பிட்ஸ்’ எனும் நொறுக்குத்தீனி இலக்கிய வகை சத்தமில்லாமல் தமிழிலும் பிரபலமடைந்து வருகிறது. இதில் அரிய தகவலாகவோ உலக அறிவுச்செய்திகளாகவோ வருவன உண்மையில் பயன்மிகுந்தவைதாம். பெரும்பாலானவர்கள் வார இருவார இதழ்களில் முதலில் இவற்றைப் படிப்பதும் இவற்றின் சுவைப் பயன் கருதித்தான்.
ஆனால் பெரும்பாலான துணுக்குகள் சினிமா அல்லது அரசியல் பிரமுகர்களின் தனிவாழ்க்கையில் மூக்கை நுழைத்து எடுத்துச் சிந்தும் செய்திகளாகவே இருப்பது என்ன சிந்தனையோ?
‘அந்த நடிகையின் காலை டிபன் ஒரேஓரு இட்லிதானாம்’ ஏன்? சட்னிகூட கிடைக்கவில்லையாமா?  ‘இந்த’ அமைச்சரின் சின்ன வீட்டுக்கும் பெரிய வீட்டுக்குமான தகராறில் இவர் இந்த நடிகையை முன்றாவது வீடாக்கிவிட்டாராம்’ என்பது போன்ற கொள்ளைப் படிப்பு உள்ள துணுக்குகள் ரொம்ப அவசியம் பாருங்கள்?
இதில் ‘கிசு கிசு ; இன்னும் கேவலமானது, உண்மையில் சம்பந்தப்பட்டவர்களையும் படிப்பவரையும் ‘கிச்சு கிச்சு’ மூட்டும் வேலையின்றி அடுத்த வீட்டுக்காரர்களையும் பற்றிக்கூட நல்ல விஷயங்களை விட்டுவிட்டு வேறு மாதிரி விஷயங்களையே பேசிப்பேசி அதில் ஒரு ருசி காணும் ‘வக்ர’ உணர்வுக்குத் தீனி போடும் மகத்தான இலக்கியப் பணி இது! கிசுகிசுக்களில் பெரும்பாலும் உண்மை இருக்காது என்பது எழுதுபவர்க்கும் படிப்பவர்க்கும் கூடப் பெரும்பாலும் தெரிந்ததுதான். என்றாலும் அதை ஒருவர் எழுத பலரும் படித்து அடுத்தவரிடம் எடுத்துச் சொல்ல… என்ன ஒருரசனை வளர்ச்சி! அடடா!
சிரிக்கக் கூடியவர்கள் ஆரோக்கியமானவர்கள். உடலும் அறிவும் ஆரோக்கியமாயிருப்பதன் அடையாளமே நல்ல நகைச்சுவைக்கு உடனடியாகச் சிரித்துவிடுவதுதான். அப்புறமாகச் சிரிப்பது ஆபத்தானது! சிரிக்காமலே இருப்பது சிக்கலானது.
உயர்ந்த ரசனையோடு சிரிக்கும்படியாக எழுதவும் பேசவும் கூடியவர்கள் பாக்கியவான்கள் எனக்குத் தெரிந்து உ.ராஜாஜி போல உடல்நிலை மிகவும் பாதிப்புக்கு உள்ளான நிலையிலும் தொடர்ந்து சமூகப் பொறுப்பு மிகுந்த நகைச்சுவைத் துணுக்குகளை எழுதக் கூடியவர்களும் இருக்கிறார்கள் என்பது பாராட்டுக்குரியது.
ஆனால் பெரும்பாலான ஜோக் எழுத்தாளர்களின்  ஊற்றுக்கண்ணே வீட்டில் அடிமைப்பட்டிருக்கும் ஆண் ஆபீஸில் தூங்கும் ஊழியர்கள் ஜொள்ளு விட மட்டுமே தெரிந்த இளைய சமூகம்- இவைதான். இதில் உண்மையான நகைச்சுவை என்னவெனில்  நடைமுறையில் இது பெரும்பாலும் தலைகீழாக இருப்பதுதான்.
இதில் யு கிளாஸ் சிரிப்பு அக்கரைப் பச்சை சிரிப்பு நீலம் பச்சை ஜோக்குகள் ‘படிக்கக் கூடாத ஜோக்குகள்’ வேறு ‘அதான் படிக்கக் கூடாதுல்ல அப்புறம் ஏன் போடுற?’ன்னு யாரும் கேட்கிறதில்லை இதுவும் ஒர் அடையாளமாம்!
‘எழுதுகோல் தெய்வம்! எழுத்தும் தெய்வம்’  என்றாயே பாரதி நீ வளர்த்த நெருப்புத் தமிழில் எச்சில் உமிழும் எழுத்தாளர்களை நீ என்ன சொல்வாயோ தெரியாது. எழுதினவன் இன்று ஏட்டைக் கெடுத்தான் நாளை நாட்டைக் கெடுத்தான் என்பதைப் புரிந்து கொண்டால் மனச்சாட்சி உள்ளவர்கள் மனம்மாறக் கூடும். இல்லையேல் மக்கள் மாற்றுவார்கள். மக்கள் என்றுமே அசிங்க விரும்பிகள் அல்லரே? பொறுப்பான பத்திரிக்கையாளர்களும் இதைப் புரிந்துதான் எதை வெளிப்படுவது என்பதில் தெளிவாகவே இருக்கிறார்கள் எழுதுவது எல்லாமே எழுத்தல்ல. எழுப்புவதே மிகச் சிறந்த எழுத்து. இதை உணர்ந்தவனே மிகச் சிறந்த எழுத்தாளன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக