முத்துநிலவன் பேச்சு


ஆசிரியருக்கும், பெற்றோருக்குமான கடமை எழுத்தாளருக்கும் உண்டு

புதுக்கோட்டை, ஆக. 16: ஆசிரியர், பெற்றோர் ஆகிய இருவர்களுக்குமான கடமை எழுத்தாளருக்கும் உண்டு என்றார் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்க மாநில துணைத் தலைவர் நா. முத்துநிலவன்.
புதுக்கோட்டையில் அந்தச் சங்கம் சார்பில் அண்மையில் நடைபெற்ற 10-வது மாவட்ட மாநாட்டைத் தொடக்கிவைத்து அவர் பேசியது:
மாணவர்களின் எதிர்காலத்தை மதிப்பெண்களே தீர்மானிப்பதாக கல்வி நிறுவனங்கள் கருதுவதால்தான், பாடப் புத்தகத்தையே கதியாகக் கொண்டுள்ள அவர்களிடம் கலை, கலாசாரப் பண்புகள் காணாமல்போய்விட்டன. இதனால், சமூகத்தின் அன்றாட நிகழ்வுகளைக்கூட மாணவர்களால் அறிந்து கொள்ள முடியாமல், சமுதாயத்திலிருந்து விலகிவிடுகின்றனர்.
கலை, இலக்கியமற்ற கல்வி உருத்தேறாது. ஆகையால், பொதுப் பாடத் திட்டத்தைக் கொண்டுள்ள சமச்சீர் கல்வி இதைத் தடுத்து நிறுத்தும்.
உயர் கல்வியை அரசு அனைவருக்கும் இலவசமாக அளிக்க வேண்டும்.
கலையில்கூட மக்கள் இழிவான பார்வை கொள்கிறார்கள். ஆனால், அதையும் கடந்து அனைவரது திறமைகளையும் தமுஎகச அங்கீகரிக்கிறது என்றார் முத்துநிலவன். மாநாட்டுக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் கா. பிரகதீஸ்வரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் ரமா. ராமநாதன் முன்னிலை வகித்தார். மாவட்டப் பொருளாளர் சு. மதியழகன் அறிக்கை வாசித்தார். மாநிலத் துணைச் செயலர் மதுக்கூர் ராமலிங்கம் தொடக்கவுரையாற்றினார்.
கவிஞர்கள் எல். வடிவேல், ஆர். வெள்ளைச்சாமி, பொன். கருப்பையா, களக்கமங்கலம் சக்திவேல், சரவணன், சுதாகர் ஆகியோர் பாடினர்.
விழாவில் பல்வேறு பரிசுகளைப் பெற்ற கவிஞர்கள் ஜீவி, தங்கம்மூர்த்தி, அ. செல்வராசு, சு.மதியழகன், சு. பீர்முகம்மது, ராசி. பன்னீர்செல்வம், ஆர். நீலா ஆகியோர் பாராட்டப்பட்டனர்.
கவிஞர்கள் இளையமனோகரன், ஸ்டாலின், எஸ்.எ. கருப்பையா, சிவக்குமார், பூபாளம் செந்தில்குமார், தனிக்கொடி, எஸ். இளங்கோ உள்ளிட்டோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். நாகஸ்சுர நளாயினியுடன் திண்டுக்கல் மாரிமுத்துவின் கட்டைக்கால் தவில் இசைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

First Published : 17 Aug 2011 08:00:58 PM IST – DINAMANI-Trichy Edition  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக